மரணச் செய்தி...
தந்தைக்கோர் இடம்
(பிரெஞ்சு நாவல்)
அன்னி எர்னோ
தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
(2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவரின் நாவல்)
மரணச் செய்தி...
எனக்கு ஆசிரியர் பயிற்சிச் செய்முறைத் தேர்வு லியொன் நகரில், குருவா ரூஸ் என்னும் இடத்தில், ஒரு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அது ஒரு புதிய பள்ளி. ஆசிரியர்கள் – அலுவலர்கள், ஆகியோருக்கு ஒதுக்கப் பட்டிருந்த கட்டடங்களைஏராளமான பூச்செடிகள் அலங்கரித்தன. நூலகம் முழுவதும் மண் நிறத்தில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் வந்து கூப்பிடுவதற்காகக் காத்திருந்தேன். அது நேர்முகத் தேர்வு. ஒரு ஆய்வாளரும் பிரெஞ்சு மொழியில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு நெறியாளர்களும் இருப்பார்கள். அவர்கள் முன்னால் நான் பாடம் நடத்த வேண்டும். என் எதிரே ஒரு பெண்மணி ஒய்யாரமாகத் தேர்வுத்தாள்கள் திருத்திக்கொண்டிருந்தாள். அடுத்த ஒரு மணிநேரத்தைக் கடந்துவிட்டால் அவள் செய்ததுபோலவே என் வாழ்க்கை முழுவதும் நானும்செய்ய அனுமதிக்கப்படுவேன்.
பிரபல எழுத்தாளர் பல்ஸாக் எழுதிய நாவல் தந்தை கொரியோவிலிருந்து எண்ணிக்கையோடு கூடிய இருபத்து ஐந்து வரிகளைப் பத்தாம் வகுப்புக்கணிதப் பிரிவு மாணவர்களுக்கு விளக்கச் சொன்னார்கள். விளக்கி முடிந்தபின், தலைமையாசிரியர் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்குஆய்வாளர் “உங்கள் மாணவர்களை நீங்கள் இழுத்தடித்தீர்கள், அல்லவா?” என்று கருத்து சொன்னார். அவர் இரண்டு நெறியாளர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். அவர்களில் ஒருவர் ஆண். மற்றொருவர் இளஞ்சிவப்பு செருப்புகள் அணிந்திருந்த, கிட்டத்துப் பார்வை கொண்ட ஒரு பெண். நான் அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தேன். பதினைந்து நிமிடங்கள் அவர் என்மீது விமர்சனம், பாராட்டு, அறிவுரையெல்லாம் அள்ளி வீசிக்கொண்டிருந்தார். நான் அவற்றைச் சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை. அதெல்லாம் நான் தேர்வாகிவிட்டேன் என்பதன் வெளிப்பாடா என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். திடீரென மூவரும் ஒரே சமயத்தில் எழுந்து நின்றார்கள். அவர்கள் முகத்தில் ஒரு கம்பீரம் தொனித்தது. நானும் அவசரம் அவசரமாக எழுந்து நின்றேன். ஆய்வாளர் என்னை நோக்கிக் கையை நீட்டினார். பிறகு, என்னை நேருக்கு நேர் பார்த்து ’வாழ்த்துகள்’ என்றார். மற்றவர்களும் ‘வாழ்த்துகள்’ சொல்லிவிட்டு என்னிடம் கைகுலுக்கினர். ஆனால், அந்தப் பெண் கைகுலுக்கும்போது அவள் முகத்தில் ஒரு புன்சிரிப்பைக் கண்டேன்.
அந்தக் காட்சியை நான் பேருந்து நிறுத்தம்வரை நினைத்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வருத்தமும், வெட்கமும் என்னை வாட்டிக்கொண்டிருந்தன. அன்று மாலையே, என் பெற்றோர்களுக்கு நான் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதைக்கடிதம் மூலம் தெரிவித்தேன். என் அம்மா ‘வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி’ என்று எழுதியிருந்தாள்.
சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, அதே நாளில், என் அப்பா இறந்து போனார். அவருக்கு வயது அறுபத்து ஏழு. அவரும் என் அம்மாவும், சேன் – மரித்தீம் என்னும் அமைதியான பகுதியில், ரயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பலசரக்குக் கடையும் சிறு உணவகமும் நடத்திவந்தனர். அவர் அடுத்த ஆண்டு ஓய்வெடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். பல சமயங்களில் எந்த நினைவு முதலில் வரும் என்று சொல்ல முடியவில்லை. லியோன் நகரில் காற்று வீசிக்கொண்டிருந்த அந்த ஏப்ரல் மாதம் நான் குருவா-ரூஸ் பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த நினைவு அல்லது கடும் வெப்பம் நிலவிய ஜூன் மாதம்என் தந்தை இறந்துபோன நினைவு ஆகிய இரண்டு நினைவுகளும் ஒன்றையொன்று முந்திக்கொள்ளும்.
