வரலாற்றை வாசிக்கும் விதம்
நான்தான் ஔரங்ஸேப்
(நாவல்)
சாரு நிவேதிதா
வெளியீடு:
எழுத்து பிரசுரம்
பக், 922
ரூ. 1145
நான்தான் ஔரங்ஸேப் புதினத்தைப் புனைவாகப் பார்ப்பதா அல்லது வரலாறாகப் பார்ப்பதா? புனைவில் வரலாறு ஒரு பின்னணியாக மட்டுமே பயன்படுகிறது. வரலாற்றைக் கணினியில் பார்க்கும் ஒரு படிமத்திற்கு ஒப்பிட்டால் அந்தப் படிமம் லட்சக்கணக்கான படத் துணுக்குகளின் இறுக்கப்பட்ட ஒரு தொகை வடிவம். படிமத்தைப் பெரிதுபடுத்தப் பெரிதுபடுத்த அது உடைந்து அதனடியில் ஒளிந்திருக்கும் படத் துணுக்குகள் நம் கண்களுக்குத் துலங்கத் தொடங்குகின்றன. போலவே வரலாறும் பெருநிகழ்வுகளின் தொகையாகவே எழுதப்படுகிறது (தாஜ்மஹால், பிரகதீஸ்வரர் கோவில் ஆகிய கட்டடங்களாக, சாமுகர், பானிப்பட், கலிங்கம் போன்ற போர்க்களங்களாக, அக்பர், ஔரங்ஸேப், அசோகன், ராஜராஜ சோழன் என்கிற பேரரசர்களாக). அவற்றுக்கு மிக அருகில் நெருங்கும்போதுதான் அந்தப் பெருநிகழ்வுகளைக் கட்டமைத்திருக்கும் சாமானியர்களின் (கட்டடங்களைக் கட்டியவர்கள், கட்டடங்களுக்காக நிலங்களை இழந்தவர்கள், போர் வீரர்கள், பேரரசுகளுக்கு வரி செலுத்தியவர்கள்) வாழ்வியல் சார்ந்த நுண்நிகழ்வுகள் நம் கண்களுக்குப் புலப்படத் தொடங்குகின்றன. வரலாற்றில் தாஜ்மஹலோ பிரகதீஸ்வரர் கோவிலோ பெரும் உருவாக்கங்களென்றால் புனைவில் அவை வெறும் பின்னணிகளாக மட்டுமே தகுதி பெறுகின்றன. வரலாறு ஒன்று என்றால் புனைவு அந்த ஒன்றுக்குள் நூறாக இருக்கிறது. வரலாறு இறுதி செய்யப்பட்ட தூல வடிவமென்றால் புனைவு எப்போதும் சாத்தியப்பாடுகள் குறித்த கற்பனை வடிவமாக இருக்கிறது. ஆனால் இந்தக் கற்பனை வடிவத்தில் ஒன்றின் நிறத்தையோ அளவையோ புனைஞர் மாற்றினாலும் அவற்றின் தொகை வடிவமான வரலாறு என்னும் படிமம் வேறு அடையாளத்தைப் பெற்றுவிடுகிறது. ஆக, வரலாறு பெருநிகழ்வுகளுக்கான இயல் என்றால் புனைவு தவிர்க்கவியலாமல் நுண்நிகழ்வுகளுக்கான இயலாக இருக்கிறது எனலாம்.
