பெட்டிமுடியின் குமுறல்
பதிவு
பெட்டிமுடியின் குமுறல்
கேரளத்தில் மழைப் பருவங்கள் ஒரே சமயத்தில் வரவேற்புக்கும் வசைபாடலுக்கும் இலக்காகின்றன. மாநிலத்தை மாறாப் பசுமை கொண்டதாக நிலைநிறுத்தவும் ஓடும் நாற்பதுக்கும் மேற்பட்ட நதிகள் வறண்டு போகாமலிருக்கவும் பருவ மழைகள் உதவுகின்றன. அதேசமயம் மலையோர மாவட்டங்களில் பேரழிவையும் ஏற்படுத்துகின்றன. இந்தப் பேரழிவின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. வய நாடு, இடுக்கி ஆகிய இடங்களில் மழைக் காலத்தில் ஏற்படும் நிலச் சரிவுகள் உயிர்களைப் பலிகொள்கின்றன. மனிதர்களின் வாழ்வாதாரங்களை நாசமாக்குகின்றன. சென்ற மாதம் பெய்த மழையில் இடுக்கி மாவட்டம் மூணாரில் நிகழ்ந்த நிலச் சரிவில் 84 க்கும் அதிகமானவர்கள் உயிரோடு மண்ணில் புதையுண்டனர். இறந்தவர்கள் அனைவரும் எளிய தோட்டத் தொழிலாளர்கள். தலைமுறைகளாகத் தேயிலைத் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்தவர்கள். கால் நடைகளுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத லயன் குடியிருப்புகளில் பிழைப்பு நடத்திய அவர்கள் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களுக்கு அரசு இழப்பீடுகளை அறிவித்திருக்கிறது. ஆனால் அதன் வாயிலாகத் தீர்ந்துவிடக் கூடியதல்ல பிரச்சினை என்பதை மூணார் பெட்டிமுடியிலிருந்து எழும் குமுறல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
2015 ஆம் ஆண்டு ‘பொம்பிளை ஒருமை’ என்ற கூட்டமைப்பின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை வெளியுலகுக்கு எடுத்துச் சொன்ன கோமதியின் குரல் அவற்றில் ஒன்று. எதிர்பாராத விபத்து, இயற்கைச் சீற்றம் என்று சொல்லப்பட்டாலும் இந்தத் துயரத்துக்குக் காரணங்கள் அவை மட்டுமல்ல; மனிதர் நோக மனிதர் பார்க்கும் சமூகமே என்கிறார் அவர். நில உரிமைப் போராட்டக் குழு ஒருங்கிணைத்த ‘மூணார்: டாட்டாவின் சட்டவிரோத சாம்ராஜ்ஜியமும் தொழிலாளர்கள் கூட்டுக் கொலையும்’ என்ற வெபினாரில் பங்கேற்று கோமதி ஆற்றிய உரை இது.
அவர்கள் எல்லாரையும் ஒரே குழியில் அடக்கம் செய்தது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? பெட்டிமுடி நிலச்சரிவில் இறந்த பதினெட்டுப் பேரையும் ஒரே குழியில் அடக்கினார்கள். அதை எல்லாரும் பார்த்தார்கள். ஏன் அவர்களை ஒரே குழியில் புதைத்தார்கள் என்று உங்கள் யாருக்கும் தெரியாது.
எங்களை அடக்கம் செய்வதற்குச் சொந்தமாக நிலமில்லை. நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். எங்களுக்குப் பட்டாவுக்கான அருகதை இல்லையா? இது எங்களுடைய மண். நாங்கள் பிறந்து விழுந்து வளர்ந்த மண். ஆனால் இது எங்களுக்குச் சொந்தமல்ல. இது டாட்டா கம்பெனியின் நிலம், கண்ணன் தேவன் கம்பெனியின் நிலம், தனியார் நிலம் என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். இது கம்பெனியின் நிலம் என்பதற்கான எந்த அத்தாட்சியும் அவர்கள் கையில் இல்லை. இது நாங்கள் பிறந்து வளர்ந்து வேலைசெய்து வாழும் பூமி. இது எங்களுடைய பூமி. தோட்டப் பிரதேசங்களில் நிலப் போராட்டம் தேவை. இந்த மண்ணுடன் அரசுக்குத் தொடர்பில்லையா? செறுவள்ளியில் விமான நிலையக் கட்டுமானத்துக்கு அரசு தலைமை வகிக்கிறது. அப்படியானால் அந்த நிலத்தில் அரசுக்கு உரிமை இருக்கிறது, அந்த உரிமை இங்கே மட்டும் ஏன் இல்லாமல் போனது?
