புலம்பெயர்ந்தவர்கள்
புலம்பெயர்ந்தவர்கள்
மு. பழநிச்சாமி
தலைநகர் தில்லி:
தமிழும் தமிழரும்
தொகுப்பும் ஆக்கமும்:
முனைவர் ச. சீனிவாசன்
காவ்யா
16 இரண்டாம் குறுக்குத் தெரு,
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை - 24
பக். 586
ரூ. 600
‘வரலாற்றுப் பாதையில் தில்லி தடங்களும் தடயங்களும்’ எனும் தலைப்புடன் தொடங்குகிறது இத்தொகுப்பு. நூல் தலைப்பை நியாயப்படுத்தும் வகையில், தலைநகர் தில்லி பற்றிய நீண்ட நெடிய வரலாற்றுச் செய்திகளை அதன் வேரும் வித்தும் தோன்றிய இடத்தைக் கண்டு தொடங்கி, அதன் விரிவையெல்லாம் தொகுத்துத் திரட்டித் தந்த தேனடை தான் இந்தக் கட்டுரை. “தில்லி, நிறைய மாறுதல்களைச் சந்தித்துள்ளது. குன்றுகள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டுக் குடியிருப்புகளாக்கப்பட்டுள்ளன. நரிகள் ஊளையிட்டுத் திரிந்த காடு கொன்று நாடாக்கி நிறுவிய ராமகிருஷ்ணாபுரம் எனப்படும் ஆர். கே. புரம் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியாக விளங்குகிறது. திருடர்கள் தங்கள் திருட்டுச் சொத்தைப் பங்கு போட்டுக்கொண்டிருந்த இடங்கள் இப்போது விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களாக மாறிவிட்டன. வழிப்பறிக் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இடங்கள் இன்று உயர்வருவாய்ப் பிரிவினர் வாழும் குடியிருப்புகளாக உருமாறியுள்ளன” (பக். 5). இவ்வாறு இனிய எளிய சொற்களால் விளக்கியிருக்கும் பான்மை நெஞ்சைத் தொட்டு நினைவுக்குள் தங்கித் தடம் பதித்து நிற்பதாகும்.
‘தில்லிக்கு இடம் பெயர்ந்த தமிழர்க’ளை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்கிறது இப்பதிவு. ‘தாய்ப்பால் இன்றித் தவித்தபோது புட்டிப்பால் தந்த புனிதத் தாய்’ (20) என்று நன்றிக் கசிவூறச் சொன்ன நல்லதொரு கட்டுரை இது.
மூன்றாம் கட்டுரை ‘தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் அரசியல் அதிகாரமும் மிக்க தில்லி உருவான வரலாறு, அங்கு தமிழர்களின் இடப்பெயர்வு உட்பட பலதரப்பட்ட மக்களின் குடியேற்றம் முதலானவை குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்வதாக அமைகிறது.’ (பக். 30) தில்லி குறித்த பல அறியப்படாத செய்திகளும் உண்டு.
ரமாமணி சுந்தர் எழுதிய ‘தலைமுறைகள் கண்ட தில்லி தமிழர்கள்’ கட்டுரை, தில்லி வாழ் தமிழ் மக்களைத் தலைமுறை வாரியாகப் பகுத்துக் காலவெள்ளத்தில் அவர்களின் நடை, உடை, பாவனை, வாழ்வியல், காதல் திருமணங்கள் போன்ற கலாச்சார மாற்றங்களை எதார்த்த நிகழ்வுப் பாங்குடன்விமர்சனப் பார்வையையும் கலந்து கொடுக்கிறது. ‘ஜாதகம் மேட்ச் ஆகிறதோ இல்லையோ, அப்போதுதான் தம்பதிகள் இடையே கெமிஸ்ட்ரி மேட்ச் ஆகும் என்பது இவர்கள் வாதம்’ (62) என இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை விண்டு சொல்லியிருக்கிறது.
