இல்லாத பொருளாதாரம்
EPW பக்கங்கள்
இல்லாத பொருளாதாரம்
மண்டல விரிவுப் பொருளாதார ஒப்பந்தத்தை (ஆர்சிஇபி) விட்டு இந்தியா வெளிவருவதால், வீழ்ந்த பொருளாதாரம் சீரடையுமா?
அதை விட்டு இந்திய அரசு வெளியேறுவதை எத்தகைய குணமாக நாம் கருத முடியும்? தங்களது வாழ்வாதாரத்தில் இத்தகைய தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமென்று இந்தியப் பொதுமக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தித் தேர்தல் முடிவுகளை அளித்தார்கள். இதன் விளைவாக இந்த முடிவை இந்திய அரசு எடுத்துள்ளதா? இத்தகைய பல அம்சப் பேச்சுவார்த்தைகள் பிராந்திய (பொருளாதார) அதிகாரத்திற்கு இலாபம் ஈட்டுபவையென்ற தூண்டுதல்களுக்கு இரையாகாமல் அரசின் சுயேட்சையான அரசியல் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியா? அல்லது உலகளாவிய பொருளாதாரத்தின் உயர்மட்ட ஆட்டக்காரர்களின் செயல்தந்திர நலன்களால் வற்புறுத்தப்பட்டதா? எதுவாயினும் சரி, இந்த வர்த்தக அமைப்பிலிருந்து தைரியமாக வெளியேறியதற்காக ஆளும் அரசைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்த வர்த்தக அமைப்பு உலகவர்த்தகத்தில் ஐந்தில் இரண்டு பங்கினை ஆக்கிரமிக்கிறது. துரதிருஷ்டவசமாக, வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், இந்தத் துணிச்சல் சற்று மட்டுப்படுகிறது. ஏனெனில் அரசின் இந்த முடிவு அரசியல் ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. எந்தவிதமான பொருளாதார ஒருமைப்பாட்டுக் கொள்கையும் வலியுறுத்தப்படாமல் மேல்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபோல் தெரிகிறது.
மண்டல விரிவுப் பொருளாதார ஒப்பந்தமானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மற்ற பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களைப் போல் ஆசியான் (தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கூட்டமைப்பு)அமைப்பை மையப்படுத்தியது. இந்தப் பிராந்தியத்தில் கடந்த பத்தாண்டுகளாக ஆசியான் அமைப்பு பல்வேறு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் செயல்தந்திரங்களையும் வழிநடத்தியுள்ளது. இருப்பினும், மலிவான விலையில் பொருட்களைத் திணித்தல் போன்ற பிராந்திய வர்த்தகத்தின் ஒட்டுமொத்த விவகாரங்களைத் தீர்த்துவைக்க ஆசியான் தவறியுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனா தங்களது குறைந்த விலையிலான பொருட்களை இந்தியாவிற்குள் திணிப்பதற்குச் சிங்கப்பூரை ஒரு வழியாகப் பயன்படுத்துகிறது. சிங்கப்பூருடன் இந்தியாவிற்குத் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையும் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தங்களும் உண்டு. இதனை இந்தியா புரிந்துகொண்டாலும், இந்தச் செயல் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்கிறது. இந்தியா கையெழுத்திட்ட பல்வேறு தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளில் ‘பொருளின் தோற்றம்’ குறித்த வரையறை இல்லை. இதனால் எங்கு பொருட்கள் திணிக்கப்படுகின்றன என்று கண்டறிவது சிரமமாக உள்ளது. ஆர்சிஇபியில் இத்தகைய ஒரு பிரிவு வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதனால் இந்தப் பங்குதாரத்துவத்தில் இந்தியா இருப்பது பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வர்த்தக ஏற்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும். அப்படியென்றால் ஆர்சிஇபி இந்தியாவிற்குத் தவறவிட்ட சந்தர்ப்பமா? ஆர்சிஇபியிலிருந்து வெளிவருவது பிராந்தியத்திற்குள்ளே இருந்த வர்த்தகப் பங்குதாரராக இந்தியாவின் நம்பகத்தன்மையைப் பாதிக்குமா? பிராந்தியத்திற்கு உள்ளேயே வர்த்தகம் செய்வது பொருளாதார நலனுக்குச் சிறந்ததென்றால் இந்திய அரசு அந்தக் குழுமத்திலிருந்து வெளியே வராமல், அந்தக் குழுமத்திலேயே இருந்துகொண்டு சாதகமான பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் ஏன் அக்கறை காட்டவில்லை?
ஆசியான் அமைப்போ அல்லது ஆசியான் வழிநடத்தலில் செயல்படும் ஆர்சிஇபியோ இந்தியாவிற்கு இயல்பான வர்த்தகப் பங்குதாரராக இருக்க முடியாது. சீனாவைப் போன்ற பிராந்தியத்துடன் இந்தியாவால் நெருக்கமான உறவை வளர்க்க முடியாதென்று ஒருவர் வாதிட்டாலும், ஆசியான் உறுப்புநாடுகள் பலவற்றுடன் இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் அந்த ஒட்டுமொத்தப் பிராந்தியத்துடனான ஒட்டுமொத்த வர்த்தகத்தைவிடவும் அதிகமானதென்ற உண்மையை மறுக்க முடியாது. ஆசியான்அமைப்பிற்கு ஓர் இலவச வர்த்தகப் பகுதி என்ற முக்கியத்துவத்தை அளிப்பதற்கு மாற்றாக, உலக வர்த்தகத்தில் அதன் பங்கு வெறும் ஏழு சதம்தான். இந்த அமைப்பு உருவாகி ஐம்பதாண்டுகளில் இந்த அளவிற்கு வர்த்தகம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஆசியான் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 2% - 3%தான். இத்தகைய சிறிய பங்கு இருந்தாலும், பல்வேறு ஆண்டுகளாக இந்தியா ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் இருந்துவருகிறது.