கம்பெனி வீட்டை விட்டால் நாங்கள் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் ஆகிவிடுவோம். தெருவுக்குத்தான் போக வேண்டும். அதனாலேயே கம்பெனியின் அடிமைகளைப்போல இங்கே வாழ வேண்டியிருக்கிறது. ஐம்பத்தெட்டு வயது நிறைந்ததும் வீட்டைப் பூட்டிச் சாவியை கம்பெனியில் ஒப்படைத்தால்தான் எங்களுக்கு பென்ஷன் சலுகைகள் கிடைக்கும். பிறகு நாங்கள் எங்கே போவோம்? எங்களுக்குச் சொந்த நிலமில்லை. வீடில்லை. இந்தத் துயரங்களையெல்லாம் எத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை கேட்கப்பட வேண்டுமென்றால் இதுபோன்ற விபத்துகள் நடந்தாக வேண்டும் என்பதுதான் நிலைமை. நாங்கள் தமிழர்களா, மலையாளிகளா என்று எங்களுக்குத் தெரியாது. இரண்டும் கலந்ததுதான் எங்கள் பாஷை.
நான் பிறந்தது கேரளத்தில்தான். என்னைப்போல கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் இங்கே இருக்கிற எல்லாரும். தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களின் ஐந்தாம் தலைமுறைதான் இப்போது இங்கே இருப்பவர்கள்... நாங்கள் எப்படித் தமிழ்நாட்டுக்காரர்கள் ஆவோம்? பெட்டிமுடியில் இருப்பவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று சொல்லி டிவியில் விவாதங்கள் நடக்கின்றன. எங்களுடைய அப்பன் அம்மைமார், முத்தச்சி முத்தச்சன்மார் எல்லாரும் இங்கே பிறந்தவர்கள்தாம்.
எங்களுக்கு ஒரு ஏக்கர் பூமி வேண்டும், சொந்த வீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 2017 இல் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டத்துக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. இருபது நாட்கள் நடு ரோட்டில் கிடந்தோம். இந்த மண்ணில் பிறந்த எங்களுக்கு நிலத்துக்கும் வீட்டுக்கும் உரிமையில்லையா? ஆதிவாசிகளுக்குப் பூமி வேண்டும் என்று சொல்ல இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். எங்களுக்காகப் பேசத்தான் இங்கே யாரும் இல்லை.
காலையில் நீங்கள் ஊதி ஊதி ஆற்றிக் குடிக்கும் தேநீர் எங்களுடைய ரத்தம். தோட்டத் தொழிலாளியின் ரத்தத்தின் நிறம்தான் உங்களுடைய தேநீரின் நிறம். எங்களுடைய துயரங்கள் உங்களுக்குத் தெரியாது. இங்கே மனிதர்கள் செத்துவிழுவதை நீங்கள் பார்க்கிறீர்களே?
பெட்டிமுடியில் நல்ல சாலைகள் கிடையாது. கொடும் குன்றுகள். கொடும் பழை. கொடும் குளிர். ஆட்களால் ஒருமணிநேரம்கூட இங்கே நிற்க முடியாது. காலை எட்டுமணியிலிருந்து நாங்கள் தோட்டத்தில் நிற்க வேண்டும் என்பதை, கடும் குளிரில் விறைத்தும் மழையில் நனைந்தும் காலைக் கடிக்கிற அட்டைகளுக்கு ரத்தத்தைக் கொடுத்தும்தான் நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள். பெட்டிமுடி விபத்தையும் தொழிலாளிகளின் துயரங்களையும் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அதையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு நல்ல பள்ளிக்கூடங்கள் இல்லை. நல்ல ஆஸ்பத்திரி இல்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலையில்லை. ஒற்றை அறை வீட்டில்தான் குடும்பமே குடியிருக்கிறோம். ஒரு படுக்கையறையும் ஒரு பாத்ரூமும் அடுக்களையுமிருக்கிற வீட்டில் மக்களும் முத்தச்சன்மாரும் முத்தச்சிமாருமாக இரண்டு மூன்று குடும்பங்கள் குடியிருக்கிறோம். நூறு வருடப் பழைய வீட்டில் நாங்கள் இத்தனை பேரும் எப்படி வசிக்கிறோமென்று கம்பெனிக்குக் கூடத் தெரியாது. கொரோனா வந்ததும் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். எட்டு பத்துப் பேர் வசிக்கும் ஒற்றை அறை வீட்டில் நாங்கள் எப்படி இடைவெளியைக் கடைப்பிடிக்க? இதையெல்லாம் சொல்லிச் சொல்லி எங்களுக்கும் அலுத்துப்போய்விட்டது. எல்லாம் அரசின் செவிட்டுக் காதுகளில்தான் விழுகின்றன. என் வீட்டை நீங்கள் பார்க்க வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டை இழுத்துக் கட்டிவைத்துத்தான் இதற்குள் வசிக்கிறோம். காற்றடித்தால் கண்ணில் மண் விழும். இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?
