ஆதிக்க மொழியின் மாய வலை

சங்க இலக்கியம்:
உடல் மனம் மொழி
(ஆய்வு நூல்)
சக்தி ஜோதி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-B சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அம்பத்தூர், சென்னை - 600 050
பக்கம் 488
ரூ. 550
சங்க இலக்கியங்களின் சமூக அணுகுமுறையில் பெண்களுக்கான இடம் என்னவாக இருந்ததென்று அதன் நாடித்துடிப்பைத் தொட்டுப்பார்த்திருக்கிறார் சக்தி ஜோதி. காலம் பழைமையானதாக இருந்ததென்றாலும் பெண்களை நோக்கிய அதன் பார்வை இன்றைய காலகட்டத்திற்குச் சற்றும் குறைவுபடாமல்தான் இருந்திருக்கிறது. கூடுதலாகச் சொல்வதெனில் அதன் வேர் இன்னும் அழுகாமல் இருப்பதாகச் சொல்லலாம். ஆணாதிக்கம் இந்நாளின் நவீனத் தன்மையை அந்நாளிலேயே எடுத்தாண்டுள்ளதைப் பார்க்கையில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர மேலோங்குகின்றன. அதனால்தான் தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகமாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. அதற்கு என்னென்னவெல்லாம் காரணங்களாக இருந்துள்ளன?
‘சங்ககாலப் பெண்களின் நிலை’ எனும் தலைப்பைத் தன் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்டவர், தன் ஆய்வை முனைவர் பட்டத்திற்காகவும் விரித்துக்கொண்டதன் விளைவே இந்நூல். ஆய்வுக்கும் மேலாக ஒரு சமூகத் தொண்டுபோல சங்ககாலத்தின் நிறைகுறைகளை ஆராய்ந்திருக்கிறார்.
ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது கடினமான உழைப்புக்கான தடங்கள் தெரியவருகின்றன. உழைப்புக்கு மரியாதை செய்யும்போது தாய்வழிச் சமூகமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தந்தைவழிச் சமூகமாக மாறும்போது அதிகாரப் படிநிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த அதிகாரம் பாலினரீதியிலான வேறுபாடுகளை விதைத்துப் பெண்களைத் தம் போகப்பொருளாகவோ தனக்கேற்ற உழைப்புக் கருவியாகவோ மாற்றியிருக்கிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு மதிப்புமிக்கதாக இருந்திருக்கிற காலத்தை மாற்றிய சங்கதிகளைத் தோண்டித் துருவிச் செல்கிறது.
சங்க இலக்கியமான ஐங்குறுநூறு மகள்களின் பிறப்பைக் கொண்டாடியது. பின்னர் ஆரியம் இங்கு நுழைந்தபோது தன் கருத்துச் சரக்குகளைத் தமிழர்களின் தலையில் ஏற்றியது. அந்த நிலை உருவானதும் பெண் பிறப்பு விரும்பத்தகாததாகி ஆண் மக்களின் பிறப்பு கொண்டாடப்பட்டது. ரிக் வேதம் அந்த வேலையைச் செய்தது.
அப்படியானால் இத்தகைய கருத்துக்களை உருவாக்குவதற்கு ஏதோவொன்று தேவைப்படுகிறது. அது என்ன? அதுதான் மொழி. மொழியை ஆணாதிக்கக் கருத்துக்களால் ஒருமுறை கறைப்படுத்திவிட்டால் போதும், பின் அது தானாகவே பல மாயங்களை நிகழ்த்தத் தொடங்குகிறது. பெண்ணினத்தின் உடலையும் மனத்தையும் ஆணாதிக்க மொழிதான் வசக்கி வழிப்படுத்தியுள்ளது. மொழியின் மீது ஆண் மையக் கருத்துக்கள் வலிவடைந்தமையால் அது ஓர் அதிகார அரசியலாக நிலைபெற்றது.
