கடிதங்கள்
கடிதங்கள்
கணேஷ் தேவியின் நேர்காணல் தான் இம்மாதச் சிறப்பம்சம். ஆயிரக்கணக்கான மொழிகளின் அழிவு, ஒற்றை மொழிக் கலாச் சாரத்தின் பேரபாயம் குறித்த தகவல்கள் சமகாலத்தில் தீவிரச் சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. நம்மிடமுள்ள சொற்பமான இயற்பியல் விதிகளைக் கொண்டு பில்லியன் கணக்கிலான அண்டங்களை ஆராய்ந்து அறிவது சற்றும் இயலாதது என்ற அவரின் கூற்று நிதர்சனம். எண்ணிலடங்கா கூறுகள் நிரம்பிய மனித வாழ்வில் ‘பொருள்’ என்ற ஒற்றைக் கூறினை நோக்கியே மனிதனின் வாழ்வும், சிந்தனையும் அமைந்திருப்பது அறமற்ற சூழல்களுக்குத்தான் அவனைக் கொண்டுசேர்க்கிறது.
சரவணன்
மதுராந்தகம்
‘பெண்களால் வீழும் இந்துத்துவம்’ கட்டுரை, பெண்கள் முன்னெடுக்கும் எந்தவொரு போராட்டத்திற்கும் வீரமும் வலிமையும் மிக அதிகமென்பதை உணர்த்தும்விதமாகத் தொடர்ந்து களத்தில் நின்று போராடி ஒற்றுமையைப் பறைசாற்றுகிறார்கள். ஜேஎன்யு சாதாரணப் பல்கலைக்கழகம் அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு தனித்த அடையாளங்களைத் தன்னகத்தே கொண்ட அந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொடர்ச்சியாக மாணவிகளுக்குக் கொடுக்கப்பட்டுவரும் தொல்லைகள் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்குகின்றன.
ஜாமியாஇஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் பல வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. இப்படி சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களின் மாணவிகளைக் குறிவைத்து அவர்கள்மீது தொடர் தாக்குதலை நடத்துவது, அவதூறாகச் சித்திரிப்பது என்பன நாகரிக மனித சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத அவமானகரமான நிகழ்வு.
கருத்தைக் கருத்தால் வெல்ல வேண்டும். ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து சொல்வோரும் மதிப்பளித்து அவர்களின் நியாயமான உண்மையான கோரிக்கைகளை நியாயத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்து அதனைச் சரிசெய்து கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை.
அரசியல் கட்சிகளின் அத்துமீறல்களுக்கு நிர்வாகம் இடம் கொடுத்து அவர்கள் சொல்படிக் கேட்டு நடந்தால் நிர்வாகச் சீர்கேடு ஏற்படும் பல்கலைக்கழகங்களின் அத்தியாயத்தில் கரும்புள்ளிகள் உண்டாகிவிடும். ஒருகாலத்தில் பெண் கல்வி மறுக்கப்பட்டு வீட்டுக்குள்ளே பூட்டி வைத்திருந்த நிலைமாறி இன்று பரவலாகப் பெண்கள் விண்ணோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்; இந்தச் சூழலில் அவர்களுக்கு எதிராக தொடங்கப்படுகின்ற அத்தனை தாக்குதல்களையும் வென்று சாதித்துக்காட்டும் வல்லமை பெற்றவர்களாக உருமாறி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிராகப் பாதகம் செய்ய நினைப்பவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
மா. கல்பனா பழனி
சின்னப்பள்ளத்தூர்
‘அடையாளத்திலிருந்து அடையாளமின்மைக்கு’ கட்டுரை, ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் நுட்பமான தேடல் முயற்சியின் வெளிப்பாடாய் அமைந்துள்ளது. இந்தத்தேடல் மாபெரும் தமிழ்ப் புலவரின் இனத்தை அடையாளப்படுத்தும் தொடர்புடையது என்பதில் வாசகர்களின் பொதுப்புத்திக்குச் சற்று நெருடல் ஏற்படுத்துகிறது. இதில் மிகவும் கூர்மையாகப் புரிந்துகொள்வது என்னவென்றால், முதுபெரும் ஆளுமைகளால் கண்டடையப்பட்ட திருவள்ளுவரின் பூர்வீக இன அடையாளத்தைச் சமூக அந்தஸ்து அடிப்படையில் மாற்ற ஒரு குறிப்பிட்ட சாராரால் திணிப்பு முயற்சி நடந்துள்ளது என்பதுதான்.