‘தாயின் மணிக்கொடித் தமிழர்கள்’ கட்டுரையில், மேல்தட்டு வர்க்கத்தில் அமர்ந்து பதவிவகித்த மேட்டுக்குடித் தமிழர்களையெல்லாம் விடாது பிடித்துப் பட்டியல் போட்டுக் காட்டிப் பெருமிதம் கொள்ள வைக்கும் கட்டுரை இது. எனினும் தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC)போன்ற அனைத்திந்திய அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில், அந்நிறுவனங்கள் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை, எந்தத் தாயின் மணிக்கொடித் தமிழனும் இடம்பெறாததையும், நெஞ்சுக்குள் இருந்து, குரல் ஒன்று மெல்லக் கூவி அழைத்துக் காதோரம் சொல்வதைக் கேட்க முடிகிறது .
‘தில்லியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள்’எனும் மொழிபெயர்ப்புக் கட்டுரை, எண்பதுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை, நெருங்கிநின்று பார்த்துப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகிறது. அவர்களின் தொடக்ககால வாழ்க்கை, உறவுமுறை ஒழுகலாறுகள், திருமண ஏற்பாடுகள்,சமயநெறி முறை போன்றவற்றோடு தொடர்புபட்ட, மிகச் சரியான வரலாற்றுப் பார்வையாக வெளிப்படுகிறது.
பகுதி3-இல் ‘தலைநகரில் தமிழ்க் கல்வி’ எனும் தலைப்பின் கீழ், உட் தலைப்புகளாக அமைந்த 8, 9, 10, 11, 12-ஆம் எண்களில் உள்ள கட்டுரைகள் விசாலப் பார்வையால் நம்மை அள்ளி விழுங்குகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளைப் படைத்தவர்களுள் பெரும்பாலோர் கல்வியாளர்களாக உள்ளனர். அதனாலோ என்னவோ கல்வி பற்றிய அனைத்துச் செய்திகளையும், அவரவர்களின் தகவிற்கும் தலைப்பிற்கும் ஏற்ப, ஆதியிலிருந்து தொடங்கி அந்தம்வரை, அந்தாதியாகத் தொடர்புபடுத்தி, இணைத்துச் சொல்லியுள்ளனர்.இப்பகுதியின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உள்ள நலந் தீங்குகளை எல்லாம், நிரல்பட எடுத்துச்சொல்வதானால் விரிந்து வளரும்.
‘வரலாறு படைக்கும் தமிழ்ச் சங்கம்’ தலைப்பில் ரமாமணி சுந்தர் எழுதிய தில்லித் தமிழ்ச்சங்கம் கட்டுரை தில்லியில் வேர் பதித்த இடத்திலிருந்து தொடங்கி, இந்தக் காலகட்டம்வரை உள்ள அதன் பிரமாண்ட வளர்ச்சியைப் படிப்படியாய், மனங்கொள்ளச் சொல்கிறது. அதன் ஒவ்வொரு நகர்வையும் அந்தந்த நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டி அதனூடு தமிழ்விழா, கம்பர் விழா, பாரதியார் நூற்றாண்டு விழா, தமிழ்ப் புலவர் குழுவின் தனித்த விழா, அருணகிரிநாதரின் 600ஆவது பிறந்தநாள் விழா உட்படத் தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்வுகள் இக்கட்டுரையில் ஏராளம் உள்ளன.
‘தலைநகர் தில்லியில் தமிழ்க் கோவில்கள்’ கட்டுரை இராஜி ரமணியால் எழுதப்பட்டுள்ளது. சைவத் திருத்தலங்களையும் பிற சிறு தெய்வவழிபாட்டுக் கோயில்களையும், விடாது எடுத்துச் சொல்லியிருக்கிறது இக்கட்டுரை. கோயில்கள் கால்கொள்ளக் காரணமானவர்களையும், கோயில் உருவான காலத்தையும், அந்தந்தப் பகுதிவாழ் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுத் திருவிழா எடுத்துக் கொண்டாடி மகிழ்வதையும், இன்ன பிறவற்றையும் ஆன்மீக மணம் கமழக்கமழத் தமிழ் மக்களின் சமய உணர்வுகள் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கின்றன.
