கவிதைகள்
கவிதைகள்
செல்வசங்கரன்
இருபத்தைந்து ஆண்டுக் காலத் தூர வாழ்வு
பால்ய நண்பனைப் பார்த்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன
இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஒருநாள் வாட்ஸப் செய்தான்
பால்யங்களில் ஆடிய குண்டு விளையாட்டு
காசு சேர்த்து வைத்துச் சாப்பிட்ட புரோட்டா சால்னா
ரிலீஸ் அன்றைக்குப் பார்த்த முத்து திரைப்படம்
அப்போஸ்தல கிறிஸ்துவ சபை
ஞானஸ்நான தொட்டியில் குதித்துக் குளித்த அற்புதக் குளியல்
எல்லாவற்றையும் அந்த வாட்ஸப் திரும்ப மலர்த்தியது
அவன் மறந்தவைகளை டைப்செய்து அவனுக்கு அனுப்பிவைத்தேன்
ஒரே கடந்த காலம் ஒரே தடவை நிகழ்ந்த நிகழ்வு
இரண்டுபேர் அதைத் திரும்பக் கொண்டு வந்தார்கள்
இரண்டுபேரும் அதைத் திரும்ப எடுத்துவைத்தார்கள்
ஒரே விசயம் அதற்கே தெரியாமல் அது இரண்டாகயிருந்தது
இரண்டும் எதிரெதிரே சந்தித்தபோது
தங்களைத் தாங்களே தொட்டுத் தடவிக்கொண்டன
எதிரே இருந்ததைப் பார்த்து இதுவும் நானென இரண்டுமே
ஒன்றுபோல சொல்லின
ஏன் இவ்வாறு இருக்கிறோமென அதுகளுக்குள் ஒரே குழப்பம்
ஒன்றாகவே மாறிவிடுவோமென இரண்டுமே முடிவுசெய்து
ஒரு படத்தின் மீது இன்னொரு படத்தை ஒட்டுவதுபோல
ஒரு நல்ல நாளில் குளியல் காட்சி குளியல் காட்சியோடு இணைந்தது
முத்து படக் காட்சி கோன் ஐஸ் சாப்பிடுகிற இடத்தில் ஒட்டியது
இரண்டாகயிருந்த ஒரு நிகழ்வு கனக் கச்சிதமாக ஒன்றாக மாறியது
பழைய மாதிரி ஆகிவிட்டதால்
பழைய இடத்திலேயே தங்கிக்கொள்ளலாமென
அதற்கான முடிவை அதுவே எடுக்க
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் போய்
அததற்கான இடங்களைத் தேடி அதது இருந்துகொண்டது
அந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் யாரென்றே தெரியாத வாழ்க்கையை
இன்னுமொரு இருபத்தைந்து ஆண்டுகளை நோக்கி
வாழத் துவங்கினார்கள்.
யாவருக்கும் தெரியும் வானம்
வானத்தை மேய்த்துக்கொண்டிருந்தார்
ஐந்து குதிரைகள் பூட்டிய வண்டியில்
தனியொருவனாக மேய்த்துப் போவதாக நினைப்பு
அந்தரத்தில் வண்டியை ஓட்டிய
அவர் சொன்னதையெல்லாம் அந்த மேகம் கேட்டது
யானை மாதிரி ஆகச் சொல்ல யானை வடிவம் எடுத்தது
களைந்து போகலாமென்றதும் ரத்தம் சிந்தாமல் உடைந்தது
ஒரு இடத்தில் லகானைத் தளர்த்தி மேகத்தைப் பார்த்தபடி
கண்ணிற்கெட்டும் தூரத்திலேயே இருங்களென்றதும் கேட்டுக்கொண்டது
என்னைக் கேட்காமல் கீழே வந்துவிடக்கூடாதென்றதும்
தலையை ஆட்டியது
பறவைக் கூட்டம் வருகிறது அதற்கு வழிவிடுங்களென்று
அந்தப் பொறுப்பையும் கூட அவரே கவனித்துக்கொண்டார்
பிடிமானங்களற்ற பாதை
என் கண்கள் இருக்கின்றன கவலை வேண்டாம் என்றவுடனே
அவர் காட்டிய திசையில் பறவைகள் ஒன்றுபோல வலசை சென்றன
திடீரென அவருக்கு மழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை
மேகத்தைப் பார்த்து மழையைப் பொழியுமாறு கட்டளையிட்டார்
அவருக்கு மட்டும் அங்கே மழை பெய்தது
அவர் நனையக்கூடாதென்று சொன்னதால் அவர் நனையவில்லை
மழை அவருக்கு மட்டும் அங்கே பெய்துகொண்டேயிருந்தது
லௌகீக வாழ்க்கையில் நாட்டம் வந்துவிட்டதால்
சிறிது நாட்களுக்கு உங்களைக் கண்டுகொள்ள முடியாதென்று
நினைக்கிறேன்
தினமும் என்ன செய்யவேண்டுமென எழுதித்தந்துவிடுகிறேன்
கவனமாகப் படித்துச் செயல்பட்டுக் கொள்ளுங்களென்றவர்
ஒருதாளில் ஏதோ எழுதி அதை
வானத்தைப் பார்த்தவாறு தரையில் ஒட்டி
குதிரைகளைக் கொட்டிலில் பூட்டிக் கிளம்பிச் சென்றார்
முதல்நாளில் வானம் இடப்பட்ட கடமையைச் செவ்வனே ஆற்றிவர
வரிசைமாறிக்கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினையில்லை
எனக் கடைசி வரியாக அந்தத் தாளில் எழுதி முடிக்கப்பட்டிருந்தது
மேகங்களுக்குச் சந்தோசம் தாங்கமுடியவில்லை
என்ன செய்வதென்றே புரிபடவில்லை
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து நிற்காமல் மழையாகப் பொழிந்து தள்ளியது
பூமியிலுள்ள எல்லார் மீதும் பெய்தது அந்த மழை
எல்லாரும் மழையில் தொப்பலாக நனைந்தனர்.
மின்னஞ்சல்: selvasankarand@gmail.com