சானல்களிலும் பத்திரிகைகளிலும் வரும்போது எல்லாரும் பார்ப்பார்கள். ஆனால் ஒரு பயனும் இருக்காது. 2015 இல் நாங்கள் நடத்திய போராட்டத்தின் மூலமாகத்தான் வெளியுலகத்துக்குக் கொஞ்சமாவது தெரியவந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள். இங்கே சந்தோஷமாக வேலை செய்பவர்கள் யாரும் இல்லை. கொழுந்து எடுத்தால்தான் எங்களுக்குச் சாப்பாட்டுக்கான தொகை கிடைக்கும். 350 ரூபாய் என்ற துச்சமான கூலியில் மிச்சம் பிடித்துத்தான் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம். போராட்டக் காலத்தில் எல்லா ஊடகங்களும் எங்கள் வீடுகளில் ஏறி இறங்கின. எங்களுடைய துன்பங்களை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் நல்ல செய்தியைக் கொடுக்க அவர்கள் பயப்படுகிறார்கள். அரசாங்கத்துக்குப் பயப்படுகிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது. ஐந்து வருடம் முன்பு நடந்த போராட்டத்தைத் தாண்டிய அரசியல் எங்களுக்குத் தெரியாது. ஆனால் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்களென்று எங்கள் எல்லாருக்கும் தெரியும். எங்களுடைய ஒற்றுமையைக் குலைத்ததும் அரசியல்வாதிகள்தாம். தோட்டத் தொழிலாளர் யூனியன்கள் தோட்டத் தொழிலாளர்களுக்காக என்ன செய்தன? நாங்கள் இங்கே அடிமைகளாக வாழ்கிறோம்.
விமான விபத்தில் இறந்ததுபோல பெட்டிமுடியில் இறந்தவர்களும் மனிதர்கள்தாம். எல்லாருடைய உயிரின் விலையும் ஒன்றுதானே? எங்களுடைய உயிருக்கு அரசு இரண்டாந்தரமான விலையைத்தான் கற்பிக்கிறது. நாங்கள் போராட்டம் நடத்தியபோது அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு என்னவெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்ததென்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மாதம் 25 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பதாகச் சொன்னது. எல்லாம் வாக்குறுதியாகவே முடங்கியது.
இனி ஒரு பெட்டிமுடி ஏற்படாமலிருக்க வேண்டுமானால் கேரள சமூகம் விழித்தெழ வேண்டும். எங்களுக்காக நீங்களும் களத்திலிறங்க வேண்டும். இங்கே உரிமைக்காக முழக்கமிட யாருக்கும் தைரியமில்லை. கூலி வேண்டும். போனஸ் வேண்டும். இதையே காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உயிர் வாழ வேண்டும். எங்களுக்கும் சொந்தமாக ஒரு துண்டு பூமி வேண்டும். தேயிலைத் தோட்டம், இந்த வீடு, குடும்பம் இதைத் தாண்டி எங்களுக்கு வேறு உலகமில்லை. ஒன்றும் தெரியாது. எங்களுக்காகப் பேசவும் யாருமில்லை. வில்லேஜ் ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன் – எல்லா இடத்திலும் மனுக்கள் மலையாளத்தில் இருக்கின்றன. எங்களில் மலையாளம் படித்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எங்களுக்கு மலையாளம் கற்பிக்க மாட்டார்கள். மலையாளம் கற்றுக்கொண்டால் நாங்கள் மலையாளிகளாக மாறிவிடுவோமே? எங்கே போனாலும் எங்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இது மாற வேண்டும். எங்கேயெல்லாம் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கிறார்களோ அங்கேயெல்லாம் மாற வேண்டும். இந்தத் துன்ப வாழ்க்கையிலிருந்து நாங்கள் கரையேற வேண்டும். உங்களுக்கெல்லாம் சட்டம் தெரியுமே, எங்களுக்காக ஏதாவது செய்யுங்கள். இன்னும் ஒரு பெட்டிமுடி உண்டாகக் கூடாது.
எங்களுடன் இருந்த 83 பேர் மண்ணுக்குள் புதைந்து போனதை நாங்கள் எப்படி மறக்க முடியும்? ஒருபோதும் மறக்க முடியாது. நாங்கள் எப்போதும் நிவாரண முகாம்களிலும் லயங்களிலும் தங்கியே வாழ்க்கையைக் கழிக்க வேண்டுமா? எத்தனையோ பேர் இப்படித்தான் வாழ்கிறார்கள். ஓட்டுக்கு மட்டும் நாங்கள் தேவை. வேறு எதற்கும் நாங்கள் வேண்டாம். இதெல்லாம் மாற வேண்டும். எங்கள் பேரப் பிள்ளைகளாவது நல்லபடியாக வளர வேண்டும். அவர்களாவது அடிமைகள் அல்ல என்ற உணர்வுடன் வளர வேண்டும்.
