பிப்ரவரி 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2025
    • கட்டுரை
      பெண் தொழில்முனைவோர் குறித்த பிரச்சினை
      ஜன்னல்கள் மூலம் விரியும் உலகம்
      ‘முறி, எல்லாவற்றையும் முறி’
      டெஸ்மண்ட் டுட்டு (1931 - 2021) உபாதிக்கப்பட்டவர்களின் உய்விப்பாளர்
      பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் குரல்
      தேயிலைப் பை தேநீர்
      கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை
      நாடற்ற இந்தியர்களும் இலங்கை அகதிகளும்
    • கதை
      சுயமரியாதை
      ‘மியாடீ’
      கங்காரு
      பேசும் வகுப்பறை
    • பாரதியியல்
      ஜாலியன்வாலா பாக் படுகொலை: பாரதி மௌனம் சாதித்தாரா?
    • அஞ்சலி: சிட்னி பாட்டியே (1927-2022)
      என்னை நட்சத்திரம் என்று அழைப்பார்கள்
    • பதிவு
      ஆடாத கால்கள் உண்டா?
    • புத்தகப் பகுதி
      மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?
    • மதிப்புரை
      ஒரு மாயவரத்துச் செய்தி
      புலம்பெயர்ந்தவர்கள்
    • கவிதைகள்
      ஆசீர்வதிக்கப்பட்டது நம் வீடு
    • தலையங்கம்
      அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருது, இலக்கியமும் அரசும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2022 மதிப்புரை ஒரு மாயவரத்துச் செய்தி

ஒரு மாயவரத்துச் செய்தி

மதிப்புரை
ப. சகதேவன்

ஒரு மாயவரத்துச் செய்தி
ப. சகதேவன்

மாயவரம்: 
சில நினைவுகளும், 
சில நிகழ்வுகளும் 

சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம், 
77, 53-வது தெரு, 
அசோக் நகர், சென்னை.
பக். 230 
ரூ. 220

1992ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம்  நாள் லண்டன் நகரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிலையைத் திறந்துவைக்க எலிசபெத் மகாராணியார் வந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ட்ரெஸ்டென் உட்படப் பல நகரங்கள்மீது குண்டு வீசிப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஏர் கமாண்டர் ஆர்தர் ஹேரிசின் சிலைதான் அது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். எல்லாருமே சிலைத்திறப்பினால் சந்தோஷப்பட்டவர்கள் அல்லர்; சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள்: ‘ஹேரிஸ் ஒரு கொலைகாரன்… கொலைகாரனுக்கு எதுக்கு மரியாதை’ ‘ ட்ரெஸ்டன் நகரத்து மக்களே! எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கோஷமிட்டார்கள். இதே வாசகங்கள் கொண்ட பலகைகளையும் தூக்கிப்பிடித்திருந்தார்கள். 

ஆறரை லட்சம் மக்கள்தொகைகொண்ட ஜெர்மனியின்   ட்ரெஸ்டென் நகரில்  1945 பிப்ரவரி 13-15ஆம் தேதிகளுக்கிடையில்  நேச நாட்டுப்படையைச் சேர்ந்த அமெரிக்க பிரித்தானிய ராணுவங்கள்  சுமார் 3,900 டன் எடையுள்ள வெடிகுண்டுகளை வீசி அந்த நகரத்தையே நிர்மூலமாக்கின. பிரித்தானியப் படைக்குத் தலைமை தாங்கியவர்தான் ஹேரிஸ். இத்தனைக்கும் அதுவரை நடந்துவந்த இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்து நேசப்படைகளின் வெற்றி உறுதியாகியிருந்த சமயம் அது. போருக்குப் பின் நடந்த விவாதங்களில் இது அறம் மீறிய செயல் என்று  ஒரு தரப்பினர் விவாதித்தார்கள். இக்குண்டு வீச்சில் உயிரிழந்தவர் தொகை என 25,000இலிருந்து இரண்டுலட்சம்வரை கணக்குச் சொல்லப்பட்டது. போரிலேயே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நகரம் என்று இதைச் சொல்ல வேண்டும். ஹிட்லரின் நாசிசம் இத்தகைய, இதற்கும் மேலான  அநியாயங்களைச் செய்திருந்தது தான். பௌதீக ரீதியாகவும் மானசீகமாகவும் அவர் நாசப்படுத்திய நகரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ட்ரெஸ்டென் உலகத்திலுள்ள மிக அழகான நகரங்களில் ஒன்று.. மிகச் சிறந்த கலைப்பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் இடம். தொழில் நகரம்; கட்டடக்கலையின் மேன்மையை வெளிக்காட்டும் பல மண்டபங்களும் தேவாலயங்களும் கொண்ட நகரம். இப்போது எல்லாவற்றையும் இழந்து சுடுகாடாகிவிட்டது. அந்தச் சமயத்தில் அங்கு வாழ்ந்திருந்த மக்கள் எந்த அளவுக்குத் துன்பப்பட்டிருப்பார்கள்?  ட்ரெஸ்டெனுக்கு ஆத்மா என்று ஒன்று இருந்திருந்தால் அப்போது அது சிந்திய  கண்ணீரின் வெப்பத்தை எத்தனைபேர் உணர்ந்திருப்பார்கள்? இப்போது எல்லாம் வரலாறாகி விட்டது. 

