அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருது, இலக்கியமும் அரசும்
அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருது
2021ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது, எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ (2019) என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.பாலின அடையாளங்களைத் தாண்டி நிற்பவை அவருடைய பங்களிப்புகள். எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது இந்த அங்கீகாரம். இப்போதாவது கிடைத்திருக்கிறதே என்று பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவருடைய தொடக்க காலம் தொடங்கி இன்றுவரையிலும் படைப்பூக்கம் குன்றாமல் எழுதிவருவது இந்த விருது குறித்த மதிப்பை மேலும் அர்த்தப்படுத்தியிருக்கிறது. விருது பற்றிய முணுமுணுப்புகள் எழாமல் செய்திருக்கின்றன அவருடைய தொடர்ச்சி குன்றாத பங்களிப்புகள். தமிழில் பெண்ணெழுத்து என்ற தனி வகைமை அழுத்தம் பெறாத காலத்தில் தனித்துப் போராடி வந்தவராக அவர் இருந்திருக்கிறார். அந்தப் போராட்டங்களில் எத்தனையோ அவதூறுகளையும் காயங்களையும் அவர் ஏற்று வந்திருக்கிறார். அந்த அளவிற்கு அவரின் பங்களிப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
படைப்பிலக்கியம் சார்ந்து இந்த விருது கிடைத்திருந்தாலும் அவருடைய பங்களிப்புகள் படைப்பிலக்கியம் சார்ந்தவை மட்டுமல்ல. ஆங்கிலத்தில் அவர் பெண் பார்வை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். அவை EPW போன்ற ஆய்விதழ்களில் வெளியாகி விவாதங்களையும் கிளப்பியிருக்கின்றன. குறிப்பாக, தமிழுக்கு வெளியே தமிழ்சார்ந்து விமர்சனப்பூர்வமான பார்வைகளை முன்வைப்பவராக அவர் இருந்திருக்கிறார். பெண் எழுத்தாளர்களையும் வேறு துறைகளில் இயங்கிய பெண் ஆளுமைகளையும் தேடித் தேடி அவர் ஆவணப்படுத்தியிருக்கிறார். அதன்வழி SPARROW (Sound and Picture Archives for Reserch On women) என்ற அமைப்பையும் ஏற்படுத்தி அதன் இயக்குநராக இருந்து வருகிறார். பெண்களுக்கான வரலாற்று ஆவணக்காப்பகமாக அதனைத் தக்க வைத்திருக்கிறார். The Face Behind the mask - Women in Tamil literature (1984) அவருடைய மிக முக்கியமான ஆராய்ச்சி நூலாகும்.
SPARROW சார்பாகத் தமிழிலும் தமிழுக்கு வெளியிலும் இயங்கும் படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் விருதுகளையும் வழங்கி வருகிறார். அவ்விருதுகள் மதிக்கத்தக்கவையாகக் கருதப்படுகின்றன.அவர் மும்பையில் வசித்தாலும் தமிழ் எழுத்தாளராகவே தன்னைத் தக்கவைத்து வருவதோடு தமிழ்ப் பண்பாடு பற்றித் தமிழுக்கு அப்பால் பேசவும் எழுதவும் செய்து வருகிறார்.
எழுத்தில் ஆண் பெண் பேதம் எல்லாம் இல்லை; இது அவர் கருத்து என்றாலும் ஒரு பெண் எழுத்தாளராக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பதையும் நாம் சேர்த்தே பாராட்ட வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக நிலவிய இந்தப் பாகுபாட்டினைக் களைய முன்வந்திருக்கும் சாகித்திய அகாதெமிக்குப் பாராட்டுகள். பிரதிநிதித்துவச் சலுகைகளைக் கோராமல் சமூகத்தின் பல்வேறு தளங்களில் முக்கியமான குரல்கள் இயல்பாகவே எழுந்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பரந்துபட்ட அளவில் அத்தகைய குரல்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும்; இதுவே நம் எதிர்பார்ப்பு.
