ஒரு மாயவரத்துச் செய்தி
ஒரு மாயவரத்துச் செய்தி
ப. சகதேவன்
மாயவரம்:
சில நினைவுகளும்,
சில நிகழ்வுகளும்
சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம்,
77, 53-வது தெரு,
அசோக் நகர், சென்னை.
பக். 230
ரூ. 220
1992ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் லண்டன் நகரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிலையைத் திறந்துவைக்க எலிசபெத் மகாராணியார் வந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ட்ரெஸ்டென் உட்படப் பல நகரங்கள்மீது குண்டு வீசிப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஏர் கமாண்டர் ஆர்தர் ஹேரிசின் சிலைதான் அது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். எல்லாருமே சிலைத்திறப்பினால் சந்தோஷப்பட்டவர்கள் அல்லர்; சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள்: ‘ஹேரிஸ் ஒரு கொலைகாரன்… கொலைகாரனுக்கு எதுக்கு மரியாதை’ ‘ ட்ரெஸ்டன் நகரத்து மக்களே! எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கோஷமிட்டார்கள். இதே வாசகங்கள் கொண்ட பலகைகளையும் தூக்கிப்பிடித்திருந்தார்கள்.
ஆறரை லட்சம் மக்கள்தொகைகொண்ட ஜெர்மனியின் ட்ரெஸ்டென் நகரில் 1945 பிப்ரவரி 13-15ஆம் தேதிகளுக்கிடையில் நேச நாட்டுப்படையைச் சேர்ந்த அமெரிக்க பிரித்தானிய ராணுவங்கள் சுமார் 3,900 டன் எடையுள்ள வெடிகுண்டுகளை வீசி அந்த நகரத்தையே நிர்மூலமாக்கின. பிரித்தானியப் படைக்குத் தலைமை தாங்கியவர்தான் ஹேரிஸ். இத்தனைக்கும் அதுவரை நடந்துவந்த இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்து நேசப்படைகளின் வெற்றி உறுதியாகியிருந்த சமயம் அது. போருக்குப் பின் நடந்த விவாதங்களில் இது அறம் மீறிய செயல் என்று ஒரு தரப்பினர் விவாதித்தார்கள். இக்குண்டு வீச்சில் உயிரிழந்தவர் தொகை என 25,000இலிருந்து இரண்டுலட்சம்வரை கணக்குச் சொல்லப்பட்டது. போரிலேயே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நகரம் என்று இதைச் சொல்ல வேண்டும். ஹிட்லரின் நாசிசம் இத்தகைய, இதற்கும் மேலான அநியாயங்களைச் செய்திருந்தது தான். பௌதீக ரீதியாகவும் மானசீகமாகவும் அவர் நாசப்படுத்திய நகரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ட்ரெஸ்டென் உலகத்திலுள்ள மிக அழகான நகரங்களில் ஒன்று.. மிகச் சிறந்த கலைப்பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் இடம். தொழில் நகரம்; கட்டடக்கலையின் மேன்மையை வெளிக்காட்டும் பல மண்டபங்களும் தேவாலயங்களும் கொண்ட நகரம். இப்போது எல்லாவற்றையும் இழந்து சுடுகாடாகிவிட்டது. அந்தச் சமயத்தில் அங்கு வாழ்ந்திருந்த மக்கள் எந்த அளவுக்குத் துன்பப்பட்டிருப்பார்கள்? ட்ரெஸ்டெனுக்கு ஆத்மா என்று ஒன்று இருந்திருந்தால் அப்போது அது சிந்திய கண்ணீரின் வெப்பத்தை எத்தனைபேர் உணர்ந்திருப்பார்கள்? இப்போது எல்லாம் வரலாறாகி விட்டது.