ஒவ்வோர் ஊருக்கும் ஒரு மனச்சாட்சி உண்டு, ஒரு ஆத்மா உண்டு என்று கண்டுபிடிப்பதுவும் வரலாற்றுணர்வின், வரலாற்று ஆய்வின் ஒரு பகுதிதான் அது என்ன என்று கூர்ந்துபார்க்கும் ஆசை சிலபேருக்கு மட்டுமே வருகிறது. சந்தியா நடராஜன் அப்படிப்பட்ட மிகச்சில பேரில் ஒருவராக இருக்கிறார்.  அவரது ‘மாயவரம்: சில நினைவுகளும், சில நிகழ்வுகளும்’ புத்தகம் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய வகையைத்   தோற்றுவித்திருக்கிறது.

ரா.பி. சேதுப்பிள்ளை இந்த இலக்கியவகைக்கு ஒரு முன்னோடியாக இருந்தார். அவரது ‘ஊரும் பேரும்’ புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதே மாதிரி இல்லாவிட்டாலும் அதையொட்டியே எழுதப்பட்ட ‘ஆற்றங்கரையினிலே’, ’கடற்கரையினிலே’ போன்ற புத்தகங்களும் ஊர்கள் தொடர்பான பல வரலாற்று நிகழ்வுகளை நமக்கு நினைவுபடுத்துபவை. 
கா. அப்பாதுரையாரின் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ இன்னுமொரு வகையிலான முயற்சி ஆனால் அப்போதைய  பெரும்பாலான தமிழரின் மனநிலையைப்போல இந்த நூல்கள் எல்லாமே தமிழின்,  தமிழரின் மேன்மையையும் பெருமையையும்  மட்டுமே பேசவந்தவை.

நடராஜன் அப்படியில்லை  காவிரி தவழ்ந்தோடும் மாயவரத்தின் அழகைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அதற்குப் பெருமை சேர்த்த மாமனிதர்களின் அரும்பணியைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல்  அதன் தற்போதைய அவலத்தையும் சுட்டிக் காண்பிக்கிறார்.  இத்தகைய அணுகுமுறையைக் காவிரிக்கு மட்டுமல்லாது  மற்ற இடங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் மனிதர்களுக்கும் பொருத்திப் பார்த்திருப்பதுதான் இந்த நூலின் தனித்தன்மை. தான் பிறந்து வளர்ந்த மாயவரத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைத் தனது நோக்கில் மட்டுமல்லாமல் பிறரது மனப்பதிவுகளையும்   பின்னிணைப்பாகச் சேர்த்திருப்பது நூலுக்கு மேலும் கனம் சேர்த்திருக்கிறது.

