வாசம்
ஓவியம்: ஆதிமூலம்
வாசம்
எழுந்து கனைத்தது
பறக்கத் தயாரானது
ஐயனார் கோயில்
வண்ணக் குதிரை
வயதுக் கணக்கேதும்
இல்லை
உற்சாகம் புரிந்தது
உற்பதம் பார்த்து
பேரண்டத்தின்
அத்தனை அழகுகளிலும்
நீந்திக் கரைந்து
தன்
சொந்த இடத்திற்கே
வந்து உட்காரும்
வல்லமை முக்கியமானது.
உச்சி வெயிலில்
பரவிக் கிடக்கும்
நீள் நிழலில்
அவசரமாகப்
புணர்ந்துகொண்டிருந்த
இளசுகளைப் பார்த்து
ஒரு நிமிடம்
வெட்கம் காத்தது
ஒரு கொலைகாரன்
குருதி வழிய
அரிவாளோடு
காலடியில்
ஒண்டிக்கொண்டபோது
மௌனம் போற்றியது
பெருமழையில்
கொஞ்சம் வர்ணமும்
அழுக்கும் கரைந்து
வாய்க்காலாய்
ஓடியபோது
சலனமற்றுப் பார்த்தது.
தலைக்குமேல்
சின்ன குருவி
உச்சந்தலையில்
எச்சமிட்டு
வாலாட்டியபோது
சிநேகம் பேணியது
எழுந்து பறக்க
அடிக்கடித்
தயாராகும் குதிரை
அப்படியே நின்றது
யுகம் தாண்டியும்.