ரானடேவின் இடத்தில் அம்பேத்கர்
- ரானடே பற்றிய அம்பேத்கர் உரை மீதான மாற்று வாசிப்பு
அம்பேத்கரின் எழுத்துக்களாக இன்று தொகுக்கப் பட்டிருப்பவை அவர் நேரடியாக எழுதியது மட்டுமில்லாமல் அவர் தயாரித்த விண்ணப்பங்கள், சமர்ப்பித்த அறிக்கைகள், நாடாளுமன்ற உரைகள், ஆய்வேடுகள், மேடை உரைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் பல்வேறு தருணங்களில் வழங்கிய நெடிய ஆய்வுப் பொழிவுகளும் அடங்கும். அவை எளிய மக்களை இலக்காகக் கொண்ட பொதுவான அரசியல் மேடைப் பேச்சு அல்ல; குறிப்பிட்ட பொருள் பற்றி ஆய்வுநோக்கில் அமைந்த உரைகள்; அப்பொருள் பற்றிப் புலமையும் ஆர்வமும் கொண்டோர் அதன் பார்வையாளர்களாக இருந்தனர். இத்தகைய பொழிவுகள் அவர் காலத்திலேயே நூல்களாகவும் வெளியாயின. அதே வேளையில் பேசப்பட்ட தருணத்திலும் நூலாக்கப்பட்ட போதும் எதிர்ப்பையும் விவாதங்களையும் சந்தித்தன அவ்வுரைகள். அம்பேத்கரின் புகழ்பெற்ற ‘சாதியை அழித்தொழித்தல்’ நூல் லாகூரின் ஜாத்-பட் தோடக் மண்டல் அமைப்பின் 1936ஆம் ஆண்டு வருடாந்திர மாநாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட உரை என்பதும் அதிலிருந்த அவரின் கருத்துக்கள் மாநாட்டுக் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்படாமையால்