புதுமையின் நாஸ்டால்ஜியா
அன்பார்ந்த வாசகர்களே, உங்களுக்கு அற்புதமான ஒரு கதையைச் சொல்லலாம் என்றிருந்தேன். நீங்கள் இதுவரை கேட்டிராத, நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் மரபுகளைக் கட்டுடைக்கும் கதை. இயற்கையின் இயல்புகளை வெளிப்படுத்தும் அக்கதையைச் சொல்ல நினைத்தபோதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றார்கள். ஆகையால் முதலில் அதைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அதற்கும் முன்பாக அதுவைதம் பற்றிச் சொல்லிவிடுகிறேன். ஆதிசங்கரரின் தத்துவக் கோட்பாடுதான் அதுவைதம். ‘இருப்பது ஒன்றே’ என்பது அக்கோட்பாட்டின் சாரம்; இருப்பது பரம்பொருள் ஒன்றே, மற்றனைத்தும் மாயை; உயிர்களனைத்தும் பரம்பொருளின் வடிவங்கள். நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உயிர் (அ) ஆன்மா பரம்பொருள். உடலும் உடல்சார்ந்த உணர்வுகளும் உடல்சார்ந்த வாழ்க்கையும் மாயை. இருளில் கயிற்றைப் பாம்பென நினைப்பதுபோல. காலம், நேரம், இடம், மனம் என்பதெல்லாம் வெறும் கனவு. உடல்சார்ந்த தர்க்கங்கள் நீங்கும்வரை பாம்பெனும் மாயை நீங்காது. ஆன்ம ஒளியில் மனமெனும் மாயை நீங்கி, கனவிலிருந்து விழித்துக்கொண்டால் பரம்பொருள் எனும் நிலையை அடையலாம் என்கிறார் ஆதிசங்கரர்.
கே. பாலசந்தர் தன் திரைப்படங்களில் மரபை மீறும் சில கதைகளை, கதை மாந்தர்களைத் தனக்கே உரிய நாடக பாணியில் கையாண்டிருப்பார். ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’, ‘மன்மத லீலை’, ‘நெற்றிக்கண்’ போன்றவை என் அறிவுக்குட்பட்ட எடுத்துக்காட்டுகள். அவருடைய காலத்தில் அவர் உண்டாக்கிய அதிர்ச்சி மதிப்பீடுகளில் பாதியைத்தான் இன்றைய இயக்குநர்கள் உண்டாக்குகிறார்கள். அதுவே மாற்றுமுயற்சி எனக் கொண்டாடப்படுகிறது. அப்படி தனக்கே உரிய நாடக பாணியில் சில தேய்வழக்குகளை தியாகராஜன் குமாரராஜா கையாண்டிருக்கும் படைப்புதான் ‘சூப்பர் டீலக்ஸ்’.
‘எது தர்மம்?’
‘எது தேவையோ அதுவே தர்மம்!’
என்ற புராண வரிகளோடுதான் தியாகராஜா குமாரராஜாவின் முதல் படமான ‘ஆரண்ய காண்டம்’ தொடங்கும். கிட்டத்தட்ட இதே பொருளோடுதான் அவரது இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ முடிவடைகிறது. இதற்கு ஏன் பத்தாண்டுகள் காத்திருந்தார் எனத் தெரியவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பது சமூகக்கருத்துகளை மாற்றுவது. ‘கலை’ என்பதற்குக் கலைத்துப் போடுவது என்ற பொருளும் உண்டு (உபயம்: சிவசங்கர் எஸ்.ஜே., செந்தூரன்) நம் இந்தியச் சூழலின் மாற்று முயற்சி; பொதுப்புத்தியைச் சிதைப்பது; மையத்திலிருந்து விலகி விளிம்பில் நின்று பார்ப்பது. ஆனால் ‘சூப்பர் டீலக்ஸ்’ முப்பரிமாண கண்ணாடியைப் போட்டுக்கொண்டு மையத்திலிருந்தே பார்க்கிறது.
திருநங்கைகள் குறித்த அடிப்படை தெளிவுகூட இல்லாமல், அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காகவே உருவாக்கப்பட்டதாக இருக்கிறது ஷில்பா கதாபாத்திரம். ஜோதியின் முன்பாக சேலை உடுத்தும் காட்சி அபத்தமெனில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் வக்கிரம். ஷில்பாவின்மீது இரக்கமும் ஆதங்கமும் உருவாக வேண்டும் என்ற மெனக்கெடலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அவருக்கான திரைக்கதை. திருநங்கைகள் சமூக அளவில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துவரும் சூழலில் இப்பாத்திரப் படைப்பு பிற்போக்குத்தனமாகத் தெரிகிறது. பெண்ணாகத் தன்னை உணரும் ஷில்பாவை மீண்டும் ஜோதியுடனே வாழ நிர்ப்பந்திப்பது அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை. கதாசிரியரோ இயக்குநரோ திருநங்கைகள் குறித்த சிறு கள ஆய்வு செய்திருந்தால்கூட இந்த அபத்தம் நிகழ்ந்திருக்காது. இதில் ஜோதியின் உளவியலும் தர்க்கங்களும் மறைக்கப்பட்டுவிட்டன. கல்லானாலும் கணவன் என்ற மரபு மீறப்படாமல் காக்கப்படுகின்றது.
