திமுக அரசின் நூறு நாள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் முனைப்பு
திமுக அரசின் நூறு நாள்:
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் முனைப்பு
தனிநபர் அல்லது அமைப்பின் செயல்பாட்டை அலசி மதிப்பிடுவதற்குச் சில தருணங்கள் தேவைப்படுகின்றன. முதல் நூறு நாள், முதலாமாண்டு எனக் காலம் சார்ந்து இந்த மதிப்பீட்டைச் செய்வது சற்று வசதியானது. தனிநபரையோ அரசாங்கத்தையோ மதிப்பிடுவதற்கு நூறு நாட்கள் போதாது என்றாலும் அந்த நபர் அல்லது அரசு செல்லக்கூடிய திசைவழிகளை நூறு நாட்களில் ஓரளவேனும் உணர முடியும். மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற ஒருசில நாட்களில் நிகழ்ந்த சிலவற்றை முன்வைத்து ஆக்கபூர்வமான தொடக்கம் என்று எழுதினோம். நூறு நாட்களின் முடிவில் அந்த நம்பிக்கை நியாயமானதுதான் என்பதைத் திமுக அரசு காட்டியிருக்கிறது.
ஊழல், முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் எதுவும் எழவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகளின் ஆதிக்கமும் மணல் கொள்ளையும் ஓங்கிவிடும் என்னும் பொதுவான அச்சம் தணிந்திருக்கிறது. நிர்வாகத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்வது தெரிகிறது. இன்னும் ஆழமாகப் பார்க்கும்போது அரசின் அணுகுமுறையைப் பற்றிய சில முடிவுகளுக்கு நாம் வரலாம்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி மாநாட்டில் திமுக சார்பில் பத்தாண்டுகாலத் தொலைநோக்குத் திட்டங்கள் என ஏழு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வியும் சுகாதாரமும், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூகநீதி ஆகியவையே அந்த வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகளைத் திமுக அரசு தீவிரமாகவே எடுத்துக்கொண்டிருப்பது முதல் நூறு நாட்களில் தெரிகின்றது.
பொருளாதார மேம்பாட்டில் மிகத் தீவிரமான ஈடுபாட்டினை அரசு வெளிப்படுத்திவருகிறது. உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்தது முக்கியமானது. முதலில் திட்டக் குழுவில் பொருளாதாரச் சிந்தனையாளர் ஜெ. ஜெயரஞ்சன் முதலானோரை நியமித்தபோது அதைப் பலரும் வாழ்த்தினார்கள். அதற்கு அடுத்ததாக மேற்படி அறிவிப்பு வந்தபோது பல தரப்பினரும் பாராட்டுணர்வை வெளிப்படுத்தினார்கள்.
பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருப்பதைத் திமுக அரசு பதவியேற்றதுமே வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கவலையைக் கணிசமாகக் கூட்டியது. தமிழகத்தின் கடன்சுமையைத் தெரிவித்தபோது (தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,967 கடன் சுமை) மக்களிடையே கவலை பரவ ஆரம்பித்தது. நிலைமை மோசமாக இருக்கிறது என்று திரும்பத்திரும்பச் சொல்வது புதிய வரிகளுக்கான நியாயப்படுத்தலாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டது. ஆனால் மக்கள்மீது வரிச் சுமையை அரசு ஏற்றவில்லை; அத்துடன், தனது வாக்குறுதிப்படியே பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியைக் குறைத்துக்கொண்டது.
பொருளாதார மீட்சியானது வரிகளால் உருவாகாது. ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் வரிவிதிக்கும் உரிமையும் சுருங்கிவிட்ட நிலையில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், வருமானத்தைப் பெருக்குதல், வருமானத்திற்கான வழிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் மக்களின் நலன், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைந்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் கொள்ள வேண்டும். முதலீட்டிய அணுகுமுறையையும் மக்கள்சார் அணுகுமுறையையும் திறமையாகச் சமன்செய்ய வேண்டும். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாசித்த நிதிநிலை அறிக்கையில் இதற்கான எத்தனம் வெளிப்பட்டது.