தாய்வழிச் சமூகத்தின் பீடம் தகரும்போது பெண்களுக்கு மேலும் பலப்பல நிலைகள் உண்டாகியிருக்கின்றன. அவையெல்லாம் ஆணினத்தின் அதிகாரத்திற்கான துணைக்கருவிகள்போல் ஆகிவிட்டன. தாயானவள் பின்னர் கற்புடை மகளாக ஒரு பகுதிக்குக் கொண்டுவரப்படுகிறாள். அடுத்த பகுதியில் பரத்தையாக, காமக் கிழத்தியாக, சேரிப் பரத்தையாக எனப் பல்வேறு நிலைகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறாள். இதன் நிலை எவ்வாறு போகிறது? தலைவியின் காதலுக்குத் துணையாக இருக்கும் தோழி, செவிலித் தாய்களின் குடும்ப உறவுகள் எப்படியிருந்தன என்கிற தகவலைச் சங்க இலக்கியத்தில் பெற முடியாமல் போகிறது. காமக் கிழத்தியர் தங்களுக்கென வாரிசுகள் அற்றவர்களாக, தலைவனின் நலனுக்கென வாழ்பவர்களாக ஆகிறார்கள். பரத்தையரின் சிந்தனைகள் சமூக மதிப்புகளைப் பெறுவதில்லை. ஒரு வலிமையான கோளைப் போல ஆண்மகன் இருக்க, துணைக்கோள்கள்போலப் பெண்கள் அவனைச் சுற்றிவருகிறார்கள். தலைவனும் தலைவியும் மணம்புரிந்த பின்னரும் தலைவனால் பரத்தையரை நாடிச் செல்ல முடியும்; குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதை அறிந்துகொண்டாலும் தலைவியின் பாடு தலைவனை நயந்தே இருப்பதாகிறது. பெண்ணுக்கான பண்புநலன்களாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை திணிக்கப்பட்டன; இனிமையும் மென்மையும் கொண்டவளாக இருந்தாக வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கௌரவிக்க வேண்டியதும் அவளுடைய தலையாயப் பொறுப்பாக ஆக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான பொறுப்புகளுக்காகத் தலைவியானவள் தலைவனுடன் ஊடல் கொள்வதற்கான உரிமையும் இல்லாமல் ஆகிறாள். ஆண்களின் வீரமும் வலிமையும் பெண்ணுடலை எளிமையாகக் கையாண்டுள்ளமையைக் காலம் நெடுகப் பார்க்கிறோம்.
ஓர் ஆணின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவன் பெண்ணுடலைப் பயன்படுத்தும் வகையில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அது ஆண்மையைக் குறைப்பதைப் போலக் காட்டினாலும் அப்படித் தோன்றுவதில்லை. அவனுக்கான தீக்குண்டம் ஒன்று உருவாகிறது. அடிப்படையில் ஆண் எக்காலத்திலும் ஒரு பெண் முன் தோற்றுவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக அது மாறியிருக்கிறது. ஒருவன் வெற்றிவீரனாகத் திகழ்ந்தால் அவன் தன் மனைவியைப் புணர முடியும்; அவன் தோல்வியுற்றவனாக மாறினால் பரத்தையைத்தான் கூட வேண்டும். தலைவனுடன் இருக்கும்போது மனைவி ஓர் உடலாக மட்டும் இருக்கிறாள்; அவன் பிரிந்துசென்றுவிட்டாலோ அவள் தன்னை ஒரு மனமாகக் கருதிக்கொள்ள வேண்டும். ஆணோடு இருந்தால்தான் அவளுடைய பாலியல் வேட்கை தணிவுறும்; அவன் இல்லாதபோது ஏக்க மனத்தோடு வாழ வேண்டும். அவனோடு புணர்ந்த காலத்தை எண்ணி இன்புற வேண்டும். வேட்டைச் சமூகமாக இருந்தபோது, அதாவது தாய்வழிச் சமூகமாக இருந்தபோது அந்நிலை இருந்ததில்லை. அப்போது பாலுறவில் தனியுரிமை இல்லாதிருந்தது. இதன் பொருள் பெண்ணின் விருப்பம்சார்ந்தே கூடலும் ஊடலும்! ஒரு குழந்தையின் தாய் இன்னாரென்று அடையாளம் காண முடியும்போது, குழந்தையின் தந்தை யாரென்று அந்தத் தாய் சொன்னால்தான் பொதுவெளிக்குத் தெரியவரும்.
தன் நிலையிலிருந்து கீழிறக்கப்பட்ட பெண், பின் ஒருபோதும் தான் இழந்த அந்தத் தலைமைத்துவ வாழ்வைச் சிந்தித்தாளில்லை. அவள் தன் பழைய நாளை நினைத்துப்பார்க்கவும் முடியாதவளானாள். நாளாக ஆக மொழி வீரியத்தோடு பெண்ணினத்தைக் கட்டிப்போட ஆரம்பித்துவிட்டது. அது தமிழ்மொழியே ஆனாலும் ஆணாதிக்கத்தின் பட்டறையில் உருவாக்கப்பட்ட மொழி.