மாயவரம் (இப்போதைய மயிலாடுதுறை) தனி மாவட்டமாக 2020இல்தான் உருவாகியிருக்கிறது. அதற்காக மாயவரத்துக்காரர்கள் நீண்ட காலமாகப் போராடி வந்திருக்கிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இல்லாவிட்டால் என்ன? ஒரு நகரத்திற்கு அதற்குரிய பெருமையும் சிறுமையும் இருந்தே தீரும்.  தொடக்கமாக மாயவரம் நகரத்தின் பூகோள அமைப்பைச் சொல்லும்போது அதன் பண்பாட்டையும் இணைத்தே சொல்கிறார் நடராஜன். ஆடிப்பெருக்கின்போது அந்த வருடம் திருமணமானவர்கள் திருமணத்தின்போது தாங்கள் அணிந்திருந்த மாலைகளைப் பத்திரமாக வைத்திருந்து ஆற்றில் விடுவது ஒரு குறுஞ்செய்தியாக இருந்தாலும் ஒரு நதி மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருப்பதை நேரடியாக உணர்கிறோம். ஆரம்பக்கட்டுரைகள் பெரும்பாலும் சிறு பொருட்களையும் சிறு நிகழ்வுகளையும் பேசுகின்றன. காளியாகுடி காபி, பன்னீர் புகையிலை, மூக்குப்பொடி, கொசு, ‘கட் அவுட்டு’ கள், ஸ்டெப் கட்டிங், சிவப்பு முக்கோணம் என்று பல விஷயங்களைச் சுவாரஸ்யம் கருதி அவர் சொல்லிக்கொண்டு போனாலும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் ஆகியோரோடு மாயவரம் வரலாற்றின் இளம் குழந்தைகளாக ஜெகசிற்பியன், சாண்டில்யன், குமாரி கமலா, ஞானக்கூத்தன், அழகியசிங்கர் ஆகியோரையும் குறிப்பிடும் நடராஜன் ஒரு நகரத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, அதன் பண்பாட்டிலும் அக்கறை கொள்கிறார். ஓரினத்தின் பண்பாட்டு வரலாறானது பெருநகரங்களோடும் பெரும்பான்மைச் சமூகங்களோடு மட்டும் தொடர்புகொண்டதாக இருக்க முடியாது;அது அவ்வினம் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் (அது சிறியதாக இருந்தாலும், ஒதுங்கியிருந்தாலும்) வேரோடியிருக்கும் என்று நடராஜன் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார். 

மாயவரம் என்று அதைச் சுற்றியிருக்கும் பல இடங்களையும் சேர்த்தேதான் சொல்கிறோம். சேலம் மாம்பழம் என்றால் அது சேலத்தில் மட்டுமா விளைகிறது? தருமபுரி, கிருஷ்ணகிரிவரை வருகிறதல்லவா?  அப்படி மாயவரத்தோடு நடராஜன் இணைக்கும் பகுதிகளில் பூம்புகாரும் ஒன்று. ஒவ்வொரு தமிழரின் ஊனோடும் உதிரத்தோடும் கலந்துவிட்ட சிலப்பதிகாரக் காப்பியத்திற்குத் தனது காலத்தில் உயிரூட்ட முயன்ற மேனாள் முதல்வர் கருணாநிதியின் பெருமையை இப்போதுதானே உணர்கிறோம்? பூம்புகாருக்கு 1978இல் போனபோது அங்கு  நிர்மாணிக்கப்பட்டிருந்த எழுநிலை மாடத்துடன் கூடிய சிலப்பதிகாரக் கலைக்கூடத்தையும் தோரண வாயிலையும் நிலா முற்றத்தையும் பார்த்திருந்தேன். நான் சென்ற நேரம் பகல் நேரமாக இருந்தாலும், பூம்புகாரின் மகிமையை முற்றிலும் உணராத உல்லாசப்பயணிகளின்  இரைச்சல் இருந்தாலும்  கோவலனோடும் கண்ணகியோடும் மாதவியோடும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த மாதிரியே உணர்ந்தேன். கலைஞர் எந்த அளவுக்கு இந்தக் காப்பியத்தோடு ஒன்றிப்போயிருந்திருக்க வேண்டும்? இலக்கியம் பண்பாட்டின் ஓர் அங்கம் என்று வள்ளுவர்கோட்டத்தையும் கன்னியாகுமரி ஐயன் சிலையையும் பார்த்த பிறகாவது தமிழர்கள் உணரட்டும் என்று எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு அவற்றை உருவாக்கியிருப்பார்?  பூம்புகாரையும் நிலாமுற்றத்தையும் நமது நினைவில் கொண்டுவந்ததற்கு நடராஜனுக்கு ஒரு பெரிய கும்பிடு.