அறிவிப்புகளைத் தாண்டிச் சில நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருக்கிறது. முதல்வர் தலைமையில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ விழாவில் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக நகர்ப்புற ஏழைகளின் ஊதிய இழப்பு, வேலையிழப்பு, வாழ்வாதார இழப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் ஊதிய உத்தரவாதமும் சமூகப் பாதுகாப்பும் வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முந்தைய அரசு அமைத்த சி. ரங்கராஜன் குழு பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையைத் திமுக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப்போல நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புக்கான புதிய திட்டம் வகுக்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர் அதற்கு முதல்கட்டமாக நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார். இது வறுமையில் வாழும் பல எளிய மக்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தக்கூடியது.
திமுகவின் ஏழு வாக்குறுதிகளில் இரண்டாவதாக இருக்கும் வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தேவையான அளவு மழைப்பொழிவைப் பெறும் தமிழகம் வேளாண் உற்பத்தியில் மேலும் பல மடங்கு முன்னேற முடியும். நீர்நிலைகளைப் பராமரித்து அவற்றைச் செம்மையாகப் பயன்படுத்துவது தமிழகத்திற்குப் பழக்கமில்லாதது. எத்தனையோ நீர்நிலைகள், பொறுப்பின்மை, வணிக நோக்கம், தொலைநோக்கற்ற திட்டங்கள், ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் சீரழிந்திருக்கின்றன. இந்த ஆக்கிரமிப்பில் மக்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் மட்டுமின்றி அரசுக்கும் பங்கு இருக்கிறது. இந்தத் தவறுகளைத் தவிர்த்தாலே பெருமளவில் வேளாண்மையைக் காப்பாற்றிவிடலாம்.
வேளாண்மையை மேம்படுத்துவது, உற்பத்தியை மேம்படுத்துவது மட்டுமல்ல. வேளாண்மையை நம்பியிருக்கும் மக்கள் தன்னிறைவுடன் வாழ வழிசெய்வது. பெருநில உரிமையாளர்கள் மட்டுமின்றிச் சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களும் வேளாண் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடையும் சூழலைத்தான் வேளாண் வளர்ச்சி என்று சொல்ல முடியும். வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தயாரித்திருப்பது வேளாண்மை மீதான அக்கறையைக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் வேளாண்மையை அதன் முழுமையில் அணுகும் திட்டங்களுடன் செயலில் இறங்கினால்தான் வேளாண்மை மேம்படும்.
இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்னும் தேர்தல் வாக்குறுதி குறித்தும் ஓய்வூதியம், அகவிலைப்படி ஆகியவை குறித்தும் நிதியமைச்சர் கூறிய கருத்துகள் புதிய விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. பெண்கள் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை எல்லாப் பிரிவினருக்கும் வழங்கிவிட முடியாது, தேவையுள்ள பயனாளிகளுக்கே பயன் கிடைக்குமாறு செய்யப்படும் என்று மாநில நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். தேவை என்னும் அலகை அரசு வரையறுப்பதைப் பொருத்தே இந்த அணுகுமுறையை மதிப்பிட வேண்டும்.
அரசின் இலவசத் திட்டங்கள் குறித்த விவாதம் புதிதல்ல. இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகள் ஆக்குகின்றன என்பது அவற்றை எதிர்ப்பவர்களின் மேலோட்டமான குற்றச்சாட்டு. அரசின் செலவுகளும் பொதுவள ஆதாரங்களும் வாய்ப்புகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையாதவரை மக்களுக்கு அரசு உதவி தேவை. அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தத் திட்டங்கள் அவசியமானவைதாம். மக்களிடமிருந்தும் வரி வசூலிக்கும் அரசு, உதவி தேவைப்படும் பிரிவினருக்குச் செய்யும் உதவிகள் அவர்களுடைய உரிமைகள்தானே தவிர. சலுகைகள் அல்ல. இதை அடியொற்றியே உதவித் தொகை என்னும் சொல்லாடலை உரிமைத் தொகை என்னும் சொல்லாடல் பதிலீடு செய்துவருகிறது.
எல்லோருக்கும் இலவசங்களைத் தர முடியாது என்னும் கூற்று நடைமுறை சார்ந்ததாக இருந்தாலும் சமூகநீதிக் கொள்கையின் வெளிச்சத்தில் இந்த வாதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. திமுகவைத் தீவிரமாக ஆதரிக்கும் பொருளாதாரச் சிந்தனையாளர்கள் இலவசத் திட்டங்களை முழுமையாக ஆதரித்துவரும் நிலையில், எல்லாருக்கும் இலவசங்களைத் தர முடியாது என்னும் நிதியமைச்சரின் பேச்சு அவருக்கு வலதுசாரிப் பொருளாதார வாதி என்னும் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தப் பிரச்சினையில் கொள்கை சார்ந்தும் சமூக யதார்த்தங்கள் சார்ந்தும் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலவசத் திட்டங்களைக் கறுப்பு வெள்ளையாகப் பார்க்கும் போக்கை மாற்ற இந்த விவாதம் உதவக்கூடும்.
பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட ரூ.1582 கோடி அளவு குறைந்திருப்பது கவலை அளிக்கிறது.
அதேநேரம் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம், 8ஆம் வகுப்புவரையிலான மாணவ மாணவியர் அனைவரும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைப் போடவும் முடிவதை உறுதி செய்வதற்காக அடிப்படைக் கல்வி அறிவையும் கணித அறிவையும் உறுதி செய்வதற்காக ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம் அறிவிக்கப்பட்டு, அதற்கு ரூ. 66.70 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று பள்ளிக்கல்வி. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட கல்வியே இல்லாத நிலையில் இருக்கிறார்கள். இதைக் கருத்தில்கொண்டு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பைச் சரிசெய்வதற்காக இருநூறு கோடி ரூபாயில் ‘கற்றல் கற்பித்தல் இயக்கம்’ செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் முறையாகக் கற்பதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கற்பிப்பது மாபெரும் சவாலாக இருக்கிறது. கல்வித் தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள், இணையவழிக் கல்வி என்று தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கடைக்கோடிக் கிராமத்தில் வாழும் ஏழைக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இயலவில்லை.
மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனஉலைச்சல், வாழ்வியல் மாற்றங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதைச் சரிசெய்யும் வகையில் மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகம் எங்கும் செயல்படுத்தப்படும். ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்களின் உதவியோடு, கல்வியாளர்களின் வழிகாட்டுதலோடு, பள்ளிக்கல்வித் துறை இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும். வீதிகள்தோறும் வகுப்பறை, மாலை நேரங்களில் நிலவொளிப் பள்ளி என இந்தக் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் அடுத்த ஆறுமாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் இருநூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இருக்கும் நிலையை மாற்றிப் பெருமையின் சின்னமாக ஆக்குவோம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். அரசுப் பள்ளிகளின் குறைகளைக் கண்டுபிடிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு எதுவும் தேவையில்லை. அந்தந்த வகுப்புக்கேற்ற வாசித்தல், கணக்குப் போடுதல் ஆகிய அடிப்படைத் திறன்கள்கூட இல்லாத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கணிசமாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளைச் சீர்ப்படுத்த அவை இயங்கும் முறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தாலே பெருமளவு மாற்ற முடியும்.
மாநிலத்துக்கென்று தனிக் கல்விக்கொள்கை வகுப்பதற்கு வல்லுநர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது முக்கியமான முன்னெடுப்பு. ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணுகுமுறையைக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உரிமைப் பிரச்சினை ஒருபுறம் இருக்க மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை கல்விச் சூழலை ஒற்றைப்படைத்தன்மை கொண்டதாக ஆக்க முனைகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, அந்தந்த மாநிலச் சமூக, பண்பாட்டு, பொருளாதார, வரலாற்றுச் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ற தனித்தன்மையான கல்விமுறைதான் பொருத்தமானதாக இருக்கும்.
கல்வியில் மாநிலத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்டுவதாகவும் காலத்திற்கேற்ற கல்விக் கொள்கையை வகுப்பதாகவும் மாநில அரசுக் குழுவின் செயல்பாடு அமைய வேண்டும். சமச்சீர்க் கல்வித் திட்டம் சமச்சீர்ப் பாடத்திட்டமாகச் சுருங்கிவிட்டதுபோல அன்றி, மாநிலம் தழுவிய கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாக இந்தக் கல்விக்கொள்கை அமைய வேண்டும்.
நீட் தேர்வு விஷயத்தில் திமுக தன் வாக்குறுதிப்படி நடந்துகொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதில் எந்த வியப்பும் இல்லை. அதிமுக ஆட்சியின்போது நீட்டில் விலக்குக் கேட்டுச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை தீர்மானம் இயற்றி அனுப்பினால் அவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். இவ்வளவு காலத்திற்குள் குடியரசுத் தலைவர் பதில் தர வேண்டும் என்று விதி எதுவும் இல்லை. எனவே திமுக அரசால் நீட் தேர்வில் விலக்குப் பெற முடியாது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அதிமுக அரசு நீட் தேர்வில் விலக்குப் பெற இயலாமல் நின்றபோது அந்த அரசை விமர்சனம் செய்தவர்கள் இப்போது மௌனமாய் இருப்பதிலுள்ள அரசியல் கவனிக்கத்தக்கது.
