மே 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      விளிம்புநிலை மக்கள் வரலாறும் உ.வே.சாமிநாதையரும்
      பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள்
      மேற்கத்தியப் பல்கலைக்கழகமும் இனவாதமும்
    • கதை
      இங்கே நிறுத்தக்கூடாது
      வென்றவள்
    • அஞ்சலி: இயக்குநர் மகேந்திரன் (1939 – 2019)
      அழகுகளில் உறைந்தவர்
    • அஞ்சலி: இயக்குநர் மகேந்திரன்
      ஓடாத நதியின் ஓடம்
    • இனஅழிப்பின் 10 ஆண்டுகள்
      காய உருக்கள்
    • நேர்காணல்: ரொமிலா தாப்பர் / மருதன்
      வரலாறு என்றால் என்ன?
    • EPW பக்கங்கள்
      தேர்தல் அறிக்கைகளின் அரசியல்
    • திரை
      புதுமையின் நாஸ்டால்ஜியா
    • கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?
    • மதிப்புரை
      முன்பின் தெரியாத வாழ்க்கை
    • தலையங்கம்
      மீண்டும் படரும் காரிருள்
    • இன அழிப்பின் 10 ஆண்டுகள்
      இளைய நெஞ்சிலே
      நிலானியின் கோட்டோவியங்கள்: எல்லையுரு, எதிர்ப்பு, அடையாளம்
      முரண்பாடுகளின் நினைவு அரிச்சுவடி
      போரும் கூத்தும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2019 அஞ்சலி: இயக்குநர் மகேந்திரன் (1939 – 2019) அழகுகளில் உறைந்தவர்

அழகுகளில் உறைந்தவர்

அஞ்சலி: இயக்குநர் மகேந்திரன் (1939 – 2019)
ஜி. குப்புசாமி

கணவனைத் துறந்து காதலனைத் தேடி வீட்டைவிட்டுப் போகிறாள் மனைவி. காதலன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையென்று தெரிந்ததும் மனமுடைந்து, வீட்டுக்குத் திரும்ப மனமின்றி எங்கேயோ கூலி வேலை செய்துகொண்டிருப்பவளை, தெரிந்தவர் ஒருவர் கணவனின் வீட்டுக்குக் கூட்டிவருகிறார். மாட்டுவண்டியிலிருந்து கூச்சத்தோடு இறங்கிப் புடவைத்தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு நின்றிருப்பவளைக் கணவன் மெதுவாக நெருங்கி, முக்காட்டில் ஒட்டியிருக்கும் பழுதை எடுத்துப்போட்டுவிட்டு, அவளைத் தோளோடு சேர்த்தணைத்து வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்.

தன் உயிருக்கும் மேலாக நேசித்துவரும் தங்கையை ஏதோ ஒரு வேகத்தில் அந்த முரட்டு அண்ணன் அடித்துவிடுகிறான். உண்மையில் அடிப்பதுகூட அல்ல, அவளைத் தள்ளிவிடுகிறான். பிறகு குற்றவுணர்வு மேலிட, குடித்துவிட்டு வந்து அவளிடம் கண்கலங்க மன்னிப்பு கேட்கிறான். ‘வலிச்சுதாம்மா,’ என்று தழுதழுக்கிறான். அன்றிரவு அவள் தூங்கியபிறகு, சத்தமின்றி எழுந்துவந்து அவள் பாதங்களுக்கு மருதாணி இட்டுவிடுகிறான்.

ஆற்றுநீரில் அம்மா துணி துவைப்பதைப் பார்த்து, அந்த மூன்று வயதுப் பெண்ணும் தனது பாவாடையைத் தண்ணீரில் நனைத்துத் துவைக்கிறது. அம்மாவின் உயிர் பிரிந்துகொண்டிருப்பதை அறியாமல் அவளின் கை வளையல்களைப் பிரித்து விளையாடுகிறது. ஊர்மக்கள் அப்பாவைத் தற்கொலை செய்துகொள்ள அழைத்து வந்திருப்பதைப் புரிந்துகொள்ளாமல் அவரைப் பார்த்து மோகனமாகச் சிரிக்கிறது.

