ஜனநாயகத்தை ஒடுக்கும் போக்கு கோவிட்-19 கொள்கை முடிவுகளும் அரசியல் விளைவுகளும்
ஜனநாயகத்தை ஒடுக்கும் போக்கு
கோவிட்-19 கொள்கை முடிவுகளும் அரசியல் விளைவுகளும்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டுப் பிரதமர் நரேந்திர மோடி 2020, மார்ச் 24 அன்று நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை அறிவித்தார். புதுதில்லி ஷஹீன் பாகில் நான்குமாதங்களாக நடைபெற்றுவந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாட்டி வயதுடைய பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இதர பிரிவினர் உள்ளிட்டோரைப் பொதுமுடக்க அறிவிப்பிற்குப் பிறகு தில்லி காவல்துறையினர் பலவந்தமாக அப்புறப்படுத்தினார்கள். சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தையும் எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டங்களின் குவிமையப் புள்ளியாக ஷாஹீன்பாக் இருந்தது. காவல்துறை நடவடிக்கையின் அலாதியான அம்சம் என்னவென்றால், இந்தியாவில் 524பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சமயத்தில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னும் பெயரால் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்புக் குரலை அடக்க அரசு பெருந்தொற்றைப் பயன்படுத்திக்கொண்டது. ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகள் பொதுமுடக்கத்தின்போது பல மாநிலங்களில் காவல்துறை மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டின. பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காகத் தனிநபர்களைக் காவலர்கள் தாக்கியதில் குறைந்தது பதினைந்துபேர் உயிரிழந்தார்கள்.
போராடும் குடிமக்களுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது இந்தியா மட்டுமல்ல என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கென்யா, தென்னாப்பிரிக்கா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் இதேபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றின. ஆனால், ‘உலகின் மாபெரும் ஜனநாயக நாடு’ என்று போற்றப்படும் இந்தியா கேள்விக்குட்படுத்தப்படாத பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தன்னுடைய ஜனநாயகக் கோட்பாடுகளிலிருந்து பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இரண்டாம் அலையின்போது இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதழியலாளர்களின் கைதுக்கு வழிவகுத்தன. தொற்றுப்பதிவு எண்ணிக்கை, மாணவர்களும் இதர செயல்பாட்டாளர்களும் கைதுசெய்யப்பட்டது ஆகியவற்றுக்கான புள்ளிவிவரங்கள் சீரற்று இருப்பதை அம்பலப்படுத்திய இதழியலாளர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்; முக்கியமான அறிவுஜீவிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். எதிர்ப்பு ஏதுமின்றி ஜனநாயகச் செயல்முறைகளுக்குத் தடைபோடுவதற்கான சாக்கைப் பெருந்தொற்று அரசுக்கு வழங்கியது. மக்கள் நலனுக்காக இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படும் விதிவிலக்கான சூழல் இது என்னும் நியாயத்தை வழங்கியது.
பாதுகாப்புப் பிரச்சினையை வரையறுத்தல்
ஏதேனும் ஒரு பிரச்சினையை முன்வைத்து, இருத்தலுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக வகைப்படுத்தப்படும் செயல்முறை, பாதுகாப்பையே பிரச்சினைக்குட்படுத்தும்முறை எனக் குறிப்பிடப்படுகிறது. அரசு வழக்கமான ஜனநாயக நடைமுறைகளை மீறி அசாதாரணமான கொள்கை எதிர்வினைகளை மேற்கொள்ள இது வழிவகுக்கிறது. சாதாரணமான சூழ்நிலைகளில் பொதுமக்கள் இத்தகைய நடவடிக்கைகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பாதுகாப்பைப் பிரச்சினையாக்குதல் என்பதற்கான கோட்பாட்டுச் சட்டகத்தை பேரி புஸான், ஓலே வேவர், ஜாப் தெ வில்ட் ஆகியோர் தங்களுடைய ‘Security: A New Framework for Analysis’ (பாதுகாப்பு: அலசலுக்கான புதிய சட்டகம் – 1998) என்னும் நூலில் ‘அரசியல் நடைமுறைகளின் இயல்பான எல்லைகளுக்கு அப்பாலுள்ள நடவடிக்கை’களை நியாயப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலின் இருப்பு என்று வரையறுக்கிறார்கள்.