நீட் தேர்வு, மேகேதாது அணை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் விடுதலை போன்றவை திமுக அரசுக்குச் சவால்களாகவே இருக்கும். நீட் விஷயத்தில் மத்திய அரசிடம் மல்லுக்கு நிற்கலாம்; மேகேதாது அணை விஷயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தித் தீர்மானம் போடலாம்; மத்திய அமைச்சரைச் சந்தித்துத் தமிழ்நாட்டின் நியாயத்தை எடுத்துரைக்கலாம்; பேரறிவாளனுக்குப் பிணை விடுப்பு வழங்கலாம்; ஆனால் இந்தப் பிரச்சினைகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதால் திமுக தன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எளிதல்ல. எனவே இவை குறித்த விமர்சனங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது.
மருத்துவத் துறையில் அரசு மிகவும் சுறுசுறுப்பாகவே செயல்பட்டுவருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்புப் பணிகளில் வேகமாகச் செயலாற்றியது. பதவியேற்பதற்கும் முன்பே இதுகுறித்த ஆலோசனைகளில் இறங்கினார் ஸ்டாலின். கொரோனா சிகிச்சைப் பணிகளை ஒருங்கிணைக்க எல்லா மாவட்டங்களிலும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட்டன. முதலமைச்சர் பல மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒரு கட்டத்தில் சென்னையைவிடக் கோவைப் பகுதியில் தொற்றுப் பதிவு கணிசமாகக் கூடியது. ஸ்டாலின் உடனடியாகக் கோவைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகளுக்கான கட்டணத்தைத்தானே ஏற்கும் என அரசு அறிவித்தது. கொரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்கள், காவலர்கள் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புநிதி, பட்டப்படிப்புவரை கல்விச் செலவை அரசு ஏற்கும் என்னும் அறிவிப்புகள் வந்தன. பொதுமுடக்கத்தின்போது அனைத்து அரிசிக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பதினான்குவகையான மளிகைப் பொருட்கள், செவிலியர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 15,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய்வரை ஊக்கத் தொகை, தற்காலிகப் பணியாளர்களாக இருந்த 1,220 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை என அடுத்தடுத்து வரவேற்கத்தக்க அறிவிப்புகள் வெளியாகின. ‘மக்களைத் தேடி மருத்துவம்,’ திட்டத்தைத் துவக்கியிருக்கிறார் ஸ்டாலின்; இது இந்திய அளவில் முன்மாதிரித் திட்டம்.
தடுப்பூசி பெறுவதில் இருந்த சிக்கலைக் களைந்ததும் தடுப்பூசிகள் வீணாவதைத் தடுத்துச் சிறப்பான முறையில் பயன்படுத்தியதும் பாராட்டத்தக்கவை. தமிழகத்தில் 55 மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தும் முன்னோடித் திட்டத்தைச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்துள்ளார். எனினும் தமிழக மக்கள்தொகையில் தடுப்பூசிப் போட்டுக்கொண்டோரின் விழுக்காடு கேரளம் போன்ற சில மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவாக இருக்கிறது. இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களின் சதவீதம் 8.2 என்பது தேசிய சராசரிக்கும் கீழே உள்ளது. ஜூலைமாதம்வரை தடுப்பூசிப் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லிவந்த அரசு, அதன் பிறகு மத்திய அரசிடமிருந்து தனக்கு வேண்டிய தடுப்பூசிகளைப் பெற்றுவருகிறது. இப்போது தடுப்பூசிப் பற்றாக்குறை இல்லை. ஆனால் தடுப்பூசி போடுவதில் போதாமை இருக்கிறது. தினமும் எட்டு லட்சம்பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் திறன்கொண்ட தமிழகம் ஐந்துலட்சம்பேருக்கு மட்டுமே செலுத்துவதாக என்டிடிவி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் கூறுகிறது.