படத்தின் முதன்மை வில்லன் பெயர் பெர்லின். சிறுவர்களைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தும் ‘இசுலாமிய தாதா’ கதாபாத்திரத்தின் பெயர் இடிஅமீன். பலகோடி பேர் இறந்த சுனாமியில், சுனாமி ஆண்டவரால் காப்பாற்றப்பட்டதாக நம்பும் கிறித்துவ மதபோதகர் பெயர் அற்புதம் (எ) தனசேகர். அவரது விசுவாமிக்க உதவியாளர் பெயர் இராமசாமி.
மருத்துவமனையில் தன் மகனுக்காகப் பிரார்த்திக்கும் தனசேகரைப் பார்த்து, ‘மதத்தைப் பரப்ப இதுவா இடம்?’ என்று கோபமாகக் கேட்பாள் மனைவி லீலா. உலகமயமாதலுக்குப் பின் சிறுபான்மைப் பிரிவினரைக் குற்றச்செயல்கள் செய்பவராகக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைச்சூழலில் தொடர்ந்து நடந்துவருகிறது. மீண்டும் இந்தத் தேய்வழக்குகளை எழுதுவதற்கா நான்கு திரைக்கதையாளர்கள். பொதுப்புத்தியை எந்தவிதத்திலும் கேள்விக்குட்படுத்தாத படைப்பை ‘மாற்று சினிமா’ என்று எப்படி ஏற்றுக்கொள்வது?
“இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?” (புதிய ஏற்பாடு, மத்தேயு 7:4)
திட்டமிட்டே இந்த வரிகளைப் பயன்படுத்துகிறேன். தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் சமத்துவமின்மையை, வன்கொடுமையை, முட்டாள்தனத்தை விமர்சிக்காமல் மற்றைய சமூகத்தை விமர்சிப்பது ஏமாற்று வேலை யல்லவா!
ஆண் மையச் சிந்தனையும், ஆண் மைய மரபும் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. சும்மாவா, நான்கு ஆண்களல்லவா திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்? நடிகையான தன் அம்மாவைப் பார்த்து ‘தேவடியா முண்ட’ என்று திட்டுகிறான் பதின்மவயது மகன். (இந்தக் கதை, வேறொரு எழுத்தாளரின் சிறுகதை யிலிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது) அந்த இடத்தில் ஒரு நொடி அமைதி நிலவுகிறது. ஆண் தனத்தின் உச்சமாகவே இதைப் பார்க் கிறேன். அந்த ஒரு நொடி அமைதியில் ‘எழுத்து - இயக்கம்’ தியாகராஜன் குமாரராஜா என்று போட்டிருந்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை. இதற்குச் சற்றும் குறைவில்லாதது, வேறொரு ஆணுடன் உடலுறவுகொண்ட தன் மனைவியை நினைத்து நொந்துகொள்ளும்போதெல்லாம் ‘fuck you woman’ என்று கணவன் திட்டுவது.
திருமணம் கடந்த உடலுறவைத் தப்பு என்று படம் நெடுகிலும் ஒப்புக்கொள்ளும் வேம்புவின் மனம், ஆண் மைய மரபின் விளைவு என்று தோன்றுகிறது. அதனாலேயே அதன் எதிர்வினை அதேவடிவில் அவருக்கு நிகழ்கிறது.
இதே குற்றவுணர்வு ஷில்பாவிடமும் இருக்கிறது. ஆண்மையச் சிந்தனையின் வக்கிரம் இங்கே வேறொரு வடிவத்தில் வெளிப்படுகிறது. தன் குழந்தையைத் தொலைத்துவிட்டு நிற்கும் ஷில்பா குற்றவுணர்வில் குறுகிப்போகிறார். அப்போது அங்கு வரும் மதபோதகர் அற்புதம் (எ) தனசேகரிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் வாழ்க்கையில் இதேபோன்று குழந்தை ஒன்றுக்குத் தான் செய்த தவற்றைச் சொல்லி அழுகிறார் ஷில்பா. அதற்கான தண்டனையாகத்தான் தன் குழந்தையைத் தொலைத்து நிற்கிறேன் என்ற பொருளில் அவர் சொல்கிறார்.
