வாசகர் எப்போதும் வாசகர் மட்டும் அல்லர்
வாசகர் எப்போதும் வாசகர் மட்டும் அல்லர்
மதிப்பிற்குரிய மனிதரொருவரின் மரணச் செய்தி கிடைக்கிறது. அந்த மனிதரின் ஊருக்கும் என் ஊருக்குமான தூரம் இருபது கிலோமீட்டர்கள் அளவில்தான் இருக்கும். நான் பதறிப்போன நிலையில் இறுதியாக அவரின் முகம்பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவரை அடக்கம்செய்தும் இரண்டுமணிநேரம் கடந்துபோயிருக்கின்றது.
என்னுடைய கணக்கில் அவர் மேலும் எட்டுமணிநேரம் வாழ்ந்திருக்கிறார். காலை பதினொரு மணிக்கு இறந்துபோன ஒருவரை மாலை ஏழுமணியளவில் அறிய முடிந்தபோது இன்னும் துயரம் கூடியது.
இலக்கிய இதழ்களிலோ இஸ்லாமிய இதழ்களிலோ கவனம்கொண்டிருக்கும் ஒரு வாசகருக்குக் காயல்பட்டினம் கே.எஸ். முகம்மது ஷுஐப்-ஐத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருபதாண்டுகளுக்கும் முன்னால் என் கவனத்திற்கு வந்த ஷுஐப் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாதியாகத் தோன்றினார்; முரட்டுத்தனமான அடிப்படைவாதியாக அல்ல என்பதைச் சொல்லியாக வேண்டும்.
ஹாமீம் முஸ்தபாவின் ஆசிரியப் பொறுப்பில் மதுரையிலிருந்து வந்த புதிய காற்று இதழில் ஷுஐப் எழுதிய ஒரு கடிதத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷுஐப்பின் கடிதத்தில் இருந்த எழுத்துகள் இந்தத் தோரணையில் இருந்தன. “இஸ்லாமிய நடைமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் சவூதி முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைகளில் இருந்துதானே அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதில் குற்றம் காண என்ன உண்டு?”
இதுதான் அவரை அடிப்படைவாதியாக உணரச் செய்தது. அவருடைய கருத்துகளை நான் அந்த நிமிடமே ஒதுக்கிவிட்டேன்; என்றாலும் என்னைமீறி மனத்திற்குள் புகுந்துவிட்டார். அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்த கருத்துகள் மிகவும் நயமான வார்த்தைகளில் அமைந்திருந்தன. அந்த எழுத்துமுறையை ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமையோடும் ஒப்பிட்டு நோக்கலாம். நான் அதுவரை அறிந்திருந்த இஸ்லாமிய வாசகர்களிலிருந்து அவர் தனித்து நின்றதை உணர்ந்துகொண்டேன்.
என்னுடைய இந்தக் கணிப்புக்கு அவர் அடுத்தடுத்த மாதங்களில் மென்மேலும் வலுவைக் கூட்டிக்கொண்டிருந்தார். காலச்சுவடு, சமரசம் உள்ளிட்ட இதழ்களில் வெளியான கட்டுரை குறித்தோ புத்தக விமர்சனங்கள் குறித்தோ ஷுஐப் ஏதாவது எழுதுவார்; ஏனோதானோவென்று கருத முடியாத கருத்து; எழுத்து. தன் பெயரை அச்சில் பார்க்கக் கருதும் பாமர வாசகனாக இல்லாமல் எதற்கும் ஒரு வலுவை இணைக்கும் வகையில் எழுதிவந்தார். அந்த எழுத்து படாடோபமாக இல்லாமல் ஆழமான நதியைப்போல ஓடும். அன்றைய நாளுக்குப் பரபரப்பாக இருந்த புத்தகங்களை அவர் வாசித்திருக்கிறார். அது அவருடைய எழுத்துகளில் பளிச்சிட்டது. முஸ்லிம் சமூகத்தில் தீவிரமான எழுத்துகளை வாசிக்கும் இப்படியொரு புத்தகப் பிரியர் இருக்கிறாரா என்று என்னை மலைக்க வைத்தார். அவ்வெழுத்துகள் இஸ்லாம் சார்ந்து மட்டுமல்லாமல், சர்வதேச அரசியல் சார்ந்தோ இலக்கியம் சார்ந்தோ இருக்கக் கண்டேன். ஏற்கெனவே சொல்லப்பட்ட கருத்துகளுக்கான பரிமாணத்தை அவர் சொல்லிவிடுவார்; இதனால் என்னையறியாமலே அவர் வசப்படலானேன். வஹாபியத்தைக் கருத்தில்கொண்ட ஒருவர் எனக்கு எதிரிதான். ஆனால் இந்த எதிரியைச் சாதாரணமாகக் கருதிக்கொள்ள முடியவில்லை; மதிக்கத்தக்க எதிரியாக இருக்கிறார். என்றேனும் ஒருநாள் அவரைச் சந்திக்க விரும்பினேன்.
