பூமணியை வாசித்தல்
பதிவு
பூமணியை வாசித்தல்
கிருஷ்ண பிரபு
முன்னோடி எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதமாக அவர்களது புனைவுகளைப் பருந்துப் பார்வையில் ஆய்வுக் கட்டுரைகளாகத் தீவிர வாசகர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கும் கருத்தரங்கக் கூட்டத்தைக் கவிஞர் பெருந்தேவி தனது நண்பர்களுடன் ஜூன் 7, 2014ஆம் ஆண்டு முன்னெடுத்தார். சென்னையில் ஏற்பாடாகியிருந்த அந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டிக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு ‘பூமணியை வாசித்தல்’ நிகழ்வு ஜுன் 8 சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்தேவியின் அறிமுக உரையுடன் தொடங்கிய நிகழ்வு மூன்று அமர்வுகளில் முழுநாளும் முன்னெடுக்கப்பட்டது. கருத்தரங்கின் தொடக்கமாக ‘அசோகமித்திரனை வாசித்தல்’ நூல் பிரதியை அரவிந்தன் வெளியிட ஸ்ரீகுமார் பெற்றுக்கொண்டார். வெளியிடப்பட்ட நூல் குறித்தும், அசோகமித்திரனின் புனைவுகள் சார்ந்த புதிய திறப்புகளைக் கட்டுரைகள் முன்வைப்பதைக் குறித்தும் அரவிந்தன் சுருக்கமாகப் பேசினார்.
முதல் அமர்வில் ‘மறுகூறலும் கண்டடைவும் - பூமணியின் ‘கொம்மை’யில் அபலைப் பெண்கள்’ என்ற தலைப்பில் மகாபாரதக் கதையின் கீற்றலைத் தனது தனித்துவமான மொழிநடையிலும் கற்பனைத் திறனாலும் ‘கொம்மை’ நாவல் மீள்வார்ப்பு செய்துள்ளது குறித்து மொழிபெயர்ப்பாளர் கல்யாண்ராமன் கட்டுரை வாசித்தார். நம் மண்ணின் யதார்த்த வாழ்வை இதுவரையிலும் பதிவுசெய்த பூமணி பெருங்காப்பியங்களுள் ஒன்றான மகாபாரதக் கதையில் பயணித்தது வியப்பை ஏற்படுத்துவதாகவும், அம்முயற்சியில் அவர் தொட்ட நுட்பங்கள் எவை என்பதாகவும் அவர் பேச்சின் சாரம் இருந்தது. பூமணியின் படைப்புகளை இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருபது குறிப்பிடத்தக்கது.
‘பூமணியின் சிறுகதைகளும் மூவகை முரண்களும்’ என்ற தலைப்பில் பெருமாள்முருகன் கட்டுரை சமர்ப்பித்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பூமணி எழுதிய ஐம்பத்து மூன்று சிறுகதைகளும் முழுத்தொகுப்பாக வெளிவந்துள்ளன. அதன் பதிப்பு முறை, வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தேவையான இன்றியமையாக் குறிப்புகளில்லாமல் தொகுக்கப்பட்டிருப்பதை ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டினார்; அந்தத் தன்மையால் பூமணியின் எழுத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ள முடியாத போதாமையை எடுத்துக்காட்டித் தனது கட்டுரை வாசிப்பைத் தொடர்ந்தார். சிறுகதைகளின் ஒற்றைச் சொல் தலைப்பு, தகவல் தொடக்கம், உரையாடல் தொடக்கம், இடையீடு, குறியீடு, முடிவு எனப் பூமணியின் பாணியையும் கதைகளில் விரியும் இருபதாம் நூற்றாண்டின் பின்பாதி வாழ்வையும் உதாரணங்களுடன் விரிவாகக் குறிப்பிட்டார். சாதிய முரண் முக்கியமல்ல, வர்க்க முரணே முக்கியம் என்ற காலத்தில் தோன்றிய பூமணியின் படைப்புகளின் உரிப்பொருளையும் கட்டமைப்பையும் விளங்கிக்கொள்ள தமிழ் இலக்கண மரபின் ‘முரண்’ என்னும் வகைமையைக் குறிப்பிட்டுப் பேசியது புதிய வெளிச்சம் பாய்ச்சுவதாக இருந்தது. அமர்வுக்கு ராஜன்குறை தலைமை தாங்கினார்.
இரண்டாம் அமர்வில் ‘பூமணியின் எழுத்தில் - அலைதலின் அழகியல்’ என்ற தலைப்பில் அமைந்திருந்தது பெருந்தேவியின் கட்டுரை வாசித்தார். வெளியின் ஊடாக உயிரிகளின் இயக்கம் சார்ந்ததாக இருக்கும் அலைதலைத் திட்டமிடாததும் இலக்கில்லாததும் என்னும் பரந்துபட்ட விசாலப் பார்வையில் எடுத்துக்கொண்டும், சமூக அர்த்தங்கள், கலாச்சாரச் செயல்பாடுகளின் இயங்கு அழகியலைக் கொண்டும் பூமணியின் கதை மாந்தர்களையும் யதார்த்த வாழ்வையும் இவர் முன்வைத்தார். இடம், வெளி என்ற வார்த்தைகளின் ஆழத்தைத் தொட்டுப் பூமணியின் புனைவுத்தளத்தில் விரியும் நிலப்பரப்பு இடத்தைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கும் நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது பெருந்தேவியின் பார்வை.