மனைவியாக என்னை ஏற்றுக்கொள்வீர்களா என்று கூச்சத்தை விட்டுக் கேட்டுவிட்டு, அவன் தயங்குவதைக் கண்டு நொறுங்கிப்போய் அழுகிறாள் அவள். அவன் சுதாரித்துத் தன் உடன்பாட்டைச் சொல்லிவிட்டு, ஏன் அப்படி படபடவென்று என்னென்னமோ பேசிட்டிங்க என்று கேட்கும்போது, அந்த இனிய தேவதை முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு ‘நான் அப்படித்தான் பேசுவேன்’ என்று சொல்லி முகத்தைப் புடவைத்தலைப்பால் மூடிக்கொண்டு வெட்கமும் காதலுமாகச் சிரிக்கிறாள். அவனோடு வெளியில் செல்லும்போது அவன் இரண்டு டம்ளர்களில் இளநீர் வாங்கிக் கொண்டுவர கைதவறி ஒரு டம்ளர் மட்டும் தளும்பிக் கொஞ்சம் சிந்திவிட அந்த டம்ளரையே கேட்டு அவள் அடம்பிடிக்கிறாள். அவள் அருந்தும்போது அவன் அக்கறையோடு, பாடகியான அவள் தொண்டைக்கு இளநீர் ஒத்துக்கொள்ளுமா என்று கேட்கிறான்.

மகேந்திரன் இயக்கிய திரைப்படங்களை நினைக்கும்போது உடனடியாக நினைவுக்கு வருபவை எந்நாளும் ரசிக்கத்தக்க இத்தகைய அழகான காட்சித் துணுக்குகள் மட்டுமே. ஒட்டுமொத்தமான திரைப்பட அனுபவத்தை விடவும் அற்புதமான காட்சித் துணுக்குகளால் நினைவுகூரப்படுபவர் இயக்குநர் மகேந்திரன்.

1977ஆம் வருடம் இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. நெருக்கடி நிலை அகன்று புதிய தேர்தல்களால் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட ஆட்சிமாற்றங்கள் பெரும் நம்பிக்கைகளை எழுப்பிய காலகட்டம் அது. தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஒரு புதிய அலை வீறுகொண்டு எழுந்தது - வங்கத்திலும் கேரளத்திலும் ஏற்கெனவே வேரூன்றியிருந்த கலைநயமிக்க அர்த்தப்பூர்வமான திரைப்படங்கள் தமிழிலும் புதிய இயக்குநர்கள் கொண்ட ஒரு படையினரால் உருவாகத் தொடங்கிவிட்டன என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்தப் புதிய பாணி இயக்குநர்களில் பிரகாசத்துடன் ஆர்ப்பாட்டமாக நடைபோடாமல் அமைதியாக அழுத்தமான நடையுடன் வந்தவர் மகேந்திரன். 

அலை என்றாலே வீசி அடங்குவது என்பதாக அரசியலிலும் தமிழ்த்திரையுலகிலும் புதிய மாற்றங்கள் அடுத்த நான்கே வருடங்களில் தலைகீழாக மாறி உள்வாங்கத் தொடங்கின. தமிழைப் பொறுத்தவரை, நல்ல திரைமுயற்சிகளோடு வந்தவர்களின் புதிய முயற்சிகள் தோல்வியடைந்து அவர்கள் விரக்திக்குள்ளாகிவந்த நிலையில், மகேந்திரனின் மூன்றாவது படமான ‘பூட்டாத பூட்டுக்கள்’ வணிகரீதியாகப் படுதோல்வியடைந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் எவையுமே - அவற்றின் அழகான காட்சிகள், சில மென்மையான பாத்திரப்படைப்புகள் என்பவற்றைத் தாண்டி - முக்கியமானவையென்று சொல்லமுடியாமற் போயின.

கதைத் திருட்டுக்குப் பெயர்போன தமிழ்த்திரையுலகில், மகேந்திரன் ஒரு நேர்மையாளர். அவர் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ உமா சந்திரனின் தொடர்கதை; ‘பூட்டாத பூட்டுக்கள்’ பொன்னீலனின் கதை; ‘நண்டு’ சிவசங்கரியின் கதை; கடைசிப் படமான ‘சாசனம்’ கந்தர்வனுடையது. அவரது ஆகச்சிறந்த படைப்பான ‘உதிரிப்பூக்கள்’ மூலக்கதை புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்று அவர் டைட்டிலில் தெரிவித்திருந்தபோதும் உண்மையில் புதுமைப்பித்தனின் நெடுங்கதைக்கும் - திரைப்படத்துக்கும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ‘சுந்தர வடிவேலு’ என்ற ஒற்றுமையைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. மகேந்திரன் வெளிப்படையாக அறிவித்திருக்காவிட்டால் அது புதுமைப்பித்தனின் கதை என்று எவரும் கண்டுபிடித்திருக்கமாட்டார்கள். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ அவருடைய முக்கிய படைப்புகளில் ஒன்றல்ல. ‘அவர் இடதுகையால் எழுதிய கதை’ என்று உதிரிப்பூக்கள் பட விமரிசனத்தில் அசோகமித்திரன் குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் அக்கதை மகேந்திரனை எந்த விதத்திலோ ஆழமாகப் பாதித்திருப்பது தெரிகிறது. வாஸ்தவத்தில் உதிரிப்பூக்கள் மகேந்திரனின் அசலான படைப்பு என்றே சொல்லிவிட முடியும்.

