நாலடிப் பிரபஞ்சம்
ரூமியின் ருபாயியாத்
(கவிதைகள்)
தமிழில்: ரமீஸ் பிலாலி
வெளியீடு
சீர்மை பதிப்பகம்,
பு.எண் 280, ப.எண் 238/2
இரண்டாம் தளம்,
காயிதே மில்லத் சாலை
திருவல்லிக்கேணி, சென்னை- 5
பக். 324
ரூ. 520
ருபையாத் அல்லது ருபாயியாத்தை உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவியை ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி - இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்றால் அது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது.
சீர்மை பதிப்பகம் ‘ரூமியின் ருபாயியாத்’ தமிழாக்க நூலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஸூபித்துவம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் தொடர்ந்து இயங்கிவரும் ரமீஸ் பிலாலி ‘ரூமியின் ருபாயியாத்’களை பார்சி மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்.
நூலில் நானூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள்; தொடர்ச்சியற்ற கவிதைகள்; ஒவ்வொரு கவிதையும் ஒவ்வோர் அறை; ஒவ்வோர் அறையும் மிகப் பிரம்மாண்டமானது; அறையின் சிறு பகுதியின் தரிசனத்தை மட்டுமே பகிர்வதாக அதன் விவரிப்பு இருக்க முடியும். பிரபஞ்சத்தின் மொத்த அனுபவத்தை எப்படி நம்மால் வடித்திட முடியும்? ஒவ்வொரு துளியிலும் கடல் உள்ளது என்பார்கள். ஒவ்வொரு கவிதையிலும் பிரபஞ்சம்.
மஸ்னவித் தொகுப்புக்கும் ருபாயியாத் தொகுப்புக்கும் யாப்பு வடிவம் என்பதற்கும் மேலாக ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளதா என்று அறிய ஆர்வமாய் இருந்தது. ரூமியை ஆங்கில மொழிபெயர்ப்புகள் வாயிலாகவே அறிந்தவன் நான். ஒரு சாதாரண கவிதை வாசகராக ரூமியை அணுகுகிறேன்.
ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ரூமியின் ருபாயியாத்துக்கு அறிமுகப்படும் வாசகர், என்னைப் போலவே, ‘The Essential Rumi’ என்னும் ஆங்கில மொழியாக்கம் வாயிலாக ரூமியின் உலகத்துக்கு அறிமுகமானவராக இருப்பார் என்பது என் ஊகம். கஜினி மாமூதால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்து இளைஞன், அல்லது யாரை மணப்பது என்ற சிக்கலுக்குக் குழந்தைகளுடன் விளையாடும் ஷைக்’கிடம் ஆலோசனை கேட்கும் இளைஞன் போன்ற எண்ணற்ற கதைக் கருப்பொருட்களுக்குக் கவிதை நிறம் பூசி உலகின் கூட்டு நினைவில் நிரந்தரமாக நிலைத்து நிற்பவர் ரூமி.
மஸ்னவி நிறைய கதைகளைப் பேசுகிறது. உலகக் கவிஞர் என்னும் அவருடைய புகழ் மஸ்னவியின் கதை கூறும் தன்மையிலிருந்து எழுகிறது என்பது என் எண்ணம். கறுப்பு யானைகளின், கருங்கூந்தலின் கவிதைகளை நாம் வாசிக்கும்போது எழும் விறுவிறுப்பு, கதை வடிவத்தில் உள்நுழைந்து படிமங்களாக உலவிக் குறியீட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்லும் மாயம் ரூமியின் தனித்துவம். இதனைப் பிற கவிஞர்கள் செய்யவில்லையென்று கூற வரவில்லை. ஆனால் ரூமியின் வல்லமை தனித்துவமிக்கது. இன்று நவீன உலக வாசகரின் மனதிலும் எதிரொலிக்கத் தக்கதாய் உள்ளது.
ஒரு கதைப் பின்னணி. அது சமய மரபிலிருந்து பெற்ற தொன்மக் கதையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக் கையாளாமல் அதனை மறு ஆக்கம் செய்து மறு கூறலாகக் கவிதையைத் தொடங்குவார். அதன் சூழலைச் செயல்திறனோடு பயன்படுத்திக் கவிதையைச் செறிவாக்குவார். இறுக்கமில்லாமல் அனைத்துத் திசைகளிலும் சிதறும் கவித்துவத்தை, அழகியலைக் கருப்பொருளோடு நேர்த்தியாகச் சேர்க்கும் தருணம் அவருடைய மஸ்னவி கவிதைகளின் உச்சம்.
