நூலும் தடையும்
கண்ணோட்டம்
நூலும் தடையும்
மலேசிய உள்துறை அமைச்சகம் ‘Gay is OK! A Christian Perspective’, ம. நவீனின் ‘பேய்ச்சி’ ஆகிய நூல்களைத் தடைசெய்து உத்தரவிட்டிருக்கிறது. அவற்றை அச்சிடவோ இறக்குமதி செய்யவோ மீண்டும் பதிப்பிக்கவோ வெளியிடவோ விநியோகிக்கவோ கைவசம் வைத்திருக்கவோ முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உள்ளடக்கம் பொது ஒழுங்குக்கும் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த, இந்து மதபோதனைகளுக்கு எதிரானதும் முரணானதுமான வாழ்க்கைமுறையைப் பரிந்துரைப்பதாகவும் மலேசிய சமுதாயத்தின் கலாச்சார விழுமிய விதிமுறைகளுக்கு எதிராக ஆபாசம் – ஒழுக்கக் கேடு போன்றவற்றை முன்மொழிவதாகவும் கூறித் தடைசெய்திருக்கிறது.
ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் சாதிய, மதத் துவேசத்தை வளர்க்கவோ நீட்டிக்கவோ வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படவில்லை. சமூகத்தின் குரூர நிலையைக் காட்சிப்படுத்தவும் விமர்சிக்கவும் படைப்பாளர்கள் தமது புனைவுகளை உருவாக்குகிறார்கள். அவர்களின் நோக்கம் சமூக உறவுநிலைகளைப் புரிந்துகொள்வதும் திரட்சியான சமூக வாழ்வியல் கண்ணோட்டங்களை உருவாக்குவதும் ஆகும். அதைக் குறுக்கிப் பார்த்துத் தடைசெய்வது கருத்துவெளிப்பாட்டுக்கும் அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான நடைமுறை.
‘பேய்ச்சி’யில் நவீன் ஒரு வரலாற்றுக் காலத்தை எழுதுகிறார். அதில் எந்தச் சார்பும் மேற்கொள்ளாமல் புனைவாளராகப் பதிவு செய்கிறார் எனில் ஒரு சமூகத்தின் வரலாறு புனைவின் வழியாகப் பதிவு செய்யப்படுகிறது என்ற அளவில் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக நிகழ்ந்திருப்பது தடை. தடைகள் சமூகத்தின் விரிந்த மனநிலையைக் குறுக்கிச் சீரழிவுகளுக்கே இட்டுச் செல்லும். இவ்வாறான கருத்துமறுப்புச் சீரழிவுகளையே ‘ஆபாசம்’ என்று கூறவேண்டியிருக்கிறது. மாறாக ஒரு வாழ்வு எழுதப்படுவதனாலேயும் பதிவு செய்யப்படுவதனாலேயும் ஆபாசம் ஆகிவிடாது.
ஆபாசம், கெட்டவார்த்தைகள் போன்ற சொல்லாடல்கள் எல்லாத் தடைகளின் போதும் கூடவே உச்சரிக்கப்படுகின்றன. ஆபாசம் என்பதும் மனிதவாழ்வின் அங்கம்தான். அதுவும் சேர்ந்ததாகவே வாழ்வு இருக்கிறது. ஒரு படைப்பாளர் அதைச் சுயதணிக்கையுடன் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
பழைமைவாதத்திலும் பிற்போக்கான மனநிலைகளிலும் தேங்கிக்கிடந்த மலேசிய நவீன இலக்கியத்தில் புதிய அசைவை ஏற்படுத்தியவராக ம. நவீனையும் கருதலாம். நவீன இலக்கியம் குறித்த அவரது பார்வைகள், விமர்சனங்கள், விவாதங்கள், உரையாடல்களினால் சீண்டப்பட்ட பழைமைவாதிகளும் பண்பாட்டுப்போராளிகளும் தடைக்கான விதையைத் தூவியது வெட்கக்கேடானதாகும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதில் நம்பிக்கையற்ற அரசு, சட்டத்தின் உதவியுடன் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின்மீது தாக்குதல் தொடுத்துள்ளது. இது வருத்தத்திற்கு உரியது. இதற்கு எதிரான வலிய கண்டனக் குரல்களே இக்கொடுஞ்சூழலை எதிர்கொள்ள நவீனுக்குப் பலத்தைத் தரும். மலேசியாவில் அமலிலிருக்கும் இஸ்லாமிய மதச் சட்டங்களால் முடக்கப்பட்டிருக்கும் புனைவை மீட்டெடுப்பதற்கான ஜனநாயகப் பங்கை ஆற்ற வேண்டியது அனைத்து எழுத்தாளர்களின் கடமையாகும்.
மலேசியாவில் மூன்று இனங்களுக்கும் பொதுவான சட்டமாக இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றன. அதன்படி பன்மையான கலாச்சாரத்தையும் வாழ்வுமுறையையும் பிரதிபலிக்கும் இலக்கியப் புனைவுகளை இறுக்கமான தூய்மைவாதக் கண்ணோட்டங்களைக் கொண்டு மதிப்பிடுவதும் எடைபோட்டுக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அபத்தமானது. இலக்கியங்கள் மதிப்பீடுகள், வாழ்க்கை பற்றிய உலகக் கண்ணோட்டங்கள் – மனித மனங்களின் இரத்தமும் சதையுமான வாழ்வைப்பற்றி அக்கறைப்படுபவை. அதன் நோக்கம் தூய்மைப்படுத்தப்பட்டவற்றை நோக்கி நகர்வதல்ல என்பதை நவீன இலக்கியப் படைப்பாளிகள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். போலித்தனங்களைக் கிழித்துப்போடுவதும் வாழ்வு குறித்துக் கரிசனையோடு அணுகுவதும்தான் இலக்கியப் பிரதிகள் ஆற்றும் பங்காக இருக்கும்போது சட்டதிட்டங்கள் ஒரு புனைவின் வலிமையான நோக்கங்களைப் புரிந்துகொண்டு செயற்படும் என்று நம்ப இடமில்லை. மத அடிப்படைவாத அரசுகள் இன்று நேற்று அல்ல காலங்காலமாக இந்த விரோதக் குறுகல் பார்வையுடன்தான் படைப்புகளை அணுகியிருக்கின்றன. அந்த ஜனநாயக விரோத அரசுகளின் வரிசையில் மலேசிய அரசும் இணைந்திருப்பது வருத்தத்திற்கானது.
பல்முனைகளில் இருந்து நாவலின் மேல் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் தனது ‘பேய்ச்சி’ நாவலிலிருந்து ஒரு வரியைக்கூட மாற்றவோ நீக்கவோ மாட்டேன் என்று அறிவித்திருக்கும் நவீனுக்குப் பாராட்டுகள்.இந்த நூலுக்கு உலகத் தமிழ்ச் சூழல் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் ஆதரவு நிலைப்பாடுகளை மலேசிய அரசு கவனத்தில் கொண்டு நூல்மீதான தடை முடிவை மீள்பரிசோதனை செய்ய வேண்டும் என அரசிடம் முறையிடப்போவதாக நவீன் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான மத அடிப்படைச் சட்டங்களைச் சிரமேற்றிருக்கும் அரசுகள் தாம் மேற்கொண்ட தூய்மைவாதத் தீர்மானங்கள், சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோ விலக்களிப்பதோ மிக அபூர்வமான நடைமுறை. அவ்வாறு நிகழுமெனில் அது மலேசிய அரசுக்குப் பெருமை; கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பு.
- செந்தூரன் ஈஸ்வரநாதன்