நாவல்களைப் படமாக்குவதில் மகேந்திரனின் பாணி குறிப்பிடத்தக்கது. மூலக்கதையிலிருந்து சுதந்திரமாக விலகிச்சென்று விடுகிறார். அவர் எடுத்துக்கொள்வது மூலக்கதையில் அவருக்கு மட்டுமே தெரிகிற ஒரு சின்னப் பொறி மட்டுமே. அவர் படமாக்கத் தேர்ந்தெடுத்த நாவல்கள் எல்லாமே மிகச் சாதாரணப் படைப்புகள். ‘முள்ளும் மலரும்’ ஒரு சராசரியான பத்திரிகைத் தொடர்கதை. பொன்னீலன், கந்தர்வன் ஆகியோரின் கதைகள் பெரிதாகப் பேசப்பட்டவையும் அல்ல. சிவசங்கரியின் ‘நண்டு’ ஓர் உதாரண ‘அதீத மெலோ டிராமா’. இத்திரைப்படங்கள் எல்லாவற்றிலும் மகேந்திரனுக்கு இணையாக ஒளிப்பதிவாளருக்கும் இசையமைப்பாளருக்கும் படத்தொகுப்பாளருக்கும் சமபங்கு இருக்கிறது. முதல் படத்தில் பாலு மகேந்திராவும் அதன் பிறகான படங்களுக்கு அசோக்குமாரும் மகேந்திரனின் பிரசித்திபெற்ற அழகுக் காட்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றனர். ‘அடிப் பெண்ணே’, ‘செந்தாழம்பூவே’ ஆகிய இரு பாடல்களையும் பாலு மகேந்திரா படமாக்கிய விதம் உன்னதமான ரசனைக்குரியது. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ படக்காட்சிகள் பலவும் சலனம் பெற்ற தைல ஓவியங்களைப்போலக் காட்சியளித்தன. இளையராஜாவின் பாடல்களை மிக அழகாகப் படமாக்கியவர் இயக்குநர் மகேந்திரன்தான்.
    
ஆனால் மேற்கண்ட தகுதிகள் எல்லாமே மகேந்திரனை ‘ரொமாண்டிஸ’ இயக்குநராகத் தான் நிறுவியிருக்கின்றன. அவருடைய படங்களைக் கறாராக மதிப்பிட்டால் அவற்றை யதார்த்த பாணித் திரைப்படங்கள் என்று சொல்லமுடியாது. இருப்பினும் மகேந்திரனின் வீழ்ச்சி அவருடைய சொந்தக் கதைகளை இயக்கத் தொடங்கிய நான்காவது திரைப்படத்திலிருந்து தொடங்குகிறது. ‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’, ‘கை கொடுக்கும் கை’, ‘கண்ணுக்கு மை எழுது’, ‘ஊர்ப்பஞ்சாயத்து’ என்று அவருடைய எந்தப் படமும் உதிரிப்பூக்களை இயக்கிய மகேந்திரனின் படம் என்று சொல்லத் தக்கவையல்ல. தனக்குப் பிடித்தமான படம் என்று அவர் அறிவித்துக்கொண்ட ‘மெட்டி’ ஒரு தர்க்க ஒழுங்கற்ற கதை. அசட்டுத்தனமான பாத்திரங்களை அழகான காட்சிகளின் மூலம் உன்னதப்படுத்த முயன்றிருந்தார். இப்படத்தின் எல்லாப் பாத்திரங்களுமே தம்மை அறிவாளியாகக் கருதிக்கொண்டு அபத்தமாக நடந்துகொள்பவர்களாக இருந்தனர். மிகவும் அறிவாளியாகச் சித்திரிக்கப்பட்ட வடிவுக்கரசி வீம்புக்காகவே ஒரு அயோக்கியனைத் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் தாயான விஜயகுமாரி தன் சேலைத் தலைப்பைக் கழுத்தில் தானே இறுக்கி (தூக்கிலிட்டுக் கொள்ளவில்லை) தற்கொலை செய்து கொள்கிறார். இத்தகைய விநோதமான திருப்பங்களுக்கு ஏற்கும்படியான காரணங்கள் எவையும் திரைக்கதையில் காணக்கிடைப்பதில்லை.

