மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?
மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?
மூச்சே நறுமணமானால்
அக்கமகாதேவி
(மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
தமிழில்: பெருந்தேவி
பக். 192
ரூ. 225
பின்புலம்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் செழித்திருந்த சிவ சரண மரபின் வசனக்காரர்களில் தனித்துவம் மிக்க நட்சத்திரமாகப் பிரகாசித்தவர் அக்கமகாதேவி. வீரசைவம் என்ற பரந்த சமய, பண்பாட்டுப் பரப்பில் லிங்கத்தை உடலில் தரித்துச் சிவனை வழிபடும் குழுவினர் சரண மரபினர் என அழைக்கப்படுகிறார்கள். லிங்காயத்துகள் என்று பொதுவழக்கில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், சாதிய அடையாளம் சார்ந்ததாகவும் இந்தப் பயன்பாடு இருப்பதால் சரண மரபினர் என்று அழைப்பதே பொருத்தம் என்று எச்.எஸ். சிவபிரகாஷ் கூறுவது கருதத் தக்கது. சிவனைப் பாடிப் பரவிய சரண வசனக்காரர்கள் கன்னட இலக்கியத்துக்கும் பண்பாட்டுக்கும் ஒருசேர வளத்தையும் பெருமையையும் சேர்த்தனர்.
சரண மரபினரின் தலைமையாக அறியப்படும் பசவண்ணர், சரணர்களின் உயரிய ஆசானாக அறியப்படும் அல்லமபிரபு ஆகியோரின் சமகாலத்தவர் அக்கமகாதேவி. அரசியல் குழப்பங்களும் சமூக, சமய ரீதியிலான எழுச்சிகளும் நிறைந்திருந்த காலகட்டம் அது. காலசூரிகளுக்கும் சாளுக்கியர்களுக்குமிடையே ஆதிக்க, அதிகாரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. மரபார்ந்த சைவம், பாசுபதம், காளாமுகம் போன்ற சைவச் சிறு மரபுகள், கிராமத் தெய்வ வழிபாடுகள், சாக்தம் ஆகியவற்றுக்கிடையில் போட்டிகளும் மோதல்களும் ஒருபுறம். வைணவ ஆசாரியர் இராமானுஜரின் தாக்கத்தால் விளையத் தொடங்கியிருந்த வைணவப் புத்தெழுச்சி மற்றொரு புறம். இவற்றைவிட முக்கியமாக, பல நூற்றாண்டுகளாக அரச ஆதரவையும் மக்கள் மத்தியில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் பெற்று மண்ணில் வேரூன்றியிருந்த சமணம். இப்படிப் பல்வேறு தரப்புகளின் முரணியக்கங்களுக்கு இடையில் முகிழ்த்துப் பரவியது சரண மரபு. வைதீக வேள்விகளையும் பழம் ஆகம மரபுகளில் பிராமணப் பூசகர்களுக்கும் கோயில் வழிபாட்டுக்கும் சடங்குகளுக்கும் தரப்பட்டிருந்த இடத்தையும் சரண மரபு மறுதலித்தது. திருத்தலம், நல்ல காலம் போன்ற புனித இடம், காலம் பற்றிய மொழிதல்களையும் அது ஏற்கவில்லை. நிலையான (“ஸ்தாவரமான”) கோயிலை விடுத்து ஓரிடத்தில் நிலையற்ற சிவபக்தர்களான பரதேசித் துறவிகளுக்கு (“ஜங்கமர்”) சரண மரபு முதன்மை இடம் கொடுத்தது.
வைதீக, ஆகம மரபுகளை எதிர்த்ததைப் போன்றே அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் குறைவில்லாத சமணக் கோயில்களையும் மடங்களையும் சரண மரபு எதிர்த்தது. சமணத்தின் மையக் கோட்பாடான அகிம்சை சரண மரபும் ஏற்றுக்கொண்ட ஒன்று என்றாலும் சமணக் கொள்கையான ஊழ்வினையை அது கடுமையாக விமர்சித்தது. ஊழ்வினைக்கு மாறாக சிவனிடத்தில் சரணடைந்தவருக்குக் கிடைக்கும் இறையருளையும் மீட்சியையும் அது முன்நிறுத்தியது. இப்படிப் பல்வேறு சமயப் பண்பாடுகளோடு பல்முனைத் தாக்குதல்களில் ஈடுபட்ட அதே நேரத்தில் சரண மரபு சாதி, பாலினத் தளங்களில் சற்றேனும் வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் களைய முற்பட்டது. பாலின வேறுபாட்டைக் கேள்விக்குட்படுத்தும் தேவர தாசிமய்யாவின் வசனம் இது:
முலைகளும் நீள்முடியும்
வருவதைக் கண்டால்
பெண் என அழைக்கிறார்கள்
அவர்கள்
தாடியும் மீசையும் கண்டால்
ஆண் என்கிறார்கள்
அவர்கள்
ஆனால் பார்
இரண்டுக்குமிடையில்
அலைபாயும் ஆன்மா
ஆணுமில்லை பெண்ணுமில்லை
இராமநாதனே.
