தேர்தல் பத்திரங்களுக்கு அப்பால்
EPW பக்கங்கள்
தேர்தல் பத்திரங்களுக்கு அப்பால்
உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் சீர்திருத்தங்கள் ‘அநாமதேய நன்கொடையாளர்களைத்’ கடந்து பார்க்க வேண்டும்.
இந்தியாவில் தேர்தல்களுக்கு நிதி ஆதாரங்கள் தருவது யார்? இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள கடந்த அறுபது ஆண்டுகாலத் தேர்தல் செலவின மதிப்பீடுகளின்படி 1952க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு தொகுதிக்கு ஆகும் செலவு 274 மடங்கு, அதாவது 2.6 லட்சத்திலிருந்து 7.138 கோடியாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் அவற்றிற்குத் தாராளமாக நிதியளிக்கும் புதிரான புரவலர்கள் இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றிக் காட்டுகிறது. பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள 2,577 அரசியல்வாதிகளிடம் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய கணிப்பின்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வருமானத்தின் மூலம் புதிரானதாக இருக்கிறது (அவை முறையே 44% - 47% என இருக்கின்றன). இவர்கள் பதவியில் இருக்கிறபோது இவர்களது வருமானம் உச்சத்தைத் தொடுகிறது. அரசியல்ரீதியான நிதியளிப்பு, இந்தியாவில் தனிப் பொருளாதாரமாகவே இருப்பதை இது காட்டுகிறது.
ரகசியமாக நிதியளிப்பதை அரசே ஊக்குவிக்கும் நிலை உள்ளது. ஆகவே மிகவும் வெளிப்படையானது என்று தம்பட்டமடித்துத் தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டுவந்துள்ள தேர்தல் பத்திரத் திட்டம் இந்த ரகசிய விவகாரத்தை மாற்றப்போவதில்லை.
இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களின் வரலாறு கலவையானது. தேர்தல் நிதி விஷயங்களில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது அல்லது ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஒழுகுவது நடக்கவில்லை. கட்டுப்பாடுகளைக் குறைப்பதற்கும் தந்திரமாக மீறுவதற்கும் இந்தத் தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்குச் சட்டப் பாதுகாப்பை வழங்கியுள்ளன. இதன் ஆக மோசமான அம்சம் என்னவெனில் ‘புரவலர்’, ‘பயனாளர்’ என இரு தரப்பும் தங்களது கருப்புப் பண வருமானத்தைச் சட்டபூர்வமாக்கிக்கொள்ள தேர்தல் முறையே கருவியாகப் பயன்படுகிறது. உதாரணமாக, 2016 நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து ‘அயல்நாடு’ நிறுவனங்களுக்கான வரையறையைத் தளர்த்தியதன் மூலம் போலி நிறுவனங்களிடமிருந்தும் சட்டபூர்வமான நிதி பெற்றுக்கொள்வதற்கான வழியைத் தேஜகூ திறந்தது.
அயல்நாடு பங்களிப்பு (கட்டுப்பாடு) சட்டம் 2010க்கான திருத்தம் இந்தியத் தேர்தல்களுக்கான வெளிநாட்டு நிதி மீதிருந்த தடையை நீக்கிவிட்டது; இந்தத் திருத்தம் முன் தேதியிலிருந்து அமலுக்கு வருவதால் கடந்த 42 ஆண்டுகளில் கட்சிகள் (முக்கியமாக பாஜகவும் காங்கிரஸும்) வெளிநாடுகளிலிருந்து ‘சட்டத்திற்குப் புறம்பாக’ப் பெற்ற தேர்தல் நன்கொடைகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டன (இரண்டு கட்சிகளுமே இந்த விஷயத்தில் குற்றமிழைத்தவை என்று 2014இல் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரி சட்டம் 1961 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள் அநாமதேயமான நன்கொடைகளை ரூ. 20,000க்கும் குறைவான தொகை என்றாலும், மீண்டும் சட்டபூர்வமாக நிலைநாட்டின. ஆனாலும் ஒரு நன்கொடையாளர் இந்த அளவிற்கான நன்கொடையை அதிகபட்சமாக எத்தனை முறை செய்யலாம் என்கிற தெளிவு இல்லை. கருப்புப் பணத்தின் மீதான தனது ‘துல்லியத் தாக்குதலை’ பீற்றிக்கொள்ளும் ஓர் அரசினால் சொல்லப்பட்டிருக்கும் இந்த விதிகள் முரண்நகையானவைதாம்.