காலச்சுவடு சார்பாக அம்பைக்கு வாழ்த்துகள்.
இலக்கியமும் அரசும்
அண்மையில் தமிழக அரசு பெரியார், அம்பேத்கர் விருதுகளை முறையே க. திருநாவுக்கரசுவுக்கும் நீதிபதி கே. சந்துருவுக்கும் வழங்குவதாக அறிவித்தது. பொருத்தமான தேர்வுகள் என்ற பாராட்டுகளையும் வரவேற்பையும் இவ்விருதுகள் பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதிலிருந்து பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஆக்கபூர்வமான தன்மைகளைக் காண முடிகிறது. குறிப்பாக, நவீன தமிழிலக்கியம் குறித்த ஆரோக்கியமான அணுகுமுறைகளை இந்த அரசு கைக்கொள்கிறது. தமிழ்நாட்டில் பொதுவாக, அரசியல்வாதிகளுக்கும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் இறுதி மரியாதையைத் தமிழின் முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு அரசு வழங்கியது. சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தைப்போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல், எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கும் அறிவிப்பு, சாகித்திய அகாதெமி போன்ற விருதுகளைப் பெறும் எழுத்தாளர்களுக்கு இலவச வீடு அளித்தல் முதலான அறிவிப்புகளையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.
இந்தப் பின்னணியில் அரசுக்குச் சில யோசனைகளை முன்வைப்பது பலனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. கேட்பதற்கான காதுகள் திறந்திருக்கும்போது எழும் குரல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்னும் நம்பிக்கையுடன் இந்த யோசனைகளை முன்வைக்கிறோம்.
கலைமாமணி விருதுகளில் எழுத்தாளர்களுக்கும் பங்கீடு உண்டு என்றாலும் திரைக் கலைஞர்களின் கூட்டத்தில் அவர்கள் காணாமல்போய்விடுகிறார்கள். சிறந்த எழுத்தாளர்கள், நூல்களுக்கான விருதைத் தமிழக அரசு வழங்குகிறது. ஆனால் அது அரசுக்கும் விருதுபெறும் எழுத்தாளர்களுக்குமான தனிப்பட்ட விவகாரம்போலச் சலனம் எதையும் எழுப்பாமல் அரசு ஆவணங்களுக்குள் சில வரிகளாக உறைந்துபோகிறது. தமிழில் ஒவ்வோர் ஆண்டும் பொருட்படுத்தத்தக்க விதத்தில் குறைந்தது ஐந்நூறு நூல்களாவது வருகின்றன. இந்த நூல்களைப் பரிசீலித்துச் சிறந்த நூலுக்கு விருது வழங்கும் ஏற்பாடு தமிழக அரசிடம் இல்லை. நூல்கள் என்று இல்லாமல் படைப்பாளிகள் என்று பார்த்தால் குறைந்தது கால் நூற்றாண்டுக் காலமாக இயங்கிவரும் முக்கியமான படைப்பாளிகள் ஐம்பதுபேராவது இருப்பார்கள். இவர்களுடைய ஒட்டுமொத்தப் பங்களிப்பை மதிப்பிட்டு விருதின் மூலம் அங்கீகாரம் அளிக்கும் திட்டமும் தமிழக அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழக இலக்கியத்தைப் பொறுத்தவரை அரசு சாராத அமைப்புகள் சிறந்த நூல்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகளை வழங்கிவருகின்றன. அமெரிக்கவாழ் தமிழகத்தவர்கள் தோற்றுவித்த ‘விளக்கு விருது’ இவற்றில் முக்கியமானது. ஒவ்வோர் ஆண்டும் சாகித்திய அகாதெமி விருது யாருக்கு என்னும் எதிர்பார்ப்பு எழுவதைப்போலவே விளக்கு விருதுகள் யார் யாருக்கு வழங்கப்படுகின்றன