எந்த மொழியின் இலக்கியமும் இலக்கிய ஆசானும் மாபெரும் மனித சமூகத்தின் பொதுச் சொத்தே ஆகும். இனத்தை, மொழியை, மதத்தை எந்த இடத்திலும் அடையாளப்படுத்த விரும்பாத ஒரு உலகப்பொதுமறைக்கு இவ்வாறான ஆய்வு எப்படி தேவையாகிறது என்பது முக்கியம்.
ஆசிரியரது இத்தகைய தேடலுக்கு அயோத்திதாசப் பண்டிதரின் தொடக்கக் கால ஆய்வும் ஆதங்கமும்தான் வழித்தோன்றலாய் அமைந்துள்ளன. ஒரு தாழ்நிலைச் சமூகமாகக் கருதப்படும் இனத்திலிருந்து எப்படி இவ்வளவு பெரிய மகத்தான நூலும் நூலாசிரியரும் தோன்றியிருக்கக்கூடும் என்ற ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்க பெரிய மனிதர்களின் குதர்க்க முயற்சியே இந்த தேடலில் வெளிப்படும் தார்மீகக் கோபத்தின் மூலகாரணமாக அமைந்துள்ளது. இத்துடன் வெளிநாடுகளில் நமது இந்தியப் பிரதமரால் சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட காவி உடை திருவள்ளுவர் சிலைகள் கட்டுரைக்கான தாக்கத்தை மேலும் வேகப்படுத்தியுள்ளன.
ஐரோப்பியர்களான சீசன்பால்கு, கிண்டர்ஸ்லி, எல்லீஸ், வீரமாமுனிவர் போன்ற பேராளுமைகளுக்கு வள்ளுவரது இன அடையாளம் பற்றிய ஆய்வு முடிவுகள் எந்த மூலாதாரத்தில் கிடைத்தனவென்பதும் ஆய்விற்குரிய சிந்தனையே. ஆனால், இன்றைய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘வள்ளுவர்’ என்ற இனக்குழு அதே ‘பறையர்’, இனப்பூர்வீக அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மை. அரசு அங்கீகரித்துள்ள ஆதிதிராவிடர் இனப்பெயர்களின் பட்டியலில் ‘வள்ளுவர்’ சேர்க்கப்பட்டுள்ளமை எல்லாரும் அறிந்ததே. எனவே, வள்ளுவச்சான்றோரை இவ்வாறு அடையாளம் காண்பது பொருந்துமென்றே தோன்றும். ஐரோப்பியப் பெரியோர்கள் தங்களது மதத்தைப் பரப்பும் பணிக்கு இந்த இன அடையாளப்படுத்துதலை யுக்தியாகப் பயன்படுத்த எண்ணியிருக்கலாம்; என்றாலும், அவர்கள் செய்த மாபெரும் தமிழ்ப்பணியில் இந்தச் ‘சாயத்தை’ எப்படி இணைத்துப் பார்ப்பது?
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கீழ்மட்டச் சமூகப் பூர்வீகத்தில் அடையாளப்படுத்தப்பட்ட நூலாசிரியர் மேம்பட்ட தலையாய நீதிநூலை இயற்றியிருக்க முடியாது என்ற வாதம் ஏமாற்றுச் சித்து விளையாட்டே ஆகும். அயோத்திதாசப் பண்டிதரின் தந்தை கந்தசாமி பற்றித் தனது ஆங்கிலேயே எஜமான மேலதிகாரியான ஆரிங்டன் பிரபுவிடம் தவறாகக் கோள்மூட்டித் தந்திரப்பணி செய்த அதே பெருமாளையர் சகோதரர்கள் சார்ந்த சாரார்தான் இவ்வாறான வாதத்தை முன்வைத்தார்கள் என்பது கட்டுரையின் சாரம். தமக்கு இளமையில் ஏற்பட்ட இந்தச் சமூகக் கொடுமையான வடுதான் அயோத்திதாசருக்கு இங்கேயும் கோபக்கனலை மூட்டியுள்ளது. கடுங்கானகப்பரப்பில் கொள்ளையடித்துத் திரிந்து நிலைகெட்டு வாழ்ந்த இளம்பிராய வால்மீகியால் சாகாவரம் பெற்ற தெய்வீக இராமாவதாரக் காவியம் படைக்க முடிந்திருக்கிறது. ‘புலையர்’ இனத்து நந்தனார் மாசற்ற தகைமையுடைய உயர்ந்த சிவபக்தனாக உருவாகி சிதம்பர நந்தியையே சற்று விலக்கிவைக்க முடிந்திருக்கிறது.
