நீதியின் கவித்துவ அழகியல்
களிநெல்லிக்கனி
ஔவையார் கவித்துவத் திரட்டு
(கட்டுரைகள்)
இசை
ரூ.230
காலச்சுவடு புதிய வெளியீடாக
கோவை புத்தகக் காட்சியில் வரவிருக்கும் ‘களிநெல்லிக்கனி’ என்னும் நூலிலிருந்து சில பகுதிகள்
நல்வழி: எண்பது கோடி நினைப்புகள்
‘நல்வழி’ நீதி மொழி ஆயினும் இலக்கியம். ஆத்திசூடிபோல இதன் இலக்கு சிறுவர்களல்ல. இதன் ஒரு சொல்லை வாயில் இட்டு நாள் முழுக்கச் சுவைத்துக்கொண்டிருக்கலாம். ஆயினும் வெறும் சந்த நடனம் அல்ல. வாழ்வின் இருளைக் கூர்நோக்கும் அருந்துணிவு மிக்க பாடல்கள் இவை.
ஔவை கோவில்களில் தெய்வமாகக் குடியிருப்பதுபோலவே எளிய மனிதர்களின் அன்றாடப் பேச்சுக்களிலும் காலங்கள் கடந்து வாழ்ந்துவருகிறாள். “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?” என்கிற வரி ‘நல்வழி’யின் வரியென்றோ, அது ஔவையின் வாக்கென்றோ பலருக்கும் தெரியாது. ஆனால் எல்லா மனிதரும் அப்படி அழுது புரளும் நாள் வருமல்லவா? அப்போது தானென்று சொல்லாமல் ஔவை வருவாள்; தலைநீவித் தேற்றுவாள்.
நல்வழியில் ‘ஊழ்’ திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது. ‘ஊழ்’ என்பது அரசியல் பிழை என்கிற வாசிப்பு இன்றைய காலத்தின் அவசியம்தான். ஆனால் மனிதன் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் சில வேளைகளில் மனிதனிடம் விடை இருப்பதில்லை. வாழ்வின் ரகசியங்கள் என்று இன்னும் சில இங்கு இருக்கத்தான் செய்கின்றன. மனிதனின் கையறு நிலைகளுக்கு ஊழ் போல் இன்னொரு துணை இல்லை.
“விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி?
ஔவை பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் அதன் நாட்டுப்புறச் சொற்களின் அழகு. இத்தன்மை மண்ணில் விளைந்த தீட்சண்யம் போல் ஆக்கிவிடுகின்றன சில பாடல்களை. “முட்ட முட்டவே வரும் பஞ்சம்” என்கிறது அவரது தனிப்பாடல் ஒன்று. முட்ட முட்ட தண்ணி குடித்துப் பழகிய நமக்கு, அப்படிப் பஞ்சம் வந்து நம்மைக் குடிக்கும் அச்சம் அந்த வரியை வாசிக்க வாசிக்கவே எழுந்துவிடுகிறது. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி” என்கிறது ஒரு மூதுரைப் பாடல். ‘அமுக்கி’ என்கிற சொல் அதற்குமேல் அழுத்த முடியாத ஆழத்தில் இருக்கிறது. மாணிக்கவாசகரின் “சிக்கெனப் பிடித்தேன்” என்கிற வரியை இந்த வகையில் சிந்தித்துப் பார்க்கலாம். பதிலிட இன்னொரு சொல் இல்லை என்பதுபோல நச்சென்று வந்து அமர்ந்துள்ளது அந்தச் சிக்கு.
ஔவை இங்கு “சிச்சீ” என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஒருவரைப் போலியாகப் புகழ்ந்து பேசி அவர் தயவால் உண்டு வாழ்வதைவிட உயிரைத் துறத்தல் உத்தமம் என்கிறாள். அப்படி வாழும் வாழ்க்கை பிச்சைக்கும் இழிவானது என்கிறார்.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்
இந்த உடம்பு என்பது ஒரு பை. இடும்மை தன்னை இட்டு நிறைக்கும் பை.
இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும் பொய்யை மெய் யென்றிராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
(இடுங் கடுக - விரைந்து ஈயுங்கள்)
உயிரின் நிலையாமை, யாக்கை நிலையாமை, ஈகையின் சிறப்பு, மானத்தின் மாண்பு, ஊழின் இயல்பு, நல்லொழுக்கத்தின் அவசியம் என்று பல்வேறு நீதிகளும் இந்நூலில் முன்வைக்கப்படுகின்றன.
