எதிர்வினை: த. உதயச்சந்திரன் பார்வைக்கு
அக்டோபர் 2018 காலச்சுவடு இதழை முன்வைத்து:
“அறிவியல் பார்வை என்று குறிப்பிட வருவது அறிவியல் பாடத்தில் மட்டுமல்ல, மொழிப் பாடங்களிலும்கூட. மொழிப் பாடங்களிலும் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே நாம் எதையும் சொல்ல வேண்டும் என்பதைக் கவனமாக முடிவு செய்தோம். ஏனென்றால் மிக முக்கியமாக நம்முடைய வரலாற்றைப் புரிந்து கொண்டதிலும் வரலாற்றுச் சொல்லாடலிலும் கற்பனை சேர்ந்துள்ளதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆகவே, எழுதப்படும் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது சான்றுகள் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும்” என நேர்காணலின் முதல் கேள்விக்குப் பதிலாக, உதயசந்திரன் குறிப்பிடுகின்ற அவரது இரண்டாவது கொள்கைக்கு மாறாக அமைந்துள்ள ஒரு பாடத்தையும் அதிலும் சில குறிப்பிட்ட அம்சங்களையும் மட்டும் சுட்டிக் காட்டுவதே இக்கடிதத்தின் நோக்கம்.
ஆறாம் வகுப்பு - தமிழ்ப் பாடநூல் - பகுதி: விரிவானம் - இயல்: ஏழு - தலைப்பு: வேலுநாச்சியார் - பக்கங்கள் 155 முதல் 158 வரை.
1. “காளையார்கோவிலில் நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந் தார்,” எனப் பக்கம் 155இல் உள்ளது. இது தவறான தகவலாகும். எதிர்பாராத நிலையில் சூழ்ச்சியால் மன்னர் கொல்லப்பட்டார் என்பதுதான் சரியானது. பார்க்க எனது ‘ஒப்பனைகளின் கூத்து’ (சிவகங்கை வரலாற்றை முன்வைத்து ஓர் ஆய்வு) நூல்.
2. “ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண் கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்,”
எனப் பக்கம் 157இல் உள்ளது. இதுதான் மிக முக்கியமானது.
யார் இந்தக் குயிலி? 1813 முதல் 2018 வரை சிவகங்கை வரலாறு குறித்து வெளிவந்துள்ள, இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாத ஓர் ஆங்கில நூல் உள்பட, ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சுமார் அறுபது நூல்கள் எமது வசம் உள்ளன. அவற்றுள் மூன்று நூல்கள் ஏற்கெனவே 1960களில் தமிழக அரசின் பாட நூல்களாக இருந்தவை. அவை எதிலும் இந்தக் குயிலி எனும் பெண்ணும் இடம் பெற்றதில்லை, அப்போது சிவகங்கையில் போர் நடந்ததாகவும் அந்நூல்கள் குறிப்பிட்டதில்லை.
தமிழகத்தின் இடதுசாரிய, திராவிட, இந்தியத் தேசிய, தமிழ்த் தேசிய, தலித்திய, முற்போக்கிய அறிவுசீவிகளால் கூறப்பட்டு வருகின்ற, குயிலி உண்மையில் வரலாற்று ஆதாரமற்றவள். ஜீவபாரதி என்பவரின் ஓராண்டுத் தொடர்கதையாலும் 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை வந்துள்ள பதினான்கு பதிப்புகளின் சுமார் இருபதாயிரம் நூற் பிரதிகளாலும் கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்துள்ள ஒரு கற்பனைப் பாத்திரம்தான் இந்தக் குயிலி. இந்தக் கற்பனைக்குச் சிவகங்கையில் 25.50 லட்சம் ரூபாய்க்கு நினைவுத் தூணையும் வைத்துவிட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
மேலும் ஒரு தகவல், ‘ஜீவபாரதியின் வேலு நாச்சி யார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்த புதுக் கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மு.கீதா என்பவர் தற்போதைய பாடநூலாசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ள இருபத்தைந்து ஆசிரியர்களில் ஒருவராவார்.
சிவகங்கை வரலாற்றோடு குயிலி மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்படுகிறாள், சாதி எனும் கயிற்றால். குயிலியின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சிவகங்கை வரலாற்றிற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பரிதாப நிலைக்கு இது குறித்த உதயசந்திரனின் அறிக்கைதான் முடிவுகட்ட வேண்டும். எதிர்பார்க்கிறேன்.
குருசாமி மயில்வாகனன்
சிவகங்கை