இந்தப் படத்தில் தென்படும் அதீத உணர்ச்சிவயப்பட்ட தன்மை அவருடைய மற்ற படங்களிலும் தொடர்ந்தது. அவருடைய பாத்திரங்கள் உணர்ச்சி மேலிட்டவர்களாக இருந்தாலும் வெளியில் அமைதியே உருவானவர்களாக வாய்திறந்து பேசாதவர்களாக இருந்தனர். பொன்னீலனின் கதையில் கண்ணம்மா ஓர் உற்சாகமான பெண்ணாகவே இருக்கிறாள். ஆனால் திரைப்படத்தில் அவள் கிட்டத்தட்ட ‘ஊமை’ எந்நேரமும் சோகமாக மோட்டு வளையைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள். இந்த சாத்வீக வெளித்தோற்றத்தில் மகேந்திரனுக்கு இருந்த மயக்கம், ஆழமான கதையமைப்புகளை உருவாக்குவதில் இருக்கவில்லை.

அன்றைய பிற தமிழ் இயக்குநர்களைப் போலவே ஆண் மையச்சிந்தனைதான் மகேந்திரனுக்கும் இருந்திருக்கிறது. ஒரே தவற்றை ஆண் செய்யும்போது அது பெரிதுபடுத்தப்படுவதில்லை; பெண் தண்டிக்கப்படுகிறாள், அல்லது பாவம் புரிந்தவளாகக் காட்டப்பட்டு ஆணின் பெருந்தன்மையால் மன்னித்து ஏற்கப்படுகிறாள். பூட்டாத பூட்டுக்களில் நாயகன் ஒரு ஸ்திரீலோலன். ஆனால் அவனுடைய மனைவிக்கு அவனுடைய நடத்தை ஒரு பிரச்சனையாக இருப்பதாகக் காட்டப்படுவதில்லை. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வில் சரத்பாபுவின் மனைவி கிட்டத்தட்ட ஒரு ஹிஸ்டீரியா நோயாளி. எடுத்ததெற்கெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்பவள். அவளுடைய பிரச்சனைக்குக் காரணம் சரத்பாபுவுக்கு இருக்கும் வேறொரு பெண்ணின் தொடர்பாகத்தான் இருக்க முடியும். படத்தில் சரத்பாபுவுக்கும் அவருடைய சிநேகிதிக்கும் இடையே இருப்பது தெய்வீக உறவு என்பதாகவும், அதைப் புரிந்துகொள்ளாத ‘ராட்சசி’ அவருடைய மனைவி என்பதாகவும் மகேந்திரன் சித்திரிக்கிறார்.

சம்பிரதாய ஒழுக்கமீறல்கள் பற்றிய தெளிவின்மைதான் மகேந்திரனின் சிக்கல் என்று அவருடைய படங்களை ஒட்டுமொத்தமாகக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது தெளிவாகிறது. அவரைப்பற்றிச் சரியாக மதிப்பீடு செய்வதென்றால் முதல் மூன்று படங்களையும் அடுத்துவந்த படங்களின் சில காட்சிகளையும் சேர்த்து மொத்தமாக மூன்றரை நல்ல படங்களைத் தமிழுக்குத் தந்தவர் என்று சொல்லிக்கொள்ளலாம். மேலும் இந்தியத் திரைப்பட மறுமலர்ச்சிக் காலத்தில் இந்திய மொழிகளில் உருவான சில திரைப்படங்களை ‘உலக சினிமா’ என்ற வகைமையில் பெருமையோடு வைக்கமுடியும். ஆனால் அத்தகைய உன்னதத் திரைப்படமாக ஒரேயொரு தமிழ்ப் படத்தைக்கூட சொல்ல முடியாதெனினும் மிகச்சிறந்த இந்தியத் திரைப்படங்களின் வரிசையில் மகேந்திரனின் மூன்று திரைப்படங்களைச் சேர்க்க முடியும் என்பதே மகேந்திரனின் தனிச் சிறப்பு. இவற்றை மீறி அவர் மென்மையானவர், அதிராமல் கதை சொன்னவர், வசனங்களே இல்லாமல் மௌனங்களைக் காட்சிப்படுத்தியவர் என்றெல்லாம் புகழுரைகள் அடுக்கிச் செல்வது நேர்மையான மதிப்பீடாகாது.

மின்னஞ்சல்: gkuppuswamy62@yahoo.com


 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.