பகடைக்காயாக்கப்படும் பெண்கள்
அண்மையில் பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியிருப்பதும் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குறித்து பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் பேசியிருப்பதும் பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இவை தற்செயலாக நழுவிய சொற்கள் அல்ல. பெண்களை அவர்கள் சார்ந்த துறைகளில் இரண்டாம்தரப் பங்கேற்பாளர்களாக நிலைநிறுத்தத் துடிக்கும் நீண்டகாலச் சமூக உளவியலின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் துறை சார்ந்த செயல்பாடுகளைக் காட்டிலும் அவரது ஒழுக்கம் குறித்த விவாதமே இங்கே சந்தை மதிப்பைப் பெறுகிறது.
ஆனால், இந்தச் சீரழிவு இன்று நேற்று தொடங்கியதல்ல; பெண்களைக் குறிவைத்துப் பாலின வக்கிரத்தைக் கக்கும் பேச்சுக்கள் தமிழக அரசியல் களத்திற்குப் புதிதல்ல. தமிழக அரசியலின் பிதாமகர்கள் என்று கொண்டாடப்படுபவர்களே இந்த மொழி வன்முறைக்கு அடிக்கல் நாட்டியவர்கள் என்பதுதான் கசப்பான வரலாறு. உயர்மட்டத் தலைவர்களே ஆபாசமாகப் பேசும் நிலையில் இரண்டாம்மட்டத் தலைவர்களையும் ஆபாசப் பேச்சுக்கென்றே நேர்ந்துவிட்டவர்களையும் பற்றிக் கேட்கவே வேண்டாம். மலினமான ஆபாசப் பேச்சைக் கட்சித் தலைவர்களும் கைதட்டி ரசிப்பது ஆபாசப் பேச்சு தமிழக அரசியலில் சிந்தனையில் ஆழமாக வேரூன்றியுள்ளதன் அடையாளம். இப்படிப் பேசுபவர்கள்மீது அவர்கள் சார்ந்த கட்சிகள் நடவடிக்கைகள் எடுப்பது விதிவிலக்காகவே நிகழ்கிறது.
தமிழக அரசியலின் ஆணாதிக்க மனநிலை வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்கொண்ட வன்முறைகள். 1989இல் சட்டமன்றத்தில் அவர்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் அவரது ஆடை குலைக்கப்பட்டதும் இந்திய ஜனநாயகத்தையே உலுக்கின. அரசியல் மேடைகளில் மட்டுமின்றிச் சட்டமன்றத்திலும் கீழ்த்தரமான பாலியல் அவதூறுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெண் உடல் அதிகார அரசியலின் சதுரங்கக் களமாக மாற்றப்பட்டிருக்கும் அவலம் அகில இந்திய அளவிலும் நிலவுகிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயப்பிரதாவைப் பற்றிச் சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் ஆபாசமாகப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் தன் கட்சி சகாவான மீனாட்சி நடராஜனைப் பற்றி 2013இல் மோசமாகப் பேசினார். அரசியல் களத்தில் பெண்களின் திறமையையும் ஆளுமையையும் அங்கீகரிக்க மறுக்கும் மனநிலை, அவர்களின் தோற்றத்தையும் நடத்தையையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையை அவரது ‘அழகான முகத்தோடு’ சுருக்கிப் பேசிய பாஜகவின் கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்துகள் இதற்குச் சான்று. பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கருப்பு நாகத்தோடு ஒப்பிட்டுப் பேசிய கல்யாண் பானர்ஜியின் வசைகளும் இந்த ரகம்தான். தமிழகத்தின் 2021 தேர்தல் களத்தில் திமுகவின் ஆ. ராசா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பையும் அவரது தாயார் குறித்துப் பேசிய சர்ச்சைகளும் பெண்மையை இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் போக்கின் ஒரு பகுதிதான். பெண்ணை உடலளவிலேயே சுருக்கிப் பார்க்கும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள் இவை.
திரைத்துறைச் சூழல் பாலின வன்மத்தைக் கொண்டாட்டமாகவே மாற்றியிருக்கிறது. ராதா ரவி, பயில்வான் ரங்கநாதன், தயாரிப்பாளர் ராஜன் ஆகியோர் திரைத்துறையில் உள்ள பெண்களைப் பற்றிக் கேவலமாகப் பேசிவருகிறார்கள். நடிகைகளின் உடல்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்வு ஆகியவை குறித்து வாய்க்குவந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இந்த இழிவுபடுத்தல் சமூகம் நிகழ்த்தும் கூட்டு வன்முறையாக மாறியிருக்கிறது. ஒரு பெண்ணை நோக்கி வீசப்படும் பாலியல் ரீதியான கருத்து ஆயிரக்கணக்கான விருப்புக்குறிகளைப் பெறுவதும், அது ‘மீம்’ வடிவில் கொண்டாடப்படுவதும் ஒரு சமூகமாக நாம் அடைந்திருக்கும் பண்பாட்டுச் சரிவைக் காட்டுகிறது. பொது வெளியில் செயல்படும் பெண்கள் குறித்து நமது ஆழ்மனதில் இருக்கும் பார்வைதான் இதற்குக் காரணம்.
சந்தர்ப்பவாத மௌனமும் சுயநலப் பெண்ணியமும் இந்த இழிவுபடுத்தல்களைக் காட்டிலும் பேரதிர்ச்சி தருவது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக அரசியலிலும் சினிமாவிலும் ஒருமித்த குரல் எழுவதில்லை. இந்த மௌனம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் காணப்படுகிறது. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் பல பெண்கள் தங்களுக்குப் பாதிப்பு வரும்போது மட்டும் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இன்னொரு பெண்ணுக்கு அல்லது மாற்று அரசியல் முகாமில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும்போது இவர்கள் மௌனம் காக்கிறார்கள். இத்தகைய மௌனங்கள் பெண்களைக் கூட்டிணைந்த சமூக சக்தியாக மாறவிடாமல் தடுத்து, அவர்களை மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்துகின்றன. பெண்களின் கண்ணியம், உரிமை ஆகியவற்றுக்கான குரலைப் பலவீனப்படுத்துகின்றன.
தமிழக அரசியல்வாதிகளின் நாவுகள் இன்று தார்மீகக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக இழந்துவிட்டன. தங்களைப் புனிதச் சுடர்களாகவும் பண்பாட்டுப் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்ளும் தலைவர்கள், மூடிய அறைகளுக்குள் பேசப்பட்ட வக்கிரங்களைப் பொதுவெளியில் பேசத் துணிவது, சட்டத்தின் மீதோ சமூக ஒழுங்கின் மீதோ அவர்களுக்கு அச்சமில்லை என்பதையே காட்டுகிறது. அரசியல் கட்சிகள் முதலில் தங்கள் மொழியை பண்படுத்திக்கொள்ள வேண்டும். சமூகம் ஒருமித்த குரலில் இந்த ஆணாதிக்க வன்முறையை எதிர்க்க முன்வர வேண்டும். சமூக மௌனம் கலையாதவரை, அரசியல் மேடைகள் பெண்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் பலிபீடங்களாகவே தொடரும். இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டுவது சட்டத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒரு நாகரிகச் சமூகமாக நம் ஒவ்வொருவரின் தார்மிகக் கடமை.