தாசிமய்யாவின் இன்னொரு புகழ்பெற்ற வசனம் “காதல் கிழத்தியின் மூச்சுக்கு / முலைகளும் நீள்முடியும் இருந்ததா? / எஜமானனின் மூச்சு / முப்புரிநூல் அணிந்திருந்ததா?” என எள்ளலோடு வினவுகிறது. சரண மரபின் புரட்சிகரம் இறைபக்தி என்னும் முகாந்திரத்தில் சமத்துவத்தை நோக்கிப் பயணப்பட்ட அதன் நோக்கத்திலும் செயல்பாட்டிலுமே உள்ளது. இன்று லிங்காயத்துகள் சாதியாகத் தங்களை முன்நிறுத்திக்கொண்டிருந்தாலும் சாதிப் பாகுபாடு பார்த்தாலும் சரண மரபின் உயரிய தொடக்க வரலாற்றை நாம் மறந்துவிடலாகாது.
கன்னட மொழிப் பகுதிகளில் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை சிவபக்தியை முன்னிறுத்தும் சரணர்களின் வசனக் கவிதை செழிப்புற்றது. அந்தக் காலகட்டத்துக்குப் பிறகும் வசனங்கள் உருவாகின என்றபோதிலும் தாசிமய்யா, பசவண்ணர், அல்லம பிரபு, அக்கமகாதேவி முதலிய பெரும் பக்தியிலக்கியவாதிகளின் காலகட்டம் என்பதால் இந்த நூற்றாண்டுகள் சிறப்படைகின்றன. வசனம் என்பதன் பொருள் ‘வாக்கு’ அல்லது ‘கூற்று.’ வேதத்தைக் குறிக்கும் சுருதி என்பதன் பொருளான ‘கேட்கப்பட்டது’ என்பதிலிருந்தும் இதிகாசங்கள், புராணங்கள், தர்ம சாஸ்திரங்களைக் குறிக்கும் ஸ்மிருதி அல்லது ‘நினைவு கூரப்பட்டது’ என்பதிலிருந்தும் வேறுபட்டிருக்கிறது இது. சமஸ்கிருதத்தை இறைமொழியாகக் கட்டமைத்த ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புச் செயற்பாடாகக் கன்னட வசன இலக்கியம் அமைந்தது எனத் தன் முன்னுரையில் எழுதுகிறார் வினய சைதன்யா. சமஸ்கிருதப் பண்பாட்டு மேலாண்மையை மறுத்ததோடு அல்லாமல் செவ்வியல் காவியக் கட்டமைப்புகளையும் மறுத்து நாட்டார் இலக்கியம் எனச் சொல்லத்தக்க வகையில் அமைந்தவை வசனங்கள்.
சாமானிய மக்களை முன்வைத்து மொழியப்பட்டவை வசனங்கள். எனவே வசனங்களை அடிநாதமாகக்
கொண்ட பசவண்ணரின் பக்தி இயக்கத்தில் படைப்பாளிகளாகவும் சாதாரண மக்களுக்கு முதன்மையான இடம் கிடைத்தது. படகோட்டிகள், செருப்பு தைப்பவர்கள், துணி வெளுப்பவர்கள், அரச நிர்வாகிகள், மந்திரிகள் எனப் பல தொழில்களை, பல சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வசனக்காரர்கள். பசவண்ணரின் “காயகவே கைலாசா” என்ற கருத்தாக்கம் உழைப்பில் கைலாசத்தைச் சித்திரித்து ஆன்மிகத்தையும் உலகியல் வேலையையும் ஒருங்கே இணைத்தது.
