சமூகநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல்
திரை
சமூகநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல்
ரதன்
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு நெய்தல் கிராமம். மிகப்பெரிய அழிவுகளுக்கும், பல உயிரிழப்புக்களுக்கும் பின்னர் சொர்ணவேல் தனது ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அங்கு செல்கிறார். விவரணத் திரைப்பட இயக்குநராக ஒரு விவரணத் திரைப்படத்தை இயக்கும் நோக்கம் அவருக்கிருந்தது. அக்கிராமத்தின் சுற்றிலுமுள்ள பல கிராமங்களின் மக்களிடமிருந்து பல கதைகள் இவருக்குக் கூறப்படுகின்றன. அக்கதைகள் அவரை ஒரு முழுநீளத் திரைப்படத்தை இயக்கத் தூண்டின. மீண்டும் அக்கிராமத்தினுள் சென்று ஒரு முழுநீளத் திரைப்படத்தைக் ‘கட்டுமரம்’ ஆகப் பதிவாக்கியுள்ளார் சொர்ணவேல்.
இவரை ஊடக - திரைப்படவியல் பேராசிரியராக, விவரணத் திரைப்பட இயக்குநராக, விமர்சகராக, திரைப்படவியல் ஆய்வாளராகப் பலருக்குத் தெரியும். அந்தப் பிம்பங்களிலிருந்து புதிய பிம்பமொன்றை சொர்ணவேல் உருவாக்கியிருக்கிறார்.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். 2004 மார்கழியில் ஏற்பட்ட சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மீனவக் கிராமம் அது. அங்கு பலதரப்பட்ட மனிதர்கள் வாழ்கின்றனர். அக்கிராமத்தில் நடைபெறும் கதை ‘கட்டுமரம்’.
ஒரு தாய்மாமனுக்கான கடமைகள் என்ன? சுனாமி அலையில் தாயும் தந்தையும் அடித்துச் செல்லப்பட, சிறுவனும் வயதுவந்த மகள் ஆனந்தியும் அநாதரவாகின்றனர். அவர்களுக்கு ஒரு தாய்மாமனாக என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் தாய்மாமன் செய்கிறார். உணவு, உடை, உறையுள் இவற்றுடன் வாழ்வு முடிந்துவிடாது. பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆனந்திக்குத் திருமணம் நடைபெற வேண்டும். அதற்குத் தாய்மாமன் ஏற்பாடுகள் செய்கிறான். ஆனால் ஆனந்தி மறுத்துவிடுகிறார்.
அக்கிராமத்துப் பாடசாலைக்குப் புகைப்படவியல் கற்பிக்க கவிதா வருகிறார். கவிதாவும் ஆனந்தியும் நெருக்கமான நண்பர்களாகின்றனர். தனக்கு ஒரு பெண் துணைவி முன்பிருந்ததாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் கவிதா கூறுகிறார்.
தாய்மாமன் சிங்காரம், ஆனந்திக்குத் திருமணம் செய்துவைத்தாரா, ஆனந்திக்கும் கவிதாவிற்குமான உறவுக்கு என்ன நடந்தது? இதுவே மிகுதிப்படம்.
இயக்குநர் படத்தை மிகவும் அவதானத்துடன் சிற்பம்போல் செதுக்கியுள்ளார். சுனாமிக்குப் பின்னரான கிராமம், அக்கிராமத்தின் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைத் தீர்மானிக்கும் ஊர் மக்கள், இவர்களுடன் அங்கு வாழும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம். இம்மூன்று கதைக் களங்களையும் மிகவும் சிரத்தையுடன் இணைத்துள்ளார். கிராம மக்களுக்கான அறிவுசார் தெளிவின்மையைக் கவலையுடன் பதிவாக்கியுள்ளார். ‘திருமணம் என்ற நிறுவனம் உடைக்கப்பட வேண்டும், கட்டுடைக்கப்பட வேண்டும், அதன் பின்னால் இயங்கும் சாதி, மதம், பணம் போன்ற கூறுகளின் பின்னால் இயங்கும் அரசியல், அவை ஏற்படுத்திவரும் ஆபத்துகள் பயங்கரமானவை’ இதனை இயல்பாகக் காட்சிப்படுத்தலினூடாகவும், தேர்ந்தெடுத்த சமூக உறுப்பினர்களினூடாகவும் வெளிப்படுத்தியுள்ளார். சமூகம் முன்னிறுத்தும் ஒழுக்கநெறிகளை, படத்தில் வரும் பாத்திரங்களினூடாக விசாரணைக்குட்படுத்துகிறார். ஆணாதிக்கச் சமூகத்தால் சுரண்டப்படும் பெண்களைக் காட்சிப்படுத்துகிறார். சமூகச் சிந்தனைகள் வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உருவாக்கப்பட்டவை. இவை உடைய வேண்டும் எனத் துணிச்சலுடன் கூறியுள்ளார். பார்வையாளர்களுக்கு அந்தத் துணிச்சலையையும் நம்பிக்கையையும் உரத்த தொனியில் வெளிப்படுத்துகிறார். நுகர்வோரும் அம்மனோநிலைக்குச் செலுத்தப்படுகிறார்கள்.