இந்த வரையறைக்குள் வைத்துப் பார்த்தால் நான்தான் ஔரங்ஸேப்பை ஒரு புனைவு என்று சொல்வதற்குத் தயக்கம் ஏற்படவே செய்யும். ஏனெனில் இதே மொகலாயப் பேரரசைப் பற்றி மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ தன்னை வரலாற்றைச் சொல்லும் பிரதி என்றுதான் அடையாளப்படுத்திக்கொண்டது. நான்தான் ஔரங்ஸேபில் சொல்லப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளில் தொண்ணூற்றைந்து விழுக்காடு நிகழ்வுகளை வந்தார்கள் வென்றார்களும் சொல்லவே செய்கிறது (ஔரங்ஸேப் முதன்முதலாகக் காதல் காய்ச்சலில் மயங்கி விழுந்தது உட்பட). ஆனால் துணைநூற்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நூல்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை (மதனுடைய நூலும் இந்தத் தரவுகளைத்தான் எடுத்தாள்கிறது) ஒரு தொலைக்காட்சிப் படிமத்தை உணர்ச்சிகரமாக ரசித்து விவரிப்பதைப்போல புனைவுப்பண்பு கொண்ட விவரணைகளாக மாற்றுவதற்கப்பால் மற்றபடி அவற்றின் நுண்நிகழ்வுகளை நோக்கிச் செல்ல முயலாத நான்தான் ஔரங்ஸேப் தன்னை ஒரு புனைவு என்று சொல்லிக்கொள்கிறது. இந்த நிலையில் ஒரு வாசகர், நான்தான் ஔரங்ஸேப் ஒரு புனைவு அல்ல, புனைவின் மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாறுதான், எப்போதும் தன்வரலாற்றையே புனைவு மொழியில் எழுதிக்கொண்டிருந்த சாரு இந்த முறை ஒரு மாறுதலுக்காக வேறொருவர் வரலாற்றைப் புனைவு மொழியில் எழுதிப் பார்க்க முயன்றிருக்கிறார் என்று சொல்லிவிட்டு அதன் இன்றைய பொருத்தம், பொருத்தமின்மை குறித்த சமூகவியல் விவாதங்களுக்குள் இறங்கிவிடலாம்; அல்லது வரலாற்றைக் கட்டமைக்கும் பெருநிகழ்வுகளின் தொகுப்பாகவே வெளிப்பட்டிருக்கும் இதை சாரு ஏன் புனைவு என்று சாதிக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கலாம். இரண்டாவதே பொருள்கோடலைச் சவாலுக்கு அழைக்கும் வாசிப்பாக இருக்குமென்று தோன்றுவதால் நான் அதையே தேர்ந்துகொள்கிறேன்.
வரலாறு எவ்விதம் சொல்லப்படுகிறது? வரலாறு பொதுவாகக் காலரீதியிலும் இடரீதியிலும் ஓர் ஒழுங்கமைப்பைக் கொண்டதாக, ஒன்றையடுத்து ஒன்று என்கிற வரிசையில் சொல்லப்படுகிறது. மேலும் அது, தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்போடு தன் எல்லையை வரையறுத்துக்கொள்கிறது. உதாரணமாக மொகலாயப் பேரரசைப் பற்றிச் சொல்லும் ஒரு வரலாற்று நூல் அதே காலக்கட்டத்தில் இயங்கிய பிறிதொரு அரச குலத்தின் நிலைபற்றி, அவற்றுக்கும் மொகலாயப் பேரரசுக்கும் தூலமான தொடர்பு இருந்தாலொழிய, பேசுவதில்லை. வரலாறு படிக்கும் ஒரு வாசகர் அதை வேறொரு வரலாற்றுப் பிரதியின் வழியேதான் அறிந்துகொள்ள முடியும். இப்படி வரலாற்றுக் கதையாடல்களில் ஒரே காலகட்டத்தின் பல்வேறு களங்கள் பல்வேறு பிரதிகளாகச் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதிகளை உருவாக்கும் ஒவ்வொரு வரலாற்றாசிரியரும் அதே காலகட்டத்தின் பிற களங்களைத் தங்கள் பிரதிகளில் ஏற்காமல் கடந்து செல்கிறார்கள்.