சரணர்கள் சிவனிடத்தில் கொண்டிருந்த, கொள்ள வேண்டிய உறவை “சரண சதி, லிங்க பதி” என்று சரண சித்தாந்தம் குறிப்பிடுகிறது. சிவனை மணாளனாகவும் சரணர்களைப் பெண்பாலாக, மனைவியாக இறைக்குக் கீழ்நிலையிலும் வைத்துச் சித்திரிக்கிறது இக்கூற்று. இவ்வகையில் இக்கூற்று இறை-ஆண், பக்தர்-பெண்கள் என்ற வகையில் வழக்கமான பால் படிநிலையை நிறுவினாலும், உலக மாந்தர்களைப் பொறுத்தவரை ஆணையும் பெண்ணையும் சரிசமமாக ஒரே தட்டில் வைப்பது கருதத் தக்கது. சரணர்களின் சமய வழியில் புறந்தள்ளப்பட்ட ஐந்து வகைத் ‘தீட்டுகள்’ - தூமைத் தீட்டு, சாவுத் தீட்டு, பிள்ளைப் பேறுத் தீட்டு, சாதித்
தீட்டு, வைதவ்யம் எனப்படும் கைம்பெண் கோலம் - பெண்கள் பாலினப் பாகுபாட்டு நியதிகளிலிருந்து ஓரளவேனும் தப்பிக்க உதவின. சரண மரபில் ஆண்களைப் போலவே பெண்களும் சிவபக்தியில் ஈடுபடுவதும் வசனங்களைப் படைப்பதும் வரவேற்கப்பட்டன. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பதினைந்தாயிரச் சொச்ச வசனங்களை ஆக்கியவர்கள் நூற்று முப்பது சரணர்கள். அதில் முப்பத்து முவர் பெண்கள். பசவண்ணரின் இரு மனைவிகள் நீலம்மா, கங்காம்பிகை, அவர் சகோதரியான நாகலாம்பிகை ஆகியோரும் இதில் அடக்கம்.
மூச்சே நறுமணமானால்
“தனிமையிலிருந்து தனிமைக்கு” (“alone to the Alone”) என்று உடுதடியிலிருந்து ஸ்ரீசைலக் கதலி வனம் வரையிலான அக்கமகாதேவியின் பயணத்தை வினய சைதன்யா குறிப்பிடுகிறார். தன்னை நேசித்த அரசனின் அரண்மனை, சரணக் கூடுகையிடமான அனுபவ மண்டபம் என்ற இடைப்பகுதி நிறுத்தங்கள். வாழ்வும் பயணமும் ஒன்றுக்கொன்று பொருள்பொதிந்த பதிலீடாக விளங்க, அவற்றில் சரடாக ஓடும் தனிமை. அத்தனிமையிலும் அக்கமகாதேவி தனியொருத்தியாக இல்லை. அவரது தனிமை சுயம்கரைந்துவிட்ட தனிமை. சென்னமல்லிகார்ச்சுனனிடமான அர்ப்பணிப்பில் உலகமே தானாக ஆகும்போது தனியாக ஏகாந்தமென்ற ஒன்று தேவையா என வினவும் தனிமை அது. அவரது வசனம் ஒன்று “மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்? . . . உலகமே தானானபின் ஏகாந்தத்துக்கு அவசியமென்ன சென்னமல்லிகார்ச்சுனனே?” என்று கேள்வியெழுப்புகிறது.
சென்னமல்லிகார்ச்சுனனின் நினைப்பிலும் அணைப்பிலுமாக அவர் ஒருமித்திருந்ததற்குச் சான்று கூறுகின்றன அவர் வசனங்கள். அக்கமகாதேவிக்கு சென்னமல்லிகார்ச்சுனன் “உலகத்தில் இடைவெளியின்றி உள்ளவன்,” “உலகமே கண்ணானவன்.” அதாவது, உலகத்தைத் தாண்டியவனாக இல்லாமல் இவ்வுலகமேயாக அணுக்கத்தோடிருப்பவன். அதனாலேயே “இகத்துக்கு ஒரு கணவன் பரத்துக்கு ஒரு கணவனா” என்று அவரால் கேள்வியெழுப்ப முடிகிறது. மணிமகுடத்தோடும் பத்துக் கரங்களோடும் பிரபஞ்சத்துக்கே அரசனாக இருந்தாலும் அவர் உள்ளங்கைக்குள் வந்து பொதிந்திருக்கும் அழகனும் நேசனும் அவன்.
