ஆலயம் பதினாயிரம் நாட்டல்
தலையங்கம்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
சமூகத்தில் சில அமைப்புகள் தமது நிறுவன வலுவை உறுதிப்படுத்திக் கொள்ளக் காலங்காலமாகச் சில மரபுகளை முன்னிருத்துகின்றன. சில வழக்கங்கள் தொன்றுதொட்டுப் பின்பற்றப்படுபவை, அவை மாற்றப்படக் கூடாது என்று மரபுகளை எடுத்துக்காட்டி வாதிடுகின்றன. முடியாட்சி, நிலவுடைமைக் காலங்களில் இந்த வாதம் இறுதியானதாக இருந்தது; மீற முடியாத சட்டமாகவும் நடைமுறையாகவும் இருந்தது. எல்லாரும் சமமானவர்கள், எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் பொதுவானவை என்ற ஜனநாயக நெறிமுறை இந்தக் கண்மூடி வழக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியது. உரிமைகள் மறுக்கப்படும்போது சட்டத்தின் வாயிலாக அவற்றைப் பெற்றுத் தந்தது. இன்று ஒருவர் தகுதியிருந்தும் தனக்கான உரிமை மறுக்கப்படுமானால் மறுத்த நிறுவனத்திடம் மன்றாடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்தின் வாயிலாகச் சட்டபூர்வமாகவே அதைப் பெற முடியும். இந்தச் சமநீதியும் சம உரிமையும் ஜனநாயக ஆட்சிமுறை வழங்கியிருப்பவை; சட்டரீதியானவை. ஆனால் மரபான வழக்கங்களைப் பாதுகாக்கவும் ஒரு சாராரின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் பிறருடைய ஜனநாயக உரிமையைச் சட்டரீதியாகவே வீழ்த்தும் முயற்சிகள் நடக்கின்றன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசு அளித்த உரிமை சட்டரீதியாக முடக்கப்பட்டிருப்பது இந்த வீழ்ச்சிக்கு உதாரணம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அணுகுமுறையின் அடிப்படையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமைக்குரல் தமிழகத்தில் பல காலமாக எழுப்பப்படுகிறது. 2006ஆம் ஆண்டு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. இறைவன் முன் எல்லாரும் சமம்; வழிபாட்டு உரிமை எல்லாருக்கும் உரியது; இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டுமே முகவர்களாகத் தொடர முடியாது ஆகிய பெரும் மாற்றங்களைச் சட்டம் முன்வைத்தது.
ஆனால் சட்டம் புழக்கத்துக்கு வர, முன்சொன்ன பிரிவினர் முட்டுக்கட்டை போட்டனர். தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்ட மரபையே காரணமாகக் காட்டினர். இறைவழிபாட்டுக்குரிய சடங்குகளிலும் நியமங்களிலும் பழக்கப்படுத்தப்பட்டவர்களே பங்கேற்க முடியும், ஆகமங்களைக் கற்றவர்களே அர்ச்சராக இயலும் என்ற வாதங்களை முன்வைத்தனர். அரசு எல்லா சாதியினருக்குமான அர்ச்சகர் பயிற்சிக்கான மையங்களை உருவாக்கியது. திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ ஆலய வழிபாட்டுமுறைகளுக்கான பயிற்சி மையங்களும் திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் வைணவ முறைகளுக்கான பயிற்சி மையங்களும் தொடங்கி நடத்தப்பட்டன. 2006 - 07ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பயிற்சிகளில் 207 பேர் அர்ச்சகராக நியமனம் பெறும் தகுதியை அடைந்தனர். ஆனால் இன்றுவரையிலும் அவர்களில் இருவருக்கு மட்டுமே ஆலயப் பணி அளிக்கப்பட்டிருக்கிறது; இருவர் மறைந்துவிட்டனர்; எஞ்சிய 203 பேர் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கிறார்கள்; சட்டத்தை மரபு வீழ்த்திய காட்சி இது.