‘பூமணியின் நாவல்களில் வெளி’ என்ற தலைப்பில் காசி மாரியப்பன் கட்டுரை வாசித்தார். வைதீகம் சார்ந்த வெளி, ஐந்திணை மரபு வெளி, நவீன வெளி ஆகிய கோட்பாடுகளில் ‘வெக்கை’, ‘நைவேத்தியம்’, ‘பிறகு’ நாவல்களை எடுத்துக்கொண்டு அதில் நிகழும் வெளிமாற்றத்தையும் பதற்றத்தையும் குறிப்பிட்டுத் தனது ஆய்வுப் பார்வையை முன்வைத்தார். தனி மனித இருப்பும், சமூக இருப்பும் பல்வேறு அடுக்குகளில் பூமணியின் யதார்த்தப் படைப்பு வெளியில் செலுத்தும் தாக்கத்தை அலசிய இந்த அமர்வுக்கு ஸ்டாலின் ராஜாங்கம் தலைமை வகித்தார்.
மதிய உணவிற்குப் பிறகு மூன்றாம் அமர்வு தொடங்கியது. பெருமாள்முருகன் தலைமையேற்ற இந்த அமர்வில் ‘பூமணியின் எழுத்தரசியல் - பின்காலனிய வாசிப்பு’ என்ற தலைப்பில் ஜே.எஸ். கார்த்திகேயனும், ‘அஞ்ஞாடி - ஜாதி எனும் அன்றாடத்தின் கசடும் வரலாற்றின் ஆயாசமும்’ என்ற தலைப்பில் ராஜன்குறையும், ‘பூமணி புனைவுகள் - உள்ளூர் அதிகார அமைப்புகளின் வரைபடமும் மனிதர்களின் ஊடாட்டமும்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கமும் கட்டுரை வாசித்தனர்.
இந்தியச் சமூகம் அடுக்கடுக்கான காலனியாதிக்கச் சிந்தனை முறைகளால் பீடிக்கப்பட்டு வந்துள்ளது. சுயம் இழந்த அடிமை வாழ்க்கையே இயல்பான வாழ்க்கை என்பதான உளவியல் கட்டமைப்புக்குப் பழக்கப்பட்டு வந்துள்ளது. அது மொழி, சமயம், தொழில், கலை, இலக்கியம் என அனைத்தையும் வியாபித்துள்ளது. இந்தக் காலனிய நீக்கச் செயல்பாட்டின் அசைவியக்கம் ஏற்படுத்தும் கருத்தியலின் வழி பூமணியின் புனைவுலகை முன்வைப்பதாக இருந்தது ஜே.எஸ். கார்த்திகேயனின் கட்டுரை.
வரலாறு என்ற கற்பிதத்தையும், விதி அல்லது கதியையும் துல்லியமாகக் கேள்விக்குட்படுத்துபவை பூமணியின் புனைவாக்க உரையாடல்கள். அவரது எழுத்துக்கோ, குறிப்பாக ‘அஞ்ஞாடி’ போன்ற ஒரு பெரிய நாவலுக்கோ சிறிய கட்டுரையில் நியாயம் செய்துவிட முடியாது. மேலும், நாவல் குறித்த தனது அணுகுமுறையானது அன்றாடம், வரலாறு ஆகிய இரண்டு இழைகளில் வாசிப்பதுதான் என்ற தன்னிலை விளக்கத்தோடு தனது கட்டுரையை முன்வைத்தார் ராஜன்குறை. அன்றாடம், வழமைகளால் நிரப்பப்படுவது. அது எத்தனையோ வித்தியாசங்களைப் புதுமைகளைப் பூக்கச் செய்தாலும் அதனடியில் வழமைகளின் சாதாரணத்துவமும் நியதிகளின் விதிமுறையும் கசடாகத் தங்கி இருப்பை வடிவமைக்கின்றன. இந்தியச் சமூகத்தில் அந்த அன்றாடக் கசடு ஜாதியாக இருக்கிறது. பூமணி தனது புனைவுகளின் பெரும்பரப்பில் இந்தக் கூறுகளைக் கூர்மையாகப் பதியும் போக்கை ராஜன்குறையின் கட்டுரை நுட்பமாக விளக்கியது.
அடுத்து, ஸ்டாலின் ராஜாங்கம் தனது கட்டுரையை வாசித்தார். வெளிக்காரணிகளும் உள்காரணிகளும் இணைந்து விலகும் புள்ளி மிக முக்கியமானது. அதிலும் உள்ளூர் சார்ந்த அடையாளங்கள் அன்றாட வாழ்வின் சமூக இயக்கத்திற்குக் காரணிகளாக அமைகின்றன. இந்தக் களக் காரணிகளை நாடிப் பார்ப்பதன் மூலமே நாம் அன்றாடத்தின் அடையாளம் சார்ந்த விமர்சனங்களை முன்னெடுக்க முடியும். மரபார்ந்த சமூகத்தில் புதிய விஷயங்கள் உட்புகுந்து ஏற்படுத்தும் மாற்றங்கள் சார்ந்து பூமணியின் ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய நாவல்களை எடுத்துக்கொண்டு கருத்துகளை முன்வைத்தார்.
ஒவ்வொரு அமர்வின் இறுதியிலும் கட்டுரை சார்ந்து வாசகர்கள் கேள்வியெழுப்பினர். கட்டுரையாளர்கள் அதற்கான விளக்கத்தையளித்தனர்.
முழுக் கருத்தரங்க அமர்விலும் எழுத்தாளர் பூமணி தனது இணையருடன் பங்கேற்றதும், தமது படைப்புகளின் மீதான வாசித்தல் நிகழ்வு குறித்த நன்றியைப் பதிவு செய்ததும் வாசகர்களுக்கு மனநிறைவைத் தந்தன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் இந்நிகழ்வுக்காகவே வந்திருந்தனர்.
மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com