காவியம்
வடலிக்கூடல் எனும் அந்த ஊரிலே
வந்து வாழ்ந்த ஒருவன் எழுந்து, தன்
படலைக் கிட்ட படலைக் கடக்கிறான்.
படுக்கை மீதிரு கைகளும் சோர்ந்துபோய்
உடலி னோடுயிர் அற்றுக் கிடந்தன.
உற்ற நோயை உணர்ந்து துடிக்கவும்
இடமிலாமல் உடம்பு களைத்ததால்,
இட்ட பாட்டில் இசைந்து கிடந்தது.
தெய்வயானை அவன் தலை மாட்டிலே
சிலை நிகர்த்திடச் சில்லிட் டிருந்தனள்.
கைவிரல்கள் தொடர்ந்து பதறின.
கால் இரண்டும் நடுங்கும், கழுத்திலே
ஐயர், உற்றவர், ஊரவர் முன்னிலே
அன்று கட்டிய தாலி அசைந்தது.
சைகை ஒன்று புரிந்தனள். கண்டு போய்த்
தாயொடும் வேலுப் பிள்ளை அமர்ந்தனன்.
சுமைகள் போல இரண்டு விழிகளைச்
சூழ்ந்து மூடிக் கிடந்து கனக்கிற
இமைகள் பாதி திறக்க முயன்றனன்,
இளைத்த மேனி முழுத்திறன் கொண்டு. உளம்
குமைய வல்லது கொஞ்சம், உதடுகள்
கூற வல்லன அல்ல எனினும், ஓர்
அமைதி வந்து படிந்திட நின்றதே
ஆயினும், விழி சற்றே விழித்தன.
வேலுப்பிள்ளைச் சிறுவனின் கண்களை
மெல்ல நோக்கி விடைதர வேண்டினான்.
தாலி பற்றிப் பிடுங்கி, மனைவியோ
தலை குலைந்து விழுந்து புரள்கிறாள்.
காலிற் பட்ட கரங்கள் தெரிகிலாக்
கணவனல்ல - ஓர் கட்டை கிடந்தது!
மேலுக் கென்ன?
விரைந்தவ் வயலவர்
வேறு வேறு செயல்கள் முனைந்தனர்.
காசிக் கட்டாடியின் மகன் வெள்ளையைக்
கட்டினான். கந்த சாமியின் மூத்தவன்
வாசற் பக்கத்தில் நின்று, வரவர
வந்தவர்க்குச் சுருட்டு வழங்கினான்.
பாசம் செய்கிற ஓலம் எழுந்தது-
பறையிலே கம்பு பட்டூர் அதிர்ந்தது.
தோசை சுட்டதைப் பாதியில் விட்டனள்;
தொண்டை ஓர்கணம் செல்லிக் கடைத்தது.
தந்தை போய்விட மீந்த தனயனைத்,
‘தம்பி வா!’ எனத் தாமர் அழைத்துப் போய்க்
குந்திலே ஓர் புறத்தில் அமர்த்திப், பின்
கூற வார்த்தைகள் இன்றிக் குழம்பினார்.
எந்த வாறு நிகழந்த தெதுவென
எண்ணெணாது தகர்ந்து சிதறிய
சிந்தை யோடு தனித்த தன்தாய் அதோ,
சிந்துகின்ற கண்ணீர் இவன் எண்ணினான்.
பாடை தோளில் எழுந்தது. ஒழுங்கையைப்
பையப் பைய நடந்ததோர் ஊர்வலம்
ஆடை யற்று வெறித்துக் கிடந்ததோர்
அறுவடைப்பின் வயலைக் கடந்தது.
சாடையாக ஓர் தூறல் விழுந்தது.
சந்தை, சங்கக் கடைகள் நகர்ந்தன.
வாடை ஒன்று குளிர்ந்தது. பள்ளியும்
மாரி அம்மனின் கோயிலும் சென்றன.
வடலிக் கூடல் எனுமந்த ஊரிலே
வந்து வாழ்ந்து முடிந்தவர் செல்கிற
சுடலைப் பக்கம் திரும்பிய தூர்வலம்.
சோகத் தோடொரு நாய் ஊளை செய்தது.
கடலின் ஓலமும் காற்றோடு வந்திரு
காதிற் பட்டது. கள்ளியின் முட்களின்
இடையிற் கூட ஓர் பூமலர்ந் துள்ளதே!
ஈச்சை காய்த்துக் குலுங்கிக் கிடந்தது.
காலிற் தைத்தது காரைமுள் தான்! அதைக்
கவனியாது தொடர்ந்தடி வைத்தனன்
வேலுப் பிள்ளை. அம்மேட்டை அடைந்தனர்.
விறகடுக்கி இருந்த படுக்கையின்
மேலுக் கேறிடும் முத்தையன் நீக்கிய
வெறும் பிணத்தின் உயிரை நிகர்த்தவன் -
தோளில் முட்டி சுமந்து, தன் தந்தையைச்
சுற்றி மூன்று முறைகள் நடக்கிறான்.
அள்ளித் தூக்கி அணைத்து வளர்த்தவன்,
ஆவதற்கு வழிபல காட்டித், தன்
பிள்ளைப் பேச்சைக் கடிந்தும் உவந்தவன்,
பெற்றெடுத் தவன் மேனியின் மீதிலே
கொள்ளி யிட்டுக் குனிந்து திரும்பினான்.
கொழுந்து விட்டெரிகின்றது! பேரொளி
வெள்ளமாய் ஓர் பகல் தொடராது கொல்?
மேற்கிலே ஒரு மாலை மடிந்தது.
1965 இல் எழுதப்பட்ட இந்தக் காவியத்தில் பிறந்தமை, வளர்ந்தமை, முனைந்தமை, திரிந்தமை, மணந்தமை, இணைந்தமை, சிறந்தமை, நிறைந்தமை, நடந்தமை, இறந்தமை எனப் பத்து அத்தியாயங்கள் உள்ளன. அதில் ஒன்று இது.