ஆர்சிஇபி உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்த நட்புறவு தொடரும். மறுபுறம், ஆர்சிஇபியிலிருந்து இந்தியா வெளிவந்ததால் இந்த வர்த்தகத்தின் அளவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தாலும், பல்வேறு தனிப்பட்ட ஆர்சிஇபி உறுப்பு நாடுகள் இந்தியாவுடன்கொண்ட இருதரப்பு வர்த்தகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பல்தரப்புப் பொருளாதார உடன்படிக்கைகளில் பரிமாற்ற விலைகளில் இத்தகைய ஒப்பந்தங்களினால் ஏற்படும் இலாபம் இருக்கும்வரை எந்த மாற்றமும் இருக்காது.
மறுபுறம், கடைசி நிமிடத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது இந்திய அரசின் தனித்துவமான நடவடிக்கையாகும். பொருளாதாரச் செயல்பாட்டைவிட அரசியல் அவசரநிலையால் இத்தகைய நடவடிக்கை ஏற்பட்டது. சார்க் (தெற்காசிய நாடுகளுக்கான பிராந்தியக் கூட்டுறவு) போன்ற முப்பதாண்டுகளாகச் செயல்படாத ஒப்பந்தங்களின் தாக்கத்தால் இவ்வாறு நடந்திருக்கலாம். சார்க் உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் சிக்கலான உறவுகளே உள்ளன. ஆசிய பிராந்தியத்துவம் குறித்த உரையாடல்களிலுள்ள ஒரு சரடு, தனிப்பட்ட நாடுகளின் அரசியல்ரீதியான நன்னடத்தையே பிராந்திய நிறுவனங்களில் அவற்றின் பங்கு குறித்த முடிவை நிர்ணயிப்பதாக உள்ளன. தாராளமயத்தின் பொன்னான காலங்களில் இத்தகைய நிறுவனங்களில் பங்குபெறுவது, அவை கட்டமைப்பு ரீதியாகப் பலவீனமடைந்தவையாக இருந்தபோதும், இவற்றில் பங்குபெறுவது அந்த நாட்டிற்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை அளித்தது. தற்போது உலகப் பொருளாதாரங்கள் பாதுகாப்புத்துவத்தை நோக்கிச் செல்கின்றன. இத்தகைய சூழலில் பின்வாங்குவது இதே போன்ற நன்மைகளை உருவாக்கும்.
உலகப் பார்வையாளர்களுக்கு, அரசின் இந்தக் கடைசி நிமிடப் பின்வாங்கல் நடவடிக்கை, ஆளும் அரசின் ஆசிய பசிபிக் நாடுகளை நோக்கிய நெகிழ்வான செயல்தந்திரத்தைக் காட்டுகிறது. அதே சமயம், சொந்தநாட்டில் அரசு பொதுமக்களின் நண்பன் என்ற பிம்பத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது. இருப்பினும் பொருளாதாரத்தில் சில செயல்பாட்டாளர்களுக்கு இந்த நடவடிக்கை கொண்டுவந்த திருப்தி தற்காலிகமானதுதான். பொருளாதாரத்தில் தற்போதுள்ள கட்டமைப்பு தொடர்பான குளறுபடிகளைச் சரிசெய்வது சாத்தியத்திற்கும் அப்பாலுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆர்சிஇபியில் பங்குபெறாமல் இருப்பது பல்வேறு சிறிய, குறு பால் விற்பனையாளரர்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கும்? பால் வினியோகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர்ச் சந்தையைவிட்டு அவர்களால் நகர முடியாது. உள்ளூர்ச் சந்தைகளில் பெரும் முதலாளிகளின் ஏகபோக உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பால்பொருட்களின் சர்வதேசப் போட்டிக்கு இந்த நகர்வு எந்தவிதமான உத்வேகமும் அளிப்பதில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு உயர்மதிப்புள்ள விவசாயம் குறித்துப் பேசும் அரசு அல்லவா இந்த அரசு? (மாற்று காலக்கெடுவை வசதியாக வைத்துக்கொள்வதுபோல்) பாதுகாப்பான பல்முனைத்துவம் என்ற பெயரில் உற்பத்தியாளர்களின் சந்தை மாதிரிகளைக் கட்டுப்படுத்தாமல், மாற்றுச் சந்தைகளைத் தேர்ந்தெடுக்க அவர்களைச் செயலூக்கம்பெறச் செய்ய வேண்டும்.இதற்கான கொள்கைகளை ஏன் அரசு சிந்திக்கவில்லை?
சர்வதேச வர்த்தகமானது அரசியலைப் போலவே பொருளாதாரத்தையும் சார்ந்தது. எனவே இத்தகைய வர்த்தக உடன்படிக்கைகளைச் செயல்படுத்தும்போது, அரசுகள் போதுமான எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு அதன் பொறுப்புகுறித்து உறுதியாக இருக்கும்போது, அதன் பொறுப்புகளிலிருந்து தப்பிப்பதற்கான எச்சரிக்கையையும் அது வடிவமைக்க வேண்டும். ஆர்சிஇபி குறித்த ஆளும் கட்சியின் நிலைப்பாட்டைப் புகழும் அதேவேளையில் இந்த வேறுபாடு குறித்துச் சிந்திப்பது நமக்கு மிகவும் முக்கியம்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, நவம்பர் 9, 2019
தமிழில்: ச. வீரமணி