போதிய தடுப்பூசிகள் கைவசம் இருந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தயக்கம் பகுத்தறிவும் கல்வியறிவும் மிகுந்த தமிழ்நாட்டில் ஏன் இருக்கிறது? இது ஆய்வுக்குரியது. இந்தத் தயக்கத்தைப் போக்கத் திமுக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குரியது. தடுப்பூசிப் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நிர்வாகரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொலைதூரப் பயணங்களுக்கும் பல்லங்காடிகள், திரையரங்கங்கள் ஆகியவற்றுக்குள் நுழைவதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்பன போன்ற நடவடிக்கைகள் பலன் தரும். முகக் கவசம் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபடுவதுபோலத் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முதல்வரும் அமைச்சர்களும் முனைப்பைக் காட்ட வேண்டும்.
பொதுமுடக்கத்தில் கண்டிப்புக் காட்டியதுடன், இரண்டாம் அலையின் பாதிப்பைக் கூட்டிய ஆக்சிஜன் பற்றாக்குறைக்கும் அரசு தீர்வு கண்டது. கொரோனா மூன்றாம் அலை உருவானால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் நோக்கில், ஆக்சிஜன் கையிருப்பைக் கண்காணிக்க ஆக்சிஜன் ஆணையர் என்ற புதிய பதவியை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் 1,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன், 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன என்றும் அரசு கூறியிருக்கிறது. கொரோனா மூன்றாம் அலை வந்தால் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் அரசு இருக்கிறது என்னும் நம்பிக்கையை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன.
பொருளாதாரம், கல்வி, மருத்துவம், சமூகநீதி ஆகியவற்றுக்கு அப்பால், மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் திமுக அரசு முனைப்புடன் இருப்பதைக் காண முடிகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்ட ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சரின் குரல் தனித்து ஒலித்தது. “மாநிலங்கள் இன்றி ஒன்றியம் இல்லை. இதுவரை ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரிப் பங்கை முழுவதுமாக அளிக்கவில்லை. இது ஏதோ ஒன்றிய அரசு அளிக்கும் அன்பளிப்பு அல்ல. மாநிலங்களின் உரிமை” என்று அவர் முழங்கினார்.
சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தைப்போல மதுரையில் கலைஞர் நூலகம், எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றியவர்களுக்குத் தகைசால் தமிழர் விருது, எழுத்தாளர் கி. ராஜநாராயணன், தமிழறிஞர் இளங்குமரனார் ஆகியோருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம், கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியை வேகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் முக்கியமானவை. நவீன தமிழிலக்கியத்தின்மீது பாராமுகமாக இருப்பதற்குப் பேர்போன திராவிட இயக்க மரபில் வந்த முதல்வர், தி. ஜானகிராமன் குறித்த நூலை வெளியிட்டிருப்பதும் வரவேற்கத்தக்க மாற்றம்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதும் பிறர் நடத்தும் போராட்டங்களை ஆதரிப்பதும் இயல்பு; பதவியில் அமர்ந்ததும் போராட்டங்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறிவிடுவதும் இயல்புதான். ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்ட விஷயத்தில் திமுக அரசு நியாயமாக நடந்துகொண்டிருக்கிறது. போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பதினேழுபேருக்குக் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியை முதல்வர் அளித்தார். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றார். ஆக்சிஜன் உற்பத்திக்காக இடைக்கால ஏற்பாடாகத் திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூடுவதில் உறுதியாக இருந்தார்.
பாடத் திட்டக் குழுவிற்குத் திண்டுக்கல் லியோனியைத் தலைவராக நியமித்தது உள்ளிட்ட சில முடிவுகள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளன. ஒருசில விமர்சனங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் அரசு சில விமர்சனங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறது.
வானளாவிய வாக்குறுதிகளைத் தந்துவிட்டுப் பதவிக்கு வந்த பிறகு நிதிநிலை சரியில்லை என்று சொல்வதும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. நிதிநிலை குறித்த பேச்சு யதார்த்தக் கணக்கின்படிச் சரியாக இருக்கலாம். ஆனால் யதார்த்தம் புரியாமல் ஏன் வாக்குறுதி அளித்தீர்கள் என்னும் கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும். நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் உள்ள தகவல்கள் கடந்த பிப்ரவரி மாதமே வெளிவந்துவிட்ட நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே எந்த நம்பிக்கையில் வானளாவிய வாக்குறுதிகளைக் கொடுத்தன என்னும் கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இரு கட்சிகளுக்குமே இருக்கிறது; அதுவும் ஆளுங்கட்சிக்குக் கூடுதலாக இருக்கிறது.
