ஒரு பயணத்தின் முடிவு
ஒரு பயணத்தின் முடிவு
ஒருகிழமையின் முன்பு அவருடன் பேசியிருந்தேன். ‘‘இப்ப கொஞ்சம் ஏலாமல் இருக்குது..’’ என்றது எனக்கான அவரது இறுதி வாக்கியம்.
‘ஒரு பயணத்தின் முடிவினை’ அந்த விடிகாலை எனக்குச் சொன்னது. ‘ஆண்டவருடைய சித்தம்’ அதுவென்றால் என்ன செய்வது?
‘ஒரு பயணத்தின் முடிவினில்’ (அலை) நந்தினி சேவியர் எழுதிய ஒரு சிறுகதை. ‘ஆண்டவருடைய சித்தம்’(புதுசு) சிறுகதையும் அவர் எழுதியதே. ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ (மல்லிகை) என்ற சிறுகதையினூடாக நல்லதொரு சிறுகதையைத் தரிசித்தோம் என்பது ஒன்று; நந்தினி சேவியரை இனங்கண்டோம் என்பது இன்னொன்று; மேலாக, பிரச்சாரப்பாங்கு இல்லாத ஒரு படைப்பு எவ்வாறு இருக்கும் என்பதனையும் அதில் அறிந்துகொண்டோம்.
‘வானம் சிவக்கிறது..’, ‘இரத்த விடியல்..’, ‘செவ்வானத்தில் ஒரு..’, ‘காலம் சிவக்கிறது..’, ‘செஞ்சுடர் எழுந்தது..’, இவ்வாறான தலைப்புகள் அல்லது முடிபுகள்தாம் அப்போது ‘முற்போக்கு’க் கதைகளாக ஏற்கப்பட்டன. சிவப்பு வர்ணம் பூசாத கதைகள் எதுவும் ‘மானுடம்’ பேசாத கதைகள், மக்கள் விரோதக் கதைகள் என்றே சில பேராசிரியர்களும் அடித்துச் சொன்னார்கள்.
அப்போதுதான் நம்பிக்கை ஒளியாகத் தெரிந்தவர் நந்தினி சேவியர். ஈழத்துப் படைப்புலகில் மார்க்சீயக் கலைத்துவ மொழி பேசிய ஒரேஒருவர், இவர்! எங்களுக்குப் புளகாங்கிதம். எண்பதுகளில் நாங்கள் எழுதவருகிறோம். படைப்பில் மார்க்சீயம், புரட்சி, மக்கள், எழுச்சி என்றெல்லாம் எழுத ஆசை. ஆனால் பிரச்சாரம் ஆகிவிடுமே என்ற பயம். நந்தினி சேவியர் எங்களுக்கு ஒளி பாய்ச்சினார். நான் உணர்ந்தவகையில், எனக்கு ஆதர்சமாக அமைந்தது அவர் ஒருவரே. மூடுண்ட சிப்பிக்குள் எப்போதாவதுதான் முத்து கிடைக்கும். அப்படித்தான் அவரது கதைகள் அமைந்தன.
அலை சஞ்சிகையில் நந்தினி சேவியர் எழுதிய ‘ஒரு பயணத்தின் முடிவில்’ சிறுகதை வெளியாகிறது. முதலில் அலை சஞ்சிகையை எடுத்து இவரது கதையை வாசிக்கவில்லை; மீதி எல்லாவற்றையும் வாசித்தேன். எனக்கான ஒரு பொழுது காத்திருக்கிறது. அதற்காக நான் காத்திருந்தேன். அப்போது நந்தினி சேவியர், ‘ஒரு பயணத்தின் முடிவில்’ என்று என்முன்னே விரிந்தார்.
.. துறை.. லோஞ்சி..
நான் அக்கதையை ஒருமுறை மாத்திரம் வாசித்தேனல்லேன்! எனக்கு அப்போது அவ்வாறான பொழுதுகள் அடிக்கடி வாய்த்து விடுகின்றன. அப்படி நான் மீண்டும் மீண்டும் வாசித்தது அவரது கதையை மாத்திரமே. ஏனெனில் அவர் கதை, முத்துப்போல எப்போதாவது முகிழ்க்கும் ஒன்றல்லவா?
அதன்பிறகுதான் அவரது ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதையைத் தேடி வாசித்தேன். அது மல்லிகையில் வெளியாகியிருந்தது. வாசித்தபின், என் திகைப்பு அடங்க வெகுநாளாயிற்று. அதுவரை அவரைச் சந்திக்கிற பாக்கியமும் எனக்குக் கூடிவரவில்லை. காலம் எப்போதும் சரியானதைச் சரியான நேரத்தில் செய்கிறது.
