வாழ்த்தும் மதிப்பும்
வாழ்த்தும் மதிப்பும்
அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாபெரும் தலைவர் ராவ் பகதூர் MC இராஜா MLA அவர்கள் கூறிய அபிப்பிராயம்:
கொண்ணூர் மகா மதுரகவி வீ.வே. முருகேச பாகவதர் என்பார் எழுதிய ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்தக் கீதங்களை யொருங்கே ஒருமுறை வாசித்துப் பார்த்தவளவில் அப்பாசுரங்களில் அடங்கியுள்ள சொற்சுவை, பொருட்சுவை, விஷயச்சுவை முதலியவைகளே அவரது அபிதான மதுரச் சுவையைத் தெறிவிப்பனவாய் விளங்குவதாலும், இவ்வித அபிப்பிராய முதிர்ச்சி தழுவிய நூல் ஒன்று வெளிப்படுவது அத்யாவசியமாதலாலும், மாணவர்கள் மனதில் வெகு எளிதில் அமையக்கூடிய தெளிந்த தமிழ்நடையில் பாசுரங்கள் அமைந்திருப்பதாலும், இந்நூலைக் கலாசாலை மாணவர்களுக்குப் பயன்படப் பாடப்புத்தகமாக வைப்பதில் பெரும் பிரயோசனமாக இருக்குமென்பது எனது துணிபு. இவ்வாசிரியர் இன்னனைய நூல்கள் பின்னும் இயற்றி யுலகோபகாரம் புரியும் வண்ணம் உற்சாகமூட்டும் வழியில் பலரும் முன்வருவார்களாக.
சுயமரியாதை இயக்க மாபெருந் தலைவரும், குடியரசு பத்திரிகையாசிரியரும், வைக்கம் வீரருமாகிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் அவர்கள் (22.2.1931)இல் தமது குடியரசு பத்திரிகையில் வெளியிட்டுள்ள மதிப்புரை:
ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்த கீதங்கள்
இப்புத்தகம் திரு. மகாமதுரகவி வீ.வே. முருகேச பாகவதர் அவர்களால் எழுதப்பட்டதாகும். இதில் ஜாதிக் கொடுமை, தீண்டாமையின் அநீதி, கட்குடியின் தீமை, கல்வியின் அவசியம், ஆதிதிராவிடரின் தற்கால நிலை, அவர்கள் முன்னேறும் வழிகள் முதலியன பற்றி சுயமரியாதைக் கொள்கைகளோடு நல்ல வர்ண மெட்டுகளில் எளிய தமிழில் கீர்த்தனங்களாகத் தொகுக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கீர்த்தனையிலும் நல்ல பொருளும் சுயமரியாதைக் கொள்கைகளும் நிரம்பியுள்ளன. தீண்டப்படாதாரின் மேம்பாட்டில் கவலையும் ஆர்வமும் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென விரும்புகிறோம். இதன் விலை அணா 0-4-0
முருகேச பாகவதரின் முதல் நூலான ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்த கீதங்கள் நூலுக்கு எம்.சி. ராஜாவின் வாழ்த்துரையும் பெரியாரின் (குடியரசு ஏட்டில்) மதிப்புரையும்
நன்றி: மகாமதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் படைப்புகள் (தொகுதி - 1) க. ஜெயபாலன் (ப. ஆ)- நிலா சூரியன் பதிப்பகம், சென்னை, 2014.