கவிதைகள்
கவிதைகள்
பா. ராஜா
பல் துலக்குதல்: 1
கைக்கு வாட்டமாய்
ஒரு அரைச்செங்கல் கிடைத்ததும்
வாய்க்கு வாட்டமாய்
ஒரு கெட்ட வார்த்தையும் கூடவே
கிடைத்து விட்டது அவனுக்கு
என் தாயைப்பழிக்கும் சொல் அது
கேட்டதும் செத்திருக்கவும்
அல்லது
கொன்றிருக்கவும் வேண்டும்
அங்கொரு கிணறு இருந்தது
அவன் விட்டெறிந்த செங்கல்லை
விட்டெறிந்த சொல்கொண்டே
பொடித்துப் பல்துலக்கி
அந்தக் கிணற்றில் உமிழ்ந்துகொண்டிருக்கிறேன்
ரொம்புவேனா என்கிறது
உமிழும்போதெல்லாம்
எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென அழுகிறாள்
தாய்
அவளது கன்ன மேட்டிலிருந்து கீழிறங்குகிறது
சால்ட் கலந்த பேஸ்ட்.
பல் துலக்குதல்: 2
அடுப்பெரித்த வரட்டிச்சாம்பலில் பல் தேய்த்தோம்
செங்கல்லைப் பொடியாக்கி
வேப்பங்குச்சி
கருவேலாங்குச்சி
உப்பு
இப்போதோ
பிதுக்கினால் பல வண்ணங்களில்
வெளிப்படும் பற்பசைகள்
அக்குபிரஷர் வசதி கொண்ட துலக்கிகள்
காலைநேரப் பள்ளி அவசரத்தின்போது
எதிர் வீட்டில்
பத்து படிக்கும் பையன் கடிகாரத்துப் பெரிய முள்ளாலும்
ஆறு படிக்கும் அவன் தங்கை சிறிய முள்ளாலும்
துரிதகதியில் பல் தேய்த்துக்கொண்டிருந்தனர்
கண்ணால் கண்டதைச் சொல்கிறேன்
நம்பக்கடினம் என்றால்
நொடி முள்ளைக்கூட கேட்டுப்பாருங்கள்.
பல் துலக்குதல் : 3
கிழவிக்கு வயது தொண்ணூறு
பல் துலக்காமல் பச்சை நீர்கூட வாயில் படாது
நாளெல்லாம் கண் விழிப்பது
பற்பொடி டப்பாவின் முகத்தில்தான்
இரவு வணக்கம் சொல்வதும் அதற்குத்தான்
தன் பற்களைப் பற்றிய பெருமை
எப்போதும் கிழவிக்குண்டு
கிழவிக்கோ நான்கு பிள்ளைகள்
புற்றுநோய்
பக்கவாதம்
விபத்து என்று மூவர் போய்ச்சேர்ந்துவிட்டனர்
கூர்ந்து கவனித்ததில்
இவர்களில் யார் சாவுக்கும் கிழவியின் கண்களிலிருந்து
பொட்டுத்தண்ணி வெளிப்படவில்லை
ஊருக்கே ஆச்சர்யமான ஆச்சர்யம்
பற்களை இப்படி பேணிக்காத்ததால்தான்
அழுகாச்சி வரல என்று
இப்போதும்
ஊருக்குள் ஒரு கதையுண்டு.
மின்னஞ்சல்: paaraja@gmail.com