மஸ்னவி தரும் அனுபவத்தை ருபாயியாத் தரும் அனுபவத்தோடு ஒப்பிட முயல்கிறேன். உதாரணத்துக்கு ரூமியின் ஒரு ருபாயீயை (ருபாயியாத் பன்மை, ருபாயீ ஒருமை) ஆராய்வோம்.
ஈரானிய அமெரிக்க எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஸரா ஹோஷ்மண்டு பார்சியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ருபாயீ ஒன்று கீழ் வருவது:
I asked you for one kiss, you gave me six.
What teacher taught you, that you’re such an expert?
You’re so deep a source of goodness, so kind
That you’ve set the world free a thousand times. (Zara
Hoshmand, #1993)
மஸ்னவியின் அடிப்படைத் தன்மையான கதைப் பின்னணி இதில் இருக்கிறதா? இருக்கிறது. கதைசொல்லி ஓர் அனுபவத்தைப் பெறுகிறார். அதற்குப் பின்னர், பெற்ற அனுபவம் குறித்து அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தவரிடம் அல்லது அனுபவத்தில் பங்கு பெற்றவரிடம் தன் மகிழ்ச்சியை வார்த்தையால் பகிர விழைகிறார். அதன் மறுவிளக்கத்தை வாசகர்களிடமே விட்டுவிடலாம்!
மேற்சொன்ன கவிதையை ரமீஸ் பிலாலி பின்வருமாறு தமிழாக்கம் செய்கிறார்:
ஒன்றுதான் கேட்டேன்
ஆறு முத்தங்கள் தந்தாய்
இத்துணைத் திறமை காட்ட
யாரின் மாணவன் நீ?
எத்துணைக் கச்சிதமாய் அமைந்துள்ளது
நன்மையும் கருணையும் உன்னில்!
உலகம் உன்னால்
ஆயிரம் விடுதலைகள்
அடைந்துவிட்டது. (பக்கம் 266, 410.(#1993)
மூன்றாம், நான்காம் அடிகளை ‘காதலரின் விளையாட்டுத்தனம்’ தொனிக்க தமிழ்ப்படுத்தியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால் ரமீஸ் பார்சி மொழி தெரிந்தவர். சரிபார்க்கும் நோக்கத்துக்காக ஒரு துணையாக மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களைப் பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்கிறார். முன்னுரையில் அவர் கூறுவது “பார்சி மூலத்துடன் ஒப்பு நோக்கும்போது ஏ.ஜெ. ஆர்பெர்ரி, ஸரா ஹோஷ்மண்டு ஆகியோரின் ஆங்கிலப் பெயர்கள் பல இடங்களில் சரியாக இல்லையென்பதை உணர்ந்தேன். அத்தகு இடங்களிலெல்லாம் மூலத்தின் சொற்கள் தரும் வெளிச்சத்திலேயே என் தமிழாக்கம் அமையுமாறு பார்த்துக்கொண்டேன்.” (பக்கம் 11).
இன்னுமொரு ருபாயீயை ஆராய்வோம்!
உன்னை நினைவுகூர்ந்தால்
அந்த நினைவின் நடுவில்
நீயே இருக்கிறாய்
பேச வாய் திறந்தால்
அந்தத் திறப்பினில்
நீயே இருக்கிறாய்
களிப்படைகிறேன் எனில்
என் களிப்பின் ரகசியமாய்
நீயே இருக்கிறாய்
சாக்குப்போக்குத்
தேடுகிறேன்
அதைக் கற்பிக்கும்
ஆசானாய்
நீயே இருக்கிறாய். (பக்கம் 265, 409. #1992)
இதுவும் முன்பு மேற்கோள் காட்டிய கவிதை போலவே ஒலிக்கிறது. சிலேடைக் கவிபோல ஒலிக்கும் இக்கவிதையின் உள்ளுறை பொருள் சூபிஸத்தின் இறைவனை நினைவுகூர்தல் (Dhikr) என்னும் தியான சடங்கை விவரிக்கிறது. கடவுளை நினை, அவன் நாமத்தை உச்சரி, கடவுளின் உள்ளார்ந்த ஞானத்தில் லயித்திரு, சாக்குப்போக்குச் சொல்லாதே.