வரலாறு சொல்லப்படும் விதத்திலிருந்து புனைவு மாறுபடுகிறது. புனைவில் ஒரே சமயத்தில் ஒரு காலகட்டத்தின் பல்வேறு களங்கள் பிரதியில் ஊடாடுகின்றன. எனவே அது இயல்பாகவே ஒழுங்கமைக்கப்பட்ட கூறுமுறைக்குள் இயங்க இயலாததாக இருக்கிறது. வரலாற்றுக் கதையாடலின் பொதுப்பண்பிற்கு மாறாகப் புனைவின் கதையாடல் காலத்தை முன்னிறுத்திக் களங்களைக் கடக்கிறது. இவற்றின் விளைவாகப் புனைவின் கூறுமுறை வரலாற்றைச் சிடுக்கு மிகுந்ததாக ஆக்குகிறது. புனைவும் ஒரு வரலாற்றுப் பிரதியென்பதில் சந்தேகமே வேண்டியதில்லை. ஆனால் புனைவில் சொல்லப்படும் வரலாறு பொருள்கோடலை வாசகர் தரப்பிற்கு மாற்றிவிட்டுவிடுகிறது. புனைஞர் களங்களின் பன்மையைக் காலத்தினூடே கோத்துக் கொடுப்பதைத் தாண்டி வேறு பொறுப்பு எதையும் எடுத்துக்கொள்வதில்லை. வரலாறு களங்களைத் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதால் தூலமான தரவுகளைத் (அல்லது தரவுகளைத் தூலப்படுத்துவதை) தன் கதையாடலுக்கு ஆதாரமாகக் கொள்கிறதென்றால் புனைவு காலம் என்கிற அரூப இயக்கத்தைச் சொல்வதைத் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பிரதிகளாக இறைந்து கிடக்கும் கள வரலாறுகளை இணைக்கும் கற்பனையைத் தனக்கு ஆதாரமாகக் கொள்கிறது.
விளைவாக, வரலாற்றின் ஒழுங்கமைவில் ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் காரண காரியங்களாக ஒழுங்கமைக்கப்படும் ஒற்றைப் பெருநிகழ்வு, உதாரணமாக மொகலாயப் பேரரசின் வரலாறு, புனைவில் ஒழுங்கு குலைந்து காலம் சார்ந்த சொல்லாடல்களாகச் சிதறடிக்கப்பட்டு, மூன்று நூற்றாண்டுகளின் கதையாகப் பொருளிழக்கிறது, அல்லது பிறிதொன்றாக ஆகிறது, அல்லது பலவாக விரிகிறது.
வரலாற்றுக் கதையாடலில் ஒரு நிகழ்வை நேரடியாக, தூலமாக இன்னொரு நிகழ்வு பாதித்தாலொழிய அது வரலாற்றின் பகுதியாக ஆக முடிவதில்லை. உதாரணமாக ஒரு சூஃபியைக் கொல்வது வரலாற்றுக் கதையாடலில் ஒரு பேரரசனுடைய குரூரப் பண்பிற்கு எடுத்துக்காட்டான தனிப்பட்ட நிகழ்வாக வரையறுக்கப்படுகிறது என்றால் அதே கொலை அப்பேரரசினுடைய வீழ்ச்சிக்கே காரணமான சாபமாகப் புனைவில் இடம்பெற்றுவிட முடிகிறது. முன்னது அந்த நிகழ்வை உறுதிப்படுத்துகிறது, பின்னது அதை ஒரு சாத்தியமாக மாற்றுகிறது. அது கொலை செய்தவனின் எண்ணவோட்டமாக, நம்பிக்கையாக, அச்சமாக இருக்கலாம். வேறொரு மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இந்த நம்பிக்கையோ அச்சமோ இந்த மண் சார்ந்த மக்களோடு நூற்றாண்டு காலமாய் தலைமுறைகளைத் தாண்டி ஊடாடும் வாய்ப்புகளின் வழியே அந்தத் தலைமுறையின் வழியே வந்த ஒருவனுக்குள் இறங்கியிருக்காதென்றோ அது அந்தக் கொலைகார மன்னனுடைய பிற்கால நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிராது என்றோ யாராலும் சொல்லவியலாதுதான். இப்படி அரியணைக்கான போர், சகோதரக் கொலை, காதல் மயக்கம், மத வெறுப்பு, எனினும் ரஜபுத்திரர்களுடன் கலப்புத் திருமணம், பேரரசனின் எளிய வாழ்வு, தந்தை மகள் உறவு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளின் மேலும் சாத்தியங்களின் ஒளியைப் பாய்ச்சி வரலாற்றை நோக்கமற்ற ஒன்றாகப் புனைவு மாற்றுகிறது. நான்தான் ஔரங்ஸேப் இதைச் செய்கிறது. எனவே புனைவாகிறது.