பதவியேற்ற சில வாரங்களுக்குள் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிகழத் தொடங்கியது. 2006-11ஆம் ஆண்டுகளின் ‘இருண்ட’ காலம் குறித்த கெட்ட கனவுகள் மக்களுக்கு வரத் தொடங்கின. பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் மின்வெட்டு என்று விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் பகிர்மானக் கருவிகள் பழுதடைந்ததற்கு அணில்களையும் பொறுப்பாக்கியது பலவிதமான நகைவினைகளைக் கிளப்பியது. அதிமுக அரசு சொல்லிக்கொண்டதுபோலத் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல என்னும் தகவலையும் சொன்ன அமைச்சர் மின்வெட்டைச் சமாளிக்கத் தீவிரமாகப் போராடிவருகிறார். மின் விநியோகம், கட்டணம் முதலான புகார்களுக்காகத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதும் ஆரோக்கியமான நடவடிக்கை என்று சொல்ல வேண்டும்.
‘ஃபேமிலி மேன்’ என்னும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளிவந்ததும் அந்தப் படம் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியது என்று சொல்லி அதைத் தடைசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது.
இணையத்தில் தரக்குறைவானதும் உண்மைக்குப் புறம்பானதுமான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்த கிஷோர் கே. சுவாமியின் மீதான புகார்களின் பேரில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது திமுக அரசு. அவர் திமுக தலைவர்களுக்கு எதிராகவும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு எதிராகவும் ஆபாச அவதூறுகளையும் வசைகளையும் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் வலுவாகவே இருக்கிறது. ஆனால் அவர் திமுக தலைவர்களைத் தரக்குறைவாக விமர்சித்ததற்காகத்தான் அரசு அவரைக் கைதுசெய்திருக்கிறது. மாறாக இணையத்தில் பெண்கள்மீது அவர் செலுத்திவரும் வன்மம் கிரிமினல் குற்றம் என்பதால் அதற்காக அவரைf; கைது செய்திருக்க வேண்டும். அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் அரசியல் எதிரிகள்மீது ஏவுவதற்காகவே பயன்படுத்தப்படும் சட்டம். இதை வைத்து யாரையும் மிரட்டலாம் என்பதால் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் மாறாக, குடிமையியல் (சிவில்) அவதூறுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நெடுங்காலமாகக் கோரிவருகிறார்கள். கிஷோர் போன்ற ஒருவருக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தாலோ அல்லது அதைப் பாராமுகமாக இருந்துவிட்டாலோ நாளை அரசியல் காழ்ப்பிற்காகவே இந்தச் சட்டத்தை வேறொருவர்மீது பிரயோகிக்கும்போது அதை எதிர்ப்பதற்கான நியாயத்தை இழந்துவிடுவோம். இந்த விஷயத்திலும் திமுக தலைமை கவனம் செலுத்துவது ஆரோக்கியமான கருத்துச் சூழலுக்கு வழிவகுக்கும்.
வளர்ச்சிக் குறியீடுகளில் இந்திய அளவில் தமிழகம் பல அலகுகளில் இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதை வைத்துத் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று சொல்வது பிரச்சாரம். தமிழகத்தின் சிக்கல்கள் அதில் வாழும் மக்கள் அனுபவிப்பவை. இதுவே முதலிடம் என்றால் மற்ற மாநிலங்களின் நிலை எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் என்னும் அளவில்தான் சில அலகுகளைக் காண வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாகக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் தமிழகம் பல மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறியிருக்கிறது. தனியார் மூலம் கிடைக்கும் சேவைகள் மட்டுமின்றி அரசு வழங்கும் கல்வி, மருத்துவச் சேவைகளும் ஒப்பீட்டளவில் சிறந்தவையாகவே இருக்கின்றன. ஆனால் அரசு வழங்கும் கல்வி, மருத்துவச் சேவைகளில் உள்ள பல்வேறு நெருக்கடிகள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். ஒப்பீட்டளவில் சிறந்தவையாக இருப்பது வேறு, தன்னளவிலேயே சிறந்தவையாக இருப்பது வேறு.
தமிழகத்தின் தற்போதைய நிலையை உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதைக் காட்டிலும் உலக அளவிலான தரத்துடன் ஒப்பிட்டு அதை நோக்கி முன்னகர்வதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும். அதற்கான முனைப்பை இந்த நூறுநாட்களில் காண முடிவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.