கதைப் பின்னணி இதில் காணப்படுகிறதா? சற்று யோசித்தால் இதன் கதைப் பின்னணி நமக்குப் புரிந்துவிடுகிறது. நேரடியான பொருள் தமிழ்ச் சங்க இலக்கிய வகைமையாகிய ‘அகம்’ எனும் வகைமையில் வரும் என்பதால் கதைப் பின்னணியைக் குறிப்பால் பின்னிவிட முடிகிறது!
உன் வேதனையின்
எரிச்சலிடமிருந்து
ஒரு தகனம் தேடுகிறேன்
உன் வாசலின்
புழுதியிலிருந்து
ஒரு கம்பளம் தேடுகிறேன்
துயரங்கள் அடைந்துவிட்டேன்
போதும்போதும் என்ற அளவு
உன் சகவாசத்தில் இப்போது
மகிழ்ச்சியைத் தேடுகிறேன்.
(பக்கம் 182, 245 #1133)
வேதனையின் எரிச்சலிலிருந்து விடுதலை பெறத் தகனம் ஏன் வேண்டுகிறான் கவிதை சொல்லி? “அனைத்துக் கட்டுப்பாட்டையும் தாண்டிய ஆற்றலான காதல் ஒரு தீ, காலிபே! அதனை இஷ்டப்படி அணைக்கவோ மூட்டவோ முடியாது” என்னும் மிர்ஸா காலிப் பின் வரிகள் நினைவில் வருகின்றன.
காதலின் ஏழு நிலைகளில் கடைசி நிலையான ‘மௌத்’ (அழிவு - சுயத்தின் குறியீட்டு அழிவு) அடைவதற்கு முன்னம் - போற்றுதல், வழிபாடு, பித்து - இவற்றை அனுபவிக்க வேண்டாமா? புழுதியிலிருந்து அவன் ஏன் கம்பளம் வேண்டுகிறான்? வழிபாட்டின் குறியீடா கம்பளம்? சகவாசம் (companionship) தான் கவிதை சொல்லியின் இறுதி இலக்கா? அவன் கம்பளத்தினூடே வேண்டுவது சகவாசம்; இறைவனுடனான சகவாசம். ரூமியின் ருபாயியாத்தும் மஸ்னவிபோலக் கதையனு பவத்தினூடே எழும் கவித்துவத்தை வாசகருக்கு நல்குகிறது.
ருபாயியாத் எனும்போது ரூமியை உமர் கய்யாமோடு ஒப்பிடும் ஆர்வமும் மேலெழுகிறது. பொதுவாக நோக்குகையில் போகத்தைக் கருப்பொருளாக அதிகம் கையாளும் உமர் கய்யாம் தனது கவிதைகளின் வாயிலாக அதிகம் சிந்தித்தது - அழிவு, இறப்பு, அர்த்தமிகு வாழ்க்கை வாழும் வழிமுறைகள், நிலையாத்தன்மை, தற்காலிகத்தன்மை ஆகியன.
இதற்கு மாறாக, ரூமியின் கவிதைகள் தெய்வீக, மறைஞானக் கருப்பொருட்களைக் கையாள்கின்றன; காதலரை வர்ணிக்கின்றன. கவிஞரே ஒரு காதலராக இக்கவிதைகளில் பேசுகிறார். காதலர் தான் காதலிப்பவரை வர்ணிப்பது போல ரூமியின் ருபாயியாத்துகள் ஒலிக்கின்றன. ரூமியின் கவிதைகளில் காதலிக்கப்படுபவர் இறையாகவே அர்த்தங்கொள்ளப்படுகிறார்.
சீர்மை வெளியிட்டுள்ள ரூமியின் ருபாயியாத் நேரடியாக பார்சி மூலத்திலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்டுள்ள அரிய தொகுப்பு. அடிக்குறிப்புகள் அளிக்கும் விளக்கம் கவிதைப் பொருள் கோடலில் மிகவும் உதவுகிறது. பார்சி மூலத்தின் தமிழ் transliteration-ஐயும் நூலில் இணைத்துள்ளது தமிழ் வாசிப்புப் பரப்புக்கு மொழிபெயர்ப்பாளரின் முக்கியப் பங்களிப்பு.
மின்னஞ்சல்: hemgan@gmail.com