கடிதங்கள்
கடிதங்கள்
‘வளமிக்க உளமுற்ற தமிழ்’ தலையங்கம், பாவேந்தரது சொற்செறிவினைத் தலைப்பாகக் கொண்டு மிளிர்ந்துள்ளது. தேமதுரத்தமிழின் ‘செம்மாந்த வாழ்வையும் வளர்ச்சியையும்’ ஆக்கப்பூர்வமான அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற பேரார்வத்தைத் தனது தலையங்கத் தலைப்பு மூலமே காலச்சுவடு வெளிப்படுத்திவிட்டது.
சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத்தமிழ் மாநாட்டில் கேளிக்கை உணர்வுகளும் பெருமிதத் தம்பட்டங்களுமே மேலோங்கியிருந்த ஆதங்கத்தை உளமார்ந்த உண்மைத் தமிழார்வலர்கள் எல்லாராலும் நன்கு உணர முடிகிறது. தமிழின் சமகாலச் சாதனைகளைத் தவிர்ப்பதும், தமிழ்ச் சுரங்கத்தை உளம் கிளர்த்தும் உழைப்பையும் சிந்தனைச் செழுமையையும் கொண்டு ஆய்ந்திட முற்படாததும், தங்கத்தை உரசிப்பார்த்து மிளிரச் செய்யாமல் முலாம் பூசிப்பார்க்கும் மேலோட்டப் பார்வையும் உயரிய தமிழ் அறமன்று என எடுத்துரைத்த தலையங்கச் சாரத்தை அடுத்து வரும் உலகத் தமிழ் மாநாடுகள் உரிய வகையில் பரிசீலிக்க வேண்டும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
புதிய கல்விக்கொள்கை சார்ந்து இடம்பெற்றிருந்த ‘போகவிரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை’, ‘சமத்துவமற்ற கல்விக்கொள்கை’ - ஆகிய கட்டுரைகள் நடுவண் அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 அறிக்கையை விலாவாரியாக விவரித்தும், தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை எழுப்புவதற்கான காரணங்களை விளக்கியும் ஆய்வு நோக்கில் ஆழமாக எழுதப்பெற்றிருப்பது சிறப்பு.
தொடக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய சூழலில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல்வேறு அம்சங்கள் மாநில நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், கல்வியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பாக இரு தேசியக்கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கல்வியை மேம்படுத்தப் பல்கலைக்கழகக் கல்வி ஆணையம், மேல்நிலைக் கல்வி ஆணையம் உட்பட பல்வேறு ஆணையங்களை நடுவண் அரசு அமைத்தது. அதே போன்று, தேசிய கல்விக் கொள்கையை வகுக்க தௌலத் சிங் கோத்தாரி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 1968இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டதும், பதினான்கு வயதுவரை கட்டாயக் கல்வி, ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன. வருவாயில் ஆறு சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது. இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை 1986இல் ராஜீவ் காந்தி வெளியிட்டார். கல்வி வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்யும் வண்ணம் இவ்வரைவு இருப்பதாகக் கல்வியாளர்கள் பாராட்டினர். இந்தக் கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1986ஆம் ஆண்டின் கல்விக் கொள்கையில் சில மாற்றங்களை உருவாக்கி, 2005இல் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசு ஒரு கல்விக் கொள்கையை முன்வைத்தது. 2017இல் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்ததைத்தான் தற்போது கல்வி ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம் இந்தியா முழுமைக்கும் அது மும்மொழிக் கொள்கையை முன் வைத்தது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், தாய்மொழி ஆகியவற்றோடு இந்தி மூன்றாவது மொழியாக இருக்குமென்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி ஆகியவை தவிர, ஏதாவது ஒரு பிராந்திய மொழி மூன்றாவது மொழியாக இருக்குமென்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு பலமாகக் கிளம்பியதால் எல்லா மாநிலங்களிலும் மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியைப் படிக்கலாம் என மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இவை சார்ந்து, தமிழகம் முழுதும் பல்வேறு அமைப்புகளும் கல்வியாளர்களும் தங்களுடைய விமர்சனங்களை ஆணையத்திற்கு அனுப்பியவண்ணம் இருக்கின்றனர்.