ஒவ்வோர் ஊருக்கும் ஒரு மனச்சாட்சி உண்டு, ஒரு ஆத்மா உண்டு என்று கண்டுபிடிப்பதுவும் வரலாற்றுணர்வின், வரலாற்று ஆய்வின் ஒரு பகுதிதான் அது என்ன என்று கூர்ந்துபார்க்கும் ஆசை சிலபேருக்கு மட்டுமே வருகிறது. சந்தியா நடராஜன் அப்படிப்பட்ட மிகச்சில பேரில் ஒருவராக இருக்கிறார். அவரது ‘மாயவரம்: சில நினைவுகளும், சில நிகழ்வுகளும்’ புத்தகம் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய வகையைத் தோற்றுவித்திருக்கிறது.
ரா.பி. சேதுப்பிள்ளை இந்த இலக்கியவகைக்கு ஒரு முன்னோடியாக இருந்தார். அவரது ‘ஊரும் பேரும்’ புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதே மாதிரி இல்லாவிட்டாலும் அதையொட்டியே எழுதப்பட்ட ‘ஆற்றங்கரையினிலே’, ’கடற்கரையினிலே’ போன்ற புத்தகங்களும் ஊர்கள் தொடர்பான பல வரலாற்று நிகழ்வுகளை நமக்கு நினைவுபடுத்துபவை.
கா. அப்பாதுரையாரின் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ இன்னுமொரு வகையிலான முயற்சி ஆனால் அப்போதைய பெரும்பாலான தமிழரின் மனநிலையைப்போல இந்த நூல்கள் எல்லாமே தமிழின், தமிழரின் மேன்மையையும் பெருமையையும் மட்டுமே பேசவந்தவை.
நடராஜன் அப்படியில்லை காவிரி தவழ்ந்தோடும் மாயவரத்தின் அழகைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அதற்குப் பெருமை சேர்த்த மாமனிதர்களின் அரும்பணியைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல் அதன் தற்போதைய அவலத்தையும் சுட்டிக் காண்பிக்கிறார். இத்தகைய அணுகுமுறையைக் காவிரிக்கு மட்டுமல்லாது மற்ற இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் பொருத்திப் பார்த்திருப்பதுதான் இந்த நூலின் தனித்தன்மை. தான் பிறந்து வளர்ந்த மாயவரத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைத் தனது நோக்கில் மட்டுமல்லாமல் பிறரது மனப்பதிவுகளையும் பின்னிணைப்பாகச் சேர்த்திருப்பது நூலுக்கு மேலும் கனம் சேர்த்திருக்கிறது.
மாயவரம் (இப்போதைய மயிலாடுதுறை) தனி மாவட்டமாக 2020இல்தான் உருவாகியிருக்கிறது. அதற்காக மாயவரத்துக்காரர்கள் நீண்ட காலமாகப் போராடி வந்திருக்கிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இல்லாவிட்டால் என்ன? ஒரு நகரத்திற்கு அதற்குரிய பெருமையும் சிறுமையும் இருந்தே தீரும். தொடக்கமாக மாயவரம் நகரத்தின் பூகோள அமைப்பைச் சொல்லும்போது அதன் பண்பாட்டையும் இணைத்தே சொல்கிறார் நடராஜன். ஆடிப்பெருக்கின்போது அந்த வருடம் திருமணமானவர்கள் திருமணத்தின்போது தாங்கள் அணிந்திருந்த மாலைகளைப் பத்திரமாக வைத்திருந்து ஆற்றில் விடுவது ஒரு குறுஞ்செய்தியாக இருந்தாலும் ஒரு நதி மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருப்பதை நேரடியாக உணர்கிறோம். ஆரம்பக்கட்டுரைகள் பெரும்பாலும் சிறு பொருட்களையும் சிறு நிகழ்வுகளையும் பேசுகின்றன. காளியாகுடி காபி, பன்னீர் புகையிலை, மூக்குப்பொடி, கொசு, ‘கட் அவுட்டு’ கள், ஸ்டெப் கட்டிங், சிவப்பு முக்கோணம் என்று பல விஷயங்களைச் சுவாரஸ்யம் கருதி அவர் சொல்லிக்கொண்டு போனாலும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் ஆகியோரோடு மாயவரம் வரலாற்றின் இளம் குழந்தைகளாக ஜெகசிற்பியன், சாண்டில்யன், குமாரி கமலா, ஞானக்கூத்தன், அழகியசிங்கர் ஆகியோரையும் குறிப்பிடும் நடராஜன் ஒரு நகரத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, அதன் பண்பாட்டிலும் அக்கறை கொள்கிறார். ஓரினத்தின் பண்பாட்டு வரலாறானது பெருநகரங்களோடும் பெரும்பான்மைச் சமூகங்களோடு மட்டும் தொடர்புகொண்டதாக இருக்க முடியாது;அது அவ்வினம் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் (அது சிறியதாக இருந்தாலும், ஒதுங்கியிருந்தாலும்) வேரோடியிருக்கும் என்று நடராஜன் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார்.