பன்றி இறைச்சியையும் மான் இறைச்சியையும் இறைவனுக்குப் படைத்த திண்ணன் என்ற வேடர் கண்ணப்ப நாயனராக வரம்பெற்றுள்ளார். பல வரலாறுகள் இவ்வாறிருக்க, வள்ளுவப் பெருந்தகைக்கு மட்டும் அவரது இன அடையாளம் குறுக்கிட்டு விடுமா? எது எவ்வாறு இருப்பினும் இலக்கியங்களுக்கும் இலக்கிய ஆசான்களுக்கும் இன மத ஜாதி அடையாளங்களை ஆய்வு செய்வது எப்போதும் பொதுஅங்கீகாரம் பெறாது. நூலுக்கும் நூலாசிரியர் உருவத்திற்கும் கட்டுரை ஆசிரியரது கூற்றுப்படி மூன்றாவது அத்தியாயத்தைச் சார்ந்த இன்றைய தமிழ் கூறும் நல்லுலகும், உலக மனித சமுதாயமும் ஏற்றுக்கொண்ட எச்சார்பும் இல்லாத பொது முடிவே சரியென்றாகிவிட்டது. இதில் திராவிட இயக்கமோ, திமுகவோ பங்களிப்புச் செய்திருந்தாலும் அது ஏற்புடையதே ஆகும். திருக்குறள் பொதுமறை அங்கீகாரம்பெற்ற அளவிற்குத் திருவள்ளுவர் அங்கீகாரம் பெற்றாரா என்பது என்றோ ஒருநாள் எப்படியோ எழுப்பப்பட்ட இன்றைய மனித அறிவுப்புலத்திற்க்கு சற்றும் தொடர்பற்ற வாதமாகும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
ரணில் மைத்திரி அரசு, இரு தேசிய மொழிகளிலும் ‘தேசிய கீதம்’ இசைக்கப்பெறும் என்று அறிவித்ததை அடியோடு ஒதுக்கி மரபைக் காலில்போட்டு மிதித்து, இற்றைநாள் மகிந்த ராஜபக்ச குழுமம் இனி தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பெறும் என்று அறிவித்திருப்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம். இலங்கை, இந்தியாவின்நெருங்கிய நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் தமிழர்களை, மீனவர்களை அழித்தொழிப்பதும் துன்புறுத்துவதும் தமிழ்க் கோயில்களைத் தரைமட்டமாக்குவதும் தொடர்ந்து நடந்தே வருகின்றன. தமிழகப் பணக்காரக் கோயில்களில் மகிந்த ராஜபக்ச குழுவினருக்குப் பூரண கும்ப மரியாதையும் ரத்தினக் கம்பளவிரிப்பும் தடபுடலாக நடந்தே வருகின்றன. தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை, ஏமாளித்தனத்தை மிக அழகாகப் பயன்படுத்திக்கொள்ளும் அவர்களின் அராஜகப் போக்கை நாம் என்றுதான் உணரப்போகிறோமோ தெரியவில்லை!
“ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சமஉரிமையுடனும் மதிக்கத்தக்கவகையிலும் நடத்தப்பட வேண்டும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றெல்லாம் ராஜபக்சேவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன், அவரும் நிறைவேற்றக் காத்திருக்கிறார்,” என்று நடுவணரசின் தலைமையமைச்சர் என்றும் போலவே அறிவித்திருக்கிறார். இது வெற்றுக் கூச்சலாக, பொய்யாய், பழங்கதைகளாக மாறிவிடும். இன்றைய இந்தியத் துணைக் கண்டப்பகுதியில் நிகழ்ந்திருக்கும் அரசியல் திருப்பமும் இந்துத்துவ அரசியலும் இதற்கான முன்னெடுப்பைச் செய்யுமென்று நம்ப முடியாது. இறுக்கமான ஒற்றைநெறியைப் பரப்புவதிலும் வரலாற்றைத் திரிப்பதிலும் இந்திய இலங்கை அரசுகளுக்குள் அதிக வேறுபாடுகள் இல்லையென்ற ஆசிரியரின் பார்வை சிந்திக்கத்தக்கது.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
இலங்கை சுதந்திர விழாவில் அந்த அரசின் தற்போதைய ஆட்சியாளர்களின் ஆசைக்கேற்ப அவர்களது மொழியில் தேசீய கீதம் பாடப்பட்டுள்ளது. கண்டிப்பாக இலங்கை வாழ்தமிழர்களுக்கு இது சோக கீதம்தான். அண்மையில் இலங்கையில் ஆட்சியில் உள்ள தலைவர்களும் இந்திய மைய அரசின் தலைவரும் பேசிக் கொள்வதைத் தொலைக் காட்சியில் பார்த்தேன். அந்த நெருக்கம், அவர் இந்தியக் கோயில்களில் தரிசனம் செய்ய வரும்போதும் வெளிப் படையாகவே தெரிந்தது. தமிழர்களை இவர்கள் பொருட் டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ‘பெண்களால் வீழும் இந்துத்துவம்’; கண்டிப்பாக இந்துத்துவம் வீழும் என்ற நம்பிக்கை நாடெங்கிலும் பெண்கள் நடத்தும் போராட்டங்களால் சாத்தியப்படும் என்று நம்புகிறேன். இந்தியா சுதந்திரம்பெற்றபின் பெண்கள் நடத்தும் போராட்டம் மீதுதான். எனவே இந்துத்துவா மீளும் என்ற நம்பிக்கை இல்லை.
