அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு

நாகர்கோவிலில் இயங்கும் ‘அனக்கம்’ சமூக, பண்பாட்டு இலக்கிய அமைப்பின் 110ஆவது மாதாந்திரக் கூடுகை எழுத்தாளரும் இதழாளரும் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய டி.ஐ. அரவிந்தனின் நினைவுக் கூடுகையாக அமைந்தது. ‘அனக்கம்’ அமைப்பாளர் ஜே.ஆர்.வி. எட்வர்ட் அறிமுக உரை ஆற்றினார். இலக்கியம் படைத்தல், மொழிபெயர்ப்புப் பணிகளில் தீவிரமாக இயங்கிவந்த காலத்தில் அவர் வாழ்க்கைப் பயணத்தில் விழுந்த திடீர் முற்றுப்புள்ளி துயரமானது எனக் குறிப்பிட்ட எட்வர்ட், அரவிந்தனின் இலக்கியப் பயணத்தில் சு.ரா.வின் முக்கியப் பங்கையும் தொட்டுக்காட்டினார்.
அரவிந்தனோடு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இருந்த நெருக்கத்தை நினைவுகூர்ந்த எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது, இலக்கியத்தையும் மீறித் தங்களுக்குள் ஊடாடிய பிணைப்பை நெகிழ்ச்சியுடன் விவரித்தார். “நாகர்கோவிலில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காபி அருந்தாமல் என்னை அனுப்பவே மாட்டார். அவரது கைப்பக்குவத்தில் உருவாகும் காபி சுவைமிக்கது. அவரது தீர்க்கமான அறிவும் சோர்விலா உழைப்பும் என்னை வியக்கவைக்கும். காலத்தை வீணாக்காமல் கச்சிதமாகப் பயன்படுத்துபவர். இரவு வேளைகளில் சமூக ஊடகங்களில் சிறிது நேரம் கவனம் செலுத்தினால், ‘களந்தை, ஏன் நேரத்தை வீணாக்குறீர்கள்? அந்த நேரத்தை எழுதுவதற்குப் பயன்படுத்துங்கள்’ என ஆலோசனை வழங்குவார். அவரது ஆலோசனையை ஏற்றுச் செயல்பட்டதால்தான் மீண்டும் கதைகள் எழுதினேன். கதைகளைப் படித்துவிட்டுச் சில திருத்தங்களையும் முன்வைப்பார்” என்றவர் அரவிந்தனின் இருப்பிடம் தொடர்பானதொரு துயரச் செய்தியைப் பகிர்ந்தார். “சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்த அரவிந்தன் 11 வீடுகள் மாறியுள்ளார். சென்னை, பள்ளிக்கரணையில் புது வீடு வாங்கி, குடும்பமாகக் குடியேறி, ஒருநாள் தங்கிவிட்டு நாகர்கோவில் வந்தவர், இங்கேயே உயிர் துறந்துவிட்டார்”.
எழுத்தாளர் பெருமாள்முருகன், அரவிந்தனின் படைப்பாளுமையை மையப்படுத்திப் பேசினார். தனக்கும் அரவிந்தனுக்கும் இடையேயான 30 ஆண்டுக்கால நட்பையும் தொடர்பையும் நினைவுகூர்ந்தார். “அரவிந்தன் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியதில்லை; ஊடக நிறுவனங்களில்தான் பணியாற்றியிருக்கிறார். நான் எனது மாணவர்களில் பலரை அவரிடம் அனுப்பிப் பயிற்சி பெறச் செய்திருக்கிறேன்; அப்படிப் பயிற்சி பெற்றோர் பலருக்கு அந்நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஈகோ இல்லாத மனிதர்” என்றவர், இதழியல், இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பை விளக்கினார். அரவிந்தனின் சிறுகதைகள், நாவல்களைத் தொட்டுக்காட்டிப் பேசிய பெருமாள்முருகன் அவரது சென்னை வட்டாரத் தமிழ் சார்ந்த ஆய்வையும் ‘ஒரு சொல் கேளீர்’ என்ற நூலின் சிறப்பையும் விதந்தோதினார். அரவிந்தனின் மொழிபெயர்ப்புத் திறனையும் விவரித்து, அவர் மொழிபெயர்த்த நூல்களைப் பட்டியலிட்டார்.
அடுத்து உரையாற்றிய காலச்சுவடு ஆசிரியர், பதிப்பாளரான கண்ணன், அரவிந்தனுக்கும் காலச்சுவடுக்கும் இடையேயான பிணைப்பை விவரித்தார். இளம்பருவத்திலேயே அரவிந்தன் கொண்டிருந்த திறமையையும் முன்னணிப் படைப்பாளர்களுடன் அவருக்கிருந்த உறவையும் எடுத்துச் சொன்னார். மாலனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருந்த இந்தியா டுடே தமிழ் இதழிலும் இந்து தமிழ் திசை நாளிதழிலும் மின்னம்பலம் இணைய இதழிலும் அவர் பணியாற்றிய காலத்தையும், அரவிந்தன் சொந்தமாக சென்னை நம்ம சென்னை என்று இதழ் நடத்திய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். சிறப்பாக, காலச்சுவடு நிறுவனத்தில் அரவிந்தனின் மகத்தான பங்களிப்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். காலச்சுவடு இதழுக்காக அரவிந்தன் எழுதிய சில தலையங்கங்கள், பதிப்பக வெளியீடுகளுக்காக அவர் தேர்வுசெய்யும் நூல்கள், மெய்ப்புப் பார்ப்பதில் அவரது நேர்த்தி, கடின உழைப்பு முதலானவற்றைப் பட்டியலிட்ட கண்ணன், அரவிந்தனின் திடீர் மறைவு காலச்சுவடுக்குப் பேரிழப்பு என்றார்.
‘அனக்கம்’ அமைப்பின் பொருளாளர் ஜி. ஐசக் அருள்தாஸ் சிறப்பு உரையாளர்களின் கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, அனைவருக்கும் நன்றி கூறினார்.
