நாவல் பழ இளவரசியின் கதை
நாவல்பழ இளவரசியின் கதை
பிரபஞ்சன்
அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே நடந்து சென்றான். பெரியவனின் மார்புக்கு மட்டில் வளர்ந்தவனாக சின்னவன் இருந்தான். பெரியவன் இழுத்துச் செல்லும் குதிரை; பின்னால், சக்கரங்களில் உருளும் சிறு தேர் போலச் சின்னவன் இருந்தான்….
சின்னவன், பெரியவனின் முதுகைப் பார்த்தபடி நடந்தான். விசாலமான புல் முளைத்த
மைதானம் போல அது இருக்கவே, முன்னால் இருந் ததை அவன் பார்க்கக்கூடாமல், பக்கவாட்டில் மட்டும் பார்த்துக் கொண்டு சென்றான். சூரியன் உச்சிக்கு வந்தபோது அவர்கள் காட்டுக்குள் பிரவேசம் ஆனார்கள். என்றாலும், இருள், பச்சை இரு ளாய்ப் பக்கவாட்டு
மரங்களிலும், கரிய இருளாய் நேராகவும் இருந்தது.