இத்தோடு தோட்டத் தொழிலாளர்களின் துயரங்கள் தீர வேண்டும். அதற்குக் கேரள சமூகம் ஆதரவளிக்க வேண்டும். நாங்கள் வெற்றுத் தரையில் படுத்து உறங்குபவர்கள். அதனால் எங்களுக்கு ஐந்து லட்சம். விமான விபத்தில் இறந்தவர்களுக்குப் பத்து லட்சம். பணக்காரர்களின் உயிருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கும் இரட்டை விலை போடுகிறது கேரள அரசு.
2015இல் போராட்டம் நடத்தியபோது கூலியை 69 ரூபாயாக உயர்த்தினார்கள். அது எங்கள் போராட்டத்தை அடக்குவதற்காகச் செய்தது. அதைச் சொல்லி நடுத் தெருவில் போராடிக் கொண்டிருந்த எங்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள். மாறிமாறி ஆட்சி செய்யும் எல்.டி.எஃபும் யூ.டி.எஃபும் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளில் கண்ணைமூடிக்கொள்கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினக் கூலியாக ஐந்நூறு ரூபாய் கிடைக்கச் செய்வோம் என்று பிணராயி விஜயன் இங்கே வந்து சொன்னார். பிறகு அவர் எங்களை மறந்து விட்டார். நாங்கள் அதை மறக்கவில்லை சார். எங்களுக்கு இது வாழ்க்கை சார்.
எங்கள் பிள்ளைகளும் உயர்ந்த பள்ளிக்கூடங்களில் படிக்க வேண்டும். ப்ளஸ் டூ முடித்த எங்கள் பிள்ளைகள் கல்லூரியில் நுழைய வேண்டுமானால் எம்.எல்.ஏ. சிபாரிசு வேண்டும்.ஏன், எங்கள் பிள்ளைகள் உயர் கல்விக்கு அருகதை இல்லாதவர்களா?
போராட்டத்தின் பேரில் எங்களைப் பொய்வழக்குகளில் சிக்கவைத்திருக்கிறார்கள். என்னவெல்லாமோ பொய் வழக்குகள். மூணாரில் இடம்கிடைக்கும்வரை நாங்கள் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம். யாராவது எங்களுக்கு உதவி செய்ய வந்தால் அவர்களை மாவோயிஸ்டுகள் என்று கைதுசெய்வார்கள். அரசியல்வாதிகள் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட பத்து கோடி ரூபாய் வழங்கக்கூட அரசு தயாராக இல்லை. கொரொனா வந்ததால் இலவச அரிசி கிடைத்தது. அதில் வண்டுகளும் புழுக்களும் இருந்தன. ஆனாலும் நாங்கள் அதை சந்தோஷத்துடன் வாங்கினோம். வேறு கதியில்லை.
முன்பு போராட்டம் நடத்தியபோது மந்திரி எம்.எம்.மணி எங்களை அவதூறு செய்தார். நடப்பது போராட்டமல்ல, வேறே காரியம் என்று சொன்னார். இந்த அவதூறுகளையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். இங்கே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னவெல்லாம் சுக சௌகரியங்கள் இருக்கின்றன. அவர்களுடைய பிள்ளைகள் சிறந்த பள்ளிகளில் படிக்கிறார்கள். வசதியான வீடுகளில் இருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் பிரிட்டிஷ்காரன் காலத்தில் நிறுவிய கம்பெனிப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். நான் படித்ததும் அதே பள்ளிக் கூடத்தில்தான். என்னுடைய பேரக் குழந்தைகள் படிப்பதும் அதே பள்ளிக்கூடத்தில்தான். தலைமுறைகளாக நாங்கள் அடிமைகளைப்போலப் பிழைப்பதன் உதாரணம் இது.
என் கணவருக்கு உடல் நலமில்லை. அதனால் என்னால் கம்பெனிக்குப் போக முடியாது.அப்படியானால் நான் வீட்டைக் காலி செய்ய வேண்டும். அதிலிருந்து தப்புவதற்காக என் மகனுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கம்பெனிக்கு விண்ணப்பம் கொடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டைக் காலி செய்தால் தெருவில் நிற்க வேண்டியிருக்கும். தோட்டத் தொழிலாளர்கள் எல்லாருக்கும் இதுதான் கதி. எல்லாரும் பழைய வீடுகளில் உயிருக்குப் பயந்துதான் குடியிருக்கிறோம். என்ன சொல்லவென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் துயரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சட்டம் தெரிந்தவர்கள் எங்களுக்காக ஏதாவது செய்யுங்கள். எங்களுக்குத் தெரிந்தவை எங்கள் துயரங்கள் மட்டுமே.
தமிழில்: என்னெஸ்