கடிதங்கள்
ஆகஸ்ட் இதழில் ‘இந்தியச் சிற்றிதழ்கள்’ என்னும் தலைப்பில் வரலாற்றுத் தரவுகள் இப்படியும் உண்டா என வியக்கவைத்தது. ‘கனிமக் கொள்ளை: பாழ் வாரிப் பெருங்குழி’ தலையங்கத்தைப் படிக்கப் படிக்க மனசு முழுவதும் என் ஊரைச் சுற்றிக் கழுகாய் வட்டமிட்டது. இப்படியும் பணத்தாசை பிடித்துக் கொள்ளை, கொலையென அலையும் கூட்டம் இருக்கிறது என்பதை அறிந்தும் மக்கள் இன்னும் அறியாமையில் உள்ளார்கள். வெந்தால் உண்பது, விடிந்தால் மறப்பது என்று இருப்பதால்தானே இதுபோன்று நடக்கின்றன. எங்கள் ஊரில் கீழமலை, தெற்குமலை, கொத்தேறு மலை ஆகியன உள்ளன. நெடுங்காலமாகத் தாழையூத்தில் சங்கர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கல் எடுக்கும் நிறுவனத்தை நடத்திவந்தது.
ஆனால் கொத்தேறு மலை தனிப்பாறையில் அமைந்திருப்பது. வானம் நோக்கிச் சிவனாகத் தெரிந்த மலையைச் சமூக விரோத கும்பல் தலை இல்லாத உடல்போல சிதைத்துவிட்டிருப்பதைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது. இதை அறிந்த பலரும் நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு என ஒதுங்கிப்போகின்றனர். இதழின் அஞ்சலிக் கட்டுரைகள் வாயிலாக மறைந்தவர்களின் பாதையைக் கண்டு அவர்களிடம் உறவாடியதுபோல உள்ளுணர்வு ஏற்பட்டது. நான் எழுதுவதற்கான முயற்சியைக் கற்றுத் தரும் ஆசிரியராகவே காலச்சுவடைப் பார்க்கிறேன்.
தென்கலம் அகில்சொர்ணம்
திருநெல்வேலி மாவட்டம்
•••
‘கனிமக் கொள்ளை’ தலையங்கம். கனிமக் கொள்ளையர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளது. ‘பணம்’ எனும் பேய் பிடித்தவர்களை அம்பலப் படுத்தியுள்ளது. நமது ஊர், நமது மக்கள் என்ற சிந்தனை அற்றவர்களின் அயோக்கியத்தனம்! மக்கள் வெகுண்டெழும் காலம் வெகுதொலைவில் இல்லை. அரசே நேரடியாக நடத்த வேண்டும் என்பதே சரியாகும்.
30 ஆண்டுகள் 300 இதழ்களைக் கடந்து வாசகர்கள் சார்பாக நாமக்கல் தமிழ்ச் சங்கத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். “மாற்றுக் கருத்துக்களை / சிந்தனைகளை எழுதுவதற்காக ஒரு பத்திரிகையாளர்” – தி கார்டியன் இதழில் என்ற தகவல் பத்திரிகை அறத்தை அவர்கள் கடைப்பிடிப்பது தெளிவாக்குகிறது.
இந்தியச் சிற்றிதழ்கள் அருமை. ஆறு மொழிகளில் வந்த இதழ்களின் தொகுப்பு. பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம், பொக்கிஷம். தற்காலத்தில் வெளியாகும் இதழ்களின் தொகுப்பினையும் பதிவுசெய்து ஆவணப்படுத்தலாம். அது காலச்சுவடால் மட்டுமே முடியும். தமிழின் புதிய சலனம் ஹபீபி, திரைவிமர்சனம் மாறுபட்ட கோணத்தில் திரைவரலாற்றையும் இணைத்துள்ளது மிகச் சிறப்பு. நான்கு ஆளுமைகளுக்கான அஞ்சலிப் பதிவுகள் அவர்கள் பெருமைகளை அறியத் தந்தது.