1980இல் புதுசு சஞ்சிகையைத் தொடங்குகிறோம். ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் நந்தினி சேவியர் மேலும் முக்கியமானவராகப்படுகிறார். அவரது சிறுகதை புதுசுவுக்கு அவசியம் வேண்டும். அவர் அப்போது கோப்பாய் எனும் கிராமத்தில் நெல் அரைக்கும் ஆலையில்(மில்) பணிபுரிந்தார். நாங்கள் சென்றது, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியப்பொழுது. அவரது பணிக்கு அன்று ஓய்வு. இருந்து நிறையப் பேசுகிறோம். ‘ஒரேஞ்ச் பார்லி’ சோடா வாங்கிவந்து, கிளாசில் ஊற்றுகிறார். சிறுநுரை சர்ரென மேலெழும்புகிறது. அவ்வாறான உற்சாகம் அவரிடம்.புதுசுவுக்குச் சிறுகதை கேட்டபோது, அத்தனை உணர்வும் வடிந்து வற்றுகிறது.
‘‘இப்பிடிக் கதை வேணும் எண்டு கேட்டால் எப்பிடி எழுதுறது...’’ என்ற அவரது வாக்கியத்தில், கதையைப் ‘பண்ண’ ஏலாது; படைக்கத்தான் முடியும் என்பதனைப் புரிந்து போகிறோம். அதற்குக் காலமும் உணர்வும் சரிவர அமைய வேண்டும் என்பதுவும் எம் உணர்வுக்கு எட்டுகிறது. அவரே சொன்னார்: ‘‘எனக்குள் ஒரு படைப்புக் கிளர்ந்தால் அதை எழுதி உங்களுக்குத்தான் முதலில் அனுப்புவன்..’’
பிறகு எங்களுக்குப் பேச ஒன்றுமில்லை.ஒரு மாதத்திற்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு சிறுகதை புதுசுவிற்கு வந்தது. தலைப்பு: ‘ஆண்டவருடைய சித்தம்’ புதுசுவிற்கு அவருடைய சித்தமாக வந்தது அக்கதை.
நந்தினி சேவியர், தன் கருத்திலும் கறாரான பேர்வழி. தன் கலைப்படைப்பிலும் அவ்வாறு இருக்க விரும்பினார். ஈழத்தின் ‘முற்போக்கு’ எழுத்தாளர் எவரிடமும் காணக் கிடையாத ஒன்று இது. இதனால் அவரது படைப்புகள் எதுவும் சோடை போனதாக இல்லை. அவரது அத்தனை படைப்புகளும் சிறந்தே விளங்கின. பென்சிலால் சடசடவென இழுத்துவிட்ட கோடுகள், ஓவியமாவதுபோல மனத்தைத் தொட்ட காட்சிப்படிமங்களை அவரது படைப்புகள் கொண்டிலங்கின.
‘மத்தியானத்திற்குச் சற்றுப் பின்பாக’ என்பது ஒரே இயக்கத்தில் - கொம்மியூனிஸ்ட் கட்சிக்குள் - தோழர்களிடையே எழும் சிறுசிறு முரண்பாடு. மத்தியான வெக்கையில் அது உருக்கொள்கிறது. முரண்பாடு முற்றுகிறது. அது தீரும் வழிவகை தெரியாத நண்பன் ஒருவன் சடாரென வந்த பஸ்ஸில் ஏறுகிறான். ‘‘மைச்சான் பிறகு கதைப்பம்..’’ என்று பஸ்ஸிலிருந்து அவன் கத்திச் சொல்கிறான். ‘தோழர் பிறகு கதைப்பம்..’ என்று அவன் சொல்லவில்லை; ‘மைச்சான் பிறகு கதைப்பம்’.
‘தோழர்’உக்கும் ‘மைச்சான்’உக்கும் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ‘தோழர்’ என்பவர் கட்சி சார்ந்தவர். ‘மைச்சான்’ என்றால் நெருங்கிய உறவினன். அந்த நேரத்துப் பிரச்சினையைத் தீர்க்க ‘மைச்சான்’ என்ற உறவு அல்லது சொல், பாவிக்கப்படவில்லை.
‘உனக்கும் எனக்கும் இடையில் தோழமைக்கும் அப்பால் ஓர் உறவு இருக்கிறது’ என்பதற்காகவே ‘மைச்சான்’ என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.
உணர்வுடனும் உறவுடனும் சகலரையும் அணைக்கத் தெரிந்த ஒரு படைப்பாளி, நந்தினி சேவியர். அவருக்கு யார்மீதும் முரண்பாடு இருந்தால், முரண்பாட்டில் உறுதியாக இருப்பார். சுடுசொல் பேசி அந்த நட்பை முறிக்கமாட்டார். ‘என் கருத்து இதுதான்’ என்று சிரித்தபடி அவர் சொல்கிறபோது, சின்னப்பையன் அவர்!
படைப்பாளியாக மாத்திரம் அவர் வாழ்ந்தாரில்லை; போராளியாகவும் இருந்தார். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் அவர் முக்கியமான ஒரு போராளி. அறுபதுகளில் யாழ்ப்பாணக் குடாநாடு, சாதிப் போராட்டங்களைச் சந்தித்தவேளை, நந்தினி சேவியரையும் ஒரு போராளியாகக் கண்டிருக்கக்கூடும்.