அதற்காக மட்டுமா? அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு என்னும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறபோது அதனடியில் இருக்கும் இருண்ட பகுதிகளைக் காண்பித்ததற்காகவும் அவருக்குக் கும்பிடு போட வேண்டும். ‘தேவரடியர் உலகம்: கலைகளும் களைகளும்’ என்னும் கட்டுரை இந்த நூலின் சிகரம்.

‘சோழப்பேரரசில் ஆலயங்கள் பெருகின. சலங்கை ஒலியும் சங்கீதமும் இறைவனுக்கு இதமளித்தன.கலைகள் ஏற்றம் கொண்டன.நாட்டியக்காரிகளும் இசைவாணர்களும் பொன்னும் பொருளும் நிலமும் பெற்றார்கள். பேரரசின் சிதைவில் மரியாதைக்குரியவராக இருந்த இவர்களின் நிலையும் பாழ்பட்டது. பெரும்பண்ணைச் சமூகத்தில் தேவதாஸிகள் பொட்டுக்கட்டிவிடப்பட்ட  தாஸிகள் என்ற நிலைக்கு ஆளானார்கள்.’ (பக்.166 2020)

மரியாதைக்குரிய நடராஜன் அவர்களே! நீங்கள் சொல்வதெல்லாம் சரி… ஆனால் சோழர்களின் பொற்காலத்தில் தேவரடியார்கள் ‘மரியாதைக்குரியவர்களாக’ இருந்திருந்தால் அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பாகவே காவிரிப்பூம்பட்டினத்தில் வேறொரு பெயரில் (கணிகை)  வாழ்ந்திருந்த மாதவியை, அவளோடு சில காலம் ‘லிவ்- டு கெதர்’ முறையில்வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்ற கோவலன், ‘மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள்’ என்று சொல்லி அவளை நிராகரித்துப் போனது என்ன நியாயம்? தன்னை விட்டுப் போன பிறகும் அவனை மறக்காமல் ‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்.. வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்..’ என்று ஓலை அனுப்பி மன்றாடிய பிறகும் அவளை உதாசீனப்படுத்தியது எதில் சேர்த்தி? ஒரு காலகட்டத்தின், ஓரினத்தின் பிரதிநிதிதானே கோவலன்? காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகக் கலாச்சாரத்தின் ஒரு கொழுந்தாக அவன் இருப்பதை எப்படி மறுக்க முடியும்? அந்தப் பெருவணிகம்தானே பண்பாட்டை இன்றும் தீர்மானிக்கிறது? உங்கள் புத்தகத்தோடு சேர்த்து பர்டன் ஸ்டைன் ஆகியோர் எழுதிய புத்தகங்களையும் படித்தால்தான் முழுமையான வரலாற்றறிவு வரும்.

சோழர் பக்தி இருந்தாலும்  நடராஜன் வரலாற்றை உண்மைக் கண்கொண்டு பார்க்கிறார்; அதற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றிய குறிப்பு ஒரு பெரும் சாட்சி. எவ்வளவு மனவலிமை கொண்டவர் அந்த அம்மையார்? ஔவையார், காரைக்காலம்மையார் போன்ற பெருமரபில் வந்தவராக அவரைக் கருத வேண்டும். வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மா போன்றவர்கள் தங்கள் துறைகளில் சாதித்ததை அரசியல், சமூகத்துறைகளில் சாதித்தவரல்லவா அவர்? காங்கிரசிலிருந்து விலகி பெரியாருடன் கைகோக்க நேர்ந்த  வரலாற்று நிர்ப்பந்தத்தை எப்படி எதிர்கொண்டிருப்பார் அவர்? அவரது போராட்ட உணர்வைப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய திரு.வி.க. எவ்வளவு மேலானவர்? 1925இல் ராமாமிர்தம் அம்மையார் மாயவரத்தில் கூட்டிய மாநாட்டில் திரு.வி.க. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  ஆற்றிய உரை தமிழ்த் தன்மான வரலாற்றிலும் பண்பாட்டு வரலாற்றிலும் மேலதிகம் கவனிக்கப்பட வேண்டியது.

1962வரை மாயவரத்தில் வாழ்ந்திருக்கிறார் ராமாமிர்தம் அம்மையார். 1936ஆம் ஆண்டு அவர் எழுதிய நாவல் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ வெளிவந்தது. அதற்கு அவர் எழுதிய பதிப்புரையை இணைத்திருக்கிறார் நடராஜன்.