பிராமணரல்லாத பிற சாதியினர் அர்ச்சகர் பயிற்சி பெற்றாலும் பூசை செய்ய இயலாது என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாங்கள் ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்திய இடத்தில் பிற சாதியினரை அனுமதிக்க மறுக்கும் சாதிய வீம்பு ஒருபுறம். வழிபாட்டு முறையிலும் சடங்குகளிலும் பயிற்சிபெற்றுவந்தாலும் பிற சாதியினர் விக்கிரகங்களைத் தொட்டுப் பூஜை செய்தால் தீட்டாகிவிடும் என்று பொதுப் புத்தியில் ஊன்றிய கருத்து ஒருபுறம். இந்த இரு நிலைகளைப் பயன்படுத்தியே பிராமண அமைப்புகளும் சிவாச்சாரியர் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராகப் பணிசெய்யத் தடை ஆணை பெற்றனர். ஒரு தொழிலுக்கான பயிற்சியைப் பெறத் தடையில்லை, ஆனால் அதை வாழ்வாதாரமாகக் கொள்ள உரிமையில்லை என்ற நிலையில் அரசின் முன்னெடுப்பு ஏட்டுச் சுரைக்காய் ஆனது. இந்தச் சிக்கலும் அர்ச்சகர் பயிற்சிபெற்றவர்களுக்கு ஆகம தீட்சை பெற்ற பின்னரே தெரிய வந்திருக்கிறது. பயிற்சியின்போதேகூட இதுபோன்ற இடர்கள் அவர்களுக்கு இருந்துள்ளன. சமஸ்கிருத மந்திரங்களைக் கற்றுக்கொடுக்க மறுத்திருக்கின்றனர். இவர்கள் அழைப்பின்பேரில் வெளிமாநிலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து கற்பித்த அர்ச்சகர் ஒருவரையும் இந்துத்துவ அமைப்பினர் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கம் தார்மீக அடிப்படையிலும் சட்டரீதியாகவும் போராட்டங்களை நடத்தின. எனினும் நியாயமான முடிவுகள் எட்டப்படவில்லை. எல்லாரும் சமம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்துகளை அரசும் காகிதத்துடன் நிறுத்திக்கொண்டது.
2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவிக்கு வந்தது. அது பிராமண அமைப்புகளுக்குச் சாதகமாக அமைந்தது. அனைத்துச் சாதியரும் அர்ச்சகராகலாம் என்ற அரசு ஆணைக்குத் தடை கோரி இந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்தன. அன்றைய அரசு இந்தப் பிரச்சினையைக் கவனத்துக்குரிய ஒன்றாகக் கருதாதது வழக்கை நடத்திய முறையில் தெளிவானது. 2006முதல் நடைபெற்று வந்த வழக்கில் 2015 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டாது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாமென்றும், பயிற்சி முடித்துப் பணியாற்றச் செல்லும் அர்ச்சகர்கள் அந்தக் கோயிலின் தலைமைக் குருக்களிடம் கட்டாய தீட்சை பெற வேண்டுமென்றும் ஆகம முறைப்படிச் செயல்படும்போது தவறிழைக்கும் பட்சத்தில் அந்த அர்ச்சகருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம்வரை எங்கிருந்தும் தடை வாங்கலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு சார்பான தீர்ப்பு. ஒரு தலைமைக் குரு பயிற்சிபெற்று வந்திருக்கும் பிற சாதியைச் சேர்ந்த அர்ச்சகரை ஆகமத்தின் அடிப்படையில் குறை காணவும் குற்றம் சொல்லவும் முடியும். அந்த அடிப்படையில் நீதிமன்றத்தை நாடமுடியும். அரசியல் சாசனத்தின்படிக் குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை இங்கே சட்டத்தின் பாதுகாப்புடன் நடைமுறையாகிறது.
இந்தத் தீண்டாமை இன்னொரு வடிவத்திலும் பின்பற்றப்படுகிறது. அர்ச்சகர் பயிற்சிபெற்ற பிற சாதியினரில் பலரும் அந்தத் தொழிலைக் கைவிடும் நிலையிலேயே இருக்கிறார்கள். கணிசமான எண்ணிக்கையிலுள்ளவர்கள் ஆலய வழிபாடு, சடங்குகளை முற்றிலும் கைவிட்டுவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். எஞ்சியவர்கள் சிறிய அளவிலான சடங்குகளைச் செய்து சொற்ப வருமானம் ஈட்டுகிறார்கள்.
தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் முப்பத்தெட்டாயிரம் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் இருநூறு பிரபலமானவை. பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் தகுதிக்கு ஏற்ப இந்தக் கோயில்களில் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் பணி நியமனம் வழங்கப்படுகிறது. ஆனால் பயிற்சித் தகுதி சார்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறாமல் வாரிசு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது அரசே ஒத்தாசை செய்து நடத்தும் முறைகேடு என்பதுடன் சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.
