கலைஞர் மறுக்க வேண்டும்
தமிழகத்தின் சாகித்திய அகாடமியாக உருவாக்கப்பட்டிருக்கும் குறள்பீடம் அமைப்பின் தலைவராக முதலமைச்சர் மு. கருணாநிதி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் ‘படைப்பிலக்கியச் செம்மலுக்கு’ வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் முதல் ஆண்டுப் பரிசை (பரிசுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம்) கலைஞருக்கு அளிக்க வேண்டுமென பல உறுப்பினர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கோரிக்கை எழுப்பினர் என வதந்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பரிசை வாங்க கலைஞர் மறுக்க வேண்டும்.
கலைஞர் இப்பரிசைப் பெற ஏன் மறுக்க வேண்டும் என்பதற்கான வாதங்களை இங்கு முன் வைக்கிறோம்.
1. பரிசு எழுத்தாளனுக்கு வழங்கப்படும் ஒரு சமூக அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. தமிழ் சமூகத்தின் சகலவிதமான அங்கீகாரத்தையும் பெற்றவர் கலைஞரைப் போல வேறொருவரில்லை. எத்தனையோ எழுத்தாளர்கள் ஆயுட்கால இலக்கிய அர்ப்பணிப்புக்குப் பிறகும் போதுமான சமூக அங்கீகாரம் இன்றி இருக்கிறார்கள். இத்தகைய எழுத்தாளர்களைத் தமிழகத்தின் பல்வேறு இலக்கியப் போக்குகளிலும் அடையாளம் காட்ட முடியும். இதில் பலருக்கு பரிசுத் தொகை ரூபாய் இரண்டு லட்சமும் பிழைப்பிற்கு அவசியமான பெருந்தொகையாக இருக்கும். தமிழினத் தலைவராக சமூகத்தில் கணிசமான பகுதியினரால் மதிக்கப்படும் ஒருவர் இந்தப் போட்டியில் இறங்குவது கௌரவமானச் செயலாக இராது.
2. முன்னர் முதல்வராக இருந்தபோது தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் இராஜராஜ சோழன் விருதைப் பெற்று முதல்வர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாக கண்டனத்திற்கு அவர் உள்ளானார். இப்போது மீண்டும் முதல்வராக இருக்கும்போது குறள் பீடம் பரிசை ஏற்றுக் கொள்வது அவசியமற்ற ஒரு சர்ச்சையை மீண்டும் எழுப்புவதோடு குறள் பீடம் திட்டம் துளிர்விடும் நிலையிலேயே அரசியல் மயமாக்கப்படும் அபாயமும் இதனால் உருவாகலாம்.
3. சாகித்திய அகாடமி உள்ளிட்ட பல அமைப்புகளில் அமைப்புக் குழுவில் இடம்பெறுபவர்கள் பரிசு பெற முடியாது என்பது நியதி. குறள் பீடம் அமைப்பின் தலைவரான கலைஞர் இப்பரிசை ஏற்றுக்கொள்வது தவறான வழிகாட்டுதலாகவும் மோசமான முன்மாதிரியாகவும் அமையும்.
மேலும் இந்தியாவில் நிறைய அரசியல்வாதிகள் எழுத்தாளர்களாகவும் உள்ளனர். சிலர் முதலமைச்சர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் யாரும் தங்கள் மாநில, மத்திய அரசின் இலக்கிய திட்டக் குழுக்களில் அதிகாரம் வகிப்பதாகத் தெரியவில்லை. தன்னுடைய பல்வேறு அரசு மற்றும் கட்சிப் பணிகளுக்கிடையில் இந்தப் பொறுப்பை கலைஞர் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. கலைஞர் இப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு முழுநேர எழுத்தாளர் இப்பதவியில் இடம்பெற வழி செய்வது நல்லது. மேற்படி அமைப்பு அரசியல்வாதிகளின் இடையீடு இல்லாமல் செயல்பட அவசியமான சட்டத் திட்டங்களை உருவாக்கவும் அவர் வகை செய்ய வேண்டும்.