நான்தான் ஔரங்ஸேபைப் புனைவு என்று மதிப்பிட்டால் அடுத்த கேள்வி, இது என்ன விதமான புனைவு? வரலாற்றை ஊடுருவல் செய்யும் ஆசிரியத் தன்னிலையின் வாசிப்பை வரலாற்றுப் பாத்திரங்களினிடையில் கற்பனைப் பாத்திரங்களின் மேலேற்றி உலவவிட்டுப் புனைவாக மாற்றுவதுதான் பொதுவாக வரலாற்றுப் புதினங்களின் பாணி. ஆனாலும் சிவகாசிக் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட அஞ்ஞாடியை இந்த உத்தியால் ஏன் புனைவாக மாற்ற முடியவில்லை? ஏனெனில் அது சாத்தியங்களின் பற்றாக்குறையால் வரலாறாகவே (ஆனால் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட வரலாறாக) எஞ்சுகிறது. கதை சொல்லும் தன்னிலை எந்த அளவிற்கு வரலாற்றின்மீதான பொருள்கோடலில் சார்பு நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்தப்பட்ட பார்வையையும் கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் வெளிப்பாடும் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின் கோவையாக, வரலாறாக மாறிவிடுகிறது. எனவே கற்பனைப் பாத்திரங்கள் உருவாக்கம் மட்டுமே ஒரு வரலாற்றைப் புனைவாக மாற்றிவிட வல்லது அல்ல என்று தெரிகிறது. நான்தான் ஔரங்ஸேபிலோ கற்பனைப் பாத்திரங்களே இல்லை. அது முழுக்க முழுக்க வரலாற்றுப் பாத்திரங்களால்தான் நிரம்பியிருக்கிறது. பிரதியில் ஔரங்ஸேபின் ஆவியையும் இன்னும் சிலரின் ஆவிகளையும் கதைசொல்லிகளாக ஒரு அகோரியின் உடல்வழியே காணும் எழுத்தாளனும் அவனுடைய நண்பனும் பிரதியில் சொல்லப்படும் வரலாற்றின் எந்தத் தடத்தையும் தங்களுடைய செயல்பாடுகளால் ஊடுருவல் செய்யாததால் அவர்களையும் கதாபாத்திரங்களாகக் கருதுவதற்கில்லை. அவர்கள் இல்லாவிட்டாலும்கூட ஔரங்ஸேபின் கதை நேரடியாக வாசகர்களுக்குச் சொல்லப்படக்கூடியதாகத்தான் பிரதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
பிரதியில் வரலாற்றை ஊடுருவல் செய்வது, பிற புனைவுகளில் நிகழ்வதைப்போல, கற்பனைப் பாத்திரங்களல்ல; மாறாக வரலாற்றுப் பாத்திரங்களே தங்கள் செயல்களைத் திரும்பிப் பார்த்து வெவ்வேறு விதங்களில் அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். பிரதியில் எழுத்தாளன் என்னும் கதாபாத்திரத்தின் குரல் அவ்வப்போது (ஆனால் நீளமாக) இடையிட்டுக் கேள்வி கேட்டு வரலாற்று நிகழ்வுகளைச் சமகால நிகழ்வுகளோடு பொருத்திப்பார்த்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. ஆனால் இப்படி ஒரு குரல் ஒலிப்பதுகூடச் சில சமயங்களில் அந்த எழுத்தாளனைக் கதாபாத்திரங்களில் ஒன்றாக மாற்றிவிடும் ஆபத்து இருப்பதாகக் கருதியோ என்னவோ ஆசிரியர் அவனை வரலாற்று நிகழ்வுகளில் தீவிரமான பொருள்கோடலை நிகழ்த்துபவனாக உருவாக்குவதற்குப் பதிலாக அபத்தமான கேள்விகள், தொடர்பற்ற விவரிப்புகள், சிரிப்பை வரவழைக்கக்கூடிய உதாரணங்கள், மிக நீண்ட நினைவுகூரல்கள், திடீர்ப் பயணங்கள், தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவற்றின் வழியே அதே வரலாற்றுத் தரவுகளை அபத்த நிகழ்வுகளாக