என்னும் எதிர்பார்ப்பும் எழுகிறது. இவ்விருதுகளைப் பெறுபவர்கள் அதற்கென நியமிக்கப்படும் தேர்வுக் குழுவினரால் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இந்த விருதுக் குழுவினரின் தேர்வுகள் எந்த விருதுக் குழுவின் தேர்வுகளையும் போலவே விவாதத்துக்குள்ளாவதுண்டு என்றாலும் பெருமளவில் மதிப்பைப் பெற்ற விருதுகளாகவே இவை திகழ்கின்றன. இப்படிப்பட்ட விருதுகளை நிறுவி, பல தரப்புகளிலிருந்தும் இலக்கிய ஆளுமைகளைத் தேர்வாளர்களாக நியமித்துச் சிறந்த நூல்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகள் வழங்கும் வழக்கத்தைத் தமிழக அரசு ஏற்படுத்தலாம்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் சாகித்திய அகாதெமி, பாரதிய ஞானபீட நிறுவனத்தால் வழங்கப்படும் ஞானபீடம் ஆகிய விருதுகள் தொடர்பாகச் சர்ச்சைகள் எழாமல் இல்லை. ஆனால் ஆளுங்கட்சியின் பாரபட்சம் என்னும் பெயரை இந்த விருதுகள் இன்றுவரை பெறவில்லை. அதற்குக் காரணம் நிதி ஒதுக்கீடு, அத்தியாவசியமான நிர்வாகச் செயல்பாடுகள் ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் மத்திய அரசின் அல்லது ஞானபீட நிறுவனத்தின் தலையீடுகள் இவற்றில் இருப்பதில்லை; ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதில்லை. எனவே இந்த விருதுகள் இலக்கிய விருதுகளாகவும் இவற்றை ஒட்டி நடக்கும் விவாதங்கள் இலக்கிய விவாதங்களாகவும் மட்டுமே இருக்கின்றன.
கேரள மாநிலத்தில் கேரள சாகித்திய அகாதெமி என்ற விருதை மாநில அரசு நிறுவி வழங்கிவருகிறது. மத்திய சாகித்திய அகாதெமிக்கு இணையான, சொல்லப்போனால் அதைக் காட்டிலும் அதிக மதிப்பு இந்த விருதுக்கு இருக்கிறது. இத்தகையதொரு தனித்துவமான அதிகாரமுடைய பண்பாட்டு நிறுவனத்தைத் தமிழக அரசும் நிறுவி, அதன்வழி தேர்வுக் குழுவினரை நியமித்துச் சுயமாக விருதுக்குரிய எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அவசியமான அதிகாரத்தினை வழங்க வேண்டும். சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களுக்குத் தமிழக அரசு கூடுதல் கௌரவமும் சன்மானமும் வழங்குவது நல்ல திட்டம்தான். ஆனால் தமிழக அரசு தன்னுடைய முன்முயற்சியில் படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகளை வழங்குவதற்கான அமைப்பை ஏற்படுத்துவது அதைக் காட்டிலும் சிறந்த திட்டம்.
எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விஷயத்தில் கேரளம் முதலான சில மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியிருக்கும் தமிழ்நாடு அந்த நிலையை மாற்றுவதற்கான காத்திரமான செயல்பாடுகளை இப்போது மேற்கொண்டுவருகிறது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்லும்விதமாகத் தமிழக அரசு தமிழுக்குத் தொண்டு செய்யும் பல துறையினருக்கான விருதுகளை நிறுவி, அவை முழுக்கமுழுக்க அறிவுலகச் செயல்பாடாகவே இருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம், கட்சி, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகச் சமூகத்திற்கான பங்களிப்பை முன்னிறுத்தி இவ்விருதுகள் வழங்கப்பட வகை செய்வது மிகப்பெரும் பங்களிப்பாக இருக்கும்.