‘அடையாளத்திலிருந்து அடையாளமின்மைக்கு’, கட்டுரை என்னுள் அதிர்வலைகளை உருவாக்கியது. வள்ளுவரைப் பற்றிய சிலைகளே இதற்குக் காரணம். ஏனெனில் நாம் பார்த்த திருவள்ளுவர் நன்கு பதிந்து விட்டதால் ஏனைய உருவங்களை ஏற்க இயலவில்லை. ஆனால் சாதி, சமயத்தைக் கடந்து கட்டுரையாளர் ஆராய்ச்சி செய்திருக்கிறார்; அருமை ஆனால் இன்னும் வள்ளுவர் எனும் சாதி தாழ்த்தப்பட்டோர் அடங்கிய பட்டியலில் உள்ளது.
ஞா. சிவகாமி
சென்னை
தலையங்கம் இந்திய, இலங்கை அரசுகளின் போக்கை ஒளிவு மறைவின்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மொழி, இன, மத அடிப்படையில் சிறுபான்மையினர்; அதே சமயம் சிறுபான்மையினர் என்ற வகையில் சிங்களரல்லாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர்.
மகிந்த ராஜபக்சே, மைத்திரி சிரிபால, கோத்தபய ராஜபக்சே எனச் சிங்களத் தலைவர்கள் எவர் ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மையினரை ஒடுக்குவதிலும் சிங்களரல்லாதோர் தாமாகவே முன்வந்து இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ ஒப்புக்கொள்ளச் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாம்முறையாக ஆட்சிக்கு வந்த மோடி இந்தி பேசும் மக்களல்லாதோரைச் சிறுபான்மையாக்கும் நடவடிக்கைகளில் வேகமாக இறங்கியுள்ளார். பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள், கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளுள்ள பரந்த நிலப்பரப்புடைய நாட்டில் ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்பது எத்தகைய சர்வாதிகார நோக்கம்?
பழுத்த அரசியல்வாதியான ஜெயவர்த்தன கற்றுக்குட்டியான ராஜீவ்காந்தியை இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவைத்து எளிதாக ஏமாற்றிவிட்டார். விடுதலைப்புலிகளுக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுச் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டிய ராஜீவ் காந்தி, புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது தமிழர்கள்மீதுகொண்ட காரணமற்ற காழ்ப்புணர்ச்சிதானே!
1983 ஜூலைக் கலவரத்தில் சிங்களர்கள் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு நிகரானதே அண்மையில் வடகிழக்கு தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையும். ஈழப்போரை இந்திய அரசுதான் நடத்தியது என்று மகிந்த ராஜபக்சே கூறியதை ஒருபோதும் மத்திய அரசு மறுத்துக் கூறவில்லை.
இலங்கையிலுள்ள தமிழர்குறித்து இலங்கை அதிபருடன் மோடி அழுத்தமாகப் பேசுவதில்லை; பேசுவதாகப் பாவனை செய்வதுடன் சரி. ஏனெனில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான வன்முறை நிகழ்வுகளுக்கு மோடி இலங்கையிடம் என்ன கூறுவார்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருந்தபோது அவர் இருந்த இடத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூத்திலுள்ள வடகிழக்கு தில்லியில் வன்முறை நிகழ்ந்த சம்பவமும் அதன் தொடர்ச்சிகளும் இன்று இந்திய உச்ச நீதிமன்றப் படியேறி ஐ.நா. அவை மனு செய்வது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் கேவலமாகத் தெரியவில்லை.