மாற்றுபவனாக உருவாக்குகிறார். இப்படிக் கதைத் தொடர்ச்சியை அறுப்பதற்கோ அல்லது தீவிரமான உணர்வுக்களத்தைச் சிதைப்பதற்கோ அந்த எழுத்தாளனுக்குத் தர்க்கரீதியான சந்தேகங்களோ கேள்விகளோ தேவையாயும் இருப்பதில்லை. அதற்கு ஒரே ஒரு வாக்கியம் அல்லது ஒரே ஒரு சொல்லே போதுமானதாயிருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் அல்லது ஒற்றைச் சொல்லில் ஔரங்ஸேபின் கதை அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளனின் தொடர்பற்ற அல்லது அபத்தமான ஒப்பிடல்களின் வழியே வேறொன்றாய்த் திரும்பிவிடுகிறது அல்லது அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. பிரதியில் இந்த உத்தி என்னவாகச் செயல்படுகிறது? இதை எப்படிப் புரிந்துகொள்வது? இது என்ன வகைப் புனைவு?
புனைவுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று காலத்தைப் பற்றி எழுதும் புனைவுகள். இவ்வகைப் புனைவுகளில் கதையைச் சொல்வதற்கென்று ஆசிரியரால் ஒரு கதைசொல்லி உருவாக்கப்படுகிறார். கதையை எழுதுபவர் (ஆசிரியர்) கதை எழுதப்படும் காலக்கட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க, கதைசொல்லியோ கதை நிகழ்த்தப்படும் காலக்கட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் (விஷ்ணுபுரம், தாண்டவராயன் கதை, அஞ்ஞாடி, புயலிலே ஒரு தோணி போன்ற வரலாற்றுப் புனைவுகளின் கதைசொல்லிகளுக்கு செல்பேசியையோ, கணினியையோ தெரியாது. தாங்கள் அறிந்தேயிராத ஒரு எதிர்கால ஊடகத்தின் வழியே தங்கள் குரல் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிற பிரக்ஞையும் அவர்களுக்குக் கிடையாது). புனைவின் இரண்டாவது வகை காலத்தால் எழுதப்படும் புனைவுகள். இவ்வகைப் புனைவுகளின் கதைசொல்லியாக ஆசிரியரே இருக்கிறார். இவர் கதை எழுதப்படும் காலகட்டத்தைச் சேர்ந்தவர்.
முதல்வகைப் புனைவுகளில் கதை நிகழ்வுகள் கதைசொல்லியால் நேரடியாகப் பார்த்து விவரிக்கப்படும் மெய்ம்மை நிகழ்வுகளாக இருக்க, இரண்டாவது வகைப் புனைவுகளில் கதை நிகழ்வுகள் அவை நடந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஏதாவதொரு ஊடகத்தின் வழியே சொல்லப்படுகிற, அந்த ஊடகத்தின் தாக்கத்தால் பார்வைக்கோணத்தின் விலகலுக்கு நூறு விழுக்காடு சாத்தியம் கொண்ட பிரதி நிகழ்வுகளாக இருக்கின்றன (நான்தான் ஔரங்ஸேபில் மொகலாய வரலாறு முழுவதும் அகோரி என்கிற ஒரு இந்து ஊடகத்தின் வழியாகத்தான் சொல்லப்படுகிறது). எனில் இரண்டாவது வகைமையில் கதை வாசிப்பானது ஊடகத்தால் வடிகட்டப்பட்டுத் தரப்படும் வரலாற்றைக் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் இடைநிறுத்தங்களுக்கும் அலட்சியப்படுத்தல்களுக்கும் உட்படுத்தி அதை வரலாறாக மாறவிடாமல் தொடர்ந்து சிதறடித்துக்கொண்டேயிருக்கும் ஒரு குரலை வாசிப்பதாகவே இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் இரண்டாம் வகைமையில் வாசிக்கப்படுவது புனைவு அல்ல, புனைவை வாசிக்கும் முறை. வரலாற்றை நாம் வாசிப்பதற்கான ஒரு மாதிரி.