இத்திரைப்படத்தில் நிகழும் சம்பவங்கள் யாவும் தற்செயலானவை என்ற பிம்பத்தைத் தருகிறது திரைக்கதை அமைப்பு; உள்ளடக்கம் அதற்கு எதிராக இருக்கிறது. வேம்புவின் உடலுறவு குறித்த குற்றவுணர்வின் விளைவாக பெர்லின் அவரை உடலுறவிற்குக் கட்டாயப்படுத்துகிறான். மும்பையில் தன்னால் ஒரு குழந்தை பிச்சைவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற ஷில்பாவின் குற்றவுணர்வின் விளைவு, அவருடைய குழந்தை காணாமல் போனதாகப் பாவமன்னிப்புக் கேட்கிறார். பெர்லின் தலைமேல் கைவைத்து ஷில்பா இடும் சாபத்தால், தலைமேல் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து இறந்துபோகிறார் பெர்லின்.
மரபை மீறுதல் என்ற போர்வையில் தேய்ந்துபோன மரபுகளுக்குள்ளேயே சிக்கிக் கிடக்கிறது திரைக்கதையும் வசனங்களும். (தட் மண்ட மேல இருக்கற கொண்டைய மறந்த மொமண்ட்) இதில் ஜாதியையும் மொழியையும் தேசத்தையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வையை அறியாமை என்பதா, நுண்ணரசியல் என்பதா என்று தெரியவில்லை.
காலமும் நேரமும் இடமும் இப்படத்தில் குறிப்பால்கூட உணர்த்தப்படவில்லை. சுனாமி வந்ததற்குப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை என ஒரு வசனத்தின் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் டேப் ரிக்கார்டர், கருப்பு அம்பாசிடர் டாக்ஸி, திரையரங்குகளில் பாலியல் படம் பார்ப்பது போன்றவை காலத்தைக் குழப்புகின்றன. களம் சென்னை என்பதாக ஓரளவு புலப்படுகிறது, ஆனால் ஷில்பா வரும் காட்சிகளில் இடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. படம் முழுவதும் பகல் ஒளி நிறைந்திருக்கிறது. ஒரே நாள் என்றாலும் காலை, முற்பகல், பிற்பகல், மாலை என்ற ஒளி வேற்றுமைகள் பெரிதாய்ப் புலப்படவில்லை; போதாக்குறைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வேறு வருகின்றனர். அவர்களுக்கு வேண்டுமானால் இது ‘உலக சினிமா’வாகத் தெரியலாம். இயக்குநரின் நாஸ்டால்ஜியா காலம், நேரம், இடம், மனத்தின் தர்க்கங்கள் அனைத்தையும் கடந்த படைப்பாக சூப்பர் டீலக்ஸை உருவாக்கியிருக்கிறது!
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இதுபோன்ற பல திரைப்படங்களுக்குப் பலமாக அமைந்துவிடுகிறது. பல அறிமுக இயக்குநர்களின் திரைப்படங்களுக்குத் தன் இசை மூலம் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. நீரவ் ஷா, பி.எஸ், வினோத் கூட்டணியின் ஒளிப்பதிவும் சத்யராஜ் நடராஜின் படத்தொகுப்பும் கூடுதல் பலம்.
‘சூப்பர் டீலக்ஸ்’ எந்த வகையிலும் புதுமையான திரைப்படம் அல்ல. வணிக வெற்றியை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வணிக அம்சமுள்ள ஒரு திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ். ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ போன்று இதையும் எளிமையாகக் கடந்துவிடுங்கள், விவாதிக்காதீர்கள், விவாதித்து அதன் ஆயுளைக் கூட்டாதீர்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு சமூக வலை தளங்களில் ‘10 years of super deluxe’ என்று கொண்டாடும் வாய்ப்பைத் தராதீர்கள். இது மற்றுமொரு படமே!
நான் சொல்ல வந்த கதையைச் சொல்லிவிடுகிறேன். அறிவுத்திறனற்ற நான்கு ஆண்கள், யானையைப் பார்க்கக் காட்டிற்குச் சென்றார்களாம். ஒருவன் காலைத் தொட்டுப் பார்த்து அதுதான் யானை என்றானாம், மற்றொருவன் வயிற்றைத் தொட்டுப் பார்த்து அதுதான் யானை என்றானாம். அடுத்தவன் காதை தொட்டுப் பார்த்து அதுதான் யானை என்றானாம். நான்காமானவன் கொஞ்சம் யோசித்து ‘நாம் தொட்டுக்கொண்டிருப்பது ஒரே யானையின் பாகங்களை’ என்றானாம். அப்போது ஒரு அசரீரி கேட்டதாம், ‘நீங்கள் தொட்டுக்கொண்டிருப்பது யானையை அல்ல, கரடியை’ என்று.
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com