ஆடாத கால்கள் உண்டா?
ஆடாத கால்கள் உண்டா?
த. சாவித்ரி
பிராய்லர் கோழிப்பண்ணைகளும் கொள்ளை மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் பள்ளிகளும் கல்லூரிகளும் மலிந்திருக்கும் நாமக்கல் நகரில் தமிழிசை நிகழ்வுகள் நடப்பதே வியப்புக்குரியது.
2021 டிசம்பர் 24ஆம் தேதி மாலையில் நாமக்கல், திருச்சிச் சாலையில் உள்ள நளா விடுதி அரங்கத்தில் ‘இயல் இசை’ என்னும் தலைப்பிட்ட தமிழிசைக் கச்சேரியைக் ‘கூடு’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெருமாள்முருகன் எழுதிய கீர்த்தனைகளைக் கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணா, பாடினார். கொரோனாப் பெருந்தொற்றுக்காலப் பொதுமுடக்கம் 13-04-2021இல் நடக்கவிருந்த இந்த நிகழ்வையும் முடக்கிப்போட்டதால், 24-12-2021இல் நடைபெற்றது. கூடு அமைப்பு, டி.எம்.கிருஷ்ணாவின் தமிழிசைக் கச்சேரியினை ஏற்கெனவே 2017இல் நடத்தியிருந்தது.
‘கூடு ஆய்வுச் சந்திப்பு’, 2005ஆம் ஆண்டு முதல் நாமக்கல் நகரில் நடத்தப்படும் இலக்கிய ஆய்வுச் சந்திப்புக் கூட்டமாகும். ஓர் ஆய்விதழையும் அது வெளியிட்டு வருகின்றது.
இந்த நிகழ்வின் தொடக்கவுரையில் பெருமாள்முருகன் ‘நாமக்கல்லில் இதுபோன்று இசை நிகழ்வுகள் நடப்பது அரிது. பதினைந்து ஆண்டுகளுக்கும் முன் நரசிம்மசாமித் தேரோட்டத்தின்போது ஜேசுதாஸின் இசைக்கச்சேரி நடைபெற்றது’ என்றார். சிறப்பானதொரு நிகழ்வைக் கூடு முன்னெடுத்துள்ளதென அப்போதுதான் உணர்ந்தேன்.
பாடத் தொடங்கும் முன், சிறு உரையொன்றை டி.எம். கிருஷ்ணா நிகழ்த்தினார். கர்நாடக இசைக்குப் பாட்டெழுதத் தனி யாப்பு வடிவம் உள்ளதா? பாடல்கள் கீர்த்தனைகளாக எப்போது வடிவம் பெறும் போன்ற பல வினாக்களுக்கு அவ்வுரை விடைகளைத் தந்தது. பாடல் பாடுவது மட்டுமல்ல. பாடலுக்குள், சொற்களுக்குள் சென்று அவற்றைப் பிரித்து ராகத்தையும் மொழியின் அழகையும் தேடுவதே கர்நாடக இசை என்றார். இவ்வுரை கர்நாடக இசையில் தமிழ்ப்பாடல்களைப் புரிந்துகொள்ளும் திறவுகோலாக இருந்தது.
கர்நாடக இசையறிந்தோர் சிலர் நிகழ்வுக்கு வந்திருந்தனர். பெரும்பாலானோர் கர்நாடக இசை குறித்துப் புதிதாக அறிந்துகொள்ள வந்திருப்பவர்
களாகவே இருந்தனர். கிருஷ்ணா ஒவ்வொரு பாடலையும் பாடும் முன் ராகத்தையும் தாளத்தையும் கூறிவிட்டு ‘இதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்காகக் கூறுகிறேன்’ என்றார். அச்சொற்கள், இங்கே வா, வந்து தொட்டு விளையாடு, ஒன்றும் செய்யாது என ஒரு குழந்தைக்குப் பொம்மைகளைப் பழக்குவதுபோல, அவ்விசையோடு நம்மைப் பயணிக்க அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையாகவே இருந்தன. கிருஷ்ணா காற்றை மீட்டியும் இசைக்கலைஞர்கள் கருவிகளை மீட்டியும் தமிழிசைக்குள் அழைத்துச்சென்றனர்.