இதைவிடவும் கொடுமையானது தமிழ்ச் சமூகத்தில் உடன்கட்டை ஏறும் நிகழ்வு பொதுமைப்படுத்தப்பட்டது தான். சமூக மேம்பாட்டில் இருந்த ஓர் அரசிகூட உடன்கட்டை ஏறுவதைப் பெருமைப்படுத்திப் பாடுகிறார். தான் உடன்கட்டை ஏற முனையும்போது அதனைத் தடுக்கிற சான்றோர்களை நோக்கிக் கேள்விக் கணைகளை வீசுகிறாள். கணவனோடு உடன்கட்டை ஏறுகிறவள் நேரடியாகச் சூரிய மண்டலத்திற்குப் போய்விடுகிறாள் என்கிற கருத்தை மிதக்கவிட்டிருக்கிறார்கள். நேரடி சொர்க்கமாக அது உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவள் அதற்குத் தயாராகாத நிலையில், கடுமையான கைம்மை நோன்புகளை நோற்கவைத்து வதைத்துள்ளனர், சமூகப் புறக்கணிப்பைச் செய்துள்ளனர். இந்த வேதனைகளை அனுபவிப்பதைவிட உடன்கட்டை ஏறுதலே மேல் என்கிற மனநிலைக்குப் பெண் தள்ளப்பட்டிருக்கிறாள். ஒல்லையூரை ஆண்ட பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு என்னவெல்லாம் சொல்கிறார், “வள் இதழ் அவிழ்ந்த தாமரை / நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே (புறநானூறு 246)” என்கிறாள். “ஈமத் தீயானது இதழ் மலர்ந்த தாமரையின் பொய்கைநீர் போல இன்பம் அளிப்பதாகும்,” என்கிறார். ஏதோ அதை ஏற்கெனவே ஆண்டு அனுபவித்தவர்போல அவர் சொல்வதைப் பார்த்தால் ஆரியம் கொண்டுவந்த வழக்கு பெண்களைக் கருத்திரீதியாகச் சிறைப்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். இதில் பெரும் வேடிக்கை தமிழ் மரபுப்படி இந்த உடன்கட்டை ஏறுதல் தேவையில்லையென்ற அவைச் சான்றோர்களை நோக்கி ‘பொல்லாத எண்ணத்தையுடைய சான்றோர் பெருமக்களே’ எனப் பழிக்கவும் பெருங்கோப்பெண்டு தயங்கவில்லை. வேதநெறிக் கருத்துக்களையெல்லாம் அன்றாடத்தின் கடமையாகவே ஆக்கிவிட்டார்கள்போலத் தெரிகிறது. பின்னரும் தமிழ்ச் சமூகம் மீளவில்லை.
பெண்ணுக்குக் கற்புநிலையை வரிந்துகட்டிய பின் அவள் செய்வதற்கு ஏதுமற்றவளானாள். குழந்தையைப் பெற்றுத் தருவதுதான் பெண்ணின் பணி, அவள் தன் பாலுணர்வைப் பின்தள்ளிவிட வேண்டும். தாய்மை நிலையே பெண்ணின் சிறந்த நிலை. தலைவனிடம் தன் காதலை வெளிப்படுத்தக் கூடாதென்ற கட்டுப்பாடு மறைமுகமாக அவளை ஆதிக்கம் செய்தது. தொல்காப்பியம் என்ன சொல்கிறதென்று கேட்போம்: தன்னுறு / வேட்கை /கிழவன்முன் / கிளத்தல் / எண்ணும் காலை/ கிழத்திக்கு / இல்லை. (தொல்.1062).
ஆங்காங்கே விதிவிலக்குகளைச் சமைக்காமல் காலம் நகர்வதில்லை. அதன்வழி புரட்சிக் குரல்கள் வெடித்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. “காமம் பெரிதே களைஞரோ இலரே” என்று வெடித்துப் பாடுகிறார் வெள்ளிவீதியார். ஆனால் அந்த மரபு நீளவில்லை அல்லது ஒடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது தொகுக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம். ஏனெனில் சமூக நகர்வுகள் ஆணின் கைகாட்டலில்தான் நகர்கின்றன. தொடக்கம் அதன் தொடக்க நிலையிலேயே நின்றுவிட்டது. இதுபோன்று வெடிப்புறப் பேசுதலை அப்புறம் காண முடியவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நகர்ந்துவந்தபின்னர்தான் பெண்ணியம் ஒரு கருத்தியலாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.
சங்ககாலம் என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டி ருந்தாலும் இந்த எழுத்துமுறை நவீன காலத்தையும் பரிசீலிக்கத் தூண்டுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேர்த்தியான அச்சமைப்புடன் கூடிய ஒரு நூலை வாசிக்க முடிந்த அனுபவம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
சங்க இலக்கியத்தின், பண்டைத் தமிழகத்தின் நுண்மனத்தை நுண்ணோக்கியால் ஆய்வுசெய்திருக்கிற நூல் இது. கருத்தியலாக நம்மைப் பீடித்த பழைமைகளை இனியேனும் களைந்திட இந்த நூல் துணையாக இருக்க வேண்டும்.
மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com