உலகம் யாவுமாக அவனிருப்பினும் சமயத்தில் முகம் காட்டாமல், உரையாடாமல் தன்னை மறைத்துக்கொள்கிறான் அவன். அப்படியான தருணங்களில் அக்கா “அனைத்திலும் நிறைந்திருந்தும் எனக்கு ஏன் முகம் காட்டாதிருக்கிறாய்?” என மருகிக் கரைகிறார். சென்னமல்லிகார்ச்சுனனின் திருமேனியே அடைக்கல மென்றானவளுக்கு அவன் மறைந்து விளையாடுவது தரும் துயரம் தாங்கவொண்ணாமல் உள்ளது. “சென்னமல்லிகார்ச்சுனனை ஓரிரவு பிரிந்தாலும் இணையைப் பிரிந்த சக்ரவாகப் புள்”ளாகிறேன் என்று அரற்றத் தோன்றுகிறது. “காமத்தில் கற்பனையில் கருகி” அமர்ந்திருப்பதும் கவிதைக்கான பொருளாகிறது அக்காவுக்கு.
சென்னமல்லிகார்ச்சுனனையே தன் விதியாகவும் மதியாகவும் கதியாகவும் கருதும் அக்கமகா தேவிக்கு அவனுடனான உறவு நான்கு தளங்களில் துலங்குகிறது. முதன்மையாக, அவரது காதலன் அவன். அவரது வசனமொன்றில் அவரது கனவில் - அரிசி, பாக்கு, ஓலையோடு கூடிய மங்கலக் கனவு - ஆதிக்குடி இளைஞனாக, கொரவனாக (கொரபா எனப்படும் பழங்குடி இனத்தவனாக) பிச்சை கேட்டு வந்து காதலைத் தூண்டுகிறான். வாரணமாயிரம் சூழ வலம் செய்து, நாரண நம்பி எதிர் நடக்க, பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டுவதைக் காணும் ஆண்டாளுடைய கனவிலிருந்து, ஆதிக்குடி அடையாளத்தைப் பேசும் அக்கமகாதேவியின் வசனம் மாறுபட்டிருக்கிறது. மற்றொரு வசனத்தில், சென்னமல்லிகார்ச்சுனன் கொண்டிருக்கும் காதலன் அடையாளம் உலகியலின் கணவன் உறவுக்கு எதிர்நிலையில் உள்ளது. “உள்ளே கணவன் வெளியே காதலன்” எனும்போது இரண்டையும் ஒன்றாக வைத்துக்கொள்ள இயலாத வேதனையாகப் பெருக்கெடுக்கிறது.
அடுத்ததாக, சென்னமல்லிகார்ச்சுனன் அக்கமகாதேவியின் மணாளனாகவும் வசனங்களில் இடம்பெறுகிறான். அவனோடு நடந்து முடிந்த திருமணம் பற்றிய ஞாபகக் கொண்டாட்டத்தை அவரது வசனங்களில் காண்கிறோம். “மரகதத் தளம் தங்கத் தோரணம் வைரத் தூண் / பவழத்தில் பந்தலிட்டுத் திருமணம் செய்தார்கள்” என்கிறது அவரது ஒரு வசனம். அனுபவ மண்டபத்தில் அல்லமரிடம் “இந்த வீட்டில் மருமகளாக நான் வந்திருக்கிறேன்” என்று அவர் தந்த பதில் நோக்கத்தக்கது. உறவின் இந்த இரண்டு தளங்கள் பயின்றுவரும்போது வசனங்கள் சங்க அகப்பாடல்களின் தன்மைகளோடு வருகின்றன. குறிப்பாக, குறிஞ்சித் திணையின் கூடலை முல்லைத்திணையின் காத்திருத்தலை நெய்தலின் ஆற்றாமையை வசனங்கள் எடுத்துரைக்கின்றன. தவிர, சமஸ்கிருதக் கவி மரபில் இடம்பெறுகின்ற தடை செய்யப்பட்ட காதலையும் அவர் வசனங்கள் தொட்டுப் பேசுகின்றன.