மாயவரம் என்று அதைச் சுற்றியிருக்கும் பல இடங்களையும் சேர்த்தேதான் சொல்கிறோம். சேலம் மாம்பழம் என்றால் அது சேலத்தில் மட்டுமா விளைகிறது? தருமபுரி, கிருஷ்ணகிரிவரை வருகிறதல்லவா? அப்படி மாயவரத்தோடு நடராஜன் இணைக்கும் பகுதிகளில் பூம்புகாரும் ஒன்று. ஒவ்வொரு தமிழரின் ஊனோடும் உதிரத்தோடும் கலந்துவிட்ட சிலப்பதிகாரக் காப்பியத்திற்குத் தனது காலத்தில் உயிரூட்ட முயன்ற மேனாள் முதல்வர் கருணாநிதியின் பெருமையை இப்போதுதானே உணர்கிறோம்? பூம்புகாருக்கு 1978இல் போனபோது அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த எழுநிலை மாடத்துடன் கூடிய சிலப்பதிகாரக் கலைக்கூடத்தையும் தோரண வாயிலையும் நிலா முற்றத்தையும் பார்த்திருந்தேன். நான் சென்ற நேரம் பகல் நேரமாக இருந்தாலும், பூம்புகாரின் மகிமையை முற்றிலும் உணராத உல்லாசப்பயணிகளின் இரைச்சல் இருந்தாலும் கோவலனோடும் கண்ணகியோடும் மாதவியோடும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த மாதிரியே உணர்ந்தேன். கலைஞர் எந்த அளவுக்கு இந்தக் காப்பியத்தோடு ஒன்றிப்போயிருந்திருக்க வேண்டும்? இலக்கியம் பண்பாட்டின் ஓர் அங்கம் என்று வள்ளுவர்கோட்டத்தையும் கன்னியாகுமரி ஐயன் சிலையையும் பார்த்த பிறகாவது தமிழர்கள் உணரட்டும் என்று எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு அவற்றை உருவாக்கியிருப்பார்? பூம்புகாரையும் நிலாமுற்றத்தையும் நமது நினைவில் கொண்டுவந்ததற்கு நடராஜனுக்கு ஒரு பெரிய கும்பிடு.
அதற்காக மட்டுமா? அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு என்னும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறபோது அதனடியில் இருக்கும் இருண்ட பகுதிகளைக் காண்பித்ததற்காகவும் அவருக்குக் கும்பிடு போட வேண்டும். ‘தேவரடியர் உலகம்: கலைகளும் களைகளும்’ என்னும் கட்டுரை இந்த நூலின் சிகரம்.
