கடிதங்கள்
கடிதங்கள்
கபாத்திரங்கள் கொங்கு பாஷை பேசுவதாலேயே அது அந்த மண்ணின் படமாகுமா? அரிவாள் தூக்கிய வன்முறை, ஆக் ஷன் படத்துக்குப் பொருத்தமாவதால் மதுரை, தென் மாவட்டங்கள் லொகேஷனாக, அதுவே அம்மக்களின் கலாச்சாரமாகுமா? அப்படித்தான், பா.ரஞ்சித் தலித் படங்கள் தருவதாகச் சொல்லப்படுவதும். தலித்துகளின் இன்றைய பிரச்சினை என்ன? அதற்கான வாழ்வியல் காரணம், அதைத் தீர்க்கும் வழிமுறைகளை மூலமாகக் கொண்டு நிஜம் பேசப்படுவதில்லை. வழக்கமான ஆக் ஷன் திரைக்கதைக்கு லேசாக தலித் முலாம் பூசப்படுகிறது. காரணம் அவ்விதம் செய்தால் சீரியஸ் படமாகி வசூலாகாதே! நல்ல படம் போல எடுக்கப்படும் காலம்போய், தமிழில் நிஜமாகவே நல்ல படங்கள் எப்போது வருமோ?
அ. யாழினி பர்வதம்
சென்னை-78
பஞ்சமர்க்கு இடமில்லை என்று ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிய சமூகப்பரப்பிலிருந்து ஒரு மகா மதுரகவிஞர் படைப்பாளியைக் கண்டறிந்து காலச்சுவடு தனது பொருநை சிறப்புப்பகுதி மூலம் பொதுப்பார்வைக்குக் கொண்டுவந்துள்ளது. அடித்தள மக்களின் விடுதலையை மட்டும் கையில் எடுத்துத் தனது சமூகப்பார்வையைக் குறுக்கிக்கொள்ளாமல் தேச விடுதலையையும் தமது படைப்புலகில் வீரியப்படுத்தியுள்ளார் முருகேச பாகவதர். “கங்கையில் குளித்தென்ன, கடவுளைப் பூஜித்தென்ன, சங்கநூல் படித்தென்ன, சமத்துவம் இல்லாதவர்கள்” என்ற இவரது பா வரிகளைப் படித்து அரண்டுபோன கல்யாணராமன் போன்ற படைப்பாளிகள் அக்காலத்தில் செயல்பட்டிருந்தால் நமது தமிழ்ப் படைப்புலகம் இத்தகைய மதுர கவியை இவ்வளவு காலம் மறந்து போயிருக்காது.
“கருத்துப் பிரச்சார பாணியிலான இலக்கிய மரபில் ஒடுக்கப்பட்டோரின் பங்களிப்புகள் தேடப்படாமலும் ஆராயப்படாமலும் கிடக்கின்றன” என்ற ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆதங்கத்தில் ஆழ்ந்த பொருள் இல்லாமல் இல்லை.