மாநிலங்களின் எதிர்வினை
ஒன்றிய அரசின் நிர்வாக ரீதியான உத்தரவுகளை அடியொற்றி எல்லா மாநிலங்களிலும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்புப் பிரச்சினையாக்குவது நடைபெற்றுவருகிறது. தனிநபர்கள் மத்தியில் கோவிட்-19 பரவல் விகிதத்தைத் தடுக்கும் நோக்குடன், பாதுகாப்பு வழிகாட்டு நெறிகளை மீறுவோருக்குப் பலவிதமான அபராதங்களை விதிப்பது உள்படப் பல கட்டுப்பாடுகளையும் தண்டனை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. கோவிட்-19க்கான அரசின் எதிர்வினையை மதிப்பிடும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இந்தியாவின் பொதுமுடக்கத்தை ஆகக் கண்டிப்பான நடவடிக்கைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்கள் பொதுவெளியில் புள்ளிவிவரங்களை முன்வைக்கின்றன. ஊடகங்களும் ஜனநாயகத்தில் மையத் தூணாகச் செயல்படுகின்றன. நிர்வாகரீதியான உத்தரவுகளையும் வழிகாட்டு நெறிகளையும் மக்களிடையே எடுத்துச்செல்வதில் ஊடகங்களின் பங்கு, குறிப்பாக மருத்துவ நெருக்கடியின்போது, மிகவும் முக்கியமானதும் தேவையானதும் ஆகும்.
புதுதில்லியை மையமாகக் கொண்ட உரிமைகள் & இடர் வாய்ப்புகளின் அலசல் குழு (Rights & Risks Analysis Group) ‘இந்தியா: கோவிட்-19 பொதுமுடக்கத்தின்போது ஊடகங்கள் மீதான தாக்குதல்’ (India: Media’s Crackdown During COVID-19 Lockdown) என்னும் தன்னுடைய அறிக்கையில் பொதுமுடக்கத்தின்போதும் அதன் பிறகும் அரசு ஊடகங்களை ஒடுக்கத் தன் நிர்வாக ஆற்றலைப் பயன்படுத்தியது குறித்துக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. கோவிட்-19 குறித்துச் செய்தி வெளியிட்டதற்காகவும் தங்களுடைய கருத்தை வெளியிடும் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதற்காகவும் 55 இதழியலாளர்கள் சட்ட ரீதியான நோட்டீஸை எதிர்கொண்டதுடன் கைது நடவடிக்கைக்கும் ஆளானார்கள்; சிலர் தாக்குதலுக்கும் மிரட்டலுக்கும்கூட உள்ளானார்கள்.
பல மாநிலங்கள் காலனியாதிக்கக் காலத்தின் சட்டமான பெருந்தொற்று நோய்ச் சட்டம் 1897ஐப் பயன்படுத்தி அத்தியாவசியமற்ற நடமாட்டங்களுக்குத் தடை விதித்தன. இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்குச் சட்டப்படி முழுமையான பாதுகாப்பு உண்டு. “இந்தச் சட்டத்தின்கீழ் நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும், எடுக்க முனையும் எந்த நடவடிக்கைக்காகவும் எந்த நபருக்கு எதிராகவும் வழக்குப்போடவோ சட்ட நடைமுறையைப் பயன்படுத்தவோ முடியாது” என்று இந்தச் சட்டத்தின் 4ஆவது பிரிவு கூறுகிறது. 2020 ஆகஸ்ட் தொடக்கத்தில் ஜார்க்கண்ட் அரசு, ஜார்க்கண்ட் தொற்றுநோய் அவசரச் சட்டம் 2020ஐப் (Jharkhand Contagious Disease Ordinance 2020) பிறப்பித்தது. பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதத்தையும் இந்தச் சட்டம் விதித்தது. மொத்தப் பணியாளர்களில் 83 விழுக்காட்டினர் அமைப்புசாராத் துறைகளில் பணிபுரியும் ஒரு நாட்டில் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு அற்றவர்களை இத்தகைய தண்டனை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கின்றன.
2021, ஏப்ரலில் இந்தியாவில் ‘இரண்டாம் அலை’ தொடங்கியபோது கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுமே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவை அமல்படுத்தின. வெவ்வேறு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எது அத்தியாவசியச் சேவை என்பது குறித்த குழப்பமான, முன்னுக்குப் பின் முரணான உத்தரவுகள் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டன. மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்யச் சிக்கலான பரிசோதனைகளுக்கு ஒவ்வொருவரும் உள்ளாக வேண்டியிருந்தது. மத்திய அரசின் ஆரோக்கிய சேது உள்ளிட்ட செயலிகளையும் மாநில அரசுகளுடன் மாவட்ட, நகராட்சி நிர்வாகங்களும் உருவாக்கிய செயலிகளையும் மக்கள் தங்கள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. பல மாநிலங்களில் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. அப்படிப் போக வேண்டுமானால் காவல்துறையிடமிருந்து கோவிட்-19 சிறப்பு இணைய அனுமதிச் சீட்டுக்களைப் பெற வேண்டியிருந்தது.
மக்கள் கருத்தைச் சமாளிப்பது அரசுகளின் பிரதான கவலையாக இருந்துவந்தது. மருத்துவப் பராமரிப்பையும் மருந்துகளையும் கோருவதற்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கத் தண்டனைகளையும் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்களையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பயன்படுத்தின. குறிப்பாக, உத்தரப் பிரதேச அரசு இப்படிக் கோரியவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தது. இத்தகைய செயல்கள் மக்களிடையே பீதியைப் பரப்பி மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கின்றன என்று அரசுகள் கருதின.
தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் தந்திரம்
கோவிட்-19 நிலவரத்தைச் சமாளிக்க உள்ளூர்ச் சமூக, பொருளாதார யதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இணையத் தொழில்நுட்பத்தையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் பல மாநில அரசுகள் பயன்படுத்தின. இது தற்போதைய சட்ட அமைப்பை மீறும் செயல்பாடாகும்.
இத்தகைய கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட செயலிகளில் ஒன்று ஆரோக்கிய சேது. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இதை உருவாக்கியது. பல்வேறு மாநிலங்கள் தத்தமது மாநிலங்களிலும் மொழிகளிலும் பயன்படுத்துவதற்கான செயலிகளை உருவாக்கின. அதிகப் பிரபலமில்லாத ஐடி நிறுவனங்கள் சில, குறைந்தது அறுபத்திரண்டு செயலிகள்வரை உருவாக்கின. இவற்றை ஒன்றிய, மாநில அரசுகள், அரசு நடத்தும் மருத்துவ முகமைகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையின் அதிகாரப்பூர்வமான அமைப்புகள் வெளியிட்டன. தனிநபர்களின் அந்தரங்கம், இந்தச் செயலிகள் மூலம் திரட்டப்படும் தகவல்களைக் கையாளும் முறை ஆகியவை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இந்தச் செயலிகள் எவற்றிலும் இல்லை.
‘சமூக அடிப்படையிலான தொடர்பு அறியும் செயலி’ என்று சொல்லப்பட்ட ஆரோக்கிய சேது, பயனர் தன் சுற்று வட்டாரத்திலிருந்து கோவிட்-19 தொற்றைப் பெறக்கூடிய அபாயத்தைக் கணக்கிடுவதற்காக அவருடைய பாலினம், வயது, தனிப்பட்ட முகவரி ஆகியவற்றைத் திரட்டுகிறது. இந்தத் தகவல்கள் பிறகு ‘இன்டகிரேட்டட் ஹாட்ஸ்பாட் அனாலிசிஸ் சிஸ்டம்’ (Integrated Hotspot Analysis System) என்னும் வேறொரு தளத்தில் அலசப்படுகின்றன. இது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தளம். இந்தத் தகவல்கள் பெயர் குறிப்பிடப்படாமல் மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. எனினும் சம்பந்தப்பட்டவரின் நடமாட்டங்களை அறிவதற்காக அவருடைய கைப்பேசி எண் பகிர்ந்துகொள்ளப்படுவதால் அவருடைய அந்தரங்கத்தைப் பாதுகாப்பது சாத்தியமில்லை. இந்தத் தகவல்கள் காவல்துறை, புலனாய்வு அமைப்புகள் அல்லது வணிக நோக்கத்திற்கான தனியார் அமைப்புகள் ஆகியவற்றுடன் பகிர்ந்துகொள்ளப்படலாம்.