‘சோழப்பேரரசில் ஆலயங்கள் பெருகின. சலங்கை ஒலியும் சங்கீதமும் இறைவனுக்கு இதமளித்தன.கலைகள் ஏற்றம் கொண்டன.நாட்டியக்காரிகளும் இசைவாணர்களும் பொன்னும் பொருளும் நிலமும் பெற்றார்கள். பேரரசின் சிதைவில் மரியாதைக்குரியவராக இருந்த இவர்களின் நிலையும் பாழ்பட்டது. பெரும்பண்ணைச் சமூகத்தில் தேவதாஸிகள் பொட்டுக்கட்டிவிடப்பட்ட தாஸிகள் என்ற நிலைக்கு ஆளானார்கள்.’ (பக்.166 2020)
மரியாதைக்குரிய நடராஜன் அவர்களே! நீங்கள் சொல்வதெல்லாம் சரி… ஆனால் சோழர்களின் பொற்காலத்தில் தேவரடியார்கள் ‘மரியாதைக்குரியவர்களாக’ இருந்திருந்தால் அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பாகவே காவிரிப்பூம்பட்டினத்தில் வேறொரு பெயரில் (கணிகை) வாழ்ந்திருந்த மாதவியை, அவளோடு சில காலம் ‘லிவ்- டு கெதர்’ முறையில்வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்ற கோவலன், ‘மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள்’ என்று சொல்லி அவளை நிராகரித்துப் போனது என்ன நியாயம்? தன்னை விட்டுப் போன பிறகும் அவனை மறக்காமல் ‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்.. வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்..’ என்று ஓலை அனுப்பி மன்றாடிய பிறகும் அவளை உதாசீனப்படுத்தியது எதில் சேர்த்தி? ஒரு காலகட்டத்தின், ஓரினத்தின் பிரதிநிதிதானே கோவலன்? காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகக் கலாச்சாரத்தின் ஒரு கொழுந்தாக அவன் இருப்பதை எப்படி மறுக்க முடியும்? அந்தப் பெருவணிகம்தானே பண்பாட்டை இன்றும் தீர்மானிக்கிறது? உங்கள் புத்தகத்தோடு சேர்த்து பர்டன் ஸ்டைன் ஆகியோர் எழுதிய புத்தகங்களையும் படித்தால்தான் முழுமையான வரலாற்றறிவு வரும்.
சோழர் பக்தி இருந்தாலும் நடராஜன் வரலாற்றை உண்மைக் கண்கொண்டு பார்க்கிறார்; அதற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றிய குறிப்பு ஒரு பெரும் சாட்சி. எவ்வளவு மனவலிமை கொண்டவர் அந்த அம்மையார்? ஔவையார், காரைக்காலம்மையார் போன்ற பெருமரபில் வந்தவராக அவரைக் கருத வேண்டும். வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மா போன்றவர்கள் தங்கள் துறைகளில் சாதித்ததை அரசியல், சமூகத்துறைகளில் சாதித்தவரல்லவா அவர்? காங்கிரசிலிருந்து விலகி பெரியாருடன் கைகோக்க நேர்ந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை எப்படி எதிர்கொண்டிருப்பார் அவர்? அவரது போராட்ட உணர்வைப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய திரு.வி.க. எவ்வளவு மேலானவர்? 1925இல் ராமாமிர்தம் அம்மையார் மாயவரத்தில் கூட்டிய மாநாட்டில் திரு.வி.க. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆற்றிய உரை தமிழ்த் தன்மான வரலாற்றிலும் பண்பாட்டு வரலாற்றிலும் மேலதிகம் கவனிக்கப்பட வேண்டியது.
1962வரை மாயவரத்தில் வாழ்ந்திருக்கிறார் ராமாமிர்தம் அம்மையார். 1936ஆம் ஆண்டு அவர் எழுதிய நாவல் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ வெளிவந்தது. அதற்கு அவர் எழுதிய பதிப்புரையை இணைத்திருக்கிறார் நடராஜன்.
அனல் வீசும் அப்பதிப்புரை இன்றைக்கும் பொருத்த மாக இருக்கிறது.