‘தலைநகரில் தடம்பதித்த தமிழ் எழுத்தாளர்கள்’ என்னும் கட்டுரை, தில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்கள், பல்கலைக்கழகங்களிலிருந்து பரிணமித்தவர்கள், தில்லித் தமிழ் கல்விக் கழகப் பின்னணி கொண்டவர்கள், தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வெளிப்பட்டு வந்தவர்கள், ஊடகங்களின் வழி அறியப்பட்டோர் எனப் பகுத்து, அவர்களின் தனித்த அடையாளங்களை இனங்கண்டு சித்திரிக்கப்படுகிறார்கள். ‘தடம் பதித்தோர்’ எனும் உட்தலைப்பில் பல்வேறுபட்ட படைப்பாளர்களையும் அவர்களைப்பற்றிய குறுகத்
தரித்த தனித்த செய்திகளுடன்,அவர்களின் படைப்புகளையும் வரிசைப்படுத்திச் சொல்கிறது.
‘தில்லித் தமிழ்ச் சூழலில் தமிழ் நாடகங்கள்’ கட்டுரையில் செ. ரவீந்திரன் எழுத்தின் போக்கைப் பார்க்கலாம்.
• “-----இந்த நிலையில் தில்லியில் காண்பதெல்லாம் தமிழகத்தில் கலை இலக்கியம் என்னும் பெயரால் நடைபெறும் கேலிக் கூத்துக்களின் பிரதிபலிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.” (பக். 318)
• “தமிழகத்தில் வீதி நாடகங்கள் என்னும் பெயரில் நடைபெறும் அபத்தங்களை கண்டுவந்த எனக்கு”(பக்.321)
• “ஆனால் தில்லியில் இக்காலகட்டத்தே தமிழர்களிடையே நாடகம், இவற்றின் மீதான ஈடுபாடு தமிழகத்தின் சபா நாடகங்களை, மூன்றாந்தர, நான்காந்தரத் தமிழ் சினிமாக்களைக் கண்டு களிப்பதாகவே இருந்தன.”(பக். 319). இவற்றையெல்லாம், மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் எதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதுபோலத் தோன்றலாம். எனினும் இக் கட்டுரை ஆசிரியர் உள்ளத்தில் கனன்று கிடக்கும் அகத்துறு செயல்களை அணுகிப் பார்த்தால் அவ்வாறு எடுத்துக்கொள்ள இயலாது என்று தெரியவரும். மற்றபடி நாடக அரங்கின் ஒளியமைப்பு நுட்பங்கள் பற்றி அங்கிங்கெனாதபடி எங்கும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தங்களுடைய நாடகங்கள் பற்றிச் சொக்கிச் சுகங்கண்டு சொல்லி மகிழ்ந்த செய்திகளும் நிறைய உண்டு.
‘தமிழர் இடப்பெயர்வு அடையாள பதிவுகள்: தில்லிச் சிறுகதைகள் வழிக் கட்டமைத்தல்’ கட்டுரையில் இடப்பெயர்வு பற்றித் தன் பாணியில் சொல்லியுள்ளார்.தில்லிக்கு முதலில் இடம் பெயர்ந்து வந்தவர் யார், பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர் யார் என்பதைக் குறிப்பிட்டு விட்டு, ‘படித்த மேல்தட்டுத் தமிழ் மக்கள் தில்லியில் குடியேறிய சூழல் வேறு; ஏழைகள் இடம்பெயர்ந்த உண்மை வரலாறு வேறு’ (பக். 343) என அழுத்தம் கொடுத்து, மெய்ப்பொருளை விண்டு சொல்லியது அனைவர் நெஞ்சிலும் பதிய வேண்டிய ஒன்று. தில்லிச் சிறுகதைகளில் பதின்மூன்று கதை ஆசிரியர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த ஆசிரியரின் கதைகளின் மையக்கருவைக் கையிலெடுத்து அதையொட்டிய தமிழர் இடப்பெயர்வு அடையாளப் பதிவுகளை அறியத் தருகிறார் ஆசிரியர்.
