கடிதங்கள்
கடிதங்கள்
அ.கா. பெருமாள் படைத்துள்ள ‘நூற்றாண்டு நினைவில் குருக்கள்’ கட்டுரையும், ஐரோப்பிய தமிழியல் பணிகளில் ஆழந்தகன்று தம்மை ஈடுபடுத்திக்கொண்ட நவீன ஆய்வுப்புல நிபுணர் ஆனந்த் அமலதாஸ் நேர்காணலும் ஆகஸ்ட் இதழை மிளிரவைத்துள்ளன. ‘கல்வி கரையில’ என்ற சான்றோர் வாக்கினை இரு பேராளுமைகளும் மிகச்செம்மையாக மெய்ப்பித்துள்ளனர். இரண்டு கட்டுரைகளையும் வாசிக்க வாசிக்க உவப்பும் வியப்பும்தான் மேலிடுகின்றன. இருவரது பன்மொழிப்புலமையும், பழந்தமிழ் படைப்புலகைப் பாரெல்லாம் எடுத்துச்சென்றுள்ள பாங்கும் இக்காலப் பன்முகத் தமிழாய்வுப்புலத்திற்குக் காலத்தினால் செய்த கைம்மாறே ஆகும்.
நவீன யுகத்தின் வாசகர் மத்தியில் ‘குருக்கள்’ என்ற சொல் சிறிது ஒவ்வாமையைக்கூட ஏற்படுத்தலாம். இருப்பினும், ‘பேரறிஞர் கைலாசநாதக் குருக்கள்’ என்றே கட்டுரை கம்பீரமாகச் சுட்டுகிறது. இவரது துல்லியமான சமஸ்கிருதப் பெரும்புலமை அத்துடனே துதிபாடி நின்று விடாது, பழந்தமிழ் படைப்புக் கருவூலத்திற்குள்ளும் புகுந்து சென்று, பல மூல ஏடுகளைத் தேடித்தேடி ஆய்வுகள் மேற்கொண்டு, பிரதிகள் செய்து ‘என் கடன் தமிழ் பணியே’ என்று ஒல்லும் வகையெல்லாம் உழைத்துள்ளது. [இலங்கை நாடு மட்டுமின்றித் தஞ்சை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, மதுரை, கன்னியாகுமரி போன்ற தளங்களுக்கெல்லாம் நீண்ட தூரப்பயணங்கள் மேற்கொண்டு ஆங்காங்கு தங்கித் தமது தமிழாய்வு வேட்கையில் கைலாசநாதக்குருக்கள் திளைத்துள்ளார்.]
இப்பெருமகனாரது பி.எச்.டி. ஆய்வு இராமாயண, மகாபாரத புராணங்களில் காணப்படும் சைவநெறிகள் சார்ந்த ஆன்மீக வழிபாட்டுமுறைகள் பற்றியதுதான். எனவே, இவரது பி.எச்.டி ஆய்வுச் சுருக்கம், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான நூல்கள், இவர் அவ்வப்போது எழுதியுள்ள பல்வேறு தமிழாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை ‘காலச்சுவடு’ பதிப்பகம் சிரமேற்கொள்வது இன்றியமையாததாகும்.
1962இல் சேசுசபையில் தொடங்கி இன்றைய 2021இல் ‘கலையும் சமயமும்’ படைப்புவரை அறுபது ஆண்டுகால ஆய்வுப் படைப்புலகின் தொய்வற்ற தொடரோட்டப்பணியில் தம்மை உள்ளார்ந்து ஒப்புவித்துக்கொண்டுள்ளார் ஆனந்த் அமலதாஸ். ஏனோ பொதுப்பார்வையில் அதிகம் பேசுபொருளாக அறியப்படாமல் போய்விட்டாலும், ‘காலச்சுவடு’ தனது வழக்கமான நுண்ணுணர்வுப் பார்வையைத் தற்பொழுது இவர்மீது செலுத்தியுள்ளது வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பே ஆகும்.
இத்துடன், பெரிதும் அரிதான பொருள்களான சிவனுடைய நாட்டியம் பற்றிய பாடல்கள், தேவி மகாத்ம்யம், சௌந்தர்யலகரி, ஆசீவகக் கோட்பாடு, இந்தியக்கலையில் கிறித்துவக்கோட்பாடுகள் ஆகியன பற்றிய இவரது படைப்பு மிகவும் போற்றத்தக்கவை. புதிய புதிய பார்வைகள் விரிவதும், இதுவரை புலப்படாமல் போன்றவற்றை நன்கு அறிவதும், மாற்ற மடைந்து வரும் மனிதயுகத்தின் மகத்துவங்கள் என்பதைக் காலச்சுவடு தொடர்ந்து உணர்த்திவருகிறது.
சி. பாலையா,
புதுக்கோட்டை
‘காலச்சுவடும் நானும்’ சிறுகட்டுரைதான்; இது மெய்யுரை. இந்தத் தலைப்பில் நானும்கூட இருக்கிறேன். சென்னையில் என்னிடம் நிறைய பேர் கேட்டுள்ளார்கள் ‘‘உங்கள் ஊர் நாகர்கோவிலா, காலச்சுவடு இதழாளர்கள் உங்களின் உறவுக்காரர்களா” என்று. நான் வெறும் வாசகிதான். சில ஆண்டுகளாகத்தான் காலச்சுவடு இதழைப் படிக்கிறேன். அது ஆக்கமும், ஊக்கமும் தருகிறது; அறிவை வளர்க்கிறது. அன்பை அளிக்கிறது. அகங்காரத்தை அழிக்கிறது.
ஐரோப்பியத் தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள் புதுமையாக இருந்தன. ஏனெனில் எத்தனை பேர் சமஸ்கிருதம் உட்பட இத்தனை மொழிகளைக் கற்று, மதங்களை ஆய்ந்து ஆராய்ச்சி செய்து, மொழியாக்கம் செய்து... அப்பாடா என்ன திறமை! இம்மாதிரியான சீரிய எழுத்தாளர்கள் தமிழ் உலகத்திற்குத் தெரியாமல் போனது ஏனோ?
தலையங்கம் மனசை, மனசாட்சியை நொறுக்கித் தவிடுபொடியாக்கியது. பாதிரியார் ஸ்டேன் சாமியின் மரணம் மிகவும் கொடியது. சிறையில் தண்ணீர் குடிக்க ஒரு டம்ளர் கேட்டிருக்கிறார்; அது மறுக்கப்பட்டிருக்கிறதே. இதைவிடக் கொடுமை ஒரு மனிதனுக்கு என்ன இழைக்கப்பட வேண்டும்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எதை நோக்கி? அதிகாரமா? எதேச்சதிகாரமா? மனிதநேயம் மறந்தே போனதா?
கல்வி மேம்பாட்டை வலியுறுத்தித் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயமானவை. விரைவில் அவை நிறைவேற்றப்பட்டாலே சமநீதி அமலுக்கு வரும்.
ஞா. சிவகாசி
போரூர்