மாநில அரசு, இது குறித்து, விரிவான பார்வையை விரைவில் அளிக்கும் என்று நம்புவோமாக!
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
இன்றைய நிலையில் நான் தலையங்கத்தை அப்படியே வழிமொழிகின்றேன். 1960களில் பள்ளியில் படித்தபோது வராத இந்தி 2019ல் வந்துவிட்டதென்று அரசு சொல்கிறதாம்! நான் சொல்கிறேன் இந்தி என்றும் இங்கு வரவே வராது.
‘போக விரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை’ பி.ஏ கிருஷ்ணன் கட்டுரை தெளிவாக இக்கொள்கைபற்றிக் கூறியுள்ளது. கல்லூரிகளே பட்டம் வழங்குமா? இது பெரிய பயங்கரம்.
“சமத்துவமற்ற கல்விக் கொள்கை” த. சுந்தரராஜ் கட்டுரையைப் படித்தேன். பல்கலைக்கழக மானியக் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டது அறிந்து அதிர்ந்து போனேன். யு.ஜி.சி மூலம் பணப்பயன்களைப் பெற்றுப் படித்த மாணவர்கள் அதிகம். இனி மேற்கல்வியில் / கல்லூரிக்கல்வியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி செய்யும் / ஆய்வு மாணவர்களின் கதி நிர்க்கதியா? இது மத்திய அரசின் சதி என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல? சமஸ்கிருத மொழியைக் கற்பிப்பது மட்டுமல்ல அதை மீட்டுருவாக்கம் செய்வதும் முடியாதகாரியம். தாய்மொழியோடு, ஆங்கிலத்தையும் கற்க வேண்டும் என்று சொன்ன அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கு (மற்ற மாநிலங்களை விட) சான்று என்றே சற்றும் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம். இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம் என்றால் அதைச் சந்தேகமில்லாமல் கிறுக்குப் பிடித்தவர்களின் பேச்சு என்பேன்.
இந்திய மொழிகளிலேயே, தமிழ்தான் தொன்மையானது என்ற உண்மையை ஏன் மறைக்க முயலுகிறார்கள் என்பது விளங்கவில்லை. நான் தமிழச்சியாக இதைச் சொல்லவில்லை. வரலாற்றாசிரியர்கள் சொல்வதை இவர்கள் காது கொடுத்துக் கேட்டால் என்ன? எல்லிஸ்துரை, கால்டுவெல் போன்ற ஆங்கிலேயர்கள் வீரமாமுனிவர் என்று பெயர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களைத் தமிழ்தானே மாற்றியிருக்கிறது! அவர்கள் மதத்திற்காகத் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். தமிழ்மொழியின் ஆழம் அறிந்து தேர்ந்தவர்கள்.
ஞா. சிவகாமி
போரூர்
இந்த இதழ் இரட்டைச் சிறப்பிதழ் போலும். ஒவ்வொரு தலைப்பிலும் இரு காத்திரமான படைப்புகள். சிரிப்பை வரவழைத்த தி.ஜாவின் சிறுகதை, சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தந்த மார்க்கேஸின் சிறுகதை இரண்டும் அருமை.
ஆழ்ந்த சொற்களுடன் காட்சிகளை விரித்த கீதா சுகுமாரனின் கவிதை, எளிய சொற்களுடன் நகைச்சுவை வரவழைத்த சிவசங்கர் எஸ். ஜே. வின் கவிதை இரண்டும் சிறப்பானவை.
