அகத்தின் அதிர்வுகள்
பல பதிற்றாண்டு காலம் கலைத்துறையில் தொடர்ந்து செயல்பட்டவர்களது பங்களிப்புகளை மீளப் பார்க்கும்போது அவரது கலைநோக்கும் சாதனைகளும் எளிதில் புலப்படுகின்றன. புகழ்பெற்ற ஓவியர் எஸ்.ஜி. வாசுதேவின் ‘மீள்பார்வை கண்காட்சி’ சென்னையில் நடத்தப்பட்டது. மூன்று இடங்களில் நடைபெற்ற ஓவியக் காட்சிகள் பார்வையாளருக்குப் பெரும் அனுபவத்தை அளித்தன.
எழுபது எண்பதுகளில் தமிழ் சிற்றிதழ் சூழலில் ஊடாடிய ஓவியர்களில் வாசுதேவும் ஒருவர். அவரது ஓவியங்களும் வரைபடங்களும் சிற்றேடுகளிலும் நூல் முகப்புகளிலும் இடம்பெற்றிருந்தன. சென்னை ஓவிய முறையின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் சோழமண்டலம் கலைக் கிராமத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் அறியப்பட்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜி. வாசுதேவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. லலித் கலா அகாதெமி, ஃபோரம் ஆர்ட் கேலரி, சோழமண்டலம் ஆகிய மூன்று இடங்களிலும் அவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது ஒரு தனிப்பெருமை. பிக்காசோவுக்கும் விஸ்வநாதனுக்கும் பிறகு ஒரே சமயத்தில் மூன்று கண்காட்சிகளைப் பெற்றவர் வாசுதேவ்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியத்துறையில் அயராது இயங்கிவரும் வாசுதேவின் மீள்பார்வைக் காட்சி அவரது கலைப்பயணத்தின் திசைகளையும் வழிகளையும் காலமாற்றங்களையும் வெளிப்படுத்தியது. மைதுனம், விருட்சம், வாழ்வின் விருட்சம் என்று விரியும் அவரது கலைத் தரிசனம் வியப்பையும் பரவசத்தையும் ஒருங்கே அளித்தது.
‘அகத்தின் அதிர்வுகள்’ என்று இந்தக் கண்காட்சிகளுக்குத் தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. அது மிகப்பொருத்தமானது என ஓவியங்களைக் கண்ணுற்றபோது உணரமுடிந்தது.
(எஸ்.ஜி. வாசுதேவின் வரைபடங்களில் சில இந்த இதழ் கவிதைப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.)