தனிமனித உணர்வுகளுக்குச் சமூகம் மதிப்பளிக்கிறதா, இல்லையேல் சமூகம் தனிமனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறதா என்ற கேள்வியும் இப்படத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
காதல் எவ்வாறான மனோநிலையில் தோன்றுகிறது? யாருடன் காதல் ஏற்படும்? எல்லைகள் உண்டா? எல்லைகளை, கட்டுப்பாடுகளைச் சமூகம் தோற்றுவிக்க முடியுமா? அமைதியாக அக்கிராமத்தில் வலம்வந்த ஆனந்திக்குச் சமூகத்தை எதிர்க்கும் துணிச்சல் எவ்வாறு தோன்றியது? கடமையுணர்வுடன் கூடிய, சமூகக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வாழும் சிங்காரத்துக்கு, அக்கிராம வரலாற்றிலேயே நடைபெறாத விடயத்தைத் துணிச்சலாகச் செய்ய எவ்வாறு முடிந்தது? சமூகம் பொருந்தாக் காதலைக் கவனிக்காமல் செல்கிறது. ஆனால் மதம், சாதி என்பனவற்றைப் பெரும் அழிவின் பின்னரும் விட்டுக்கொடுக்க மறுக்கிறது. சமூக முரண்கள் சிறப்பாகப் பதிவாக்கப்பட்டுள்ளன.
சுனாமியை ஒரு கொடுங்கனவென நினைத்து நகர்ந்து செல்லமுடியாது. சுனாமி அழித்த வீட்டின் உதிரிகளில், அவ்வப்போது நின்று, நினைவுகளை மீட்டுச் செல்லும் சிறுவனின் முகம் வெளிப்படுத்தும் வலி அதிர்வை ஏற்படுத்துகிறது. சுனாமி ஏற்பட்டுச் சுமார் பதினைந்து வருடங்களாகிவிட்டன. கிராமங்கள்மீதான அரசின் கவனமின்மையையும், இக்கிராமங்களின் இருண்ட உலகின் பின்னாலுள்ள அரசியல் பரிமாணத்தையும் இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.
படம் முழுவதும் பார்வையாளர் அலைச் சத்தத்துடனேயே படத்தை நுகர்கிறார். அதன் ஒலி அடங்க, படம் முடிந்த பின்பும் பலமணி நேரங்களாகின. காட்சிப் படிமங்களே உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன, இது சிறப்பு. சிறப்பான காட்சிப் படிமங்கள், மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்ட காட்சிகள், ஒளிப்பதிவு, சிறப்பான தொகுப்பு, பின்னணி இசை போன்றன கட்டுமரத்தைப் பார்வையாளர்களிடம் சுனாமியுடன் கூட்டிச் செல்கிறது. ஊடகவியல் பேராசிரியராகக் கட்புலச் சித்தாந்தத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் வெற்றிகண்டுள்ளார் சொர்ணவேல். சமூக அக்கறை கொண்ட இயக்குநர் ஒருவரின் படம் இது.
படத்தில் வரும் அலங்காரம் என்ற திருநங்கை பாத்திரத்தை விரிவுபடுத்தி, அவர் சந்திக்கும் வன்முறைகளையும் காட்சிப்படுத்தியிருக்கலாம். பிரியாவிற்கும் ஆனந்திக்குமான வெளியைச் சற்று அதிகப்படுத்தியிருக்கலாம். அவர்களின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியிருக்கலாம். 73 நிமிடங்களில் இவை சில சமயங்களில் சாத்தியமற்றுப் போகலாம்.
சிங்காரமாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். அவரின் நடிப்பு இப்படத்துக்கு மேலும் வலுவூட்டுகிறது. அவரின் உடல்மொழி அபாரம். பிரீத்திஹரன் உட்பட மற்றைய நடிகர்களுக்கு இப்படம் புதிய களத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு காதல் கதையைச் சமூக நிறுவனங்களின் நிலைமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தித் திரைப்படமாக்கியுள்ளார் இயக்குநர். ஆணாதிக்கச் சமூகத்தின் சிதைவுகள் ஆரம்பமாகிவிட்டதை மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் படத்தின் இறுதியில் உறுதியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சுனாமியின் பின்னர் கிராமங்களின் நிலையைப் பார்த்து ஒரு விரக்தியுற்ற படைப்பாளியின் தார்மீகக் கோபத்தை அமைதியாக, ஒரு மறுக்கப்பட்ட காதலைக் கட்டுடைத்து வெளிப்படுத்தியுள்ளார் சொர்ணவேல்.
அண்மைக் காலங்களில் வெளியான கலையம்சங்களுடன் கூடிய சமூக, அரசியல் விமர்சனப் படம் இது.
மின்னஞ்சல்: rathan100@gmail.com