எல்லாம் ஊழ் என்று சொல்பவள், வாழ்வதற்கான இத்தனை நீதிகளை ஏன் இவ்வளவு உரத்துச் சொல்ல வேண்டும்? ஊழின்படி கஞ்சனை இவள் ஏன் ஈயச் சொல்லி இப்படி வற்புறுத்துகிறாள்? ஊழின் காட்டாற்றில் அடித்துச் செல்லப்படுபவர்களைக் கண்டு ஏன் குய்யோ முறையோ என்று கூவுகிறாள்?
‘விதியே மதி’ என்று ஓங்கிச் சொல்பவள் அந்த மதியைத் திருத்த ஏன் இவ்வளவு சொற்களை வாரியிறைக்க வேண்டும்? மனிதன் நீதி தவறாது செம்மையாக வாழ வேண்டும். ஆனால் அப்படி செம்மை பிறழாமல் வாழ்பனுக்கு எல்லாம் செம்மையாகவே நிகழும் என்ற உறுதியில்லை. இந்த வாழ்வு அவ்வளவு எளிய டிசைனில் அமைந்திருக்கவில்லை. அங்குதான் ஊழ் என்கிற பெரும் ஆறுதலைக் கொண்டுவந்து வைக்கிறாள் ஔவை என்று தோன்றுகிறது. இந்த வாழ்வு ஒரு ஒழுங்கில் இல்லை. ஆனால் அதை ஒழுங்குக்குள் இழுக்கிறாள் நம் பாட்டி.
ஒருமுறை எங்கள் ஊர் பள்ளியைக் கடந்து செல்கையில் இந்தப் பாடல் வரிகளைக் கூட்டாக மாணவர் பாடுவதைக் கேட்டுக் கண்கலங்கி நின்றுள்ளேன். என்னை ஔவை பீடித்த கணங்களில் அதுவும் ஒன்று. அதை இப்போது எழுதும்போதும் அந்தச் சத்தம் காதில் விழுகிறது...
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
“இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்” என்கிற வரியைக் குழந்தைகளின் கூட்டுக் குரலில் கேட்கிற அனுபவம்... உறுதியாக அது ஆன்மிக அனுபவம்.
நீதிமன்றத்தில் உண்மைக்கு மாறாகப் பொய் சாட்சி சொல்பவனின் வீடு என்னவாகும் என்று சொல்கிறாள் ஔவை.
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை
ஓயாமல் நீதி சொல்லும்போதிலும் ஔவைக்கு இந்த எளிய உயிர்களின் எல்லையும் தெரிந்தே இருக்கிறது.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் அது இயலாது. சரி...
இரு நாளுக்கும் சேர்த்து உண்டுகொள் என்றால் அதுவும் இயலாது. என் துயரத்தை அறியவே அறியாத இடும்பைகூர் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது.
இந்த நூலின் காப்புப் பாடல் பலரும் அறிந்த ஒன்று. “பாலுந் தெளிதேனும்” என்று தொடங்கும் விநாயகர் துதி.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
ஒரு வித்வான் வாத்தியத்தை உருட்டுவது போல், இந்தப் பாடலில் ஒரு பாய்ச்சல் உள்ளதல்லவா?
“பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்” என்பது தினசரி வாழ்வில் அடிக்கடி கேட்க நேரும் ஒரு சொலவடை. அந்தப் பத்துக்கள் எவை?
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
சித்தர் பாடல்களைத் தவிர, நமது பழந்தமிழ்ப் பாடல்கள் பெண் வெறுப்பு பேசும் இடங்களிலெல்லாம் எனக்கு வெறுப்புக்குப் பதிலாகக் கிளுகிளுப்பே மேலெழுகிறது. ஏன் அப்படி என்று விளங்கவில்லை. ஒருவேளை நான் சீர்திருத்தவே இயலாதபடி சீரழிந்துவிட்டேனா?
‘தேனின் கசிவந்த சொல்லியர்’ என்கிற மதுரத்திற்குப் பிறகு ஒரு நீதி சொன்னால் அது நிற்குமோ, நிலைக்குமோ?
‘யோசனை தூரம்’ என்கிற சொற்கட்டை எவன் உருவாக்கியிருப்பான்? தூரங்களுக்கெல்லாம் தூர தூரம் அதுதான். எவ்வளவு நுட்பமான அளவுகோலுக்கும் சிக்காத தூரம். அவ்வளவு யோசனைகளுக்குப் பிறகும் வெடிக்காதிருக்கும் தலைக்குத்தான் என்ன ஒரு காருண்யம்?
“நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்”
என்கிறாள் ஔவை.
“எண்பது கோடி நினைப்புகள்” என்கிற வரியை வாசிக்கையில், “பாவம், இந்த மனிதப் பயல்கள்” என்று தோன்றிவிடுகிறது.
மூதுரை - நீதியின் அழகு
இந்நூல் காப்புப் பாடலின் முதல்வரியைக்கொண்டு “வாக்குண்டாம்” என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தம் முப்பது பாடல்கள். முழு நூலையும் கட்டுரைக்குள் இறக்கிவைத்திட ஆசைகொள்ளும் அளவு செறிவான பாடல்களால் யாக்கப்பட்டுள்ளன. “ஓடு மீன் ஓட”, “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”, “கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே”, “நெல்லுக்கிறைத்த நீர். . .”, “கான மயிலாட கண்டிருந்த வான் கோழி”, “கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”, போன்ற புகழ்மிக்க வரிகளை உடைய நூல்.
அயோக்கியர்களைக் குறித்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு உள்ளூர அயோக்கியத்தை நக்கிப் பார்க்கும் வேட்கை உண்டு என்று அடிக்கடி எனக்குத் தோன்றுவது உண்டு. பாட்டி சொல்கிறாள். “தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே.”
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார் சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோடு
இணங்கி யிருப்பதுவுந் தீது
“ஆகும் காலம்” என்று ஒரு காலத்தைத் தொடர்ந்து வலியுறுத்தும் ஔவை இங்கு “பருவத்தாலன்றிப் பழா” என்றும், “கருதியவாறாமோ கருமம்” என்றும் மனித உயிர்களின் கையறு நிலையைப் பாடிவைக்கிறாள்.
ஆசை கொண்டு, அதை அடையத் திட்டங்கள் பல வகுத்து, அதற்கு நெடுங்காலம் உழைத்து, நீ ஒரு கற்பக மரத்தை அடையலாம். ஆனால் அந்தக் கற்பக மரத்திலிருந்து காஞ்சிரங்காய் வந்தாலும் வரலாம். யார் கண்டது? நாம் கருதுவது போல் அல்ல, நமக்கு எழுதியது போலவே வாழ்வு.
எழுதியவாறே காண் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறாமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேன்
முற்பவத்தில் செய்த வினை
“குறிப்பறிய மாட்டாதவன் மரம்” என்கிறது ஒரு பாடல். இந்த வாழ்வு தந்த குறிப்பறியாது நான் மரம் என நின்றிருந்த பொழுதுகளையெல்லாம் கோத்துக்கொண்டு வந்து கண்முன் நிறுத்திவிட்டது இவ்வரி. இந்த நடுவயதில் அது தீராத ஏக்கமாக நெஞ்சை அரிக்கிறது. நாம் தவறவிட்ட எல்லாமும் நேராக நம் நெஞ்சுக்குள் விழுகின்றன.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன் மரம்
(சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் - சபையில் நீட்டப்பட்ட ஓலையை வாசிக்கவியலா அறிவற்ற மூடன்)
யாரோ ஒருவன் என்று நாம் தூர தூரமாக விளிக்கும் ஒருவன் உண்மையில் தூரத்திலில்லை. அவன் அவ்வளவு அண்மையில் நெருங்கி நம் உள்ளுக்குள் புகுந்துவிடுவதும் உண்டு.
எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன். மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியதும் அவன் அம்மா அவனைக் கட்டாயப்படுத்திக் குளிக்கவைத்து ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள். அது அம்மன் கோவில். மாரியம்மன். அம்மனுக்குத் திருவிழா நிறைந்திருந்த ராத்திரி. தாரை தப்பட்டைகள் இணைந்த தப்பாட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஐந்து பேர் வட்டமிட்டு இசைத்துக்கொண்டிருந்தார்கள். நடுவில் பெரிய திடும் ஒன்று அதிர்ந்துகொண்டிருந்தது. அந்தக் குழுவில் நெஞ்சு தெரிய பட்டனைக் கழற்றிவிட்டிருந்த கறுத்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் நெற்றியில் இறுக்கிக் கட்டியிருந்த மஞ்சளும் சிவப்புமான ரிப்பன், அவன் கறுப்பை மின்னச் செய்தபடி அவனோடு ஆடிக்கொண்டிருந்தது. அவன் எதிரே நின்றுகொண்டிருந்த அச்சிறுவனுக்குக் கால்கள் தரையில் நிற்கவில்லை. நின்ற கோலத்தில் துள்ளிக்கொண்டிருந்த அவனை அந்தக் கறுத்த இளைஞன் கண் சிமிட்டி அழைத்தான். சிறுவன் குழுவில் இணைந்தான். துடியில் இணைந்தான். களியில் இணைந்தான். அதுவரை அறியா ஆனந்தத்தில் கலந்தான்.
