இஸ்மாயிலின் தேவதை
இஸ்மாயிலின் தேவதை
ஓவியம்: மணிவண்ணன்
நிலவு தோன்றிய பிறகு ஏற்காடு எல்வீ பென்னிங்டன் காப்பி எஸ்டேட் பங்களா மர்மமாகிவிடுகிறது. காப்பிச் செடிப் புதர்களும் சில்வர் ஓக் மரங்களில் படர்ந்தேறியிருக்கும் மிளகுக் கொடிகளும்கூட அச்சமூட்டக்கூடிய நிழலுருவங்களாக மாறிவிடுகின்றன.
பிரிட்டிஷ் காலத்தில் பலநூறு ஏக்கர்கள் கொண்ட இப்புகழ்பெற்ற காப்பி எஸ்டேட்டை அப்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்த எல்வீ பென்னிங்டன் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு எல்வீயின் பாதுகாப்புக்கும் எஸ்டேட்டின் தொழில் பெருக்கத்திற்கும் கடுமையாகவும் விசுவாசமாகவும் உழைத்த இலியாஸின் குடும்பத்திற்கு இருநூறு ஏக்கர்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.