என்னுடன் இறுதிவரை உரையாடிவிட்டு இறுதிக்கணம் சொல்லாமல் சென்றுவிட்டார்; என் ஆசை, என் அன்பு, என் தோழமை, எனக்கான எழுத்துத் தந்த நந்தினி சேவியர். அவர் பெயர் சேவியர். ‘நந்தினி’ என்றுதான் கூப்பிடுவேன். அவரது கண்களுக்குள் குறுஞ்சிரிப்பு உதிரும். அவ்வாறு குறுஞ்சிரிப்பு உதிர்வதைக் காணாமல்போய்க் கனகாலம் ஆகிவிட்டது. இறுதியாக 1995 மார்ச் மாதமளவில் அவரைக் கண்டேன். கொழும்பு கொம்பனித்தெருவில் இருவருமாகச் சாராயம் குடித்தோம். ‘போதும்’ என்று பஸ்நிலையம் வந்தோம். ‘போதாது’ என்று மீண்டும் சாராயத்தவறணைக்குப் போனோம். பிறகு நீண்டகாலம் தொடர்பில்லை; பிறகு அலைபேசியில் தொடர்பு. முகநூல் தொடர்புவந்தபோது என்னை முறித்தார். “ரவி உன்னிலை எனக்கு நிறைஞ்ச அன்பு.. ஆனால் உன்னுடைய அரசியலோடை என்னாலை ஒத்துப்போக முடியாது.. நீ தேசியம் என்கிறாய்.. வர்க்கம்தான் அடிப்படை முரண்பாடு எண்டு நான் நினைக்கிறன்.. உனக்கும் எனக்குமுள்ள அரசியல் முரண்பாடு எங்கன்ரை நட்பைப் பிரிக்கக்கூடாது..’’ என்றார்.
‘‘ஒண்டும் பிரச்சினையில்லை.. அரசியலைப் பேசாதிருப்போம்..’’ என்றேன். அதன் பிறகுதான் எனது முகநூல் நட்பினைப் பேணினார். அவர் இறந்துபோனதற்காக இந்தக் கருத்தை என்னால் சொல்லாமல் விடமுடியாது, அவரது அரசியல் வறட்டுத்தனத்தில் இப்போதும் எனக்கு அசூயை உண்டு.
தோழர் மாவோ வழிவந்த அவர்களால் எப்படி ‘சிநேக முரண்பாடு’, ‘பகை முரண்பாடு’, ‘பிரதான முரண்பாடு’ பற்றியெல்லாம் அறிய முடியாமற் போயிற்று? அதைப்பற்றியெல்லாம் தெளிவடைந்திருந்தால் தேசியம், வர்க்கம் பற்றிய முன்வரைபுகளை முன்வைத்திருப்பாரே! ஈழத்தில் வாழும் முற்போக்கு அணியில் இருந்த யாவருக்கும் இந்த ‘வருத்தம் - நோய்’ இருந்திருக்கிறது. அவர்களுக்கு அரசியலானது ‘மூன்றாவது காலாக, கைத்தடியாக’ மாத்திரமே வாய்த்திருக்கிறது. நந்தினி சேவியரும் அதிலிருந்து விலகவில்லை. யதார்த்தத்தை மறந்து, வறட்டுத்தனமாக உரையாட அவர்கள் முற்பட்டார்கள். நந்தினியும் அவ்வாறேதான். ‘அதிதீவிர இடதுசாரித்தனம், வலதுசாரியாகவே அவரைக் கொண்டுபோய் நிறுத்தும்’ என்பதும் மார்க்சீயம் சொன்னதுதான்.
இருக்கட்டும், எனக்கு இரவுவேலை என்பதால், அது அவருக்கு ‘விடியற்காலம்பற’. கிழமைக்கொருக்கால் அலைபேசியில் உரையாடுவோம். ஒருகிழமைக்கு முன்னர் உரையாடியபோதும் ‘போறன்’ என்றோ ‘போட்டுவாறன்’ என்றோ ஒன்றிரண்டு சொற்கள் அவர் சொன்னதில்லை. ‘சொல்லாமல் கொள்ளாமல்’ போய்விட்டார். அவருடன் பேசுகிற அதே நேரத்தில்தான் ‘அவர் இவ்வுலகில் இல்லாமல் போய்விட்டார்’ என்ற செய்தியும் எனக்குக் கிடைத்தது. நம்பமுடியாமல், அந்த விடிகாலையில் தவித்தேன்!
நந்தினி, போய்வாருங்கள். அந்தக் குறுஞ்சிரிப்புடன் போய்வாருங்கள் நந்தினி! உங்களுக்கு என் செவ்வணக்கம்!
மின்னஞ்சல்: paththirikai17@gmail.com