சரவணன்
மதுராந்தகம்
உ.வே. சாமிநாதையரின் ஆர்வத்தில் இன்று நாம் இலக்கியங்களைக் காண்கிறோம். இலக்கிய ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பற்றாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அறிந்துவைத்துக் கொள்ளக் கூடிய ஆளுமைக்குச் சொந்தக்காரர். நூல்களைப் பதிப்பிக்க அவர் எடுத்த நுட்பமான மெனக்கெடல்களை அறிவது வாசகனுக்கு அவசியமான ஒன்று. வாசகன் நூல்களை அறிந்தால் மட்டும் போதாது. அதைப் பதிப்பாக நாம் கையிலேந்திய வரலாற்றை அறிந்துவைத்திருக்க வேண்டும். எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘புறப்பொருள் வெண்பா மாலை: உ.வே.சா. பதிப்பும் வியப்பும்’ கட்டுரையும் போன மாதமும் முந்தைய மாதமும் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும் அதை எளிமையாக்குகின்றன. மேலும் அவர் கட்டுரையை விவரிக்கும் தன்மை, மொழிநடை, வாசகனுக்குச் சலிப்பை ஊட்டுவதில்லை.
சதீஷ் குமார்
உடுமலைப்பேட்டை
ஆகஸ்டு மாத இதழ் தலையங்கம் முதல் அனைத்துப் பகுதிகளும் உலகத் தமிழ் ஏடாக நாடு போற்றும் வண்ணம் காலத்தின் சுவடு ஆக வெளி வருதல் அறிந்து மட்டிலா மகிழ்வு. ‘வளமிக்க உளமுற்ற தமிழ்’ எனும் தலையங்கம் மலேசியாவில் தொடங்கி அண்மையில் சிகாகோ மாநகரில் நடந்த பத்தாவது உலகத் தமிழ் மாநாடு வரை தமிழின் வீச்சு எத்தகையது எனச் சான்று பகர்ந்தது.
புதியக் கல்விக் கொள்கை பற்றிய கட்டுரைகள் நேர்த்தி. தமிழ்நாட்டின் அட்டைக்கத்தி அறிவு ஜீவிகள் அறிவுச் சோம்பேறிகளாய் ஆனதை ‘போக விரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை’ தடம் பிடித்தே காட்டுகிறது. ‘சமத்துவமற்ற கல்விக் கொள்கை’ எனும் தலைப்பில் த. சுந்தரராஜ் தாய் மொழிக் கல்வியை இனிதாய் வேண்டும் விதம் குறிப்பிடும்படி அமைந்திருந்தது.
மீ. ஷாஜஹான்
திருவிதாங்கோடு
தி. ஜானகிராமன் எழுதிய சாண ரயில்பெட்டி சூத்திரக் கதை மிக அருமை. இக்கதை 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய அரசியல்-அறிவியல் போக்கைத் தோலுரித்துக் காட்டுகிறது. நல்லவேளை தி.ஜா. உயிரோடு இல்லை, தேசத் துரோகி பட்டத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்.அவர் மரணத்திற்குப் பிறகும் posthumous award ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களுக்கு அந்த வருத்தத்தைப் போக்கும்விதமாக பா. செயபிரகாசம், உணவு அரசியலையும் ஒரே நாடு ஒரே உணவு அரசியலை விருந்துவைத்துவிட்டார். முன்னவருக்கும் பின்னவருக்கும், இவ்விரு கதைகளைத் தெரிவு செய்த ஆசிரியர் குழுவிற்கும் பாராட்டுகள்.
மார்கேஸ் பற்றிய பத்தியும் அவரது கதையும் ஆகஸ்ட் இதழில் வந்தது கதைத் தலைப்புக்குப் பொருத்தப்பாடு அருமை. பெருமாள்முருகன், உ,வே.சா புறப்பொருள் வெண்பா மாலை நூலை நான்குமுறை பதிப்பித்த முயற்சியை அவர் உணர்ந்த வியப்பு மாறாமல் பரிமாறி விட்டார். புதிய ஆபத்தாக வந்துள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கையை இன்னும் ஆழமாக ஆய்வு செய்திருக்கலாம்.
ஜனநேசன்
காரைக்குடி