நான்தான் ஔரங்ஸேபில் இந்து அகோரியின் வழியே வெளிப்படும் மொகலாயப் பேரரசின் வரலாற்றை எழுத்தாளனின் அபத்தமான, சிரிப்பை வரவழைக்கும் இடையீடுகள் திகைத்துத் திசை மாற்றிக்கொண்டேயிருக்கின்றன. அந்த வரலாறு, பக்கங்களின் போக்கில் ஔரங்ஸேபின் கைகளிலிருந்து யார் யாருடைய கைகளுக்கோ இடம் மாறிவிடுகிறது. சர்வ வல்லமையுள்ள பேரரசர் ஔரங்ஸேப் ஒன்றும் செய்யவியலாத அப்பாவியாக எழுத்தாளனும் அதே அகோரியின் உடலில் இடம்பிடித்துக்கொள்ளும் வேறு ஆவிகளும் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வருகிறார், கூட்டிச் செல்லும் இடங்களுக்கெல்லாம் போகிறார்.
ஆக, சாருவின் புதினம் ஔரங்ஸேபின் வரலாற்றைச் சொல்கிறதா என்றால் இல்லை. பின் மொகலாயப் பேரரசின் வரலாறா அது என்றால் அதுவும் இல்லை. பின் என்னதான் அது? இன்று வாழ்க்கை வாழப்படும் விதம், வரலாறு வாசிக்கப்படும் விதம் (அல்லது வாசிக்கப்பட வேண்டிய விதம்) குறித்த உருவகப் புனைவாகத்தான் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது வரலாறு குறித்தோ, அதன் பெருநிகழ்வுகள் குறித்தோ சார்புநிலைப்பட்ட எந்தக் கருத்தையோ அறிவுறுத்தலையோ வரையறுப்பையோ முன்வைக்க முற்படுவதில்லை. காரணம், இன்று எதையும் வரையறைக்கு உட்படுத்த முயல்வது உட்படுத்தப்படும் முன்னிலையின்மேல் அதிகாரத்தைச் செலுத்தும் செயலாக ஆகிவிட்டிருக்கிறது. தன்னைக் கவிதை அல்லது புனைவு என்று சொல்லிக்கொண்டு எனக்கு முன் வந்து நிற்கும் இப்பிரதி கவிதை அல்லது புனைவு என்கிற வரையறைக்குள் அடங்குகிறதா என்று ஆராய்வதை அந்தப் பிரதியே ஆட்சேபிக்கிறது. போலவே ஒரு பிரதி இலக்கிய மதிப்பையும் சமூக மதிப்பையும் அளவிடுவதற்கான நேற்றைய வரையறைகளும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.
எழுபத்திச் சொச்சம் ஆண்டுகளாகக் கலையமைதி கூடவில்லை என்று ஒரு சாராரால் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருந்த விளிம்பு நிலைப் பிரதிகள் இன்று அதே இலக்கியவாதிகளால் இலக்கியப் பிரதிகளாக மாற்றப்பட்டிருப்பதோடு அவை எழுத்துப் பிரதிகளின் வெளியைக் கடந்து ஊடக வெளியையும் நோக்கி நகர்கின்றன. அதே சமயத்தில் நேற்றுவரை இலக்கியத் தூண்கள் என்று வரையறுக்கப்பட்ட பிரதிகள் கட்டுடைக்கப்பட்டு நிறம் வெளுத்து, விரிசல் கண்டு உதிர்கின்றன. வரையறைகளை உருவாக்குபவையாயும் அவற்றுக்குள் அடங்குபவையாயும் பிரதிகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் முடிந்துவிட்டது. இலக்கியம் என்கிற கௌரவப் பட்டமே இன்று காலாவதியாகிவிட்டிருக்கிறது. இன்று என்முன் வாசிப்பிற்காக நீட்டப்படுவது ஒரு பிரதி, அவ்வளவுதான். எழுத்துக்களால் நிரப்பப்பட்ட ஒரு காகிதம் அல்லது ஒரு திரை வெளி என்று சொல்வதற்கப்பால் நான் அதை வாசிப்பதற்கு மேலதிகத் தகுதி எதையும் அது கொண்டிருக்க வேண்டியதில்லை.
