ஒரே நாடு, ஒரே மொழிக்குடும்பம்: பரப்புரையும் யதார்த்தமும்
இந்திய மொழிகள் (மைய அரசின் சித்தாந்தப் பார்வையில் பாரதிய பாஷைகள்) இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் பல நிலைகளில் உள்ள நான்கு (அந்தமான் மொழிகளைச் சேர்த்தால் ஐந்து) மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த, பெரும் எண்ணிக்கை கொண்ட மொழிகள் என்பது பெரும்பான்மையினரது புரிதல். இந்தப் புரிதலை மாற்றுவதில் இந்திய அரசு முனைந்திருக்கிறது. இதன் மாற்றுப் பார்வையில் இவை ‘இந்திய மொழிக் குடும்ப’த்தைச் (அரசின் சொல்லாட்சியில் பாரதிய பாஷா பரிவாரைச்) சேர்ந்தவை. இந்த மாற்றுப் பார்வையை உருவாக்கும் நூல்களின் பின்னணி இது.
மைய அரசு 2021இல் கல்வி அமைச்சின் கீழ் பாரதிய பாஷா சமிதி (அதாவது, இந்திய மொழிகள் குழு) என்ற அமைப்பை நிறுவியது. இதன் தலைவர் சமஸ்கிருத அன்பர் சாமு கிருஷ்ண சாஸ்திரி. இவர் சமஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் நெடுநாள் தலைவர். இதன் அலுவலகம் தில்லியில் தீன தயாள் மார்க்-இல் உள்ள ராஷ்ட்ரிய சேவா சங் (ஆர். எஸ்.எஸ்)-இன் வளாகத்தில் இயங்குகிறது. சமிதி 2025 அக்டோபரில் மொழி பற்றிய மாற்றுப்பார்வைக்குக் கல்விக் கவசம் (academic cloak) அணிவிக்க இரண்டு நூல்களை நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் வெளியிட்டது