சென்ற மாதம் இணைய இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பயிற்சிபெற்ற அர்ச்சகர் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் காட்டியிருந்தார். சமூகநீதி நோக்கில் அரசு வழங்கியுள்ள இந்த உரிமைக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் பொதுச் சமூகத்தின் கவனத்தில் அவை தெரிய வராமலே இருக்கின்றன. கவனித்துப்பார்க்கும்போது இந்த நிலை பல ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றன. சமத்துவம் உருவாக்கும் எண்ணத்தில் அரசு உருவாக்கும் சட்டங்கள் உண்மையானவையா அல்லது கண்துடைப்புச் சடங்குகளா? தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை ஆலயங்களுக்குள் இன்னும் நிலவுவது சரியா? அது அரசு நிதியால் பேணப்படுவது முறையா? பிற சமூகத்தினர் மேற்கொண்ட பாரம்பரியமான தொழில்களிலும் வணிகத்திலும் இன்று பிராமணர்களும் பங்கேற்கிறார்கள். பிற சாதியினரின் தொழிலில் இவர்கள் ஈடுபடலாமெனில் இவர்களது தொழிலில் பிற சாதியினர் தகுதி பெறுவதும் ஈடுபடுவதும் எந்த வகையில் பிழையானது?
தமிழகத்திலுள்ள ஆலயங்களில் பிராமண ஆதிக்கம் இல்லாதவையும் பல உள்ளன. பெரும்பாலும் இடைநிலைச் சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ளவை. அவற்றிலும் பிராமணர்கள் மட்டுமே கோவில் கைங்கரியங்களுக்காக நியமிக்கப்படுவது ஏன்? பிராமணர்களைவிட மூர்க்கமாக மரபைத் தூக்கிச் சுமக்கிறவர்கள் ஆதிக்கச் சாதியினர் என்பது மெய்தானா?
இதில் விவாதிக்கப்படாத இன்னொரு செய்தியும் உண்டு. அது உலகளாவிய தமிழ்ச் சமூகத்தின் பொதுவான மனநிலை பற்றியது . இன்று தமிழர்கள் நிர்வகிக்கும் கோயில்கள் பலப்பல நாடுகளில் உள்ளன. பிராமணர் அல்லாதார் பூசாரியாவதைத் தடுக்கும் சட்ட திட்டங்கள் நடைமுறைகள் இந்தியாவில் மட்டுமே உண்டு. பிற நாடுகளில் இருக்கும் கோயில்களில் பயிற்சி பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை அர்ச்சகராக்க யாதொரு தடையும் இல்லை. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற திராவிட கழக சித்தாந்தத்தின் ஆளுகையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்தியாவில் முடியாததைப் பல பத்தாண்டுகள் முன்னரே செய்து காட்டியிருக்க முடியும். இந்த மாற்றத்தை அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மனம் வைத்தால் உடன் செய்யமுடியும். தமிழகத் தமிழர்களாலும் முடியும், இலங்கைத் தமிழர்களாலும் முடியும். ஆனால் எங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக எதார்த்த நிலை என்ன? காலங்காலமாகப் பிராமணர் அல்லாதார் பூசை செய்துவந்த பல கோயில்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வேறு பல நாடுகளிலும் சமஸ்கிருதமயமாகி பிராமணரை அர்ச்சகராக்குகின்றன. குறிப்பிட்ட சாதியினரின் ஆளுகையில் இருக்கும் கோயில்கள் நீங்கலாக, பொதுவான தமிழ்ச் சமூகத்தினர் வழிபடும் கோயில்கள் பெரும்பான்மையானவற்றில் இன்று பிராமணர்களே உலகெங்கும் பூசாரிகளாக உள்ளனர்.
ஜனநாயக அமைப்பின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டும் நவீன அறிவியலின் பயன்களைத் துய்த்துக்கொண்டும் இருந்தாலும் மொத்தச் சமூகத்தின் மனப்பாங்கு புராதன காலத்தில் வேர்கொண்டிருக்கிறதா? முன்னேற்றம் அடைந்த சமூகமாக மாறும் உந்துதல் பொதுமக்களுக்கு இல்லையா? சிந்தனையின் மூலமாக அல்ல, பொதுப் புத்தியின் மூலமாகவே செயல்படுகிறார்களா?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அப்படி விடைகாண முயன்றால்தான் நாம் மேம்பட்ட சமூகமாக மாற முடியும்.