‘இறுக்கமான ஒற்றை நெறியைப் பரப்புவதிலும் வரலாற்றைத் திரிப்பதிலும் இந்திய இலங்கை அரசுகளுக்குள் அதிக வேறுபாடுகள் இல்லை’ என்ற வரியை மோடி, அமித் ஷாவுக்கு நாம் மொழிபெயர்த்து அனுப்புவது நமக்கு ஆறுதலைத் தரும்
தெ. சுந்தரமகாலிங்கம்
விருதுநகர்
ஐ. கிருத்திகா எழுதிய ‘தொடுகறி’ சிறுகதையின் முடிவு ஜெயகாந்தன் எழுதிய ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையின் முடிவை ஒத்திருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
அக்கினிப் பிரவேசம் கதையில் தனக்கு நடந்தது sexual abuse தான் என்று தெரியாத விடலைப் பெண்ணைச் சமாதானப் படுத்த ஒரு செம்பு நீரை அவள் தலைமீது ஊற்றி அவள் களங்கத்தினைத் தாய் நீக்குவதாக எழுதப்பெற்றிருக்கும் முடிவைச் சற்றே திருத்தி ‘சோரம் போன’ கணவனை மனைவி சுத்திகரிப்பதாக ‘தொடுகறி’ முடிகிறது. இந்த முடிவு வாசகர்களைத் தவறான முன்முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் அபாயத்தினைக் கொண்டுள்ளதாக நான் கருதுவதற்கு கீழுள்ள காரணங்களைப் பட்டியலிடுகிறேன்.
i) பசிக்குச் சோற்றினைப் பகிர்வதையும், காமத்தின் வடிகாலாக உடலினைப் பகிர்வதையும் மிக இயல்பாகக் கதாசிரியர் ஒப்புநோக்கினாலும், எங்கோ ஒரு சிறு கண்ணி அறுபட்டிருக்கும் எண்ணம் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. சோரம் போவதையும் மணவாழ்க்கையில் ஒருவரது இணை செய்யும் துரோகத்தினை சும்மா கடந்துசெல்லும் அளவுக்கு மனமுதிர்ச்சி உடையவளாக மீராவின் மனச் சித்திரத்தை வாசகர்கள் வரைந்துகொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு shock value தருவதாக இக்கதையின் முடிவு எழுதப்பட்டிருந்தாலும் இந்த முடிவிற்கான அடித்தளம் பலமாக அமைக்கப்படவில்லையென்றே தோன்றுகிறது.
ii) மேலும் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையில் தான் abuse செய்யப்பட்டிருப்பதைத் தாமதமாக உணர்ந்து அழுது தீர்க்கும் விடலைப் பெண்ணைச் சமாதானப்படுத்துவதாக அந்தத் தாயின் செயல் இருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் அன்றைய ஆனந்த விகடன் வாசகர்கள் கொந்தளித்தது வரலாறு. இந்தக் கதையில் ‘போதையின் காரணமாக சோரம் போனதற்கு’ நடக்கும் சுத்திகரிப்பாக வரும் மனைவியின் செயலை அதே தளத்தில் வைத்து நியாயப்படுத்தும் செயல் உவப்பானதாக இல்லை.
அறியாமையால் sexual abuse இற்கு ஆளாகும் விடலைப் பெண் மறுபடியும் தனக்கு அவ்வாறு நடக்க அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால் அதன் விளைவுகள் அவளுக்குப் புரிந்திருக்கின்றன. எனவே முன்னைவிட எச்சரிக்கையுடன்தான் இருப்பாள். ஆனால், தனது மனைவி தன்னுடன் இருக்கும்போதே இன்னொரு பெண்ணின் இச்சைக்கு இணங்கும் கணவன் இதே செயலைத் திரும்பச் செய்ய மாட்டான் என மனைவி நம்புவதற்கு அவனின் கண்ணீர் மட்டுமே போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. “சைக்கிளைத் திருடிவிட்டுப் பாவ மன்னிப்பு கேட்டால், திருட்டு நியாயம் ஆகிவிடும்” என்ற வகையில் வழங்கப் பெறும் நடிகர் அல் பஸீனோவின் வேடிக்கையான மேற்கோளினை ஒத்திருக்கிறது இக்கதையின் முடிவு. உறுதியான தர்க்கங்கள் நிறுவப்படாததால் பலவீனமான ஒரு சிறுகதையைப் படித்த உணர்வே மிஞ்சுவதால் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையின் மோசமான உல்டாவாகவே ‘தொடுகறி’ கதை தோன்றுகிறது.
விக்ரம்
மின்னஞ்சல் வழி