தமிழகத்தில் கௌரவக் கொலைகள்: கடக்க வேண்டிய தொலைவு
கடுமையாகத் தாக்கப்பட்டுக் கால் ஒடிந்த நிலையிலும் தன் பேச்சைக் கேட்காத தமிழ்ச் செல்வியை இரவு இரண்டு சக்கர வாகனத்தில் அமரவைத்துக் கொண்டு எரின் காட்டுப்பகுதிக்கு சென்றார் அப்பா ரங்கராஜ். தமிழ்ச்செல்வியை கொன்று விடுவதென்ற முடிவோடு ஏற்கனவே வரவழைக்கப்பட்டிருந்த உறவினர்கள் சிலரும் அங்கு காத்திருந்தனர். உடனே மரத்தில் கட்டிப்போட தமிழ்ச்செல்விக்கு நடக்கப்போவது புரிந்து விடுகிறது. எரிப்பதற்காக விறகுக்கட்டைகள் அடுக்கப்படுகின்றன. தான் கெஞ்சுவதாலோ சத்தம் போட்டு பிறரை அழைப்பதாலோ விட்டுவிட மாட்டார்கள் என்பது தெரிகிறது. தன் கண்ணெதிரிலேயே தனக்கான மரணம் நெருங்கிக் கொண்டிருக்கும் அசாதாரண தருணத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர தமிழ்ச்செல்விக்கு வேறு வழியில்லை. அத்தருணத்தில் தந்தையிடம் “என்னை எரிக்கப் போகிறீர்கள்! போட்டிருக்கும் நகைகளோடு நான் ஏன் சாகவேண்டும்? தம்பி தங்கைகளுக்கு உதவும். கழற்றிக்கொள்ளுங்கள்” என்கிறார். தோடுகளைக் கழற்றிக்கொண்ட அப்பா சாகடிக்கும் முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை. விறகுக்கட்டையால் தாக்கியும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வியின் ப