கவிதைகள்
கவிதைகள்
றாம் சந்தோஷ்
1. ‘சார்’ எனும் ஒரு டஜன் விளிப்புகள்
அவன் உங்கள் முன்னே
நிற்கிறான் பதற்றமுற்று
அல்லது அவனைப் பதற்றமுறச்செய்யும் தோரணையில்
உங்களால் உங்கள் முன்
நிற்கிறான்
அவன் முன்னே நீங்கள்
(உங்களில் யாராகவும் இருக்கலாம்)
கையில் வாளொடு, நீண்ட வாளொடு,
அல்லது குறுவாளொடு,
அல்லது கத்தி, அருவாள்,
வேல்கம்பு? அல்லது ஏதோ ஒரு காயமேற்படுத்தும் ஆயுதம்
உங்கள் கைவாகிற்கேற்றார்போல் ஏந்தி நிற்கிறார்கள்
அவை உண்மையான கத்திகள்தான்
வாள்கள்தான்
கூரேறியவைதான்
அவை சமீபத்தில் மீண்டும் சாணைபிடிக்கப்பட்டவை
அல்லது இவனைத் தாக்க இதுபோதும் என
பலரைத் தாக்கித் தாக்கி முனைமழுங்கிய ஆணவத்தில்
அதே அசட்டையுடன் வந்து நிற்கும் சீமான் கத்தி
உப்பேறிய துரு கத்தி
அது தன்னை
நானொரு தொன்மம்
நானே திணை
உரப்பு என்று சொல்லியபடி....
அதுபோலொரு காகிதக் கத்திகூட
அங்கே,
தன் பங்கிற்கு அதுவும் வந்து
நிற்கிறது - என் முன்னே
இவர்களில் ஒருவன் மட்டும்
ஆம் உங்களில் ஒருவன் மட்டும்
அல்லது நீங்கள்தானா அது
வணக்கம் சார் நலமா
சொற் கத்தியோடு
வந்திருக்கிறீர்கள்
பயமாக உள்ளது சார் உங்களைப் பார்த்தால்தான்
வணக்கம் சார்
நலமாக உள்ளீர்களா
நீங்கள்தான் தாக்கும் சாத்தியத்தைக் கணிக்கும் முன்பே
அது செய்யக் காத்திருக்கும் தந்திர வைரி
வணக்கம் சார்
நலமாக உள்ளீர்களா
நான் உங்களைக் கருணை காட்டச்சொல்லிக் கேட்க
எத்தனிப்பதற்குள்ளாகவே
அச்சொல்லை நீங்கள் உச்சரித்துவிட்டீர்கள்
வணக்கம் சார்
நலமாக இருக்கிறீர்களா
நான் தாக்கப்பட்டுவிட்டேன் சார்
அதன் ஒலி வேகம் யார் பொருட்டும்
என்னைத் தாக்கத் தாமதிக்கவில்லை
அது தாக்கவிட்டது சார்
வணக்கம் சார்
நலமாக உள்ளீர்களா
தற்போது நான் காயமேறி
அல்லது காயப்படுத்தப்பட்டு
இருக்கிறேன் சார்
வணக்கம்
நலமாக இருக்கிறீர்களா சார்
நான் கொலை செய்யப்பட்டு விட்டேன் சார்
வணக்கம் சார்
நலமாக உள்ளீர்களா
நான் கொலை செய்யப்பட்டு
தலைப்புச் செய்தியாகியும்விட்டேன் சார்
சார்..
இன்னும் என்ன சார்
வணக்கம் சார்
நலமாக உள்ளீர்களா?
போய்வாருங்கள் அந்த கத்தி, வேல்கம்பாயுதங்களை
எறிந்துவிட்டு
முக்கியமாய் அந்தச் சொல்லை சார்
ப்ளீஸ்.
மின்னஞ்சல்: aishavimall@gmail.com