இந்த நிகழ்வில் மாடு, சிட்டுக்குருவி, தமிழ், தென்றல், இருள், சுதந்திரம், அம்பேத்கர் ஆகிய பாடுபொருளைக் கொண்ட பாடல்களையும் நெஞ்சுக்குக் கூறுவதுபோல “நெஞ்சமே அஞ்சாதே நீ”, “நெஞ்சைக் கிழித்துக் காட்டுகின்றேன்”, “உயிர்காக்கும் மருந்தே” என்ற விருத்தப்பாடல் ஆகியவற்றையும் பாடினார். தொடர்ந்து இரண்டரை மணிநேரம் பத்துத் தமிழ்ப் பாடல்களைப் பாடினார்.
“நெஞ்சமே அஞ்சாதே நீ”, என்ற கீர்த்தனையில் தொடங்கி, “கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்” என்ற காவடிச்சிந்தில் நிறைவுசெய்தார். “நெஞ்சைக் கிழித்துக் காட்டுகின்றேன்” என்ற கீர்த்தனை சட்டென மனத்தைக் கனமாக்கியது. கண்களை மூடி அந்தப் பாடலில் லயிக்கச் செய்தது. முந்தைய பாடலின் வெறுமை உணர்விலிருந்து, அடுத்துப் பாடிய “சுதந்திரம் வேண்டும்” என்ற பாடல் சட்டென்று வெளியே அழைத்துவந்தது. அம்பேத்கர் குறித்த, “கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்” என்ற கீர்த்தனை நாங்கள் அறிந்த இசைவடிவமான காவடிச்சிந்தில் அமைந்திருந்தமையால் உற்சாகம் எழ நிகழ்வு நிறைவடைந்தது.
பெருமாள்முருகனின் கீர்த்தனைகள் சட்டெனப் படித்துவிடக் கூடியனவாக இருந்தன. ஆனால் பாடக் கேட்கும்பொழுது நீண்டநேரத்தைத் தனதாக்கி, ஒவ்வொரு சொல்லிற்குள்ளும் எழுத்துக்குள்ளும் இசையுண்டு என எண்ணும்படி அமைந்தன.
மேடையமைவுப் பாடகரை மட்டும் மையப்படுத்தாமல் மற்ற இசைக்கலைஞர்களையும் முக்கியப்படுத்தும் வகையில் வட்ட முக்கால் வட்ட வடிவில் அமைந்திருந்தது. அது மட்டுமல்ல இசைநிகழ்வும் குரலிசையோடு பிற இசைக்கருவிகளின் தனித்தன்மையை அறிந்துகொள்ளும்படி இருந்தது. பாடகருடன் இணைந்து பாடிய இன்னொரு குரலைப் போலவே சாயி ரக்ஷித்தின் வயலின் இசை. கடம் வாத்தியக்கலைஞர் என். குருபிரசாத்தும் கஞ்சிராக் கலைஞர் அனிருத் ஆத்ரேயாவும் நீண்டநேரம் எதிரிசை வாசித்தனர். கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக
இருந்தது. அங்கு வாசித்த எதிரிசையின் இசைநுணுக்கங்கள் அறியாதோரும் வியப்பு மேலிட ரசிக்கும்படி
இருந்தது.
‘கூடு’ நிகழ்த்திய முதல் இசைக்கச்சேரியைக் கண்டபின் வலையொளியில் பலமுறை அதே இசைப்பாடல்களைக் கண்டிருக்கிறேன். இந்த முறை பாடிய கீர்த்தனைகள் சிலவற்றையும் ஏற்கெனவே வலையொளியில் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரடியாக இசைக் கச்சேரியைக் காண்பதற்கும் காணொளியில் காண்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது. அது அருவியைக் காணொளியில் காண்பதற்கும் அருவியில் நீராடுவதற்குமான வேறுபாடு.
நன்றியுரை ஆற்றிய கோபி ‘நானறிந்த பறையிசை மட்டும்தான் பெரிய இசை, அதற்கு ஆடாத கால்களில்லையென்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் நான் கேட்டறியாத கர்நாடக இசைக்கருவிகளும் பல மணிநேரம் இருந்த இடம்விட்டு அகலவிடாமால் கவர்ந்திழுத்து நம்மை ஆடவைக்கும் என்று இந்த நிகழ்வில்தான் அறிந்தேன்’ என்று கூறியபோது அக்கருத்தை மனத்திற்குள் நானும் ஒப்புக்கொண்டேன்.