கடிதங்கள்
அன்புள்ள காலச்சுவடு ஆசிரியருக்கு
வணக்கம். வாசகர் கடிதம் பக்கத்தைக் கடந்த சில இதழ்களில் தொடர்ந்து கிடைக்கக் காணோம்.
இனிவரும் இதழ்களில் பார்க்க முடியுமா என்றும் தெரியவில்லை.
கோபாலகிருஷ்ணன்
மின்னஞ்சல் வழி
ஜூன் 2024 இதழில் வெளிவந்த அரவிந்தனின் சத்திய சோதனை சிறுகதையை வாசித்தேன்; எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சாம்பசிவன் என்பவர் முற்றிலுமான உண்மைகளைக் கடைபிடிக்க முடியாமல் தவித்த தவிப்பை நன்றாக உணரமுடிந்தது.
ஜென் அடிப்படையில் சொன்னால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முன்தயாரிப்புடன் இருப்பதே அவரது குழப்பத்திற்குக் காரணம் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். ஆனால், சராசரி நபர்களால் இதை விளங்கிக்கொள்ள முடியாது என்பதும் புரிகிறது.
நவீன காலத்தில் ஒவ்வொருவரும் இதுபோன்று ஒவ்வொரு பிரச்சினையை வரித்துக்கொண்டு, திரும்பத் திரும்ப அதையே சிந்தித்து உளச்சிக்கல்களுக்கு ஆளாவதை நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அலுவலகத்திற்குப் புறப்படும்போது மனைவியுடன் சேரும் அவரது பலவீனமான மனதை எளிதாகக் காணமுடிகிறது; எனவே, அவர் உறுதியில்லாமல் தடுமாறுவது நியாயம்தான். வழி கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. மறந்துவிட்டேன், கவனிக்கவில்லை, பிடிக்கவில்லை, நன்றாக இல்லை, வேண்டாம் என்னும் பதில்களை எவ்வளவு நாசூக்காகச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. இந்த வரிகளே அவர் ஏன் யாரிடமும் தன் மனவுலைச்சலைப் பகிர்ந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறார் என்பதைச் சுட்டுகிறது.
சாம்பசிவனுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிற பலவீனத்தைப் போல், மற்றவர்களுக்கும் வெவ்வேறு விஷயங்களில் ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்கிறது. மற்றபடி இது எத்தனையோ நபர்களைக் குறிப்பிட்டுக் காட்டும் கதை.
இப்படியொரு படைப்பைக் கொடுத்து சிந்திக்கச் செய்ததற்கு நன்றி..
சங்கர் என்.கே
கோபிசெட்டிப்பாளையம்