அனல் வீசும் அப்பதிப்புரை இன்றைக்கும் பொருத்த மாக இருக்கிறது.

‘இந்தக் காலத்தில் தேவதாஸிகளின் மகிமையைத் தெரிந்துகொள்ள சாஸ்திரங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ என்கிறார்களே  அது ஒன்றே அவர்களுடைய தெய்வீக லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது என்று நம்புகின்றேன்’ (பக்.175:2020)

‘கும்பகோண சாஸ்திரிகளைக் காட்டிலும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் ‘தேவதாஸிகள் இருக்க வேண்டும், தேவதாஸி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம் - சட்ட விரோதம் என்று கூச்சல் போட்டுப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார்கள்.’ 
(பக்.176: 2020)

அம்மையாரின் முயற்சிக்கு அவரது சமூகத்திலிருந்தே எதிர்ப்புத் தோன்றியதுதான் நகை முரண். அது அவருக்கு எந்த அளவுக்கு மனச்சோர்வைத் தந்தது என்று குறிப்பிடுகிறார்.

‘பிரிட்டானியத்தையும் பார்ப்பனீயத்தையும்கூட எளிதில் எதிர்க்கலாம். இந்த தேவதாஸி முறையை எதிர்ப்பது சாமானிய வேலையன்று என்ற முடிவுக்கு வந்தோம்.’ (பக்.177: 2020)

இதே மாதிரியான காத்திரமான விஷயங்களை உள்ளடக்கியதுதான் ஜி. நாராயணசாமி நாயுடுவின் கட்டுரை ‘மாயூரமும் காங்கிரசும்’. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தீவிரமான விடுதலைப் போராட்டம் மக்கள் மனத்தில் பதிந்திருக்கக்கூடிய பல தரவுகளுக்கும் மாற்றாகத் தெரிகிறது அக்கட்டுரை கள்ளுக்கடை மறியலுக்காகப் போன நாராயணசாமி நாயுடுவையும் காளி ஐயரையும் எவ்வாறு தூக்கிப்போட்டு மிதித்தார்கள் என்று சொல்லும்போது இப்படிப்பட்ட இந்தியர்களுக்காகவா அவர்கள் போராடினார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. மாயவரம் போன்ற சிறு நகரங்களிலிருந்து வரும் கதைகளில்தான் இத்தகைய உண்மைகள் பொதிந்திருக்கின்றன.

புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுக்கொன்று எதிரான கருத்தாக்கங்களுக்கு நடராஜன் கொடுத்திருக்கும் சமமான மரியாதைதான். இந்திய தேசீயம், பெரியாரியம், மார்க்சியம் என எல்லாவற்றையும் மாயவரம் எதிர்கொண்டவிதத்தை நடுநிலையோடு எடுத்தாண்டிருக்கிறார். அக்களூர் ரவி எழுதிய ‘எளிமையின் மறுபெயர் தோழர் எம். காத்தமுத்து’ கட்டுரையைச் சேர்த்திருப்பது அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இப்புத்தகம் மூலம் நடராஜன் சாதித்திருப்பது என்ன?

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, உண்மை என்று நம்பப்பட்ட சரித்திர நிகழ்வுகளைப் பற்றிய கேள்விகள் சிறுநகரங்களிலிருந்து வருகின்றன.

சிறு நகரங்களைப் புறக்கணித்துவிட்டு ஓர் இனத்தின் வரலாற்றை, ஒரு சமூக வரலாற்றை, பண்பாட்டு வரலாற்றை எழுத முடியாது

ஒரு நாகரிகத்தின் சீரழிவு சிறுநகரங்களிலிருந்தே வருகிறது.

மேலும் இப்புத்தகத்தின் மூலமாகச் சிறு சாளரத்தைத் திறந்துவிட்டிருக்கிறார் நடராஜன். இச்சாளரத்தின் வழியே தெரியும் தமிழர் வரலாறு, பண்பாடு என்னும் பரந்த உலகத்தை-அதன் எல்லாக் குணாம்சங்களோடும் காண்பிக்க வேண்டியது பிற தமிழர்களின் கையில் இருக்கிறது. 


           மின்னஞ்சல்: krishnaswamip@yahoo.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.