பட்ஜெட்: கருத்துகளும் இலட்சியமும்
பட்ஜெட்: கருத்துகளும் இலட்சியமும்
2019 மத்திய பட்ஜெட்டைப் பல்வேறு முன்னணிப் பொருளாதார நிபுணர்களும் ஆய்வாளர்களும் கூராக ஆராய்ந்து விரிவாக விமர்சித்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டின் யதார்த்த ரீதியான மையப்பொருளை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றினாலும், பல்லாண்டுகளாக வழக்கத்திலுள்ள ஆதிக்கச் சக்திகளின் குறுக்கீட்டிற்கும் அது இடமளித்துள்ளது. ஏழைகளுக்கு ஆதரவான சீர்த்திருத்தங்களில் தாங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு பகட்டாகக் கூறியுள்ளபோதும், நடைமுறை அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மத்திய தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களை முகத்துதி செய்யும் பொருட்டே ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதை மனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளை அரசியல் ரீதியாக வலுவானதொரு வகையினமாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் அது அவர்களைப் பல்வேறு பிரிவினராகப் பிளவுபடுத்திடவும் துல்லியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஒரு பக்கம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் மாபெரும் பணக்காரர்கள் மீதான வரியை பட்ஜெட் அதிகரித்திருந்தாலும், மறுபுறம் செல்வங்களை முதலீடு செய்வதற்காகப் பெருநிறுவனங்களை அனுசரிக்கவும் செய்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் இத்தகைய வேறுவிதமான அறிவிப்புகளும் திட்டங்களும் வந்திருப்பது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில் நிலையற்ற பெரும்பான்மையுள்ள ஆளும் கட்சிகளே இத்தகைய அறிவிப்புகளை வெளியிடும். சமூக ரீதியான செலவுகளுக்காக அதிகபட்ச சமூக, அரசியல் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு அத்தகைய கட்சிகளுக்குப் பல்வேறு அழுத்தங்கள் இருக்கும். இதனால்தான் பட்ஜெட் முறைகளில் முற்போக்கான சமூகம் சார்ந்த குணம் தானாகவே வந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சிகள், போட்டிமிக்க சந்தர்ப்பங்களை வழங்கும் புரட்சிகரமான பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கும் என்று கருத முடியாது. ஒரு கட்சி தன்னுடைய வாக்குவங்கியைக் குறிப்பாக சில சமூகக் குழுக்களின் ஆதரவை நிலையாக வைத்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் உள்ளது என்று புரிந்துகொள்ள முடியும். அதே சமயம் தனியாரின் நலன்களையும் உறுதிப்படுத்தினால்தான் அரசியல் ஸ்திரத்தன்மை கிடைக்கும். முதலீடுகளைக் கவர்ந்து மூலதனத்தை அதிகரிக்க வேண்டிய தேவையும் அதற்குள்ளது. தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் காரணமாக, மிகவும் விரிவான அளவில் கிடைக்கக்கூடிய இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காக அளிக்கவேண்டிய ஒருவிதமான சலுகைதான் இத்தகைய போட்டிகள். ஆனால் இவையே பல்வேறு அடுக்குகளை உருவாக்கிவிடும். காலம் செல்லச் செல்ல சமூகத்தில் பல்வேறு குழுக்களிடையிலேயும் ஒரே குழுவில் பல்வேறு பிரிவினருக்கிடையேயும் சமத்துவமின்மையை ஏற்படுத்தி எரிச்சலூட்டுவதற்கு இட்டுச்செல்லும். இவற்றைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். இதற்கு இக்குழுக்களின் சமூக அடித்தளங்களை விரிவாக்கி, அவர்களிடையே ஓர் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்கக்கூடிய விதத்தில் நிலைமைகளை மேம்படுத்திடத் தொடர்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மக்களின் மிகவும் மோசமான நிலைமைகளிலிருந்து அவர்களை மேம்படுத்தக்கூடிய விதத்தில் அல்லது முன்னேற்றக் கூடிய விதத்தில் வாய்ப்பு வசதிகளை அவர்களுக்கு உருவாக்கித் தருவது அரசின் அடிப்படைக் கடமை. அவ்வாறு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய விதத்தில் இந்தியப் பொருளாதாரம் இல்லை. நம்நாட்டில் 93 சதவீத வேலைகள் முறைசாராத் தொழில்களில்தான் இருக்கின்றன என்கிற உண்மையிலிருந்து இது தெளிவாகத் தெரியும்.
மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத நிலையில் அரசும் சந்தைகளும் கையறு நிலையில் உள்ளன. வேலைதேடி அலைகின்றவர்கள் நாட்டில் மிகவும் அரிதாக வேலைவாய்ப்புகள் இருக்கின்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கும், மருத்துவம் / பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கும், அரசாங்கத் துறைகளில் எந்தவிதமான வேலை கிடைத்தாலும் அதில் சேர்வதற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேலைதேடி அலையும் கோடானுகோடி இளைஞர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே இத்தகு வேலை கிடைத்திடும்; அவர்கள் மட்டுமே அரசாங்கம் அளித்திடும் சிறப்புரிமைகளையும் வாய்ப்பு வசதிகளையும் பெற முடிவதும் தெள்ளத்தெளிவாகும். எனவேதான், இளைஞர்கள் மத்தியில் வேலை தேடிப் போட்டி அதிகமாகியிருக்கக்கூடிய இன்றைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஒருசிலரால் மட்டுமே அத்தகைய சலுகைகளை அனுபவிக்க முடியும். போட்டி என்னும் கருத்தின் நுண்ணிய குணத்தை அதிகரித்துவரும் இடஒதுக்கீட்டுத் தேவைகள் வலியுறுத்துகின்றன.
மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மட்டங்களில் ஏற்றத்தாழ்வுகளை மிகவும் தர்க்க ரீதியாக உருவாக்குவது சந்தைதான் என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. தற்போதுள்ள சமத்துவமற்ற கட்டமைப்புகளிலும் முறைகளிலும் தானாகவே ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்த முயற்சி செய்வது வலுவான அரசிற்குச் சிரமம்தான். உண்மையில் தான் உருவாக்காத ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்தவே அது முயற்சி செய்கிறது. ஆனால் அரசின் கைகளில் அதனை அளித்தது சந்தைதான். சந்தை உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளை அரசு எவ்வாறு மட்டுப்படுத்தியுள்ளது என்பதே தற்போதைய கேள்வி. அவற்றுள் ஒருவகை, இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பதாகும்.
விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்ற நடவடிக்கைகள் மழை பொய்க்கும்போது சமாளிப்பதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இறுதியில் இந்தத் திட்டங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கே நன்மை அளிப்பவையாக உள்ளன. இத்தகைய காப்பீட்டுத் திட்டங்கள் எந்தவிதமான நன்மையையும் விவசாயிகளுக்கு அளிக்கவில்லை. ஏற்றத்தாழ்விற்கான மாற்று மானியங்கள் அல்ல. உண்மையில் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் துயரத்தைச் சமாளிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையே ஆகும்.
அமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வை நீக்காமல் அப்போதிய விளைவுகளுக்கு நஷ்ட ஈடு அளிப்பது அளவான நீதியையே வழங்கும். சந்தை உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டவர் அல்லது நஷ்ட ஈடு கோருபவரின் நிலையை மதிப்பிடும் அளவீடே நஷ்ட ஈடு. நஷ்ட ஈடு கோரும் நிலைக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிந்து அரசு அவற்றை ஒழிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக விவசாயிகளின் வறிய நிலையைப் போக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். சூழ்நிலையைச¢ சமாளிக்க இயலாமல் அரசு தோற்றுப்போய்விட்டதின் தர்க்கரீதியான விளைவுதான் முதலிலேயே நஷ்டஈட்டைக¢ கோருவதாக இருக்கின்றது.
மற்ற விஷயங்களைவிட, நஷ்ட ஈடு என்ற தாராளமயக் கொள்கையைப் பயன்படுத்திக்கொள்ள பட்ஜெட் முயற்சி செய்துள்ளது. மிகவும் தேவைப்படும் கவர்ச்சி மிகுந்த போட்டிக்கான வாய்ப்க்களை உருவாக்குவதே தற்போதிய தாராளமயக் கொள்கை. இதை உணர்வதற்கான வாய்ப்பு தற்போது தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
- கோபால்குரு
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,
ஜூலை 13, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு