கடிதங்கள்

மிகக் கொதிப்புணர்வுடைய மொழிப் பிரயோகங்களைத் தாங்கி வந்துள்ளது பிப்ரவரி (2026) இதழ் தலையங்கம். அதில் சற்று அரசியலும் வெளிப்படையாக உள்ளிழுக்கப்பட்டுள்ளது. ‘காலச்சுவடு’ வழக்கமாக எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆனால், இந்தத் தலையங்கத்தில் தனது உள்ளார்ந்த மனக்குமுறலை நேரிய பார்வையில் சற்று சீற்றத்துடன் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தக் கடும் அதிருப்தி, நடுநிலைப் பக்குவமுடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வரவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகம் நமது நெடிய வரலாற்றுப் பாரம்பரியமிக்க கலை, கலாச்சார அமைப்புகளுக்கு சில நிபந்தனைகளை விதித்து, 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் விருதுகள் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டது.
இதன்மூலம் இந்தியப் பன்மைத்துவம், இலக்கியப் பரிமாற்றம், பரந்துபட்ட அறிவார்ந்த பன்மொழிப் படைப்புகளைக் கெளரவித்துப் பாராட்டுதல் ஆகியவை மிகுந்த சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. படைப்புச் சுதந்திரத்தையும், அறிவறம் போற்றும் நூல்களுக்கான வெகுமதிகளையும் தனது துருப்பிடித்துப்போன சில எண்ண ஓட்டங்களுக்குள் முடக்கிப் போடுவதை அறிவுலகம் ஒருபோதும் ஏற்காது.
இது அப்பட்டமான கலாச்சார ஒடுக்குமுறை. எந்த விதமான ‘புதிய’ பூதாகரமான சித்தாந்தங்களை எதிர்பார்க்கும் நடவடிக்கை இது? சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டின் மாண்பிற்கும், அதன் சகோதரத்துவ விழுமியங்களுக்கும் வைக்கப்பட்ட இந்த உலையின் உக்கிரம் இந்திய இறையாண்மை மகத்துவத்தைச் சீண்டிப் பார்க்காதா? ஆட்டைத் தீண்டி, மாட்டைத் தீண்டி இப்போது மனிதத்தைப் போற்றிப் பாதுகாத்துப் படைப்புலகிற்குப் பெருமை சேர்க்கும் நமது சாகித்திய அகாதெமியையும் தீண்ட முனைவதைத்தான் தலையங்கம் எச்சரித்துள்ளது.
ஆனால் இதற்கு சற்று ஆறுதலாக ‘அவர்கள் வாசித்தபோது...’ என்ற பதிவை வெளியிட்டு படைப்புலகைப் பெருமைப் படுத்தியுள்ளது இதே காலச்சுவடு இதழ். தமது ஆழ்ந்தகன்ற பார்வையின்பாற்பட்ட தமிழ் எழுத்தாற்றலால் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள எழுத்தாளர் பெருமாள்முருகனது 60ஆம் ஆண்டு நிறைவு விழா ஒரு ‘பரந்துபட்ட வாசிப்புலக விழாவாக’ நடத்தப்படுள்ளது. உலகின் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறந்த படைப்புகளைப் படைத்த தமிழ் படைப்பாளர் பெருமாள்முருகன், ‘தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியாகவும், இந்திய இலக்கியங்களின் தூதுவராகவும் விளங்குகிறார்’ என்று பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் லெத்திசியா இஃபான்ஸ் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பாராட்டிப் பேசி உள்ளார்.
60 பெண் படைப்பாளர்களது, கட்டுரைத் தொகுப்பான ‘நனவிலியின் நிலம்’ என்ற நூலை வெளியிட்டு ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ், ஆங்கிலத் துறையினர் நடத்தித் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மாபெரும் பெருமை சேர்த்துள்ளனர். இவ்வரிய பெருமை, நமது தமிழ்ப் படைப்பாளர் ஐயா பெ.மு.விற்கு மட்டுமல்லாது, இதுபோன்ற அரிய பதிவுகளை வாசகரது பொதுப் பார்வைக்குக் கொண்டுவரும் ‘காலச்சுவடு’ இதழுக்கும் சேரும்!
சி. பாலையா
புதுக்கோட்டை
ஒன்றிய அரசின், தேச மக்களின் பண்பாடு, கலை, கலாச்சாரத்தின் மீதான உச்சகட்ட தாக்குதலே சாகித்திய அகாதமியின் சமீபத்திய நடவடிக்கை. அதைத் தலையங்கம் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளது. விருதுகள் ‘வழங்குவது’ என்ற நிலையிலிருந்து, ‘வாங்குவது’ என்ற மோசமான நிலையை எட்டியுள்ளது வருந்தத்தக்கது. ஒன்றிய அரசின் செயலுக்குத் தமிழக அரசின் செயல்பாடு சரியானது ஆகும். சென்னை புத்தகக் கண்காட்சி 2026 காலச்சுவடு அரங்கின் படக் காட்சிகள் அருமை. பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியினையும் காட்சிப்படுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். வேங்கைவயல் சம்பவத்தின் பின்னணியாக ‘மஞ்சள் என்பது நிறமல்ல’, குழந்தைகளுக்காகக் காத்திருப்பவர்களின் மனநிலையாக ‘காடிப்பீ’ ஆகிய சிறுகதைகள் அமைந்திருந்தன. மாபெரும் தலைவர் எல். இளையபெருமாளின் வாழ்க்கையை வெ. முருகன் கட்டுரை வாயிலாக அறிய முடிந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி நாயகனாகத் தடம்பதித்த தலைவர்களுள் இவருக்கும் சிறப்பான இடம் உண்டு. 1968 வெண்மணி நிகழ்வின்போது இவரின் செயல்பாடுகள் கட்டுரையில் இடம்பெறவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. வரலாற்று நிகழ்வுகள் கக்கன் - இளையபெருமாள் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது எந்த ஆண்டு, எந்தெந்தத் தொகுதிகள் என்ற விபரம், கக்கனுக்கு மேலூரில் சிலை வைப்புச் சம்பவம் நிகழ்வுகள் எந்த ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். குழந்தைகளுக்கு உலகை அடையாளம் காட்டுபவர் ஆசிரியர். ஆசிரியப் பணி இன்று எந்த நிலையில் உள்ளது, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு, நிர்வாகம், கல்வித்துறையினர் இவர்களின் கூட்டுப் பணியை மாணவர்கள் - குழந்தைகளுக்கான கல்விப் பணி, அவர்களுக்கும் அவர்களுக்கான பொறுப்பு, கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் கழுத்து எலும்பு ஒடிக்கப்பட மாட்டாது.
சீனி மணி
பூந்தோட்டம்
சுதந்திரத்திற்குப் பிறகான தமிழக வரலாற்றை எழுதினால் அதில் நிச்சயமாக இல(எல்).இளையபெருமாள் அவர்களுக்கு மாபெரும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. இங்கு வரலாறு என்பதே கட்டமைக்கப்பட்டதாக இருக்கும் போது இவரின் சமுதாய பங்களிப்பு நேர்மையான முறையில் பதிவிடப்படுமா என்ற ஐயம் எழுகிறது. காந்திய கொள்கையை உள்வாங்கி அதற்கும் மேலான செயல்களையும் செய்துள்ளது மாபெரும் சாதனையாகும். நவகாளி தெருக்களில் காந்தியின் கால் தடத்தை தேடுவதைப் போல தமிழகத்தின் கலவரத் தெருக்களிலும் இவரின் கால்தடத்தை தேடலாமென்பதே இவரின் சமுதாய கடமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஆனால் இன்று இப்படி ஒருவரை சமுதாயம் பெறுவது சாத்தியமா என்றும் எண்ணத் தோன்றுகிறது. அவரை தொடர்ந்து வெளிச்சமிட்டுக் காட்டிவரும் காலச்சுவடுக்கு வாழ்த்துகள். வரலாற்று நூல்கள் மறைத்தாலும் இவ்விதழின் வழி அவரை எதிர்காலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. தனக்குப் பிடித்தமானதை செய்வதற்கும் கற்றலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பிடித்தமானதை நீண்ட கவனத்தோடு செய்வதால் கற்றலையும் அவ்வாறு செய்வார்களென்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் குறுகியநேர(shorts) வீடியோக்களிலேயே கவனத்தை அதிகம் செலுத்துகின்றனர். அதனால் அவர்களின் கவனச்சிதறல் அதிகம் என்பது சரியான வாதமே. அதே சமயத்தில் கட்டுரையாசிரியர் வலியுறுத்தும் கற்பித்தல் என்பது அனைவரையும் உள்ளடக்கிய கலந்துரையாடலாக இருக்க வேண்டும் என்பதை ச.மாடசாமி, வே.வசந்தி தேவி உள்ளிட்ட கல்வியாளர்களும் தங்களின் அனுபவ அறிவின் வழி பெற்றதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாற்றம் காண்பது எப்போதென்றுதான் தெரியவில்லை. அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்களுக்கும் தொடந்து பயிற்றுவிக்க வேண்டிய தேவை உள்ளதையும் அரசுகள் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அது சிறந்த கற்பித்தலுக்கான வழியை ஏற்படுத்தித் தருமென்பதில் ஐயமில்லை.
சி சு ஜெகன்நாதன்
பெங்களூரு
விருதுகள் விவாதங்கள் தலையங்கம் மிகச்சிறப்பானது. விருதுகள் மட்டுமல்ல, பதவிகள், பொறுப்புகள் என வழங்கினாலும் விவாதங்களும் முரண்பாடுகளும் ஏற்படத்தான் செய்யும். ஒருவகையில் இவைகளை அடுத்த விருதுகளை வழங்குபோது, கவனத்தில் கொண்டால், காலப்போக்கில் முரண்பாடுகள் குறைய வாய்ப்பு உண்டு. அவரைக் கொன்ற கோட்சேவையும், ஆதரவளித்த சாவர்க்கரைக் கொண்டாடுபவர்களும் உண்டு. அதற்காக காந்தியின் பெருமையை அழிக்க முடியுமா? இந்த ஆட்சி, வந்ததில் இருந்து, அரசியலமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி கொண்ட அமைப்புகள் எல்லாம் தள்ளாட்டத்தில்தான் உள்ளன. நூலைப் பார்த்துக் கொடுப்பதற்குப் பதிலாக ஆளைப் பார்த்து விருதுகள் கொடுக்கும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. விருதினை வாங்கியவர்கள், வாங்கத் தகுதி உள்ளவர்கள் பெரும்பாலானோர் அமைதி காப்பது அபாயம். நான் விருது வாங்கிவிட்டேன் என்கிற எண்ணமா? விமர்சித்தால் விருது கிடைக்காமற் போய்விடும் என்கிற கவலையா? அதைவிடத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளபடி, விருது பெற விண்ணப்பங்களை அனுப்பக்கோருவது என்பது மிகவும் கீழ்த்தரமானது. நான் எழுதிய நூல் தகுதி படைத்தது என்று நானே சொல்வதா? வெட்கக் கேடானது. பிச்சை எடுப்பதிலும் கேடானது. இதைவிட விருது வாங்காமல் இருப்பதே எழுத்தாளர்களுக்கு கௌரவம். ஒருபோதும் நம்முடைய எழுத்தாளர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம். விருதுகளைவிடத் தன்மானம் முக்கியம்.
என். பாபு அருள் ஜோஸ்
களக்காடு