1931லேயே மிகத் துணிச்சலுடன் “ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்தக் கீதங்களை” முரசு கொட்டிப் பாடிய முருகேசனார் “இனிய சுதந்திரக்கனியை எடுத்துண்ண வாரீர்” என்றும் கூவி அழைத்துள்ளார். டாக்டர் அம்பேத்கரையும் காந்தியையும் ஒரு சேர ஏற்றிப்போற்றிய இந்த ஆதிதிராவிட மா கலைஞன் ஏன் இவ்வளவு காலம் இருட்டில் கிடந்தார்? அயோத்திதாசரை மட்டுமல்ல, பெரியாரையும் புகழ்ந்து கொண்டாடி “எதிர்த்தரப்புடன் உரையாடல் நிகழ்த்திய” இந்த சமத்துவ சன்மார்க்கவாதியை இப்பொழுதேனும் காலச்சுவடு வெளியுலகத்திற்கு மீளக் கொண்டுவந்துள்ளது. தமிழ்ப் படைப்புலகில் இது சமூக நீதியை நிலைநாட்டுவது ஆகும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
அக்.21 இதழ் அட்டையில் “பெரியாரும், தி.ஜானகிராமனும்” என்று பார்த்ததுமே பேரதிர்ச்சியாக இருந்தது. கல்யாணராமன் குறிப்பிட்டதுபோல, பெரியாருடன் ‘பெண்ணிய கருத்துகளில் (மட்டும்) பெரிதும் உடன்பாடுடையவர்’ எனக் கொள்ளலாம் என்றால், மிக வயதான ஒருவர்- சிறு வயது பெண்ணைத் திருமணமோ மறுமணமோ செய்வதை தி. ஜா அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படி இரண்டாம் மணம்புரிந்த வயதானவர்கள் பற்றி எப்படியெல்லாம் தி.ஜா எழுதி இருக்கிறார் என்று அவரின் வாசகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
மற்றபடி தி.ஜாவின் மனப்போக்கு, எண்ணம், பெருந்தன்மை, கருணை, அங்கதம், நட்பு பாராட்டுதல், சுயகௌரவம், கொடை, நேர்மை, படைப்பாற்றல் திறன்.. இவை எதிலும் பெரியாரால், தி.ஜானகிராமன் அருகில் கூட நெருங்க முடியுமா எனத் தெரியவில்லை.
தி.ஜா அவர்கள் சுயம்பு. அவர் எழுதிய காலகட்டத்தில், தனக்குச் சரியெனப் பட்டதைத் துணிச்சலாக எழுதியவர். தி.ஜா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும், அவருடைய எழுத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழின் சிறந்த பத்து எழுத்தாளர்கள் என்று யார், எப்பொழுது பட்டியல் போட்டாலும், தி.ஜாவின் பெயர் நிச்சயம் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருக்கும்.
கேசவரவி
சென்னை
மிகவும் நேர்த்தியான தலையங்கம், இதுவரை முகாமிலுள்ள அகதிகள் நாடு திரும்பவே விரும்புகிறார்கள் என்ற பார்வை முதல்முறையாக மாற்றமடைந்து, இந்தியாவில் குடியுரிமை பெறவே அவர்கள் விரும்புகிறார்கள் என ஒரு பொதுச் சமூகத்தின் பிரதிபலிப்பாக வெளிவரும் பத்திரிகையில் தலையங்கம் வந்திருக்கிறது.
உண்மையில் மத்திய அரசால் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு முன்னதாகவும் இதே நிலைதான் இருந்தது. குறிப்பாக 2014, 2015, 16 களில் இந்தியாவிலேயே இருந்துவிடுவோம் எனும் முடிவிற்கு வந்தாயிற்று. 2009க்குப் பிறகு இலங்கைக்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்களால் வாழ முடியவில்லை எனத் திரும்பவும் இந்தியாவிற்கு வந்துவிட்டனர்.
இதெல்லாம் வெளியுலகிற்குத் தெரியவில்லை; தமிழர்களுக்காகப் பேசுகிறோம் என்பவர்கள் தங்களது எண்ணங்களை அகதிகளின் எண்ணங்களாகப் பொதுவெளியில் தெரிவித்து வந்தனர்; தற்போதும் அதையே செய்துவருகின்றனர். அனைவரும் இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்பதும் அங்கு தமிழர்கள் தொகை கூட வேண்டுமென்பதும் அவர்களது விருப்பம்; அதற்காக என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள். முகாம் மக்களின் குரல் வெளியில் பெரிய அளவில் தெரியாமல் இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம். பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அவர்களிடையே மட்டுமே உரையாடின.தற்போது மக்களே வெளிப்படையாய் வெளியில் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
கடந்த 2015 இல் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து வெளிவந்த தொ. பத்திநாதனின் ‘தமிழகத்தில் ஈழ அகதிகள்’ எனும் கட்டுரைத்தொகுப்பில் இந்திய வம்சாவளித் தமிழர் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது மூன்று புத்தகங்களும் அகதிகளின் பிரச்சினையைப் பேசினாலும் பெரிதாகக் கவனத்திற்குள்ளாகவில்லை; ஆயினும் அதிலொரு புத்தகத்தை ஜி. ஆர் சுவாமிநாதன் குடியுரிமை கோரிக்கை தொடர்பான வழக்கு ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்.