ஷாஜகான் கட்டுரையில் புத்தகத் திருவிழா பற்றியதாக அமைகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என மதித்துச் செயல்படும் இவரது வாசிப்பு அனுபவம் நம்மை ஈர்த்து நிற்கிறது.”அடுத்த தலைமுறையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. அப்போதும் புத்தகக் கண்காட்சிகள் இருக்கலாம். ஆனால் அங்கே அறிவுக்குத் தீனி போடும் நூல்களைவிட பாடம், படிப்பு, மேல்படிப்பு நூல்களை வாங்கத் தான் அதிகம்பேரைப் பார்க்க முடியும். நிச்சயம் இலக்கிய நூல்களைத் தேடுபவர்ளை அல்ல. அத்தகைய ஒரு காலத்தைப் பார்ப்பதற்குமுன் இங்கிருந்து விடைபெற்றுக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது” (பக். 463). சமுதாயத்தில், இன்றைய இளைஞர்களின் போக்கை எண்ணி ஏங்கி வருந்தி, இதயம் புண்பட்டுப்போன நிலையில் வெளிவந்துள்ள இந்தச் சொல்லாடல் , நம் இரத்த நாளத்திற்குள் சென்று தைக்கிறது .
தில்லி வாழ் ‘தமிழர்களும் தமிழ்ச்சங்க நூலகமும்’ என்னும்கட்டுரை, ஷமீமுன்னிசா எழுதியது. கருத்துக் கருவூலத்தை நாடி, நூலகம் நோக்கி வருவோரைக் கனிவாய் வரவேற்று, விரும்பும் நூலை வேண்டும் வகையில் தந்திடுபவர்கள் நூலகர்கள். ஈடுபாட்டுடன் கூடிய அவரது நூலகத்துறை அனுபவம் எழுத்தில் இறங்கி நம் அனைவரையும் நூலக உணர்வு பெற்றுத் திகழ ஆற்றுப் படுத்துகிறது. சிந்திக்கும் சிந்தனைத் திறத்தில் எல்லாம், நூலக உணர்வு அவரது உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை, அவரது வாசகங்கள் மெய்ப்பிக்கும்.”தில்லித் தமிழ்ச் சங்க நூலகம் தில்லியில் பல கிளைகள் பரப்பிடவேண்டும். புதிய நூல்கள் சேர்க்கப்படவேண்டும். நூலகத்தில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு ஆய்வு நூலகமாக மாறவேண்டும். புத்தகங்களைப் புரட்டிப் போட புத்தம் புது வாசகர்கள் புறப்பட்டு வரவேண்டும். வாசிப்பை நேசிக்கும் மனிதம் வளர வேண்டும்” ( பக். 472) என்கிறார்.
நேர்காணல்கள் நூலை நிறைவு செய்துள்ளது மட்டுமன்றி வாசகர்களுக்கு மன நிறைவையும் தந்துள்ளன எனலாம்.
கற்றவர்களைக் கைவசம் வைத்துக் கொண்டு, அவர்களது அன்பையும் ஆதரவையும் அடித்தளமாகக் கொண்டு, இத்தொகுப்பு நூல் எனும் மாபெரும் மாளிகையை எழுப்பி இருக்கிறார் இந்நூலின் தொகுப்பாசிரியர்.
இந்நூலில், பல்வேறு இடங்களில் சொன்ன செய்திகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துப் படித்துச் சலிப்பில் துவண்டு போய்த் தொங்கிச்சுருண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படுவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.எனினும் தொகுப்பு நூலில் இதைத் தவிர்க்க இயலாது என்பதையும் நினைக்க வேண்டியுள்ளது.
மு. பழநிச்சாமி: தமிழ்நாடு அரசு நூலக அதிகாரி (பணி நிறைவு)நாகமலை, மதுரை.
மின்னஞ்சல்: vmps834@gmail.com