அரசியல் நிதி விஷயத்தில் வெளிப்படைத்தன்மையைத் தேர்தல் பத்திரங்கள் முற்றிலுமாக அழித்துவிடும் என இந்தியத் தேர்தல் ஆணையம் சரியாகவே சுட்டிக்காட்டியது. அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதுபோவது பற்றிய அதன் கவலை போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் ‘சம அளவிலான வாய்ப்பு’ கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தானே தவிர அனைவருக்கும் வாக்குரிமை என்ற ‘உயரிய நோக்கை’க் காப்பாற்றுவதற்காக அல்ல. ஆனால் தேர்தலானது கடுமையான போட்டிகொண்ட விஷயம் என்றாகிவிட்ட நிலையில் அனைவருக்குமான சம வாய்ப்பும் நடக்கப்போகிற செயல் அல்ல. கடுமையான போட்டிகொண்ட தேர்தல்களில் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் பணத்தின் பங்கு மிக முக்கியமானதாகிறது. பணம் தருவது (வேட்பாளராக நிற்பதற்கோ அல்லது வாக்குகளுக்காகவோ) என்ற விஷ வட்டம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலோ வாக்காளர்கள் பிளவுற்றிருப்பதாலோ மக்களாட்சியின் பிரதிநிதித்துவப் பண்பையே பலவீனப்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்தத் தேர்தல் நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடையதாக இருப்பதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையத்தின் அல்லது அதைப் போன்ற ஒழுங்குமுறைபடுத்தும் நிறுவனங்களின் கடப்பாடு போட்டியிடும் கட்சிகளின் அரசியல் உறுதியைப் போலவே இருக்க வேண்டும்.
அறரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தல் நடைமுறைக்குப் பணம் ஒரு சீர்குலைவாக அமையுமெனில் வேட்பாளருக்கான தேர்தல் செலவை நாற்பது லட்சத்திலிருந்து எழுபது லட்சமாக ஏன் தேர்தல் ஆணையம் அதிகரிக்கிறது? அதிலும் பலம்வாய்ந்த அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் முன்னர் விதிக்கப்பட்டிருந்த செலவின வரம்பில் 15% முதல் 20% வரையே செலவிட்டிருந்ததாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் ஏன் வரம்பை அதிகரிக்க வேண்டும்? ஒரு தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு எவ்வளவு பணம் ‘போதும்’ என்பதை எப்படி தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறது? நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிடக் குறைவான பணம் செலவழித்ததாக வேட்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்; செலவின் வரம்பைத் தேர்தல் ஆணையம் அதிகரித்திருப்பதன் மூலம் வேட்பாளர்கள் வேண்டுமென்றே குறைத்துக் காட்டியிருப்பதை ஆணையம் மௌனமாக ஏற்றுக்கொள்கிறது. இது இவற்றைத் தடுக்க முடியாத அதன் நிலையை ஒப்புக்கொள்வதைக் காட்டவில்லையா?
ஏராளமான குழுக்களாலும் அவற்றின் பரிந்துரைகளாலும் தேர்தல் செலவையும் சட்டத்திற்குப் புறம்பாகத் தரப்படும் நிதியையும் கட்டுப்படுத்த முடியாதது அரசியல் நிதி விஷயத்தில் கட்டுப்பாடற்ற முறையை அரசே வழிநடத்துவதாகிறது. அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் நன்கொடையாளர்களுக்கும் இடையேயான அடையாளத் தொடர்பு அரசுக் கொள்கைகள் எந்த அளவிற்கு வாக்காளர்களை மையமாகக் கொண்டிருக்கின்றன என்று காட்டுகின்றன; என்றபோதிலும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு அமைப்புகளான தேர்தல் ஆணையமோ அல்லது உச்சநீதிமன்றமோ சில நன்கொடையாளர்களின் நலன்களைப் பற்றிச் சிந்திக்கின்றனவே தவிர 85 கோடி வாக்காளர்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தொலைநோக்குப் பார்வையற்ற இந்த அரசியல் பழிசுமத்தும் விளையாட்டில் தேர்தல் செலவினங்கள் குறித்த நடத்தை விதிகள், நடத்தை விதிகள் கூறும் காலக்கெடுவிற்கு அப்பாலும் கண்காணித்தல், தேர்தல் முறையின் கட்டமைப்பு போன்ற அடிப்படையான பிரச்சனைகள் தவறவிடப்பட்டுவிட்டன. தேர்தல் சீர்திருத்தங்களில் இவை உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஏப்ரல் 13, 2019