நீட்: மறுபடியும் முரண் விவாதத்தில்...
‘நீட் தேர்வு மீதான மாணவர்களின் குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை. ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் சமூகத்தில் அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். நீட் முதலான தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உழைப்பையும் நேர்மையான முயற்சிகளையும் உண்மையான லட்சியங்களையும் இதுபோன்ற மோசடிகள் முறியடித்துவிடும்...’
இது 18.06.2024 அன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்து. பொத்தாம் பொதுவான தத்துவப் பேச்சல்ல இது. உரிய, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, அதன் காதுகளை நோக்கி உரத்துச் சொன்ன வார்த்தைகள். ‘மோசடி’ என்ற சொல் அதில் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. நீட் தேர்வில் மோசடியா என்று சிலரால் நம்ப முடியாததாக, சிலரால் செரிக்க முடியாததாக, சிலருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகக்கூட இருக்கலாம். காரணம், நீட் தேர்வு மருத்துவக் கல்லூரி மாணவர் அனுமதியில் நிலவும் முறைகேடுகள், மோசடிகளைக் களைவதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும் என்ற பரப்புரை. ஆனால் நீட் தேர்வானது புதிய மோசடிகளுக்கான வாசல்களைத் திறந்திருப்பது ந