கடைநிலை ஊழியன்
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன்
எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின. எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் கடைநிலை ஊழியன் என ஒருவன் இருப்பான். கட்டடத்துக்குக் கட்டடம், நிறுவனத்துக்கு நிறுவனம், அவன் செயல்பாடு ஒரே மாதிரித்தான். ஒரு கதை இருக்கிறது.
மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுக்குள் ஒரு புலி ரகஸ்யமாகப் புகுந்து விடுகிறது. அடுத்தநாள் செயலாளரைக் காணவில்லை. நிறுவனம் அமைதியாக ஓடியது. அதற்கு அடுத்தநாள் கணக்காளரைக் காணவில்லை. ஒரு சலனமும் இல்லை. மூன்றாவது நாள் ஆக உயர்ந்த பதவி வகிக்கும் மண்டல மேலாளரைக் காணவில்லை. அப்போதும் ஒரு பேச்சு கிடையாது. மறுநாள் கடைநிலை ஊழியனைக் காணவில்லை. முழு அலுவலகமும் பதறிப்போய் அவனைத் தேடியது. அப்படிப்பட்ட கடைநி