அவர்களுடைய முதல் குழந்தை சிறுமியாக இருந்தபோது ஒரு நாள் தொண்டை வலியோடு பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தாள்.உடலின் தட்ப வெப்பம் அதிகரித்திருந்தது. அவளுக்குத் தொண்டை அழற்சி நோய். சுற்றுப் புறத்திலுள்ள மற்றப் பிள்ளைகளைப் போல், அவளும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளவில்லை. அவள் இறந்துவிட்டாள். அச்சமயம் என் தந்தை சுத்திகரிப்பு ஆலையில் இருந்தார். மரணச் செய்தி கேட்டு வீட்டிற்கு விரைந்தார். அவர் ஓலமிடுவது தெருக் கடைசியிலிருந்து கேட்டது. அவர் அதிர்ச்சி யிலிருந்து பல வாரங்கள் மீளவில்லை. பின்னர் மனச் சோர்வு ஏற்பட்டு, பேசாமல்கொள்ளாமல், மேசைபக்கத்தில் உட்கார்ந்து சன்னல் வழியே தெருவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட தன் தலையில் அடித்துக்கொள்வார். அம்மா ஒரு கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டு, வருவோர் போவோரிடமெல்லாம் “அவள் ஏழு வயதில் இறந்து போனாள் - புனிதர்கள் போல!”
கொல்லைப் புறத்தில், ஆற்றோரமாக எடுத்த அவருடைய புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதில் அவர் கம்பளிபோன்ற துணியில் அரைக் கால்சட்டையோடு இருப்பார். சட்டைக் கைகள் மடித்து விடப்பட்டிருக்கும். தோள்கள் சற்றுத் தளர்ந்திருக்கும். கைகள் சற்று உருண்டு திரண்டிருக்கும். முகத்தில் அதிருப்தி காணப்பட்டது. ஒருவேளை புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லைபோலும். அவருக்கு வயது நாற்பது. புகைப்படத்தில் அவருடைய கடந்தகால துன்பம் அல்லது எதிர்கால நம்பிக்கை – இப்படி எதுவும் தெரியாது.கொஞ்சம் தொப்பை, கறுப்பு முடி இருந்த இடத்தில் வழுக்கை – இதுபோன்று வயதானத்துக்குரிய குறியீடுகள் மட்டுமே தெரிந்தன. சில சமூகக் குறியீடுகளும் தலைகாட்டின. கைகள் விறைப்பாகத் தொங்கின. குளியலறையும், கழிப்பறையும் பின்னணியாகத் தெரிந்தன. இவையெல்லாம் சிறு நடுத்தர வர்க்கத்தினர் பார்வையில் தவிர்க்கப் பட வேண்டியவை.
1939 ஆம் ஆண்டு போர் தொடங்கும்போது இராணுவம் அவரைக் கூப்பிடவில்லை. அதற்குள் வயதாகிவிட்டது. எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஜெர்மானியர்களால் தீ வைக்கப் பட்டு விட்டது. அவர் சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அம்மா ஆறு மாத கற்பமாக இருந்தாள். தெரிந்தவர் காரில் போய் வந்தாள். போன் –ஓத்மெர் என்னுமிடத்தில் ஒரு குண்டு வெடிப்பின்போதுஅப்பாவிற்கு முகத்தில் காயம் பட்டது. திறந்திருந்த ஒரே மருந்தகத்தில் அவர் சிகிச்சை பெற்றார். குண்டு வெடிப்புகள் தொடர்ந்தன. லிசிய நெடுமாடக்கோயில் படிகளிலும் அதற்கெதிரே இருந்த மைதானத்திலும் ஏராளமான அகதிகளிடையே தன் மாமியாரையும் அவள் பெண்களையும் சந்தித்தார். அங்கு அவர்கள் பத்திரமாக இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள். ஆனால், அங்கும் ஜெர்மானியர் வந்து புகுந்தபோது, என் தந்தை தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊரை விட்டுக் கிளம்ப முடியாதவர்களால் அவருடைய பலசரக்குக் கடை முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தது. அம்மாவும் திரும்பி வந்துவிட்டாள். அடுத்த மாதம்தான் நான் பிறந்தேன். பள்ளிக்கூடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு விடை காணமுடியாவிட்டால் எங்களைச் ‘சண்டை காலத்தில் பிறந்தவர்கள்’ என்று கேலி செய்வார்கள்.