இந்தியாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு, அந்தரங்கப் பாதுகாப்புச் சட்டங்கள் இன்னமும் பிறப்பிக்கப்படாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஆரோக்கிய சேது செயலி வலுவான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. செயலிகளை உருவாக்குபவர்களின் பதில் சொல்லும் பொறுப்பு (தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு – தனியார் கூட்டு முனைப்பில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது; இந்தத் தன்னார்வலர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை), விமான/ரயில் பயணங்களுக்கு இந்தச் செயலியைக் கட்டாயமாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டியிருப்பது, பெரும் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியால் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாத நிலை ஆகியவை இந்த விமர்சனங்களுக்கான காரணங்களில் அடக்கம்.
பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தச் செயலி பயன்படுத்தப்படாது என்று அரசு உறுதியளித்திருந்தாலும் தேசிய அளவில் மருத்துவம்சார் தகவல்களை இணையத்தில் பதிவிடுவதற்கான தேசிய இணைய மருத்துவப் பணிக்கான (National Digital Health Mission) முன்மாதிரியாகவும் இது பயன்படுத்தப்படலாம். மருத்துவப் பராமரிப்பை வழங்குவதிலும் பெறுவதிலும் உள்ள அந்தரங்கப் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளையும் நெறிமுறைசார் சவால்களையும் இது தன்னுடன் கொண்டுவருகிறது. பாதுகாப்பு என்னும் பெயரால் அரசு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ மேற்பார்வையோ இல்லாமல் மக்களிடமிருந்து பெருமளவிலான மருத்துவத் தகவல்களைத் திரட்டுவது இந்திய ஜனநாயகத்தின் இயல்பான தன்மையாக ஆகிவிடலாம்.
தனிமைப்படுத்திக்கொள்ளுவதற்கான நடைமுறைகளை மீறுபவர்கள் குறித்துக் காவலர்களுக்கு எச்சரிக்கை செய்யயும் ட்ரோன்கள், சிசிடிவி பதிவுகள், முகத்தை அடையாளம் காணும் மென்பொருள்கள் ஆகியவை மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் இதர கருவிகளாகும். வெளிப்படைத்தன்மையோ சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளோ மிகக் குறைவாக இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதிலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கை இந்த மருத்துவ நெருக்கடிக் காலம் அதிகரிக்கச் செய்திருப்பதுதான் சோகம்.
இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை, விரிவான பொதுச் சுகாதாரக் கொள்கையின்மை ஆகியவற்றால் தேசத்தையே மூச்சுத் திணறவைத்திருக்கிறது. மருத்துவப் பராமரிப்பு வள ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு முதல் அலை வழங்கியது. ஆனால் அவையோ மருத்துவப் பிரச்சினையைப் பாதுகாப்புப் பிரச்சினையாக்குவதிலும் ஜனநாயகத்தை முடக்குவதிலும் மும்முரமாக இருந்தன. பொதுச் சுகாதாரத் துறை முன்னுரிமைத் துறைகளில் ஒன்றாகக் கருதப்படாமல் போதிய நிதி ஒதுக்கீடு, போதிய பணியாளர்கள் இன்மை ஆகியவற்றால் நெடுங்காலமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசும் இந்தியாவின் தலைவர்களும் கொண்டிருக்கும் முன்னுரிமைகள் பெருந்தொற்று விஷயத்தில் அமைப்பு சார்ந்ததும் தொலைநோக்கிலானதுமான சில விளைவுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. எண்ணற்ற குடிமக்களின் உயிர்கள் அபாயத்துக்குள்ளாகுதலும், ஜனநாயக விழுமியங்களை முடக்கும் நடவடிக்கைகள் இயல்பாக்கம் செய்யப்படுவதும்தான் அந்த விளைவுகள்.
விவேக் என்.டி.: ஐதராபாதிலுள்ள மஹீந்திரா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் லா துறையின் பேராசிரியர். அரசியல், பொதுக்கொள்கை ஆகியவற்றை அவர் கற்பிக்கிறார்.
இக்கட்டுரை முதலில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்திய உயராய்வு மையத்தின் ‘மாறிவரும் இந்தியா’ என்னும் பிரிவில் (India in Transition, a publication of the Center for the Advanced Study of India, University of Pennsylvania) பிரசுரமானது. பல்கலையின் ஒப்புதலோடு இங்கு பிரசுரம் பெறுகிறது.
https://casi.sas.upenn.edu/sites/default/files/uploads/%28Tamil%29%20Securitizing%20Health%20and%20Suppressing%20Democracy_COVID%2019%20Policy%20Measures%20and%20Political%20Implications%20-%20Vivek%20ND.pdf