சென்னமல்லிகார்ச்சுனனைக் காதலனாகவும் கணவனாகவும் உரைக்கும் வசனங்கள் பாலியல் சார்ந்த படிமங்களோடும் காம நுகர்வின்பத்தை வெளிப்படையாகப் பேசுபவையாகவும் உள்ளன. உதாரணமாக, அக்கமகாதேவியின் ஒரு வசனம் “என் குட முலைகளோடு சேர்த்து எப்போது உன்னைத் தழுவிக்கொள்வேன்” என சென்னமல்லிகார்ச்சுனனிடம் விரகத்தில் இறைஞ்சுகிறது. இன்னொரு வசனம் அவனைத் தழுவுகையில் எலும்பு பொடிபட அவாவுகிறது. காமத்தை வெளிப்படையாகப் பேசும் வகையில் ஆண்டாள் பாசுரங்களை ஒத்த தன்மையை அக்கமகாதேவியிடமும் பார்க்கிறோம். ஆண்டாள் பாசுரங்களில் காணப்படுவதுபோலக் காதல், காமம் சார்ந்த உருவகங்களும் படிமங்களும் இறைவனுடனான ஆன்மிக ஒருமையை, ஒத்திசைவைச் சுட்டும் வகைகளில் வசனங்களில் அமைகின்றன.
மூன்றாவது தளத்தில், அக்கமகாதேவிக்கு சென்ன மல்லிகார்ச்சுனன் ஆத்ம குருவாக உள்ளான். மாயையை நீக்குபவனாக அறியாமையைக் களைபவனாக உள்ளான். சிவ மந்திரத்தையும்
சைவ நெறியையும் காட்டித்தந்த சற்குருவாக, அவரை முக்திப் பாதையில் வழிநடத்துபவனாக இருக்கிறான். கடைசியாக, சென்னமல்லிகார்ச்சுனனைக் “கடவுளருக்கும் கடவுளராக,” தந்தையாக, ஆதிசக்தியோடு கூடியிருக்கும் இறைவனாக அக்கமகாதேவி காண்கிறார். சென்னமல்லிகார்ச்சுனனை “ஆண்கள் எல்லாரையும் பெண்களாக்கி ஆளும் கொரவனாக” விவரிக்கிறார் அவர்; பிறப்பும் இறப்பும் இலாத, மாற்றமுறாத, அழிவில்லாத, குலமிலாத, குறியிலாத, புரிபடாத, எல்லாவற்றிலும் உள்ளிடையான எல்லாவற்றுக்கும் அப்பாலானவனாகக் காட்டுகிறார். பக்தரிடத்தில் சாலப் பரிந்து அன்பு காட்டும் இறைவன் மாத்திரமில்லை அவன்; எளிதில் மன்னிக்காதவனாகவும் விதியில் சிக்கவைப்பவனாகவும் பிறவியின் நரகத்தீயில் தள்ளுபவனாகவும் இருக்கிறான். அக்கமகாதேவியைப் பொருத்தவரை சென்னமல்லிகார்ச்சுனன் சகுண சொரூபியும்கூட. சிவபுராணக் கதைகளின் அடிப்படையில் சிவனுடைய அருளிச்செயல்களையும் குணநலன்களையும் அக்காவின் வசனங்கள் நினைவுகூர்ந்து அவனது நிகரற்ற கருணையில் இளைப்பாறுகின்றன.
அக்கமகாதேவியின் இளம் வயதிலேயே, அவர் தன் இருபதுகளில் இருக்கும்போதே சென்ன மல்லிகார்ச்சுனனோடு ஒன்றிணைந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றன அவரைப் பற்றிய வரலாற்றுக் கதைகள். “குறுகிய பொழுதின் பிரகாசமான எரிதல்” என அவர் வாழ்வைச் சுட்டி எழுதுகிறார் ஏ.கே. ராமானுஜன். குறுகிய பொழுதென்றாலும் பல நூற்றாண்டுகள் தாண்டி இன்றும் அவர் வாழ்வின் பிரகாசம் வசனங்களின் கவித்துவமாகச் சுடர்விடுகிறது. கிழக்கத்திய, இந்தியக் கவிதை மரபை விகசிக்க வைக்கிறது. போற்றுதலுக்குரிய அச்சுடரின் தீர்க்கமான, தீராத ஒளியிலேயே இந்த மொழிபெயர்ப்பாக்கம் துலக்கம் பெறுகிறது
காலச்சுவடு வெளியீடான அக்கமகாதேவியின் ‘மூச்சே நறுமணமானால்’ நூலுக்கான பெருந்தேவியின் பின்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகள்.