கிட்டத்தட்ட 1955 ஆம் ஆண்டுவரை, முக்கியமான பண்டிகைகளில் கண்விழிக்கும்போது, அந்தக் காலகட்டத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள். பயம், பஞ்சம், 1942 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் குளிரின் கடுமை முதலியவற்றைப் பற்றி மாறி மாறிப்பேசுவார்கள். எப்படியானாலும் வாழ்ந்தாக வேண்டி இருந்தது. ஒவ்வொரு மாதமும் முப்பது கி.மீ. சைக்கிளில்போய் மொத்த விற்பனை கடைகளிலிருந்து சாமான்கள் வாங்கிவருவார், ஏனென்றால் அவர்கள் தாமாகவே வீடுகளுக்கு விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டார்கள். 1944 ஆம் ஆண்டு குண்டு மழை பொழிவது அதிகமாயிற்று. அவர் எப்போதும்போல் தொடர்ந்து பொருட்களைப் போய் வாங்கிவருவார். தள்ளாதவர்களுக்கும், பெரிய குடும்பங்களுக்கும், கறுப்புச் சந்தையில் வாங்க இயலாதவர்களுக்கும், அவர் மொத்த வியாபாரிகளிடம் கெஞ்சியடித்து கூடுதலாக பொருட்கள் வாங்கி வருவார். சுற்றுப் புறத்தில் அவரை ஒரு வீரமகனாகப் பார்த்தார்கள். இதுபோல் அவர் ஆற்றிய பணியை அவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருந்தார். பின்னர் அவர் நினைத்துப் பார்க்கும்போது, தான் உண்மையில் மகத்தான பணியொன்று செய்திருப்பதை உணர்ந்து, தான் போர் அனுபவத்தை முற்றிலுமாகப் பெற்றதாகத் திருப்தியடைந்தார்.
ஞாயிற்றுக் கிழமைகளில், கடையை மூடிவிட்டு, அவர்கள் காட்டுப் பக்கத்தில் உலாவச் சென்றுவிடுவார்கள். சாப்பாட்டுக்கு முட்டையில்லாத ’கஸ்டர்ட் கேக்’ கள் எடுத்துச் செல்வார்கள். அப்போதெல்லாம், அப்பா என்னைத் தன் தோள்களில் சுமந்து செல்வார். பாடிக்கொண்டும், விசில் அடித்துக்கொண்டும் நடப்பார். வான் வழி தாக்குதல்களின்போது அவர் ’பில்லியர்ட் ’ மேசைக்குக் கீழ் தன் நாயோடு பதுங்கிக்கொள்வார். அந்நாளை நினைத்துப் பார்க்கும்போது ‘அதெல்லாம் விதி’ என்பார். ஜெர்மானியர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, அவர் எனக்குப் பிரெஞ்சு தேசிய கீதம் சொல்லிக் கொடுத்தார். கடைசி வரியில் ’ஈனப் பன்றிகள்’ என்று சேர்த்துக்கொள்வார். சுற்றியிருந்த மற்றவர்கள் போல் அவர் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருந்தார். ஒரு விமானம் பறக்கும் ஓசை கேட்டால், உடனே அவர் என் கையைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்துச் சென்று “அதோ அந்தப் பறவையைப் பார். போர் முடிந்துவிட்டது” என்பார்.
1945 ஆம் ஆண்டு பிரான்சில் நாளை நமதே என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்பட்டது. அவர் வல்லே வை விட்டுக் கிளம்பத் தீர்மானித்தார். நான் அடிக்கடி நோய்வாய்ப் பட்டேன். மருத்துவர் என்னை ’செனடோரிய’ த்துக்கு அனுப்ப விரும்பினார். அவர்களிடம் இருந்த பொருட்களையெல்லாம் விற்றுவிட்டு Y…க்குத் திரும்பிச்சென்றனர். அங்குக் காற்றுக்குப் பஞ்சமில்லை. அதே சமயம், நீரோடையோ ஆறோ கிடையாது. அப்படிப்பட்ட இடம்தான் என் உடல் நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஒரு சரக்கு லாரியின் முன் இருக்கைகளில் நாங்கள் Y…க்கு வரும்போது அங்கு அக்டோபர் மாதச் சந்தை நடந்து கொண்டிருந்தது. அந்த நகரத்தை ஜெர்மானியர்கள் தீ வைத்துக் கொளுத்தி இருந்தனர். இடிபாடுகளுக்கு இடையே கூடாரங்களும் குடை ராட்டினங்களும் அமைக்கப் பட்டிருந்தன. மூன்று மாதகாலம், உறவினர் ஒருவர் கொடுத்த வீட்டில் வசித்தோம், அது இரண்டு அறைகொண்ட வீடு. மின்விநியோகமற்றது . நாங்கள் எந்த அளவுக்கு இல்லாமையில் வாழ்ந்தோம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒருநாள் மாலை. இருள் கவிந்துவிட்டது. எங்கள் தெருவில் ஒரே ஒரு கடையில் விளக்கொளி. அந்த விளக்கொளியில், நெகிழிப் பைகளில் விதவிதமான வண்ணங்களில்மிட்டாய்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. பார்த்துக்கொண்டே இருந்தோம். அவை எங்களுக்கு அல்ல. அவற்றை வாங்குவதற்கான கூப்பன்கள் எங்களிடம் இல்லை.