அது சாதி இறுக்கம் நிறைந்த பகுதி. அங்கு தாரை தப்பட்டை ஆதிதிராவிடர்களின் வாத்தியமாக இருந்தது. அவர்கள் காக்கி உடையில் இருந்தார்கள். அன்று அந்தச் சிறுவனும் பள்ளிச் சீருடையான காக்கியில்தான் இருந்தான். காக்கிகளுள் காக்கியாகக் கலந்து ஆட அவன் அம்மா அவனை எப்படி அனுமதித்தாள்? அனுமதித்தது மட்டுமல்ல; அதைப் பெருமையாகப் பலரிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாளே அது எப்படி? இன்றும் அவளால் சாதியை முழுமையாகக் கடக்க இயலவில்லை. ஆனால் அந்த நாளில் அவள் அதைச் சுத்தமாக மறந்திருந்தாள்.
ஆட்டத்திலிருந்து வீடு திரும்பியவன் அவ்வளவு புதியவன். புத்தம் புதியவன். அந்தச் சிறுவன் நான்தான். சாகுமளவும் உன் சகல பிணிகளுக்கும் இசைதான் மருந்து என்பதை என் நெஞ்சுக்குள் ஆழப்பதித்துவிட்டு மறைந்துவிட்ட அந்தக் கறுத்த இளைஞன் யார்? “யாரோ ஒருவன்” என்று எப்படி அழைப்பேன் அவனை!?
ஔவை சொல்கிறாள் . . .
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு
பிணி உன்னுள்ளே உள்ளது. ஆனால் அதைத் தீர்க்கும் மூலிகையோ மலைமேல் உள்ளது. அம்மருந்துபோல் சிலர் உன் வாழ்க்கையில் வரக்கூடும். அதைக் காண உனக்குத் திறந்த விழிகள் வேண்டுமல்லவா? ஆகவே உடன் பிறந்தார், சுற்றத்தார் என்று எல்லாவற்றுக்கும் அவர்களையே சார்ந்தபடி உன்னைக் குறுக்கிக்கொண்டு வாழாதே என்கிறாள் பாட்டி.
இந்த நூலில் பிரமாதமான உவமை ஒன்று உள்ளது.
விற்பிடித்து நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்
கயவர் சினம் கல் பிளந்ததுபோல. அது திரும்பவும் ஒட்டாது. சிலர் பொன் பிளப்பதுபோல் சினப்பர். ஒட்டினால் ஒட்டிக்கொள்ளும். ஆனால் சீரொழுகு சான்றோர் சினம் எப்படிப்பட்டது தெரியுமா? நீரைக் கிழித்துப் பாயும் அம்பின் வடு அப்போதே மறைந்துவிடுவதுபோல உடனே மறைந்துவிடும்.
நன்றி ஒருவற்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
நீ யாருக்கேனும் ஒரு உதவி செய்தால் அது நன்றியாக எப்போது திரும்பி வரும் என்று எண்ணிக் கொண்டிராதே! அந்தத் தென்னை மரத்தைப் பார்! அது தாளில் வாங்கிய நீரைத் தலையில் வைத்துத் தருவதில்லையா?
“தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்” என்கிற வரியில் எனக்குப் பூரித்துவிட்டது. தன்னோடு தாங்க முடிந்தால் அது என்ன பரவசம்? அந்த வரியைச் சில நண்பர்களுக்கு அனுப்பினேன். ஒரு நண்பனிடமிருந்து அதே பரவசத்தோடு ஒரு கெட்ட வார்த்தை வந்தது. அதே கெட்ட வார்த்தையால் உன்னை அர்ச்சிக்கிறேன் பாட்டி!
‘நீதியின் கவித்துவம்’ என்ன செய்ய நினைக்கிறது? அது நீதியை அழகாக்குகிறது. அழகு மனிதனைத் தீண்டத் தூண்டுகிறது. மனிதன் அழகைத் தொடுகிறான். நீதியைத் தொடுகிறான். நீதியின் அழகைத் தொடுகிறான்.