இந்தச் சூழ்நிலையில் இன்று எழுத்தாளர் என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறவர் முன் நிற்கும் சவால் இதுதான்: இலக்கியம் என்கிற ஒன்றால் முன்னிறுத்தப்படும் அழகியல், உண்மை, அறம் என்கிற உள்ளீடுகளைக் காலி செய்துவிட்டு இப்படி எந்த அடைமொழியையும் சுமக்காத ஒரு பிரதியை, பிரதி என்கிற பெயர் ஒன்றை மட்டுமே தாங்கிக்கொண்டிருக்கிற விடுதலையின் உருவகத்தை, எப்படி எழுதுவது? இலக்கியம் என்கிற சிலுவையைத் தன் தோள்களில் சுமந்துகொண்டிருக்கும் ஒருவர் அந்தச் சுமையைக் கழற்றிவிட்டு இப்படியான பிரதியை எழுதுவது கடினம். அதே சமயத்தில் இந்தக் காலகட்டத்தில் உருவான எழுத்தாளருக்கு இந்தச் சூழல் உருவானது குறித்த வரலாற்றுப் பிரக்ஞை இல்லாதிருக்கும் பட்சத்தில் அவர் இதை வெற்று நகைச்சுவைப் பிரதியாக மாற்றிவிடாமல் வரலாற்றுக் கதையாடல்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றுவதும் கடினம்தான்.
இந்த இரட்டை நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் சவாலை, அதாவது வரலாற்றுப் பிரக்ஞையைத் தக்க வைத்துக்கொண்டு, வரலாற்றின் சுமையைத் தவிர்த்துவிடும் சவாலை, தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்றுக்கொண்டிருக்கிறவராக சாரு நிவேதிதா இருக்கிறார். நான்தான் ஔரங்ஸேப் வரலாற்றுப் பாத்திரங்கள் தொடங்கித் திரைப்படம், மதம், சமகால ஆளுமைகள், தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள், பெண்கள், பாலியல், பயணம் என்று எதன்மீதும் நிலைகொள்ளாமல் நகர்ந்துகொண்டேயிருக்கிறது. யாவுமே நம்மை எந்த நிலையான பொருள்கோடலுக்கும் உட்படுத்த அனுமதிக்காமல் மிதந்துகொண்டிருக்கின்றன. சாருவின் ஜீரோ டிகிரியைப் பற்றியும் இதையேதான் என்னால் சொல்ல முடிந்தது. நான் என்பது, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, தான் எதிர்கொள்ளும் சூழல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை எப்படியேனும் தன்னுள் ஏற்படுத்திக்கொள்ளவும் அதைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தவும் முயலும் தன்னிலை. இப்படி அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ள வரலாற்றை அது தனது ஆதாரமாகக் கொள்கிறது. சாருவால் இந்த நானை வரலாற்றின் தடம் பதியாத ஒரு வெற்றுப் பரப்பாகத் தொடர்ந்து வைத்துக்கொள்ள முடிகிறது. தன்னைத் தன் காலத்தின் எழுத்தாக மாற்றிக்கொள்ள அவர் கடுமையான ஏளனங்களுக்கிடையிலும் விமர்சனங்களுக்கிடையிலும் ஒப்புக் கொடுத்திருப்பதால், அவர் இவ்வகையான, நான் அற்ற எழுத்து வகைமையின் முன்னோடியாக ஆகிறார்.
மின்னஞ்சல்: bavenkatesan@yahoo.com