குறிப்பிட்டுச் சொல்வதென்றால், முகாம்களில் இந்திய வம்சாவளியினர் இருப்பது வெளியுலகிற்குத் தெரியவே முப்பதாண்டுகள் ஆகியிருக்கின்றன. அப்படி தெரிய ஆரம்பித்ததும்,அதை வைத்து அகதிகளைப் பிரிக்கிறார்கள், ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார்கள். அனைவருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தடுத்து நிறுத்த இப்படி செய்கிறார்கள் எனும் கருத்தை நிறுவப் பார்க்கிறார்கள். இப்படி பேசுவது மக்களல்ல, மக்களுக்காகப் பேசுவதாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மனிதர்கள்தாம்.
தலையங்கத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டையும், செய்ய வேண்டுவனபற்றியும் சட்டத்தில் கொண்டு வரப்படவேண்டிய மாற்றங்கள் குறித்தும் இன்னமும் விரிவாக எழுதுவதற்கான சாத்தியம் இருக்கிறது; நன்றி.
ந. சரவணன்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்.
வாணியம்பாடி
‘தி.மு.க அரசின் நூறுநாள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் முனைப்பு’ சிறப்புத் தலையங்கம் படித்து மகிழ்ந்தேன். நடுநிலை நின்று, ஓப்பீடு செய்து சிந்திக்கத் தக்கவகையில் எழுதப் பெற்றிருப்பது சிறப்பு.
புதிய அரசு சரியான திக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தயாரித்தளித்திருப்பதையும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் ஆணை வெளியிட்டு, அவர்களைப் பணியமர்த்திருப்பதையும் கட்சிப் பாகுபாடின்றிப் பலர் வரவேற்றிருப்பதையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
நிற்க, செம்மையான அரசைச் சிறப்பாகத் தர வேண்டும் என்ற நற்சிந்தனையோடு செயல்படும் முதல்வரைப் பாராட்டாதவர்கள் இல்லை! இது தொடர வேண்டும். தமிழில் படித்தோருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிப்பதை அனைவரும் அறிந்து மகிழ்கிறார்கள். பல்வேறு துறைகளில் ஆண்டுக்கணக்கில் காலியாக இருக்கும் இடங்களில் புதிய பணியாளர்களை நியமிப்பது அவசியம். பொதுப்பட்டியலிலிருந்து கல்வி மாநிலப்பட்டியலுக்கு வர கல்வியாளர்களைக் கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் போதிய வசதியின்மை, தரமின்மைக் காரணங்களால் தனியார் நடத்தும் பள்ளிகளை மாணவர்கள் தேடிப் போகும் நிலையைத் தடுக்க வேண்டும். நலிவடைந்து வரும் பதிப்புத்துறையை உயிர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலான நூலகங்களில் நூல்கள் வைப்பறை இல்லை.
கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அரசு சிக்கன நடவடிக்கை மூலம் கடன் சுமையைக் குறைக்க முயல்வது காலத்தின் கட்டாயம். ஆசிரியர் சுட்டியிருப்பதைப் போன்று “தமிழகத்தின் தற்போதைய நிலையை ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதைக் காட்டிலும் உலக அளவிலான தரத்துடன் ஒப்பிட்டு அதை நோக்கி முன்னேற்றுவதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும். அதற்கான முனைப்பை இந்த நூறுநாட்களில் காண முடிவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது”. தொடர்ந்தால் நலம் பயக்கும்!
நவீன் குமார்
நடுவிக்கோட்டை