என் எண்ணத்தின் அடிப்படையில் அல்லாமல் அவருடனான சந்திப்பு வேறொரு வகையில் அமைந்தது. திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் நடந்த ஓர் இலக்கியக் கருத்தரங்கிற்கு அவர் தன் நண்பர் சாளைபஷீர் உள்ளிட்ட நண்பர்களோடு வந்துவிட்டார். அப்போது ‘கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ நாவல் பரபரப்பாக இருந்தது. அன்வர் பாலசிங்கம் அதை எழுதியிருந்தார். நாவலாசிரியர் பெயரும் நாவலின் பெயரும் பயங்கரமான வேறுபாட்டில் இருந்ததும் வாசகப் பரபரப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்தக் கருத்தரங்கிற்கு நானும் பேசச் சென்றிருந்தேன்; அன்வர் பாலசிங்கமும் வந்திருந்தார். அன்வர் பேசும்போதும் பேசிமுடித்தபோதும் குறுக்கீடுகள் நிகழ்ந்தன. அந்தக் குறுக்கீட்டில் அன்பான எதிரி ஷுஐப்பும் இருந்தார். நாங்கள் எச்.ஜி. ரசூல், எச். பீர்முகம்மது, மீரான் மைதீன், முஜீப் ரஹ்மான், ஃபிர்தௌஸ் ராஜகுமாரன், கழனியூரன் போன்றோர் அந்தக் குறுக்கீட்டாளர்களின் தரப்புக்கு எதிர்த்தரப்பினராய் இருந்தோம். கருத்துகளைச் சூடாகப் பரிமாறினோம். ஆனாலும் மாச்சரியங்கள் இல்லாமல் ஒருவரோடொருவர் அறிமுகம் ஆகிக்கொண்டோம்.
எழுத்துவடிவில் இருந்த ஷுஐப்பும் நேரே பார்த்த ஷூஐப்பும் வெவ்வேறான தோற்றங்களில் இருந்தார்கள்.
பெரும் கருத்தியல் எதிரிகள்போல் இருந்த ஷுஐப்பும் சாளை பஷீரும் நாளாக நாளாக மன இணக்கப்பாட்டிற்குள் வந்துவிட்டார்கள். இருவருமே இஸ்லாத்தின் அடிப்படைவாத இயக்கங்களின் போக்குகள் கண்டு, மனம் வெறுப்புற்ற நிலையில் தங்களுக்கான தனித்த பாதையைத் தேர்ந்துகொண்டார்கள். அந்த இயக்கங்களின் வழிமுறைகளில் நின்று சமூக உறவுகளை மேம்படுத்தவோ சமூக வளர்ச்சியைச் சிந்திக்கவோ முடியாதென்று புரிந்துகொண்டார்கள்.
பொதுவாக வஹாபியத்திலிருந்து விலகிவருவது வழுக்குப் பாறையைப் பற்றிப் பிடித்து மேலேறுவது போன்றது. அதில் இருவரும் வெற்றிபெற்றதாக உணர முடிகிறது. அண்மைக் காலமாக ஷுஐப் பிறரின் பார்வைக்கு எப்படித் தோன்றினாரென்று வினவ முனைந்தால் ஆச்சரியமான பதில்கள் கிடைக்கும். தமிழ் முஸ்லிம் சமூகம் எம்ஜிஆரின் இயக்கத்தோடு தான் கொண்டிருந்த தொடர்பை என்றைக்கோ கைகழுவிவிட்டது. எம்ஜிஆரின் எதிரியான கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளும் முஸ்லிம்களுக்கு அவ்வளவு ஏற்பான முறையில் இல்லை; அப்படியானாலும் அதிமுகவுடன் அல்லாமல், திமுகவுடன் இசைந்திருக்க தமிழ் முஸ்லிம் சமூகம் விரும்பியது.
ஆனால் இஸ்லாத்தை உயிர்மூச்சாகக் கருதிய ஷுஐப் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆரைவிடவும் ஜெயலலிதாவின் அதிதீவிர ஆதரவாளராக உருக்கொண்டார். ஒருவர் இயக்கத்திலிருந்து வெளியேறிவிடலாம். ஆனால் இயக்கம்சார்ந்த கருத்தியலிலிருந்து அவ்வளவு சுலபமாக விலகிவிட முடியாது. இந்தத் தன்மையை உணர்ந்து ஷுஐப் நடந்துகொண்டவிதம் கண்ணியமானது. எதையும் கருத்தில்கொள்ளாமல் பொதுவெளியில் திரைப்படங்களோடும் திரைப்பட ஆளுமைகளோடும் தன் சார்பை இணைத்துக்கொண்டார்.
2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, முகநூலில் முழுமூச்சுப் பிரச்சாரகராக இருந்து அஇஅதிமுகவுக்கு ஆதரவான பதிவுகளைச் சளைக்காமல் இறக்கினார். திமுகவின் மீதும் கலைஞர் மீதும் அதிதீவிரமான விமர்சனங்களை வைத்தபடியே இருந்தார். தங்களை இஸ்லாத்தின் போர்வீரர்கள்போலக் கருதிக்கொண்ட எண்ணற்ற முஸ்லிம் முகநூலார்கள் திமுகவை முன்னிறுத்தி, அஇஅதிமுக மீதும் ஜெயலலிதா மீதும் வெறுப்பைக் கொட்டிக்கொண்டிருக்க, அவர்களிலிருந்து வேறுபட்ட தனித்த குரலாக ஷூஐப் முழங்கிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எவரேனும் கொண்டுபோயிருப்பார்களா, ஷுஐப்பை ஜெயலலிதா பொருட்படுத்தியிருப்பாரா என்பதுபோன்ற தகவல்களை இனிமேல் நாம் ஒருக்காலமும் அறிய முடியாது.
அஇஅதிமுக வெற்றிவாகை சூடியபோது, நான் என் முகநூலில் ஷுஐப்புக்காக ஒரு கோரிக்கையை அஇஅதிமுகவின் முன்வைத்தேன். ஷுஐப்பின் பிரச்சாரகப் பணியைக் கௌரவிக்க ஜெயலலிதாவும் அஇஅதிமுகவும் முன்வர வேண்டுமென்று என் முகநூலில் எழுதினேன். அதுநாள்வரை திமுகவுக்காக வரிந்துகட்டிக்கொண்டிருந்த திமுக சார்ந்த முஸ்லிம் சகோதரர்கள்கூட என் கருத்துக்குத் தங்களின் விருப்பைப் பதிவுசெய்திருந்தார்கள்; அதுமட்டுமல்லாமல் ஷுஐப்புக்கு ஆதரவாகத் தம் கருத்துகளையும் என் சுவரில் எழுதினார்கள். அந்த அளவிற்கு அவர் எல்லாருடைய கவனத்திலும் பதிந்துவிட்டார்.
கொரோனா ஊரடங்கின்போது நான் 1976-80களில் பணிபுரிந்த நிறுவனமான ‘சங்கு மார்க்’ லுங்கி நிறுவனத்தின் அனுபவங்களைப் பதினேழு தினங்களுக்குத் தொடர்ந்து எழுதிவந்தேன். எவ்விதமான முன் திட்டமிடலும் இல்லாமல் அது எழுதப்பட்டது. தனிமையின் இருட்டைத் துடைத்துக் குறைந்தபட்சம் முகநூல் நண்பர்களோடாவது உரையாடலை நடத்துவோமே என்ற சூழலில் எழுதினேன். நானே எதிர்பார்க்காத அளவில் அதனைச் சில ஆயிரம்பேரேனும் ரசித்தார்கள். அப்பதிவுகளுக்குத் தலைப்பிடாமல் இருந்தேன். அதற்கு நண்பர் ஷுஐப்புத்தான் இரண்டு தலைப்புகளைச் சொன்னார். அதில் ஒன்று, ‘சங்கே முழங்கு.’ நான் அந்தத் தலைப்பையே இன்றளவும் அப்பதிவுகளுக்கு வைத்திருக்கிறேன். இனிமேல் அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் வாய்ப்பு இருக்குமேயானாலும் ஷுஐப்க்கு நன்றி சொல்லி அதே தலைப்பில்தான் நூலாகக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் மனத்திற்குள் இருக்கிறது.
ஷுஐப்பின் நினைவேந்தலாக இணையதள இரங்கல் நிகழ்ச்சியை இலங்கை ஏறாவூர் வாசிப்பு வட்டம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் சாதிசமயப் பேதமோ அரசியல் பேதமோ இல்லாமல் பல தரப்பினரும் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவர் ஷுஐப்பின் மகளை மணம்புரிந்த ரபீக் என்பவர். அந்த நிகழ்வு முழுவதையும் திருமதி ஷுஐப்பும் அவர்களின் மகளும் செவிமடுத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். உரையாற்றிய அனைவரும் ஷுஐப் மீது வெளிப்படுத்திய அன்பையும் மதிப்பையும் கேட்டு அக்குடும்பத்தினர் மனம் நெகிழ்ந்து போயினர். அதற்குத் தக்க மரியாதையை அளிக்கும் விதமாக அனைவரையும் தம் இல்லத்திற்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொண்டார்கள். திருமதி. ரபீக் நிகழ்வின் இடையில் இந்த வேண்டுகோளைக் குடும்பத்தின் சார்பில் முன்வைத்தார்.
உலகளாவிய நிலையில் முஸ்லிம் சமூகத்தை இருள் சூழ்ந்துநிற்கும் இக்கட்டத்தில் ஷுஐப்பின் குடும்பத்தினர் தம் அன்பைப் பக்குவமாக வெளிப்படுத்த உதவியிருப்பவர் நிச்சயமாக ஷுஐப்தான். ஒரு வாசகர் தன்னை இன்னாரென்று பிரகடனப்படுத்தாமலே ஓர் எழுத்தாளராக மலர்ந்திருந்ததால் இந்நிலை சாத்தியமாயிற்று என்று தோன்றுகிறது.