‘இந்தக் காலத்தில் தேவதாஸிகளின் மகிமையைத் தெரிந்துகொள்ள சாஸ்திரங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ என்கிறார்களே அது ஒன்றே அவர்களுடைய தெய்வீக லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது என்று நம்புகின்றேன்’ (பக்.175:2020)
‘கும்பகோண சாஸ்திரிகளைக் காட்டிலும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் ‘தேவதாஸிகள் இருக்க வேண்டும், தேவதாஸி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம் - சட்ட விரோதம் என்று கூச்சல் போட்டுப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார்கள்.’
(பக்.176: 2020)
அம்மையாரின் முயற்சிக்கு அவரது சமூகத்திலிருந்தே எதிர்ப்புத் தோன்றியதுதான் நகை முரண். அது அவருக்கு எந்த அளவுக்கு மனச்சோர்வைத் தந்தது என்று குறிப்பிடுகிறார்.
‘பிரிட்டானியத்தையும் பார்ப்பனீயத்தையும்கூட எளிதில் எதிர்க்கலாம். இந்த தேவதாஸி முறையை எதிர்ப்பது சாமானிய வேலையன்று என்ற முடிவுக்கு வந்தோம்.’ (பக்.177: 2020)
இதே மாதிரியான காத்திரமான விஷயங்களை உள்ளடக்கியதுதான் ஜி. நாராயணசாமி நாயுடுவின் கட்டுரை ‘மாயூரமும் காங்கிரசும்’. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தீவிரமான விடுதலைப் போராட்டம் மக்கள் மனத்தில் பதிந்திருக்கக்கூடிய பல தரவுகளுக்கும் மாற்றாகத் தெரிகிறது அக்கட்டுரை கள்ளுக்கடை மறியலுக்காகப் போன நாராயணசாமி நாயுடுவையும் காளி ஐயரையும் எவ்வாறு தூக்கிப்போட்டு மிதித்தார்கள் என்று சொல்லும்போது இப்படிப்பட்ட இந்தியர்களுக்காகவா அவர்கள் போராடினார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. மாயவரம் போன்ற சிறு நகரங்களிலிருந்து வரும் கதைகளில்தான் இத்தகைய உண்மைகள் பொதிந்திருக்கின்றன.
புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுக்கொன்று எதிரான கருத்தாக்கங்களுக்கு நடராஜன் கொடுத்திருக்கும் சமமான மரியாதைதான். இந்திய தேசீயம், பெரியாரியம், மார்க்சியம் என எல்லாவற்றையும் மாயவரம் எதிர்கொண்டவிதத்தை நடுநிலையோடு எடுத்தாண்டிருக்கிறார். அக்களூர் ரவி எழுதிய ‘எளிமையின் மறுபெயர் தோழர் எம். காத்தமுத்து’ கட்டுரையைச் சேர்த்திருப்பது அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இப்புத்தகம் மூலம் நடராஜன் சாதித்திருப்பது என்ன?
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, உண்மை என்று நம்பப்பட்ட சரித்திர நிகழ்வுகளைப் பற்றிய கேள்விகள் சிறுநகரங்களிலிருந்து வருகின்றன.
சிறு நகரங்களைப் புறக்கணித்துவிட்டு ஓர் இனத்தின் வரலாற்றை, ஒரு சமூக வரலாற்றை, பண்பாட்டு வரலாற்றை எழுத முடியாது
ஒரு நாகரிகத்தின் சீரழிவு சிறுநகரங்களிலிருந்தே வருகிறது.
மேலும் இப்புத்தகத்தின் மூலமாகச் சிறு சாளரத்தைத் திறந்துவிட்டிருக்கிறார் நடராஜன். இச்சாளரத்தின் வழியே தெரியும் தமிழர் வரலாறு, பண்பாடு என்னும் பரந்த உலகத்தை-அதன் எல்லாக் குணாம்சங்களோடும் காண்பிக்க வேண்டியது பிற தமிழர்களின் கையில் இருக்கிறது.
மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com