சீனி. மணி,
திருவாரூர்
•••
‘கனிமக் கொள்ளை: பாழ் வாரிப் பெருங்குழி’ கனிமவள முறைகேடுகள் இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் எந்த அளவிற்குக் கடந்த காலங்களில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பதைப் படிக்கப் படிக்கத் தலைசுற்றல் வந்துவிடும்போல் இருக்கிறது. சுற்றுச்சூழல் சீரழிந்து இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகக் கனிமங்களை வெட்டி எடுப்பது சட்டவிரோதமானது எனக் கனிம கொள்ளையர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
ஆற்று மணல், கல்குவாரிகள், நிலத்தடி நீர் போன்றவை கொள்ளை லாபம் பார்க்கும் தொழிலாக மாறியிருக்கின்றன. ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக எடுத்ததால் ஆற்றின் நீர்ப்பிடிப்பு வற்றிப்போய்விட்டது. மனிதனின் பேராசைக்கு எல்லையே இல்லை என்பதற்கு ஏற்ப அரசு அனுமதித்த அளவைவிடப் பன்மடங்கு கூடுதலாகக் கனிமங்களை வெட்டி எடுப்பது மிகவும் கொடூரமானது.
அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனி நபர்களுக்குச் செல்வதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலதிபர்கள் ஆட்சியாளர்களிடம் நெருங்கிய தொடர்பிலிருந்து தங்களுக்குச் சாதகமாக அனைத்துச் செயல்பாடுகளையும் மாற்றிக்கொள்கிறார்கள்.
நேர்மையான அதிகாரிகள் முறைகேடுகளைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்ய முயற்சிசெய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் அவர்கள்மீது குண்டர்களை வைத்துத் தாக்குவது, அவர்களின் உயிருக்கு ஊறு விளைவிப்பது போன்ற செயல்கள் கடந்த காலங்களில் நடந்தேறியிருக்கிறது என்பதைத் தலையங்கம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி இருக்கிறது. சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, வானம், தீ என அனைத்தையும் மாசடையாமல் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.
கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் விவசாய நிலங்கள் பலவற்றையும் விவசாயம் செய்ய முடியாத அளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன. விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் கல்குவாரி அதிபர்கள் முறையாக வழங்குவதில்லை. மணலுக்கு மாற்றாக எம்சாண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மலைகளில் உள்ள பாறைகளைக் குடைந்து எம்சாண்ட் தயாரிக்கப்படுகிறது. இதனால் கல்குவாரிகள் அதிகரித்துவிட்டன. இதற்கான கற்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டி எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. சட்ட விதிமுறைக்கு உட்பட்டுக் கல்குவாரிகள் செயல்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இயற்கைக்குப் பாதகமாக எந்த ஒரு செயலும் நடைபெறாமல் சுற்றுச்சூழலைக் காப்பதில் அனைவருக்கும் பெரும் பங்கு உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
•••
சென்ற இதழில் வெளியான ‘தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு’ எனும் மதிப்புரை, ‘ஜர்னல் ஆஃப் கொலோனியல் ஸ்டடீஸ்’ இதழில் தியாகராஜன் ஆங்கிலத்தில் எழுதி, பின்பு அவராலேயே தமிழில் விரிவுபடுத்தப்பட்ட கட்டுரையாகும். ஆங்கில நூல் விவரம்: ‘Colonial Authority and Tamil Scholarship: A Study of the First English Translations’ Written by N. Govindarajan, edited and translated by C.T. Indra and Prema Jagannathan. Published by Routledge India, 2023. ஆங்கில நூலின் விவரங்களுக்குப் பதிலாக, தமிழ் மூல நூலின் அட்டைப்படமும் பதிப்பு விவரங்களும் தவறுதலாக இடம்பெற்றுவிட்டன. வருந்துகிறோம்.
— பொறுப்பாசிரியர்
