மாலைப்பொழுதிலொரு மேடை மிசையே
பதிவு
மாலைப்பொழுதிலொரு மேடை மிசையே
சீதா பாரதி
சஹானாவின் இரண்டாவது கவிதை நூல் ‘அஞ்சனக்கண்ணி’ வெளியீட்டு நிகழ்வு நாகர்கோவிலில் 21.7.2019 ஞாயிறு மாலை நடைபெற்றது.
சாருலதா அகாதெமியின் மாணவிகளின் பாடல்கள், சீதாபாரதியின் கதை சொல்லல், சத்யாபாரதியின் பரதநாட்டியம், கச்சிதமான உரைகள், இருக்கைகள் நிறைந்த அரங்கு எனச் செறிவான இலக்கிய அமர்வாக நிகழ்வு அமைந்திருந்தது.
ஹாமீம் முஸ்தபா தலைமையுரையில், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வீரியமான தொடர்ச்சி சஹானா’ எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
முதல் பிரதியைக் கவிஞர். தி. பரமேஸ்வரி வெளியிட கமலா ராமசாமி பெற்றுக்கொண்டார். கீரனூர் ஜாகீர் ராஜா வாழ்த்துரையில், ‘இயற்கையை முயற்சிப்பதும் ஆராய்வதும் கவிஞர்களின் இயல்பு. ஆனால் சஹானா இயற்கையோடு இயைந்து தன் கவிதைகளை வெளிப்படுத்துகிறார். பெண் கவிஞர்களில் சஹானாவின் கவிதைகள் தனித்துவமிக்கவை’ என்றார்.
போகன் சங்கர் தன் உரையில், இயற்கை சார்ந்த பெண் எழுத்தின் தொடக்கமாக சஹானா கவிதைகளைக் குறிப்பிட்டுத் தமிழின் மிக முக்கியமான கவிதை தொகுப்புகளில் ஒன்று ‘அஞ்சனக்கண்ணி’ எனக் கருத்துரைத்தார்.
கீழப்பாவூர் ஆ. சண்முகையா, இயல்பான எளிய வரிகளில் வாழ்வு மீதான தத்துவ விசாரங்களாக சஹானா கவிதைகள் விரிவு கொள்வதை விவரித்தார்.
அனைவருமே ஏராளமான கவிதைகளை மேற்கோள் காட்டியபோது அரங்கில் கவிச்சாரல் தூறிய வண்ணமிருந்தது.
சஹானா, ‘மாலைப்பொழுதிலொரு மேடை மிசையே’ எனும் பாரதி பாடலின் சில வரிகளைப் பாடித் தொடங்கி சங்கப் பாடல்களிலிருந்து ரூமியின் கவிதை வரை தனக்குப் பிடித்த வரிகளைக் கூறி ஏற்புரையாற்றினார்.
மருத்துவர் ஜோசப் சென் விளக்கேற்றி வைக்க தி. பரமேஸ்வரி வெளியீட்டுரையாற்ற நட. சிவகுமாரின் வரவேற்பும் ஜி.எஸ். தயாளனின் நன்றியும் இரவுணவுடன் அழகிய மாலை இனிய இரவாக நிறைவடைந்தது.
படம்: ஜவஹர்